வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

தீஜ்



தீஜ் என்பது வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உத்திரபிரதேசப் பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை.

இந்தப் பண்டிகை மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது.

தீஜ் என்பது திரிதியை திதியைக் குறிக்கும். அக்ஷய திரிதியை என்பது ’அக்க தீஜ்’ என்று அழைக்கப்படும். மேற்கூறிய மூன்றில் அக்ஷய திரிதியை சேராது. இம்மூன்றும் வேறு தினங்களில் அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் கொண்டாடப்படுபவை. இதைத் தவிர கங்குவார் தீஜ் என்று அழைக்கப்படும் கௌரி திரிதியை யுகாதியை ஒட்டிக் கொண்டாடப்படும்.

இப்பொழுது தீஜ் என்றப் பொதுப் பெயரில் மூன்று தினங்களில் தனித்தனியாகக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாகக் கொண்டாடப்படுவது  ’சோடி தீஜ்’ (சின்ன திரிதியை) அல்லது ஹரியாலி தீஜ் (பசுமை திரிதியை) என்று வழங்கப்படுகிறது. இது வட இந்திய மாதமான ஷ்ரவண மாதத்தில் சுக்ல பக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. இது இன்று 09.08.2013 வருகிறது.

இரண்டாவதாக வருவது ’படி தீஜ்’ (பெரிய தீஜ்) அல்லது காஜரி தீஜ் (கண்மை திரிதியை) என்றுப் பெயர். இது ஹரியாலி தீஜ்-க்கு அடுத்த க்ருஷ்ணபக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. அதாவது ரக்ஷாபந்தனுக்கு அடுத்த த்ரிதியையில் கொண்டாடப்படும் (இந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் நாள் வரும்). இந்த நாளில் இரவு முழுவதும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவதால் அல்லது க்ருஷ்ண பக்ஷத்தில் வருவதால் கருமையைக் குறிக்க இந்தப் பெயரை உபயோகித்திருக்கலாம்.

மூன்றாவதாக வருவது ஷ்ரவண மாதத்தின் அடுத்த மாதமான பாத்ரபாத மாத்த்தின் சுக்கில பட்சத்தில் கொண்டாடப்படுகிறது. அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் வரும். இது ஹரதாலிகா தீஜ் என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக இந்தப் பண்டிகை சிவ-பார்வதி விவாஹத்தை ஒட்டிக் கொண்டாடப் படுகிறது. காமதகனத்தைத் தொடர்ந்து சிவன் அங்கிருந்து மறைந்து விட நாரதர் அறிவுரையால் பார்வதி கானகம் எய்தி அங்கு விரதமிருந்ததாள். (அவள் கானகம்  செல்வதைக் கேட்ட அவள் தாய் மீனாள் ‘ஓ’ மா! என்று கூற அதுவே பார்வதிக்கு உமா என்ற பெயர் கொடுத்த்தாகவும் கூறுகிறார்கள்). அங்கு அவளை ஸப்தரிஷிகள் பரிசோதிக்க இறுதியில் ஜடாமுடி சன்யாசியாக சிவன் வந்து அவளிடம் சிவனைப் பற்றித் தாழ்வாகக் கூற அதைக் கேட்க இயலாமல் அவள் தீ புகுந்த்தாள். ஆனால், அவள் தவ வலிமையின் காரணமாக நெருப்பு உறைந்து விட பார்வதி ஜடாமுடியானிடம் சிவ பெருமைகளை உரைத்தாள். பிறகு சிவன் தன் உருகாட்ட, உமை தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னை மணமுடிக்க வேண்டினாள். அதை ஈசன் ஏற்க, தன் நாடு திரும்பினாள்.

முதலாவதாக்க் கொண்டாடப்படும் ஹரியாலி தீஜ் அன்று தன் பெற்றோரிடம் விடை பெற்று கானகம் எய்திய நாள் என்பதால் அன்று பெற்றோர் தங்கள் மகள்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் உள்ளது.

இரண்டாவது கொண்டாடப்படும் காஜரி தீஜ் அன்று தான் ஸப்தரிஷிகளும் ஜடாதாரியும் உமையைச் சோதித்த நாட்கள் அன்று உபவாசம் இருந்து இரவு சந்திரனை தரிசித்து உணவு உண்பர். நாள் முழுவதும் நிர்ஜல (நீர் அருந்தாமல்) உபவாசம் இருப்பவர்களும் உண்டு.

மூன்றாவதாகக் கொண்டாடப்படும் ஹரதாலிகா விரதத்தன்று உமையின் கோரிக்கையை ஏற்று சிவன் அவள் பெற்றோரிடம் பெண் கேட்க ஒப்புக்கொண்ட தினம் என்று சிலரும் கானகத்தில் கடுந்தவத்திலிருந்துத் திரும்பிய உமை  வீடு திரும்பிய தினம் என்று சிலரும் கூறுகிறார்கள். அன்று பார்வதி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுவர்.

ஆனாலும் தற்போது ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் இந்த நாட்களில் ஊஞ்சல் கொண்டாட்டமும் ஆட்டம் பாட்டத்துடன் பெரும் விழாக்களாகக் பொதுவெளியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊஞ்சல் ஆட்டமும் கோலாட்டமும் முக்கிய நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.

ப்ருந்தாவனத்தில் ஹரியாலி தீஜ் அன்று ‘பங்கே பிஹாரி’ கோவிலில் ராதா-க்ருஷ்ணர் இருவரும் வெளிக் கொணரப்பட்டு ஒரு சேர தங்க ஊஞ்சலில் ’ஜோலாட்டம்’ நடைபெறும். இதற்கு ‘ஜூலன் லீலா’ என்று பெயர். இதில் முக்கியமாக வருட்த்தில் ஒரே முறையாக க்ருஷ்ணருக்கு கட்கம் (வாள்) வைத்து வணங்கப்படுவது வழக்கம்.
 
தீஜ் நேரத்தில் கேவர் என்ற இனிப்பு இப்பகுதிகளில் மிகவும் பிரபலம். 

7 கருத்துகள்:

  1. பகிர்விற்கு நன்றி.இங்கும் ஆளுக்கொரு கதை சொல்றாங்க.கேவர் பற்றி நானும் எழுதனும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாக நம் நாட்டில் எல்லா பண்டிகைகளுக்குமே பல கதைகள் உண்டு. உதாரணமாக தீபாவளிக்கு ஒவ்வொறு மாநிலத்திலும் ஒரு கதை உண்டு. அது போல இதற்கும் இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

      வருகைக்கு நன்றிகள் ஆச்சி!

      நீக்கு
  2. கேவர் - உத்திரப் பிரதேசம் பகுதிகளில் நிறைய விற்பதைப் பார்த்திருக்கிறேன்....

    ஒரீரு முறை சாப்பிட்டும் இருக்கிறேன்.... :)

    தீஜ் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அதீசயம். தீஜ் பற்றிக் கூகிளில் தேட வேண்டுமென்று நினைத்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.கணவன் மனைவி பந்தத்துக்கு நல்லதொரு ஏற்பாடு இது.மூன்று முறை வரும் என்று தெரியாது. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மூன்று முறை வரும் தீஜ்-இல் மூன்றாவது தீஜ் நம் பஞ்சாங்கங்களிலேயே (ஹரதாலிகா என்று) குறிப்பிடப்பட்டிருக்கும்.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  4. தீஜ் பண்டிகை பற்றி அறிந்துகொண்டேன்.

    கேவர் இனிப்பு பார்க்க நன்றாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு