திங்கள், ஆகஸ்ட் 04, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (பகுதி 2)


முதல் உலகப் போரின் துவக்கத்தையும் அதன் பின்னணியையும் சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.

அந்த நிகழ்வுகள் பின்வருமாறு இருந்தன…           

ஜூன் 28-இல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து இளவல் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அதன் அரசரான83 வயதான முதலாம் ஃப்ரன்ஸ் ஜோசப், செர்பியாவிடம் ஆஸ்த்ரியாவிற்கு எதிரான குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இளவலின் கொலைவிசாரணையை நடத்தி முடிக்கவும் ஜுலை 23-ம் தேதி வரை கெடுவிடுத்தார். கெடுவையேற்ற செர்பியா குற்றவாளிகளை செர்பிய சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதித்தது. இதனை ஏற்க மறுத்து ஜூலை 28-ஆம் தேதி ஆஸ்த்ரோஹங்கேரி, செர்பியா மீது போர் அறிவித்தது.

செர்பிய சட்டப்படி விசாரணையை ஏற்க வியன்னா மறுக்க காரணம் இருந்தது. போஸ்னியாவின் ஐந்தில் இரண்டு பேர் செர்பிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆஸ்த்ரோஹங்கேரியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுதந்திரம் பெற்று செர்பியாவில் இணைய நினைத்தனர். கர்னல் ட்ரகுடின் டிமிட்ரிஜெவிக் தலைமையிலான கருங்கை இயக்கத்தைப் போல பல இயக்கங்கள் இதற்கான முயற்சிகளை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் செய்து வந்தன. 11 வெவ்வேறு இனக்குழுக்களைக் கொண்ட செர்பியாவும் ரஷ்யாவும் அவர்களுக்கு உதவுவதாக எண்ணியது.

ரஷ்யா போன்ற பெரிய நாடு செர்பியாவிற்குத் துணைவரும் என்பதை அறிந்திருந்தும் ஆஸ்த்ரோஹங்கேரி போரில் இறங்கக் காரணம் அதற்கு ஜெர்மனியின் அரசர் கெய்சர் வில்ஹெம் -2 உதவுவார் என்ற நம்பிக்கையே.

ஆஸ்த்ரிய அரசர் ஜோசபின் நம்பியபடியே ஜெர்மனி செர்பியா ஓர் அழிக்கப்பட வேண்டிய அரசியல் விஷயம் என்று அறிவித்தது. இரண்டாம் வில்ஹெம், ஆஸ்திரிய தூதரான கவுண்ட் வான் ஹோயஸ்-இடம் ஆஸ்த்ரியாவின் ’செர்பிய விஜயத்தி’னால் ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தாலும் தன் ஆதரவு உண்டு என்று அறிவித்தது.  

1890-இல் பிஸ்மார்க்-ஐ சான்சிலர் பதவியிலிருந்து கட்டாய ஓய்வில் அனுப்பியது முதல் வில்ஹெம் அதிகாரத்தை தன் வசம் நிலை நிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். ஜெர்மனி ஐரோப்பாவில் முக்கிய சக்தியாக நிலைபெற  அதன் கடற்படையை சீரமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதிலிருந்து பிரிட்டன் ஜெர்மனியின் வளர்ச்சியை எண்ணி கவலைக் கொள்ள ஆரம்பித்தது. அதன் கடற்படை வளர்ச்சி மூலம் தங்களுக்கு ஆபத்து என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் உணர்ந்தன. ஜெர்மனியும் தனக்கு எந்த நிலையிலும் உதவக் கூடிய நட்பு நாடு என்றால் அது ஆஸ்த்ரியா தான் என்பதை உணர்ந்திருந்தது. ஆஸ்த்ரிய உதவியினால் கிழக்கிலிருந்து ரஷ்யப் படையெடுப்பை தடுக்கவும் மேற்கில் பிரான்ஸ் தாக்கினால் அதைக் கட்டுப்படுத்த ஷிலிஃபென் திட்டம் (ப்ரான்ஸை ஹாலந்து, லுக்ஸெம்பர்க், பெல்ஜியம் மூலம் தாக்குவது) உருவாக்கியிருந்தது. இது போன்ற ஒரு சம்பவத்திற்காகவே காத்திருந்தது.

ஆஸ்த்ரிய போர் அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரது கவனமும் ரஷ்ய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கலோஸ்-இன் பக்கம் திரும்பியது. ரஷ்யா செர்பியாவிற்கு உதவ எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை; அதேபோல், அதற்கு பால்கன் பகுதியினால் அதற்கு பெருமளவில் எந்த பொருளாதார நன்மையும் இல்லை. ஆனால், செர்பியா வழியாக  அதன் எதிரி துருக்கியைக் கைப்பற்றி கான்ஸ்டாண்டி நோபில் ஜலசந்தி மூலம் மத்தியதரைக்கடல் பகுதியை அணுக வாய்ப்பு கிட்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக மேற்குப் பகுதியில் ஆஸ்த்ரோ-ஹங்கேரியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் விட, ஜெர்மன் பிரான்ஸைத் தாக்கியபின் அதன் கவனம் ரஷ்யாவின் பக்கம் திரும்பினால் அதைச் சமாளிப்பது கடினம் என்பதை உணர்ந்திருந்தது.  எனவே, ஜெர்மன் பிரான்ஸை வீழ்த்துவதற்கு முன் அது ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தால் ஜெர்மன் தன் முழு படை பலத்தையும் ரஷ்யாவிற்கு எதிராக பிரயோகிக்க முடியாது என்றும் நினைத்தது. அது ஜூலை 30ஆம் நாள் தன் படையை தன் மேற்கு எல்லையில் குவித்தது. ஜெர்மன் வேறு வழியின்றி ஆகஸ்ட் 1 தேதி ரஷ்யாவின் மீது போர் அறிவித்தது.

இந்த சமயத்தில் பிரான்ஸில் ஜூன் மாதத்தில் தான் புதிய பிரதமராக விவியானி பதிவியேற்றிருந்தார். பிரெஞ்சு ராஷ்டிரபதி ரேமெண்ட் பாய்ன்கரெ ரஷ்யாவிற்கு கடற்பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால், அது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஷ்யாவின் படைக் குவிப்பைத் தொடர்ந்து அதுவும் தன் கிழக்கு எல்லையில் படையைக் குவித்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ஜெர்மன் பிரான்ஸின் மீது போர் அறிவித்தது. தொடர்ந்து பிரான்ஸை வடக்கிலிருந்து தாக்க (ஷிலிஃபென் திட்டப்படி) நடுநிலை வகித்த பெல்ஜியத்தின் மீது ஜெர்மனி படையெடுத்தது.

இந்த நேரத்தில் பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர் சர் எட்வர்ட் க்ரே. இவர் ஒரு சமாதான விரும்பி. இவர், ஜூலை 29 ஆம் தேதி ஜெர்மன் வெளியுறவுத் தூதரான இளவரசர் லிக்னோவ்ஸ்கி சமாதானத்தின் அவசியத்தை அறிவுறுத்தினார். ஆனால் இவரது கடிதத்தில் மறைமுகமாக பிரான்ஸ் தாக்கப்பட்டால் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற எச்சரிக்கையும் இருந்த அதே நேரம் பிரிட்டன் தன் நட்பு நாடுகளுக்கு உதவ சட்டபூர்வமாக எந்தத் தேவையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.  இதை தனக்குச் சாதகமாக திருப்ப ஜெர்மன் முயன்று பிரிட்டன் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று கூறியது. தன் தவறை உணர்ந்த க்ரே பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆகஸ்ட் 3-ஆம் தேதி பிரிட்டிஷ் மந்திரி சபைக் கூட்டத்தில் தான் அமைதிக்கான ஒரு வழியை மட்டுமே ஜெர்மனுக்குக் காட்டியதாகவும் வேறு எந்த  வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று அறிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட்-4 தேதி பிரிட்டன் - ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்ததையடுத்து  - ஜெர்மன் மீது போர் அறிவித்தது.

உலக வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மூன்றும் ஜெர்மனிக்கு எதிராக அணிதிரண்டதைக் கண்ட ஜப்பான் ஜெர்மன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சீனப் பகுதிகளை மீட்க ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜெர்மனியின் மீது போர் அறிவிப்பு விடுத்தது.

இடையே ஜெர்மன் பெல்ஜியம் முழுவதையும் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து ஜெர்மன் ப்ரான்ஸ்-இலும் நுழைந்தது. ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றத்தை ப்ரான்ஸ்-ஆல் சமாளிக்க முடியவில்லை. ஆனால், ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் (17-19 தேதிகள்) ரஷ்ய படைகள் ஜெர்மனியின் கிழக்குப் பகுதி (ப்ரெஷ்யா) ஜெர்மன் அதன் படையின் பெரும் பகுதியை அங்கு அனுப்ப நேர்ந்தது. அங்கு நடந்த போரில் ஜெர்மனி பெரும் வெற்றி பெற்றாலும், பிரான்ஸ் பகுதி முன்னேற்றத்தை அது தடுத்துவிட்டது. ஸெப்டம்பரில் ப்ரான்ஸ் தன் படையை முழுவதும் திரட்டியதையடுத்து மார்னே நதிக்கரையில் ஜெர்மன் தடுத்து நிறுத்தப்பட்டது. இரண்டு தரப்பிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டு படைகள் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரஷ்யப்படைகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஜெர்மனி ரஷ்யா போன்ற பெரிய நிலப்பரப்புள்ள நாட்டைக் கைப்பற்றுவது சாத்தியமற்றது என்று உணர்ந்திருந்ததால் வேறுவழியில்லாமல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் போரை கடல் வெளியில் நிகழ்த்த எண்ணியது. இதை, வரலாற்று ஆசிரியர்கள் ‘கடற்பந்தயம்’ (race to sea) என்றழைக்கிறார்கள். ஜெர்மனியின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் அதனிடம் இருந்த (U-boat) நீர்மூழ்கிக் கப்பல்கள். இதன் மூலம் அது நேச நாடுகள் தங்கள் காலணிகளுக்கு சென்றுவரும் கப்பல்களை தாக்க ஆரம்பித்தது. போர்கப்பல்களை மட்டுமல்லாமல் பயணிகள் கப்பலையும் தாக்கியது. 1914 டிசம்பரில் போர் ஃபாக்லாண்ட் தீவுகள் அருகில் நடந்த கடற்போர் மிகவும் பிரபலம்.

கடற்போர்களைத் தொடர்ந்து, டிசம்பர் இறுதியில் ஜெர்மனும் பிரிட்டனும் நேரிடியாக போரில் இறங்கின. ஜெர்மன் பிரிட்டனின் மீது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் போர் அடுத்த கட்டத்தை அடைந்தது. 

முதல் கட்டத்தில் நேச நாடுகளின் படைகள் பெரும் இழப்புகளையே சந்தித்தன. அதிலும் குறிப்பாக ரஷ்யா தான் மிக அதிகமான இழப்புகளை அடைந்திருந்தது.

ரஷ்யா செர்பியவிற்கு உதவியதையடுத்து ரஷ்யாவின் எதிரி நாடான துருக்கியின் ஒட்டாமன் அரசு நேச நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது. தன் வணிக வாய்ப்புகளுக்கு சூயஸ் பகுதியின் முக்கியத்தை உணர்ந்திருந்த பிரிட்டன் இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

1915-இல், ஒரு பக்கம் சர்ச்சில் தலைமையிலான படை துருக்கியின் காலிபோலி-யில் ஒரு பெரும் சண்டையை நடத்தியது. பிரிட்டன் அதில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. [தொடர்ந்து சர்ச்சில் பதவியைத் துறந்ததும் அரசியலில் இறங்கியதும் வேறு கதை]. இந்தப் போரில் பிரிட்டனின் காலணிகளான ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து படையினரே அதிகம் பயன்படுத்தப் பட்டனர்.

மற்றொருபுறம், இந்தியாவிலிருந்து 13லட்சம் வீர்ர்களைக் கொண்ட ஒரு ராணுவ பிரிவு தரைவழியில் துருக்கியைத் தாக்க அனுப்பப்பட்டது. இந்தியப் (பிரிட்டிஷ் அரசிற்காகப் போரிட்டாலும் அதன் வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களே) படை யூப்ரிடஸ்-டைட்ரிஸ் நதிப் பகுதிவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆனாலும் அதனால் பாக்தாத்-ஐக் கைப்பற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட 6-7 மாதங்கள் (அக்-1915 முதல் ஏப்ரல்-1916 வரை) பாக்தாத்-ஐ அடுத்த குட் பகுதியில் முற்றுகையிட்டிருந்த இந்தியப் படையின் 13000-பேர் துருக்கியர்களால் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பிரான்ஸுடன் அது ஒட்டமான் அரசைப் பிரித்துக் கொள்ள ரகசியமாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இதற்கு சைக்ஸ்-பைகாட்ஸ் ஒப்பந்தம் என்று பெயர் [இன்றைக்கும் சூயஸ் பகுதியில் நிலவி வரும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விதை பிரிட்டனின் மார்க் சைக்ஸ்-உம் பிரான்ஸின் பிரான்காய்ஸ் ஜார்ஜெஸ் பைகாட்-உம் உருவாக்கிய அந்த ஒப்பந்தத்திலும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளினாலும் தான் விதைக்கப் பட்டது].  இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸும் பிரிட்டனும் ஒட்டமான் அரசு வரைபடத்தின் குறுக்கே ஒரு கோடு கிழித்து அதில் வட பகுதியை பிரான்ஸும் தென் பகுதியை பிரிட்டனும் பிரித்துக் கொண்டன. பின்னர் ரஷ்யாவிற்கும் ஓட்டமான் அரசின் வடபகுதியில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டது.

துருக்கியை ஒடுக்க அவர்களுக்கு அரேபியர்களுடன் இருக்கும் 400-ஆண்டுப் பகையைப் பயன்படுத்திக் கொண்டது. நபிகளின் வழிவந்த, ஷரிஃப் ஹுஸைன் தான் அப்பொழுது மெக்காவை ஆண்டு வந்தவர். ஆனால், ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களின் தலைவராக (கலீபாவாக) ஒட்டமான் அரசர் இருந்து வந்தார். ஷரிஃப் ஹுஸைனை ஒட்டு மொத்த முஸ்லீம்களின் தலைவராக அறிவிக்க கோரி அவர் மகன் ஃபைஸல் தலைமையில் மறைமுகமாக கொரில்லா போரை நடத்தியது. 1918-இல் ஃபைஸல் தலைமையிலான படை வெற்றி பெற்று டெமாஸ்கஸைக் கைப்பற்றியது.

இடையே கடற்போரில் பிரிட்டனின் கடற்படைகளைத் தாக்கிய ஜெர்மன் 1915 மே மாதத்தில் பிரிட்டனின் பயணிகள் கப்பலான லுஸிதானியாவை மூழ்கடித்தது. அதில் அமெரிக்கப் பயணிகளும் உயிரிழந்தனர். அதனால், அதுவரை நடுநிலை வகித்த அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்காவிட்டாலும் ஜெர்மனுக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்க நேர்ந்தது. தொடர்ந்து 1916-இறுதியில் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டியிருந்ததால் ஜெர்மன் கடற்படையை அச்சுறுத்த ஹைதி தீவில் அமெரிக்கக் கடற்படையை நிறுத்தினார். தொடர்ந்து போரிடும் இரு தரப்பினரிடமும் அமைதி ஒப்பந்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

1917 ஜனவரியில் நேசநாடுகள் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்தன. ஆனால், ஜெர்மன் தன் கடற்தாக்குதலை மேலும் தீவிரப் படுத்தியது. அதனால், அமெரிக்கா ஜெர்மனுடனான தன் ராஜீயத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.

இடையில் 1917-மார்ச்சில் பிரிட்டன் பாக்தாத்-ஐக் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த சண்டைகளில் வெற்றி தோல்வி இரு தரப்பினரிடையேயும் மாறிமாறி கிட்டி வந்தது. எனினும், ரஷ்யா மட்டும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. ரஷ்யாவின் தொடர் தோல்விகளையும் அப்போதையப் பஞ்சத்தினால் ஏற்பட்ட உணவு பற்றாக் குறையையும் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் புரட்சி வெடித்தது; ஜார் இரண்டாம் நிக்கலோஸ் தலைமறைவாக இடைக்கால அரசு பதவியேற்றது. பின்னர், நாடு கடத்தப்பட்டிருந்த  லெனினின் வரவால் நவம்பர் புரட்சி வெடித்து சோவியத் அரசு நிறுவப்பட்டது வரலாறு.

பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் ஜெர்மனியையே போருக்குக் காரணமாகக் கூறினாலும். பிற்காலத்தில் ஆஸ்த்ரிய-ஹங்கேரி மீதும், ரஷ்யா மீதும் ஓரளவிற்கு செர்பியா மீதும் காரணம் காட்டுகிறார்கள். பொதுவாக, இந்தப் போரை அந்த நேரத்தில் இதில் ஈடுபட்ட ஐரோப்பிய அரசுகள் மட்டுமன்றி அன்றைய ஐரோப்பிய மக்களும் விரும்பினர் என்றே கூறலாம். ஐரோப்பிய மக்கள் போர் அறிவிப்பையும் போர் சம்பவங்களையும்  விழாப்போலக் கொண்டாடினர். இந்தப் போரின் ஆரம்பத்தில் இதை எல்லாப் போர்களையும் தீர்த்து வைக்கும் பெரும்போர் என்றே ஊடகங்களும் இதை வர்ணித்தன.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தப் போரின் கோரத் தன்மையையும் அது காலங்காலத்திற்கும் ஏற்படுத்திய விளைவுகளையும் மக்கள் உணர்ந்தனர்.

இந்தப் போரின் விளைவே பிற்காலத்தில் இருபது ஆண்டுகளுக்குள் இதைவிட பெரிய ஒரு போருக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதையும் அவர்கள் அப்போது கணிக்கவில்லை.

2 கருத்துகள்:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. ஒரு வரலாற்றுப் பாடம் படித்த உணர்வு.நன்றி ஸ்ரீநிவாசன்
    தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் பற்றியும் எழுதவும்.

    பதிலளிநீக்கு