வெள்ளி, டிசம்பர் 16, 2011

மார்கழி



மார்கழி மாதம் முன் பனிக் காலம். இம்மாதத்தின் விடியற் காலையில் குளிர் அதிகமாக இருக்கும். அனைவருக்கும் நன்றாகப் போர்வையை இழுத்துத் தூங்குவதென்றால் மிகவும் விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படிச் சோம்பி இருக்கக் கூடாது என்பது தான் பெரியோரின் எண்ணம்.

சாதாரணமாக அறிவுரையாகக் கூறினால் யாருக்கும் பிடிக்காது என்பதால் இது போன்ற விஷயங்களை மதத்தில் இணைத்துக் கூறுவது மரபு. அதனால் தான், கீதையில் கண்ணன்

बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
[ததா² ஸாம்நாம் ப்³ருஹத்ஸாம:= சாமங்களில் (வேதம்) பிருஹத்சாமம் என்ற பெரிய சாமம்
²ந்த³ஸாம் கா³யத்ரீ அஹம்       = சந்தஸ்களில் நான் காயத்ரி
மாஸாநாம் மார்க
³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் அஹம் குஸுமாகர:      = பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்]

என்று, மாதங்களில் தான் மார்கழியாக இருப்பதாகக் கூறுகிறான். கவியரசு கண்ணதாசன் இதன் தாக்கத்திலேயே தன் தாயைப் பற்றிய கவிதையில் “மாதங்களில் அவள் மார்கழி” என்று எழுதினார் [அதுவே பின் திரைப்படத்தில் நாயகியை எண்ணிப் பாடப்படுவதாக வரிந்து கொள்ளப் பட்ட்து].

இம்மாதத்தில் வைகறையில் துயில் நீக்கி, நன்னீராடி, உடலும் உள்ளமும் தூய்மையாக்கி கடவுளைப் பாடி வழிபடுவர். ஆலயங்களில் விடியலிலேயே நடை திறந்து மக்கள் கூடி இறைவனை வணங்குவர்.

வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சைவக் கோயில்களில் திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் பாடி வழிபடுவார்கள். திருப்பாவை ’சூடிக்கொடுத்த சுடர் மணி’ கோதைநாச்சியார் என்று அழைக்கப் படும் ஆண்டாள் அருளியது; திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகர் அருளியது.

திருப்பாவையில் ஆண்டாள் தன்னைக் கோகுலத்தில் பிறந்த ஒரு பெண்ணாகவே வரிந்து அவர்கள் நேர்த்ததாகக் கூறப்பட்ட பாவை நோன்பை தானும் தன் தோழியருடன் (உண்மையாகவே இருந்தார்களோ இல்லை கற்பனைத் தோழியரோ !!!)   சேர்ந்து இருப்பதாக எழுதப்பட்ட பாடல்கள்.  மிக எளிமையான தமிழ், பக்தி சுவை, நாயக-நாயகி பாவம் இயல்பாக அமைந்தது ஆகியவை இதன் சிறப்பு

சாதாரணமாக அணைவரும் மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய திருப்பாவை வைணவர்களுக்கு வேதமாக இருப்பது போல் சைவப் பெண்டிரும்  நாயகி பாவத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட அருளிது என்று எண்ணுவர். ஆனால், மாணிக்கவாசகர் வாழ்ந்தது மூன்றாம் நூற்றாண்டு என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வேறு சிலரோ அவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பர். ஆண்டாள் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதால், எப்படியிருப்பினும் மாணிக்கவாசகர் காலத்தால் முந்தியவர்.

ஒரு காலத்தில் மாணிக்கவாசகர், உபநிஷத்-இலுள்ள கருத்துக்களை எழுதியுள்ளார்; அவற்றை ஓதினாலேயே வீடுபேறு கிட்டும். எனவே, அவரின் பாடல்களுக்கு உரை எழுதக் கூடாது என்ற கருத்து நிலவி வந்திருந்துள்ளது.

திருவெம்பாவை, இருபது பாடல்கள் கொண்டது. முதல் எட்டு பாடல்களில் தோழியர் ஒருவரை ஒருவர் (நீராடி இறைவனைத் தொழ) கூப்பிடும் பாடல்கள். [இவைத் தத்துவரீதியாக அஷ்ட சித்திகள் ஒன்றை ஒன்று உசுப்பி எழுப்புவதைக் குறிப்பதாகக் கூறுவர்.] பின்னர், சில பாடல்கள் இறைவனைப் புகழ்ந்தும், அதன் பின் அவன் சக்தியை வியந்தும், அதன் பின் அவன் எளிமையையும் அவன் அருளாலே அவனை வணங்க முடியும் (அவனருளாலே அவன் தாள் பணிந்து என்ற சிவபுராண கருத்தை வலியுருத்தல்) என்பதை விளக்கியும் உள்ளன. இறுதிப் பாடல் “போற்றி போற்றி” என்று இறை வணக்கத்துடன் முடியும்.

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்களைக் கொண்டது. அணைத்தும் இறைவனைத் துயில் எழுப்பி தமக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள்.

பொதுவாக முதல் இருபது நாட்கள் திருவெம்பாவையும் பின் அடுத்த பத்து நாட்களும் திருப்பள்ளியெழுச்சியும் பாடப்பட்டாலும் இரண்டும் வேறு வேறு காலங்களில் பாடப்பட்டவை. திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது. திருப்பள்ளியெழுச்சியோ அதில் குறிப்பிட்டுள்ளபடி திருப்பெரும்துரை சிவபெருமானை நேக்கிப் பாடப்பட்டது.

சிறு வயதில் எங்கள் வீட்டில் என் தாயார், விடியல் காலையில் எழுந்து (தினமும் ஒரு) திருப்பாவையும் திருவெம்பாவையும் (அ) திருப்பள்ளியெழுச்சியும்  பாடிக்கொண்டே பொங்கல் செய்வார். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே மெல்ல கண் விழிப்போம். அதே நேரம் அருகிலுள்ள கோவில்களிலும் பக்திப் பாடல்கள் (குறிப்பாக ஐயப்பன் பாடல்கள்) மற்றும் பக்தி திரைப்படங்களின் ஒலிக்கோப்புகள் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம்), ஒலிபரப்பு ஆரம்பமாகும்.

தில்லி வந்த பின்பு இழந்ததில் இதுவும் ஒன்று. ஆனால், சமீபகாலமாகத் (கடந்த 3-4 ஆண்டுகளாக) தொலைக்காட்சிகளில் பாவையும் பாடல்களும் (டிசம்பர் சீசன்) ஒளிபரப்ப ஆரம்பித்தது என் போன்றவர்களுக்கு ஒரு வரமே.


8 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. மார்கழியில் என்றதும் அம்மா காலையில் 4 மணிக்கே குளித்து வாசலில் கலர் கோலங்கள் போட்டு விட்டு இரண்டு கோவில்களுக்கு சென்று வருவார்.இது தான் முதலில் நினைவுக்கு வருகிறது. அம்மா கொண்டு வரும் சூடான பொங்கலும் தான்.....

    நாங்களும் காலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆன்மீக நிகழ்ச்சிகளை பார்த்து தான் அன்றை நாளை ஆரம்பிப்போம்.

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதம் என்றால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா! படித்து மார்களித்தது. மனம் இனித்தது.

    (ஒவ்வொரு வீடுகளிலும் காலையில் தங்கள் வீட்டு இறைவன்களை (குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா!)எழுப்ப பாடும் பள்ளியெழுச்சி இருக்கிறதே, அது தனி திருஅன்பாவை.)

    பதிலளிநீக்கு
  3. வாங்க பத்து,
    நன்றிகள்.

    //அது தனி திருஅன்பாவை.//
    இல்லை அது இரு“பள்ளி”யெழுச்சி (பள்ளியிலிருந்து பள்ளிக்கு அனுப்ப)

    பதிலளிநீக்கு
  4. நல்ல விஷயங்கள் சீனு. காலையில் எழுந்து பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் சென்று வந்தது நினைவுக்கு வந்தது.. [எதுக்கு பொங்கல் வாங்கவா? என்றெல்லாம் சின்னப் புள்ளத்தனமா கேட்கக் கூடாது சொல்லிட்டேன்... :)]

    பதிலளிநீக்கு
  5. //ஆனால் இப்படிச் சோம்பி இருக்கக் கூடாது என்பது தான் பெரியோரின் எண்ணம்.//

    மார்கழியின் மகிமை பற்றி விளக்கியிருப்பது அருமை... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் வழ.P.R.ஜெயராஜன்.

    பதிலளிநீக்கு