செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புது தில்லி நகராட்சித் தேர்தல்


சென்ற ஞாயிறன்று புது தில்லியில் நகராட்சித் தேர்தல் நடைபெற்றது. 


இதற்கு முன் இருந்த நகராட்சித் தேர்தலுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்யாசம் இருக்கிறது. அது என்னவெனில், இதற்கு முன் மொத்த தில்லியும் (புது தில்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்றயவை) தில்லி நகராட்சி என்ற பெயரால் ஒரே நகராட்சியாக இயங்கிவந்த ஒன்று மூன்றாகப் வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி நகராட்சிகளாக பிரிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. இந்த நகராட்சிகளின் 50 சதவீத  வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.

15-ஆம் தேதி நடந்த இந்தத் தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 50-55 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறை நானும் தேர்தல் வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டேன். தென் தில்லி நகராட்சிக்கு உட்பட்ட 200-வது வார்டின் 45வது வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் பொறுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டன. இதற்கு முன் தேர்தல் பணிகள் புரிந்திருந்தாலும், வாக்குச்சாவடியின் முதன்மை அதிகாரப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.

இந்த  தேர்தல் பணிகளுக்கானப் பயிற்சிகள் சென்ற 9-ஆம் தேதியன்றும் 11-ஆம் தேதியன்றும் தரப்பட்டன.

தேர்தலன்று காலை 6 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் வருவதற்கு முன் வாக்குச்சாவடியை அடைந்து முன்னேற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் அன்று காலை 4.30 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி 5.45க்குள் வாக்குசாவடியை அடந்தேன். என்னுடன் பணிபுரிய நியமிக்கப்பட்ட நண்பர்களும் நேரத்திற்கு வந்து முன்னேற்பாடுகளைச் செய்ய உதவி புரிந்தனர்.

சரியாக, 6 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் நிலையைப் பரிசோதித்து, அவற்றின் இயங்கு நிலைகளைச் சீரமைக்கவும், 7 மணிக்கு போட்டியாளர்கள் நியமித்த அவர்களின் ஊழியர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் பணி நியமனங்களைச் சரிபார்த்து அவர்களுக்கு நியமனச் சீட்டுகளை வழங்கி 7½ மணிக்கு இயந்திரம் சரியாக இயங்குவதை அவர்களுக்கு  ஒரு ஒத்திகைத் தேர்தலை நடத்திக் காட்டி 7.50க்கு  இயந்திரத்தை சீல் செய்தோம்.

சரியாக, 8.00 மணிக்குத்  தேர்தல் துவக்கம்  முறைப்படி அறிவிக்கப்பட்டது. நாங்கள் பணிபுரிந்த இந்த வார்ட் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யபட்டது. மொத்தம்,  9 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். எங்கள் வாக்குச் சாவடியில் மொத்தம் 870 வாக்காளர்கள். மாலை 5.30 மணிக்கு தேர்தல் முடியும் வரை மொத்தம் 390 வாக்குகள் (43%) பதிவாகின. பின்னர். இயந்திரத்தை சீல் வைத்து ஏஜெண்டுகளிடம்  தேர்தல் கணக்கின் நகலை ஒப்படைப்பது, மற்ற சட்ட ரீதியான காகிதங்கள் மற்றும் அனைத்தையும் முடிக்க 6.30 மணி ஆயிற்று. பின் அந்த பள்ளியில் இருந்த மற்ற (சுமார் 20) வாக்குச் சாவடிகள் அனைத்திலும் மேற்சொன்ன பணிகள் முடிந்தவுடன் அங்கிருந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கும் இட்த்திற்கு அனைவரும் தகுந்த காவலுடன் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு இயந்திரத்தின் சீல் மற்றும் எண்கள் சரிபார்க்கப்பட்டு, காகிதங்களும் சரிபார்க்கப்பட்டு 10.30 மணிக்கு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோம். வீடு வந்து சேர இரவு 12 மணியானது.

இந்த பணிகளில் தேர்தல் ஆணையம் பணியாளர்களின் வசதிக்காக மெட்ரோ மற்றும் பேருந்துகளை காலை சற்று முன்னதாக இயக்க வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி, காலை 4 மணிக்கு பேருந்துகளும் 5 மணிக்கு மெட்ரோ ரயிலும் சேவையைத் துவக்கின. எனினும் என்னைப் போன்ற வெளி மாநிலத்திலிருந்து வரும் ஊழியர்கள் சற்று திண்டாடத்தான் செய்தோம். [தில்லியில் வேளை செய்யும் ஊதியர்களில் ஹரியானா (ஃபரிதாபாத், குர்காவ்(ன்), ரோதக்) மற்றும் உ.பி. (நோய்டா மற்றும் காசியாபாத்) பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகம்.] குறிப்பாகப் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எதுவுமே செய்யப்படவில்லை. கணிணி மயமாக்கப்பட்ட இந்நாட்களில் ஊழியர்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகில் வாக்குச்சாவடி பகிர்ந்தளிப்பது அவ்வளவு கடினம் இல்லை. மேலும், பகுதிவாரியாகத் தனி போக்குவரத்து ஏற்பாடுகள் செய்திருக்கலாம். ஏனெனில், விடியல் காலையில் உபயோகத்தில் இல்லாத பேருந்துகளை இதற்காகப் பயன் படுத்த முடியும்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

பின் குறிப்பு :         சற்று முன் வந்த தகவலின் படி பாரதிய ஜனதா கட்சி மூன்று நகராட்சியிலுமே முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.   

6 கருத்துகள்:

  1. ஓ இந்த முறை உனக்கு இந்தப் பணி கொடுத்து விட்டார்களா? நான் தப்பித்தேன்!

    எப்போதுமே இந்த பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சென்ற பொதுத் தேர்தல் போது நான் வீடு சேர்ந்தது இரவு 02.30 மணிக்கு!

    மூன்று பகுதிகளிலும் பிஜேபி மீண்டும் வந்திருக்கிறார்கள். பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார்கள் என!

    பதிலளிநீக்கு
  2. தேர்தல் பணியாளராய் இருந்தவர் அது பற்றி பதிவு எழுதுவது ஆச்சரியம் + மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. அன்பு நண்பரே
    தேர்தல் பணி கட்டுரை நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
    விஜயராகவன்

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் வெங்கட், 5-6 வருடங்களுக்குப் பின் பணி கொடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டில் தான் முழு வெற்றி. தென் தில்லியைப் பொறுத்தவரை 50% வார்டுகளை எட்டவில்லை. அதிக வார்டுகள் பெற்ற கட்சி என்ற அளவில் தான் உள்ளார்கள்.

    [நீ இருப்பது புது தில்லி பகுதி அல்லவா? அங்கு தான் நகராட்சி தேர்தல் கிடையாதே!]

    பதிலளிநீக்கு
  5. மோகன், தங்கள் வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க விஜயராகவன், வாழ்த்திற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு