வியாழன், ஏப்ரல் 19, 2012

நகராட்சித் தேர்தல் முடிவுகளும் நாற்காலி கனவுகளும்

நடந்து முடிந்த புது தில்லியில் நகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 138-ஐக் வடக்கு தில்லியின் 104 வார்டுகளில் 59-ம்; கிழக்கு தில்லியின் 64 வார்டுகளில் 35-ம்; தெற்கு தில்லியின் 104 வார்டுகளில் 44-ம்  கைப்பற்றியுள்ளது.  

இந்த முடிவுகளைப் பார்த்தவுடன் பாஜக மாநில சட்டமன்றத் தேர்தலை வெல்லும் கனவைக் காண ஆரம்பித்துள்ளது.

உண்மையில் இந்த முடிவுகள் பாஜக-வுக்கு ஆதரவு அலை தானா? பாஜக-வின் கனவு நிறைவேறக் கூடியது தானா?

முதலில் நடந்து முடிந்தது நகராட்சித் தேர்தல்கள் தான். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இல்லை. மக்களின் தினச் சேவைகளுக்கான பொது ஊழியர்களின் தேர்வு தானே தவிர மாநில ஆட்சிக்கான கருதுகோளாகக் கொள்வது சரியல்ல.

அடுத்து, பாஜக உண்மையில் இந்தத் தேர்தலில் தன் இடங்களை இழந்து தான் உள்ளது. ஆம், 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில் பாஜக பெற்ற இடங்கள் 164 இடங்கள்; ஆக தற்போது பாஜக தன் 26 இடங்களை இழந்துள்ளது. மேலும், காங்கிரஸ் சென்ற, நகராட்சியில் பெற்ற 67 இடங்களை விடத் தற்போது, 11 அதிகமாக, 78 வார்டுகளைப் பெற்றுள்ளது.

மேலும், 2007-ல் நகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாஜக-வால் 2008 மாநிலத் தேர்தல்களில் வெல்ல முடியவில்லை. அது மட்டுமன்றி, தொடர்ந்த பாரளுமன்றத் தேர்தல்களில் 7-ல் ஒன்றைக் கூட வெல்ல முடியவில்லை.

சாதாரணமாக மற்ற வட மாநிலங்களைப் போலிலாமல் தில்லியைப் பொறுத்தவரை பாஜக அல்லது காங்கிரஸ் என்று இரண்டு கட்சிகளுக்குத் தான் மக்கள் ஆதரவு இருக்கும். ஆனால், இம்முறை மற்ற கட்சிகள் 56 இடங்களைப் பெற்றுள்ளன; இதில், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுள்ள தேசியவாத காங்கிரஸும் அடக்கம். ஆக, பாஜக-வின் இந்த வெற்றிக்குக் காரணமே அவர்களுக்கு எதிரான வாக்குகள் சிதறியது தான்.

தவிர, என்ன தான் குற்றம் கூறினாலும் காங்கிரஸ் முக்கிய மந்திரியாக ஷீலா தீக்ஷித்-ஐ நிறுத்த முடியும்; அதற்கு அவருக்கு சோனியாவின் ஆதரவு மட்டுமே போதும். ஆனால், பாஜகவிடம் முக்கிய மந்திரியாக அடையாளம் காட்ட யாரும் இல்லை. விஜய் மல்ஹோத்ரா-விற்கு கட்சியிலேயே போதுமான ஆதரவு  இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட மத்தியிலும் இதே நிலைமைதான்.

எனவே மக்களின் ஆதரவு பாஜகவுக்கு முழுவதும் சாதகமாக இருப்பதாகக் கூற முடியாது. காங்கிரஸ் சரியான கூட்டணி அமைத்தால் பாஜக-வின் கனவு கனவாகவே இருக்க வேண்டியது தான்.

ஆனால், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கிறது. அதற்குள் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

பார்ப்போம்…..

2 கருத்துகள்: