திங்கள், மார்ச் 25, 2013

சஞ்சய் தத் – பொது மன்னிப்பு?


முன்னாபாய்-2 (லகே ரஹோ முன்னாபாய்) படத்தில் மற்றவர்கள் தவறு செய்யும் பொழுது அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாமல் அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து ’காந்திகிரி’ செய்து மன்னிப்பார்.

1993-ஆம் ஆண்டு முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டு வந்தது. சென்ற வாரம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சஞ்சய்தத்-இற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கியது.  ஏற்கனவே 1½ ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3½ ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்நிலையில் சில திரை நட்சத்திரங்களும், அவர் ஆதரவாளர்களும்  ’முன்னாபாய்’  வேடமிட்டு நடித்த சஞ்சய் தத்துக்குப் பொது மன்னிப்புக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்கு வழங்கி விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு நடிகர்கள் (அஜய்தேவ்கன், சத்ருகன் சின்ஹா, ரஜினிகாந்த் போன்றவர்கள்), காங்கிரஸ் கட்சியின் திக் விஜய்சிங், ஸமாஜ்வாதி கட்சியின் ஜெயாபச்சன், இந்திய ப்ரெஸ் கவுன்சிலின் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆகியோரும் இதில் அடக்கம்.

சஞ்சய் தத்திற்கு ஆதரவாக அவர்கள் தரும் காரணங்கள் இவை…

·        சம்பவம் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் மனரீதியாக ஏற்கனவே தண்டனைப் பெற்றுவிட்டார்;
·        அவர் தீவிரவாதச் செயலுக்காகக் கைது செய்யப்படாதமை;
·        மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லாதமை;
·        அவர் தவறு செய்தவர் தான்; ஆனால் அதை ஏற்று மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் நல்ல  குடும்பத்தைச் சேர்ந்தவர்;
·        சிறு வயதில் விளைவுகளை எண்ணாமல் செய்த சிறு தவறு.
·        1993-இன் நிலைமையில் அவர் தன் குடும்பத்தினரைக் காத்துக் கொள்ளவே ஆயுதம் வைத்திருந்தார். (அச்சமயத்தில் தீவிரவாதிகளும், கிரிமினல்களும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்திப் பணம் பறித்தனர்; டி-சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் மரணம் இதன் காரணமாகவே நிகழ்ந்தது. அவருக்கு அப்பொழுது இரண்டு சிறு குழந்தைகள் இருந்தன).

இப்பொழுது இவ்வழக்கின் உண்மைகளைப் (இவை அரசு தரப்பில் குற்றமாகச் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை சஞ்சய் தத்தாலும் ஏற்கப்பட்டவை) பார்ப்போம்…

·       மூன்று அனுமதிக்கப்பட்ட  ஆயுதங்கள் வைத்திருந்தும் அனீஸ் இப்ராஹிமைத் (இவர் தாவூத் இப்ராஹிமின் சகோதரர்) தொடர்பு கொண்டு ஆயுதம் பெற்றது. இதில் ஏகே 56 ரக துப்பாக்கிகளும், கைக்கண்ணி வெடிகளும் அடக்கம்;
·       தன் பாலி ஹில் வீட்டில் பாபா மூஸா சௌஹான், சமீர் ஹிங்கோரா ஆகியோரால் மன்சூர் அஹமத் கார் மூலம் ஆயுதம் கொண்டு வரப்பட்டு அதை வைத்திருந்தார். அவர் வீட்டிற்கு ஆயுதம் வரும் முன்னர் அந்த ஆயுதம் ஜைபுன் நிஸா காஜி என்ற மூதாட்டியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. (காஜி உட்பட இந்த நான்கு பேரும் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்; ஆனால் சஞ்சயோ ஆயுதச் சட்டத்தின் படிக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைப் பெற்றுள்ளார்)

இதிலிருந்து நமக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன…

·        சஞ்சயின் குற்றத்தில் தொடர்புள்ள நால்வர் தடா குற்றத்தில் கைது செய்யப்பட்ட போது சஞ்சய் மட்டும் தடாவில் கைது செய்யப்படாது ஏன்? மற்ற மூவரை விட்டுவிடலாம் ஏனென்றால் அவர்கல் ஆயுதம் கடத்தியவர்கள்; ஆனால், அந்த பெண்மணி காஜி கிட்டத்தட்ட சஞ்சய் செய்த அதே குற்றம் (சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது) தான் செய்துள்ளார்; ஆனால், அவர் மீது மட்டும் தடா பாய்ந்துள்ளது. இதற்குக் காரணம் அவர் இஸ்லாமியர் என்பதா அல்லது சஞ்சய் தத் போல திரை நட்சத்திரமாகவும், திரைக் கதாநாயக-நாயகி மற்றும் அரசியல்வாதியின் வாரிசு அல்ல என்பதுமா?
·        20 வருடங்கள் ஆகிவிட்டது என்பதற்காக மன்னிப்பு என்றால் இதைப் போன்று 20 வருடங்கள் ஆகிவிட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளையும் திரும்பப் பெற்று விடலாமா?
·        தற்காப்பிற்காக என்றால் கைக்கண்ணிவெடி வைத்திருந்த காரணம் என்ன?
·        தற்காப்பிற்காக ஒரு திரையுலக, அரசியல் வாதியின் வாரிசுக்கே போலிஸ் மீது நம்பிக்கை இல்லாமல் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருக்க வேண்டியிருக்கும் என்றால் சாதாரணமானவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக என்னவெல்லாம் செய்யலாம்.

முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் / தற்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் என்பதால் காங்கிரஸ் அரசியல்வாதிகளும், தற்போது சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தந்தவர் என்பதால் அக்கட்சி உறுப்பினர்களும், திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால் அத்துறையைச் சேர்ந்தவர்களும் சஞ்சய் தத்திற்குப் பொது மன்னிப்பு வழங்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதே தவறுகளை சாதாரணமானவர்கள் செய்திருந்தால் அவர்களை மன்னிக்கவோ/மன்னிக்கச் சொல்லி எடுத்துக் கூறவோ அல்லது செய்ததாகச் சித்தரிக்கப்பட்டவர்களை விடுவிக்கவோ யாரும் இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

4 கருத்துகள்:

  1. பிரபலமானவர்கள் பொறுப்பின்மையுடன் செயல்படும் போது அவர்களின் தண்டனை அதிகப்படுத்தப்பட வேண்டுமே தவிர பொதுமன்னிப்பல்ல.
    ஆனால் என்ன செயவது? கோமாளிகள் கூட்டத்திற்கும் அவ்வப்போது வேலை வேண்டுமல்லவா!

    பதிலளிநீக்கு
  2. பிரபலமானவர் என்பதால் தண்டனைகளுக்கு விளக்கு அளிப்பது ஏற்புடையது அல்ல

    //அந்த பெண்மணி காஜி கிட்டத்தட்ட சஞ்சய் செய்த அதே குற்றம் (சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது) தான் செய்துள்ளார்; ஆனால், அவர் மீது மட்டும் தடா பாய்ந்துள்ளது இதற்குக் காரணம் அவர் இஸ்லாமியர் என்பதா// .ஆஹா பதிவர்களுக்கு லட்டு மாதிரி ஆச்சே!

    பதிலளிநீக்கு