திங்கள், ஜனவரி 07, 2013

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்


தில்லி வன்புணர்வு சம்பவம் அனைவருக்கும் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஒரு படி முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பது ஓரளவு உண்மைதான்.

ஆனால் அதே நேரம் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக என்ன நன்மை கிடைக்கும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

பாஜக கட்சி அரசியல்வாதி இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வீர செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருது வழங்க வேண்டும் என்று கூறுகிறது. காங்கிரஸ் கட்சியின் சசிதரூரோ இந்த மாணவியின் பெயரை இதற்காக இடப்படும் சட்டத்திற்கு இட வேண்டும் என்று கூறுகிறது.

இது போன்ற விவகாரங்கள் இதற்கு முன்னரும் சில சம்பவங்களில் இதைவிடக் கொடூரமாகவும் நிகழ்ந்துள்ளன. தலைநகரிலேயே இதற்கு முன்னர் இந்த வருடத்திலேயே 500-க்கும் மேற்பட்டச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இப்பொழுது மக்கள் கொதித்தெழுந்தது ஏதோ இந்தப் பெண்ணிற்காக மட்டுமே என்று தான் அரசியல்வாதிகள் எண்ணுவதுதான் இவ்வாறு அறிக்கைகள் விடுவதற்குக் காரணம்.

இச்சம்பவத்திற்குப் பின்னர் வன்கொடுமைச் செய்தவர்களைத் தண்டிக்க ஏற்பட்டச் சட்டத்தில் திருத்தம் – குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அல்லது அவர்களுக்கு பாலியல் இச்சை நீக்கம் செய்ய இரசாயன சிகிச்சை அளித்தல் – செய்ய வேண்டும் என்றக் கோரிக்கை வலுத்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு ஆதரவாக பெண் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மூன்று மாநில அரசுகள் (தில்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு) கொள்கை ரீதியாக ஆதரவு அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ஒரு குழு நியமித்து கட்சித் தலைவர் சோனியாவிற்கு இந்த விஷயத்தில் ஓர் அறிக்கையைச் சமர்பித்துள்ளது. இதில் தூக்கு தண்டனையை சிபாரிசு செய்த நிலையில் இரசாயன சிகிச்சையளிப்பதை நிராகரித்துள்ளது. குழு இவ்விஷயத்தில் மேலும் சில திருத்தங்களை முன் வைத்துள்ளது.

முதலாவதாக, பாதிக்கப்பட்டவர் நாட்டின் எந்தக் காவல் நிலையத்திலும் புகாரளிக்கவும் அந்த காவல் நிலையமே முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்யவும் வழி செய்ய வேண்டும் என்பது. அதாவது, சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பதைக் கொண்டு ஒவ்வொரு காவல் நிலையமும் தன் கட்டுப்பாட்டில் அந்த பகுதி இல்லை என்றுக் கூறி அலைக்கழிக்கக் கூடாது என்பதே.

இரண்டாவதாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர் கூட புகாரளிக்க வழி செய்ய வேண்டும் என்பதே.

மூன்றாவது, விரைவு நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 90 நாளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே.

நான்காவது, குற்றம் சாட்டவரின் சொத்துக்கள் பாதிக்கப்பட்டவருக்கு  மாற்றம் செய்ய வேண்டும் என்பது.

ஐந்தாவது, இது போன்ற குற்றங்களின் விசாரணை பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என்பதே

இதைத் தவிர மற்ற பாலினரை கிண்டல் செய்து போன்ற வன்கொடுமைகளுக்கும் தற்போதைய தண்டனைகளை விட தீவிரமான தண்டனைகள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை போல கொடுக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலனைச் செய்ய மத்திய அமைச்சர்கள் ஷிண்டே (உள்துறை), அந்தோனி, சிதம்பரம், குலாம் நபி ஆசாத், அஹமத் படேல் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது.

இதற்கிடையில், தில்லி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவன் (இச்சம்பவத்தில் மிகவும் கொடுரமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவதும் இவனே) 18 வயதுக்கும் குறைவானவன் என்பதால் அவனுக்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க இயலாது முடியாது சிறுவர் சட்டத்தின் கீழ் தான் கொண்டுவர முடியும் என்றும் அதன் மூலம் அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள்  சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருக்க முடியும் என்பதாகத் தான் இருக்க முடியும் என்பதால், இது போன்ற வன்புணர்வு மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவரின் வயது முன்னர் இருந்தது போல் (2000-ஆவது ஆண்டுக்கு முன்) 16க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆனால், மனித உரிமை ஆர்வலர்களும் சிறுவர் நல அரசு சாரா அமைப்புகளும் இதை எதிர்த்துள்ளன.  இது எப்போதோ அரிதாக (rarest of rare) நடக்கும் சம்பவம் என்றும் இது போன்ற சில சம்பவங்களைக் கொண்டு சட்டங்களை மாற்றுவதால் அது மற்ற குழந்தைகளையே பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. தற்போதைய உச்ச நீதிமன்ற தலைவர் நீதிபதி அட்டாமஸ் கபீர்-இன் மனைவி மின்னா கபீர் (இவரும் சிறுவர் நலனுக்காக அரசு சாரா அமைப்பை நடத்துபவர்) இக்கருத்தை வலியிறுத்துகிறார். இவர் 2000-ஆவது ஆண்டு இந்த வயது 16-இலிருந்து 18-ஆக மாற்றப்பட்டது நீண்ட விவாதமும் பல்வேறு சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொண்டு நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக மாற்றுவது தவறு என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த மாற்றத்தை ஆதரிப்பவர்களோ அமெரிக்காவில் மற்ற குற்றங்களுக்கு 18 வயது வைத்திருந்தாலும் இது போன்ற குற்றங்களுக்கு (சில மாநிலங்களில்) 17 வயதாக மாற்றிவிட்டதையும் கூறுகின்றனர். இங்கிலாந்தில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களும் பாலியல் குற்றங்களுக்கு பொதுச் சட்டத்திலேயே விசாரிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், சென்ற 10 ஆண்டுகளில் (2001-10) இந்தப் பதின்ம வயது சிறார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது 117 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். 2010-ஆம் ஆண்டு 18 வயதுக்கு உட்பட்டவர்களால் செய்யப்பட்டக் குற்றங்கள் 25-ஆயிரத்திற்கும் அதிகம். இதே 2000-ஆம் ஆண்டு 16 வயதுக்கு உட்பட்டவர்களால் செய்யப்பட்ட குற்றங்கள் (கொலை, கொள்ளை, வன்புணர்வு) 10-ஆயிரத்தும் குறைவு; ஆனால் (2001-ஆம் ஆண்டு 18 வயதுக்கு உட்பட்டவர்களால் செய்யப்பட்டக் குற்றங்கள் 16-ஆயிரத்திற்கும் அதிகம். 16-18 வயது சிறுவர்களால் செய்யப்படும் குற்றங்களே அதிகம். அதிலும், இதில் 40% மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. (சமீபத்தில் CNN-IBN  செய்தியில் வந்த ‘இந்தியாவில்  பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மஹாராஷ்டிரத்திலே தான் அதிகம்’ என்ற செய்தியையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது). தேசிய குற்றப்பிரிவு பிரோ-வின் தகவலின் படி 2010-11 ஆம் ஆண்டு இந்திய குற்றவியல் சட்டத்தின் படி பதிவு செய்யப்  பட்ட வழக்குகளில் 65% இந்த 16-18 வயதினர் செய்தவை என்று கூறுகிறது.

எனவே, இந்தக் குற்றங்கள் அசாதாரணமான நிகழ்வு என்று கொள்ள முடியாது என்றும் அப்படியே அசாதாரண நிகழ்வாகக் கொண்டாலும் சிறார் சட்டத்தில் விதிவிலக்காவது  ஏற்படுத்தி இது போன்ற குற்றங்களை இழைப்பவர்களுக்குத் தண்டனைத் தர வேண்டும் என்பது தான் அவர்கள் கோரிக்கை.

மேற்கூறிய சட்ட மாற்றங்கள் வந்தாலும் இந்த தில்லி சம்பவத்தில் அவற்றை விசாரிக்க முடியாது. புதிதாகப் போடப்படும் சட்டங்களைக் கொண்டு ஏற்கனவே நடந்த சம்பவங்களை விசாரிக்க முடியாது என்பது தான் இதற்குக் காரணம்.

சட்டம் எவ்வளவு போட்டாலும் அது அமல் படுத்தப்படுவதில் தான் தீர்வு இருக்க முடியும். ஊடகங்களின் கவனமும் பொது மக்களின் ஆர்வமும் இருக்கும் வரை (குற்றவாளிகள் மேல் தட்டு வர்கத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதாலும் கூட) இந்த தில்லி சம்பவத்தின் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்படலாம். ஆனால், இது போன்ற மற்ற வழக்குகளில் இதையே நாம் எதிர்பார்க்க முடியாது என்பது தான் கசப்பான உண்மை.

11 கருத்துகள்:

  1. மிகத் தெளிவாக கூறி இருக்கீங்க சார்... பதினாறு வயதைக் குறைப்பது தான் நல்லது என்று எனக்கும் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  2. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அவை சரியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து. நன்றாகச் சொல்லியிருக்கீங்க ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
  3. மனிதன் பாதி மிருகம் பாதி கலவை செய்தான் இனம் மனித இனம். அவனில் மிருக குணம் மேலோங்கும் போது இது போன்ற அத்து மீறல்களை செய்கிறான்.
    அவனை இது போன்ற செயல்களை செய்ய தூண்டுபவர்கள் அவனுக்கு எதிராக கூச்சல் போடுவதுதான் வேடிக்கை. அவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் எப்போதும் அகப்பட்டு கொள்ளவே மாட்டார்கள். அம்புதான் சிக்கிக்கொள்ளும் எய்தவன் தப்பித்துவிடுவான்.

    பதிலளிநீக்கு
  4. மனிதன் பாதி மிருகம் பாதி கலவை செய்தான் இனம் மனித இனம். அவனில் மிருக குணம் மேலோங்கும் போது இது போன்ற அத்து மீறல்களை செய்கிறான்.
    அவனை இது போன்ற செயல்களை செய்ய தூண்டுபவர்கள் அவனுக்கு எதிராக கூச்சல் போடுவதுதான் வேடிக்கை. அவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர்கள் எப்போதும் அகப்பட்டு கொள்ளவே மாட்டார்கள். அம்புதான் சிக்கிக்கொள்ளும் எய்தவன் தப்பித்துவிடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்களுக்கு நன்றிகள் பட்டாபிராமன்!

      நீக்கு
  5. இது வரை அறியாத பல செய்திகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.கொடுமை இழைத்தவன் எந்த வயதாக இருந்தால் என்ன. மனத்தில் கொடூரனாயிருந்தால் அவன் தப்பிக்ககூடாது. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

      நீக்கு
  6. அரசியல்வாதிகள் எல்லாவற்றையுமே 'அரசியல்' செய்யப் பார்க்கிறார்கள். அவர்களின் சொற்களில் அவர்களது சுயநலமே முன்னால் நிற்கிறது.
    இளைஞர்களின் அபரிமிதமான சக்தி ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தப் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு