புதன், ஜனவரி 09, 2013

சூரிய நகரங்கள்


சண்டிகர் நகரத்தின் 2031-ஆம் ஆண்டு பெருந்திட்டம் (Master Plan) வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி 2031ஆம் ஆண்டிற்குள் நகரத்தில் இருக்கும் மழைநீர் சாக்கடை மற்றும் கால்வாய்களின் மேல் சோலார் பேனல்கள் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திறந்தவெளிக் கால்வாய்கள் மூடப்பட்டு அதன் சுற்றுப்புறம் தூய்மையாவதுடன் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சண்டிகர் நகரத்தை இரண்டு சிற்றோடைகள் அல்லது சிறு நதிகள் கடந்துச் செல்கின்றன. அவை பட்டியாலாவின் ராவ் ஓடை மற்றும் ஷுக்னா ஓடை ஆகியவை. இவற்றைத் தவிர என்-கால்வாய் என்ற சிறு கால்வாய் நகரின் பல இடங்களைக்  கடக்கிறது.

இவ்விடங்களை அழகு படுத்தும் முகாந்திரமாக கால்வாய்களில் கற்கள் பதிக்கப்படும் வேலை ஆரம்பம் ஆகிவிட்டது. திட்டத்தின் முதல் படியாக முதலில் மத்திய அரசின் ’புது மற்றும் மரபுசார எரிசக்தி’ அமைச்சகமும் ‘எரிசக்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவன’மும்  இணைந்து சோலார் பேனல்கள் அமைக்கும். இதன் மூலம் 25மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. (தற்போது சண்டிகரில் தனியாக மின்னுற்பத்தி  எதுவும் செய்யப்படுவதில்லை. அது தன் தேவைகளுக்கு மற்ற மாநிலங்களையே நம்பி இருக்கின்றது). இவற்றைத் தவிர திறந்த வெளிப் பூங்காக்கள் மற்றும் கார் நிறுத்தங்களில் சோலார் பேனல்கள் அமைத்து (10 மெகாவாட்) மின்னுற்பத்திச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிரவும் சண்டிகர் நகரைச் சூரிய சக்தி நகரமாக (Solar City) மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நகர நிர்வாகம் நகரின் உபயோகமற்ற அனைத்துப் பகுதியிலும் சோலார் பேனல்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது

மத்திய அரசின் ’புது மற்றும் மரபுசார எரிசக்தி’ அமைச்சகம் தற்போது 54 நகரங்களை சூரிய சக்தி நகரங்களாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகரின் 10% மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மரபுசாரா உற்பத்தியும் சக்தி பாதுகாப்பு முறைகளும் அமுல் படுத்தப்படும். இவற்றில் சூரிய மாற்று சக்தியைத் தவிர காற்றாலைகள், உயிர் மின்சக்தி, குப்பை-கழிவுப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் மின்சக்தி ஆகியவையும் அடங்கும்.

இந்த சோலார் மின் சக்தியைப் பொறுத்தவரை இந்த சோலார் பேனல்களின் விலை இது வரை அதிகமாகவே இருந்து வந்துள்ளது. மேலும் அவை இந்தப் பேனல்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை என்றக் கருத்தும் இருந்து வந்துள்ளது. அதனால் இவற்றின் தயாரிப்பு, பராமரிப்புச் செலவு மற்ற மின் உற்பத்திச் சாதன்ங்களை விட அதிகமாக இருப்பதால் இதுவரை இந்த சூரிய மின்சக்தி வெற்றிகரமாக இருக்கவில்லை. [ஆனால், ஆராய்சிகளின் விளைவாக 2011-ஆம் ஆண்டு இந்தப் பேனல்களின் தரத்தில் பெரிய முன்னேற்றம் வந்த்து என்று படித்த ஞாபகமும் இருக்கிறது].  இவற்றில் மென்மேலும் புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து இவற்றின் அமைப்பு மற்றும் தயாரிப்புச் செலவு குறைவது தான் இத்திட்டதிற்கு வெற்றியை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

டிஸ்கி:         நான் இந்தத் துறையைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் இத்துறையைச் சேர்ந்தவர்கள் இதிலுள்ளக் குறைகளைச் சுட்டிக் காட்டி மேலதிகத் தகவல்கள் இருந்தால் அவற்றைக் குறிப்பிடவும் வேண்டுகிறேன்.

2 கருத்துகள்:

  1. நல்ல தகவல் சீனு. எல்லா ஊர்களிலும் இம்மாதிரி கால்வாய்கள் மீது சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் தயாரித்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே குஜ்ராத்-ல் இது நடைமுறைக்கு வந்துவிட்டது....

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் குஜராத் தகவலுக்கும் நன்றிகள் வெங்கட்.

      நீக்கு