வெள்ளி, பிப்ரவரி 10, 2012

கத்திக்குத்து கற்றுத் தரும் பாடங்கள்



நேற்று மாலை முதல் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் செய்தி ஊடகங்களிலும் முக்கிய்ச் செய்தியாக இடம் பெற்றது தனியார் பள்ளி ஆசிரியை உமாமஹேஸ்வரி அவர்களை அவரின் (9-ஆவது) வகுப்பில் பயிலும் மாணவன் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்திய சம்பவம் தான்.  மாணவன் தான் குத்தியதை ஒப்புக் கொண்டு தன் பெற்றோர் மேலும் வெறுப்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளான்.

ஒட்டு மொத்த ஆசிரிய சமூகமும் பெற்றோர்களும் இச்சம்பவத்தால் சற்று கலங்கியுள்ளன என்றே கூறலாம்.

இன்று மற்றொரு செய்தி, தில்லியில் 12 வயது சிறுவன் ’குற்றமும் பின்ணணியும்’ போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வருவது போல் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளான்.

இதற்கு யார் காரணம்? என்று தனிப்பட்ட பிரச்சனையாக இதைப் பார்ப்பதில் ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. முதல் சம்பவத்தில் ஒருவேளை, மாணவனின் தண்டனையை நிர்ணயிக்க வேண்டுமானால் இது நீதிமன்றங்களுக்கு தேவையானதாக இருக்கும். ஆனால் சமூகம் ஒட்டு மொத்தமாக, இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடராமலிருக்க, இதில் ஒரு பாடம் கற்க வாய்ப்புள்ளது. அதற்கு, ஒட்டு மொத்த சமூகமே ஒரு சுய சோதனை செய்து கொள்வது அவசியம். முதலில் காரணங்களாக நமக்குத் தோன்றுவதைப் பார்ப்போம்

ஒருபக்கம் ஒட்டு மொத்த கல்வித்துறையே இன்று வணிகமயம் ஆகிவிட்டது. காரணம், மதிப்பெண் தேர்வு முறை. பள்ளியின் வருமானத்தை கணக்கில் கொண்டு அதிகமாக மாணவர்களைச் சேர்த்து ஆசிரியர்களை செயல்பட முடியாமல் செய்வது. மேலும் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தாலும் பெற்றோராலும் கொடுக்கப்படும் அழுத்தம். அந்த அழுத்த்த்தை அவர்கள் மாணவர்களிடம் திருப்பிவிடுவது. ஆசிரியர்களைக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டும் சேர்த்த பின்பு அவர்களூக்கு வேறு பயிற்சிகள் தராமலிருப்பது.

நம் போன்ற பெற்றோரின் பங்கும் இதில் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஏனென்றால், எத்தனைத் தேர்ச்சி சதவிகிதம் பள்ளி காட்டுகிறதோ அதை வைத்துப் பெற்றோர் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது.
மேலும், நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஒரு நல்ல அரசாங்க அல்லது அந்நிய நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்காக படிக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்கு. அல்லது நம் சிறு வயது கனவுகளை நிரைவேற்றிக் கொள்ளப் பயன் படுத்திக் கொள்வது.

தவிர, போட்டி நிறைந்த உலகமாக மாற்றி சக மாணவர்களுடன் அல்லது அடுத்த வீட்டுக் காரகளுடன் அவர்களை ஒப்பிட்டு அவர்களை விட ஒரு படி மேல் என்று நிரூபித்து தன் ego-வை திருப்தி படுத்திக் கொள்ள அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது.

பிள்ளைகளின் பணத் தேவைகளை நிறைவேற்றினால் மட்டுமே போதுமானதாக நினைத்து அவர்களின் மற்றத் தேவைகளை நிராகரிப்பது; அவர்களுடன் சரிவரப் பழகத் தேவையான நேரத்தை செலவிடாமல் இடைவெளி ஏற்படுத்திக் கொள்வது.

நம் குழந்தைகளிடம் இலக்கை எட்டுவது மட்டுமே முக்கியம் என்றும் அதன் வழி முறைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிப் பழக்கி வருவதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுவே, நேர்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணமாகியுள்ளது.

ஆக முதலில் திருந்த வேண்டியது நாம் தான்…..

10 கருத்துகள்:

  1. வருத்தமாக உள்ளது. அந்த ஆசிரியை தன்னை பாதுகாத்து ஓட அவகாசமில்லாமல் தாக்கியிருக்கானே அவன் மாணவனே அல்ல.மிருகமாய் வளர்ந்துள்ளான்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை சீனு... நிறைய விஷயங்கள் அதிர வைக்கின்றன... குழந்தை வளர்ப்பு பற்றி நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகளை நல்ல மனிதராக வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் கையில் தான் உள்ளது......

    கவனமாக கையாள வேண்டும்.....

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றிகள் ஆச்சி,
    //அவன் மாணவனே அல்ல.மிருகமாய் வளர்ந்துள்ளான்.//
    வளர்ந்துள்ளானா அல்லது வளர்க்கப்பட்டுள்ளானா என்பது தான் குழப்பம்.

    பதிலளிநீக்கு
  5. //குழந்தை வளர்ப்பு பற்றி நினைத்தால் பயமாகத்தான்//
    ஆமாம் வெங்கட் இதுவும் கத்தி மேல் நடப்பது போலத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

    http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. எனக்கென்னவோ இந்த பையன் விஷயத்தில் பெற்றொரைத்தான் குறை சொல்லத் தோன்றுகிறது. இந்தக் காலகட்ட குழந்தைகள் ரொம்பவே குழம்பித்தான் உள்ளனர். அவர்கள் குழப்பத்தைப் போக்க யாருக்கும் தெரியவில்லையா, இல்லை, அக்கறை இல்லையா! எனக்குப் புரியவில்லை. ஆசிரியர்களை குறை சொல்லிப் பலன் இல்லை. அவர்கள் வியாபார நிர்வாகத்தின் கையில் ஆடும் பொம்மைகள். எனவே பெற்றோரின் பொறுப்பு மிக அதிகம். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே!

    பதிலளிநீக்கு
  8. சரியாகக் கூறியுள்ளீர்கள் பத்து.

    பதிலளிநீக்கு