திங்கள், செப்டம்பர் 26, 2011

அப்பா நீதான் திருடன்!!


அப்பா நீதான் திருடன்!!என்று என் மகன் கூப்பிட்டவுடன் தொலைகாட்சி பார்த்துக் கொண்டடிருந்த நான் திடுக்கிட்டேன். கையில் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு அவன் நிற்ப்பதைப் பார்த்த பின் தான் அவன் தன்னை காவல் துறை அதிகாரியாகவும் (Inspector!!!)  என்னைத் திருடனாகவும் விளையாட அழைத்தது புரிந்தது. நான் ஒளிந்து கொள்ள அவன் கண்டுபிடிப்பான்.

சில நேரம் நான்; வேறு சில நேரம் என் மனைவி அல்லது மகள்.

இதே போல் என் மகளும் சில சமயம் ஆசிரியை; வேறு பொழுது மருத்துவர் அல்லது வேறு தொழில் செய்பவர் அல்லது இருக்கவே இருக்கிறது அப்பா அம்மா விளையாட்டு. குழந்தைகளுக்கு தான் இப்படி வேறு வேறு வேஷம் போட்டு எத்தனை விளையாட்டுகள்.

அதிலும் குழந்தைகள் தங்களுக்குள் ஒளிந்து விளையாடும் பொழுது ”தயாரா” என ஒரு குழந்தை கேட்க (ஒளிந்திருக்கும்) குழந்தை ”தயார்” என அப்பாவியாக குரல் கொடுக்கும். குரல் வந்த திசையில் தேட வேண்டும் என்பது கூட அந்தக் குழந்தைக்குத் தெரியாத அப்பாவித் தனம்.

பெரியவர்களான நமக்கு இது சில நேரங்களில் போரடிக்கும். இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் பொழுதை மகிழ்ச்சியாக செலவிட மட்டுமே உதவும் என்பது பெரும்பாலானவர்களின் நினைப்பு,

ஆனால், வல்லுநர்கள் இவை குழந்தையை மகிழ்விப்பதுடன் அவர்களின் கற்பனைத் திறன், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களின் உணர்வு மற்றும் அறிவு பூர்வ அணுகு முறைகளில் மாற்றம் ஏற்படுத்தவும் உதவும் என்கிறார்கள். மேலும், இவை அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களைக் கூர்ந்து கவணிக்கவும் உதவுவதாகவும் கூறுகிறார்கள்.  

பொதுவாக குழந்தைகளின் கற்பனைத் திறன் அவர்களின் இரண்டு வயது முதல் ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து கவணித்து அவற்றை திரும்ப (imitate) செய்ய விழைகிறார்கள். அவ்வாறு செய்வது அவர்களுக்கு மகிழ்சி அளிக்கிறது.

எனவே, பெற்றோராகிய நாம் அவர்கள் இது போன்ற விளையாட்டுகள் விளையாடும் பொழுது அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். சில நேரம் நாமும் கலந்து கொள்ளலாம். ஆனால், அந்த விளையாட்டில் அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அவற்றை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது. அவர்களாகவே அவர்களின் வழியில் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டும். முக்கியமாக நாம் அவர்களை சுமந்து செல்ல விழையக்கூடாது.

9 கருத்துகள்:

  1. குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல கருத்துகள் ஒரு தொடராக தொடரட்டும்.

    ரோஷ்ணி இங்கு எப்பவும் ஆசிரியை இல்லையென்றால் சமையல் செய்வாள் விதவிதமாக. :)

    பதிலளிநீக்கு
  2. அப்ப நீதான் திருடனா! (கால் மாறிப் போச்சு.).

    எங்க வீட்டுல விளையாடி ரொம்ப நாள் ஆச்சு.

    பதிலளிநீக்கு
  3. அப்படியா ஆதி,

    ஒரு நல்ல professor (அ) இரண்டும் கலந்த catering college தலைவர் தயாரா?

    அல்லது இதற்கு நேர்மாறாக இப்பொழுதுதான் சமத்துப் போட்டு விட்டேனே என்று, நாளைக்கு அடுக்களைக்கு உள்ளேயே நுழைய மாட்டாளோ?

    பதிலளிநீக்கு
  4. கவலை படாதீர்கள் பத்து. இப்பொழுது இல்லாவிட்டாலும் பின்னாளில் பேரன் பேத்தியுடன் விளையாட நேரல்லாம். ஒழுங்காகக் கற்றுக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. //(கால் மாறிப் போச்சு)//

    குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசுவின் படுத்தலால் (அவர் வேறு எந்த படத்தில் படுத்தவில்லை என அடுத்த கேள்வி கேட்காதீர்கள்) என் பொண்டாட்டி நான் எந்த பக்கம் வேண்டுமானாலும் காலைப் போடுவேன் என்று கேட்பதுதான் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல பகிர்வு சீனு. குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவே நாமும் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம்....

    திருடன் போலீஸ் விளையாட்டு..... :) நீதான் திருடனா?

    பதிலளிநீக்கு
  7. வெங்கட், குறிப்பாக அவர்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் பொழுது நம் தவறுகள் அப்பட்டமாகத் தெரியும். நிறைய குடும்ப ரகசியங்கள் அம்பலமாகும்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  9. ராஜி, என் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு தங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு