வியாழன், நவம்பர் 29, 2012

பதிமூன்றாவது ராசி


ஜோதிடம் அறிந்தவர்கள் மட்டுமல்ல சாதாரணமாக யாரைக் கேட்டாலும் மொத்தம் எத்தனை ராசிகள் என்ற கேள்வியைக் கேட்டால் உடனே பன்னிரண்டு என்று பதில் கூறுவர்.

மொத்தம் 12 ராசிகள் தானே! பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறதா என்ன?

முதலில் ஒரு கதையைப் பார்ப்போம்…

க்ரேக்கர்களின் மருத்துவக் கட்வுளின் பெயர் ஆஸ்கிலிபியஸ். ஆஸ்கிலிபியஸ்-இன் தந்தை க்ரேக்கக் கடவுள் அப்பல்லோ; தாய் கோரோனிஸ் (சிலர் அர்சினோய் என்று குறிப்பிடுவர்). க்ரேக்கப் புராணத்தின் படி, கோரோனிஸ், அப்பல்லோ மூலம் கருவுற்றிருந்த பொழுது, அப்பல்லோவை ஏமாற்றி இஸ்சிஸ் என்ற மனிதனுடன் கள்ளத் தொடர்பு கொண்டாள். அப்பல்லோ-விடம் நற்பெயர் எடுக்க நினைத்த காக்கை இந்தச் செய்தியை அவருக்குத் தெரியப் படுத்தியது. கோபத்தில் அப்பல்லோ கோரோனிஸ் மேல் அம்பு எய்தினார். ஆனால், அவளுடன் குழந்தை அழியாமல் இருக்க அவள் சிதையிலிருந்து அக்குழந்தையைப் பிரித்தெடுத்து அதை சிரான் என்ற குதிரைமனிதனிடம் (centaur) கொடுத்தார்.

[அப்பல்லோ-விடம் அவர் மனைவி பற்றி தகவல் சொன்னால் பரிசு கிடைக்கும் என்று என்னிய காகத்திற்கு, கோள் சொன்னதற்காக, அதுவரை வெள்ளை நிறத்திலிருந்த அதை கருப்பாக மாறும்படி சபித்தது தனி கதை].

சிரான் ஆஸ்கிலிபியஸ்-ஐ தன் மகனாக வளர்த்து அவனுக்கு வேட்டையையும் மருத்துவத்தையும் கற்பித்தாள். ஆஸ்கிலிபியஸ் மருத்துவத்தின் மூலம் அனைவரின் நோயையும் தீர்த்து வைத்து வந்தார். மேலும், இறந்தவர்களை உயிர்பிப்பதற்காக பல ஆராய்ச்சிகலையும் செய்து வந்தார்.

ஒரு நாள் க்ரேடே என்ற இடத்தில் மைனோஸ் மன்னனின் மகன் க்ளூகஸ் ஒரு தேன் ஜாடியில் விழுந்து மூழ்கினான். [இனிப்புத் தன்மைக்குக் காரணமான க்ளூகோஸ்-இன் பெயர் காரணம் இதுதான்]. மூர்ச்சையான க்ளூகஸ்-இன் உடலைச் சோதித்துக் கொண்டிருக்கும் பொழுது, இரண்டு பாம்புகள் அவ்வுடலைத் தீண்ட வந்தன. ஒரு பாம்பைத் தன் கைத்தடியால் கொன்ற ஆஸ்கிலிபியஸ், அடுத்த பாம்பு அதன் வாயில் இருந்த மூலிகையை க்ளூகஸின் வாயில் வைக்க, க்ளூகஸ் உயிர் பிழைத்தான். அந்தப் பாம்பை பிடித்து அதன் வாயிலிருந்து ஆஸ்கிலிபியஸ் மூலிகையை எடுத்துக் கொண்டான்.

[சிலர், ஆஸ்கிலிபியஸ் க்ரேக்க பெண் கடவுள் ஏதென்ஸ் மூலம் பெண் அரக்கி மெதூஸாவின் (மெதூஸாவைப் பற்றி அரக்க நட்சத்திரம் பதிவில் எழுதியுள்ளேன்) ரத்தத்தைப் பெற்றதாகவும் அதிலிருந்து இந்த மூலிகையைத் தயாரித்ததாகவும் கூறுவர். மெதுஸா-வின் இடது பக்க நரம்பில் பாயும் இரத்தம் விஷம்; வலது பக்கத்தில் பாயும் இரத்தம் அமுதம் என்று நம்பப் படுகிறது]

ஒரு முறை தீஸஸ்-இன் மகன் ஹிப்பொலிடஸ் அவன் தேரோட்டி ஔரிகா-வினால் தள்ளிக் கொல்லப்பட்டான். ஆஸ்கிலிபியஸ் தன் கையில் இருந்த மூலிகையால் ஹிப்போலிடஸின் மார்பில் மூன்று முறைத் தொட்டு அவனை உயிர்பித்தார்.  இது போல் தினம் தினம் தன்னிடம் வரும் இறந்தவர்களைத் தொடர்ந்து உயிர்பித்து வந்தார்.

அதேபோல், பூமித்தாயான ஜியா ஆரியனைக் கொல்ல தேளை அனுப்பினார். தேள் ஆரியனைக் கொட்ட, ஆரியனை ஆஸ்கிலிபியஸ் உயிர்ப்பித்தார். மீண்டும் கொட்டும் எண்ணத்தில் வந்த தேளை தன் காலால் ஆஸ்கிலிபியஸ் மிதித்தார்.

நிலமை இப்படியே இருக்கவில்லை. பாதாள உலகைச் சேர்ந்த இறப்புக் கடவுளுக்கு (எமன்!!!) தன்னிடம் வரும் இறந்தவர்களின் எண்ணிக்கைத் தினம் தினம் குறைவதைக் கண்டு கவலை ஆரம்பமாகத் துவங்கியது. இதற்குக் காரணம் ஆஸ்கிலிபியஸ் இறந்தவர்களை உயிர்பிப்பது தான் என்பது புரிந்தது. இப்படியே இருந்தால் தன்னிடம் வருபவர்கள் குறைந்து தனக்கு வேலை இல்லாமல் யாரும் தன்னை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தான். இதற்குத் தீர்வு காண அவன் தன் சகோதரனான ஜீயஸ்-ஐ அனுகினான். ஜீயஸ் தன் வஜ்ராயுதத்தால் (ஜீயஸ் நம் இந்திரனுக்கு இணையானவன்; ஜீயஸின் ஆயுதம் இந்திரனின் ஆயுதத்தைப் போலவே இடியும் மின்னலும் தான்) ஆஸ்கிலிபியஸை தாக்கினான்.

தன் மகன் மேல் ஜீயஸ் வஜ்ராயுதத்தைப் பிரயோகித்ததை அறிந்த அப்பல்லோ ஜீயஸின் மகன்களான மூன்று சைக்லோப்ஸ்-களைக் கொன்றார். அப்பல்லோ-வின் கோபத்தைத் தணிக்க ஜீயஸ், ஆஸ்கிலிபியஸை என்றும் நிலையாக இருக்கும் வகையில் வானத்தில் நட்சத்திரக் கூட்டங்களில் அவன் பாம்பைப் பிடித்துத் தேளை மிதிக்கும் உருவத்தை வடிவமைத்து அதற்கு ஆஃபியூகஸ் (பாம்புப் பிடாரன்) என்று பெயரிட்டார்.

இந்தக் கதைக்கும் பதிமூன்றாவது ராசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

8 கருத்துகள்:

  1. இது புதிய தகவலை இருக்கிறதே... தொடர்கிறேன்...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் தனபாலன்!

      இதன் அடுத்த பகுதியையும் பதிவிட்டுள்ளேன். தயவு செய்து படிக்கவும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் த.ம. வாக்கிற்கும் நன்றிகள் வெங்கட்!

      நீக்கு
  3. சுவாரசியமா சொல்லிட்டு வந்துட்டு தொடரும் போட்டுட்டீங்களே.....

    புதிய தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவு மறுநாளே எழுதி வெளியிட்டுவிட்டேனே!

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  4. அருமையான தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு