வெள்ளி, மே 31, 2013

புகை இ(ல்)லை நாள்


இன்று மே 31-ஆம் நாள்.

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை புகையிலை மறுப்பு/எதிர்ப்பு தினமாகக் கொண்டாடி வருகிறது.

இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைப் பொறுத்தவரை இது அமெரிக்க பழங்குடிகளிடமிருந்து, கொலம்பஸால் ஐரோப்பிய தேசத்திற்க்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உலகமெங்கும் பரவியது என்று கூறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்தப் புகையிலையைப் புகைக்கும் பழக்கம் மருத்துவ ரீதியாக நல்லது என்று கருதப்பட்டது. எனவே, பெரும் பணக்காரர்களாலும் அரச குடும்பத்தினராலும் கடைப்பிடிக்கப்பட்டு அதுவே இப்பழக்கத்திற்கு விளம்பரமாக அமைய வெகுவிரைவாகப் பரவியது.

பிற்காலத்தில் நீண்ட ஆராய்ச்சியின் விளைவாகப் புகைப்பழக்கத்தின்  கெடுதல்கள் எடுத்துரைக்கப்பட்டாலும் அதற்குள்  இப்பழக்கம் வெகுவாகப் பரவியுள்ளது.  இன்று உலக அளவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை சுமார் நான்கில் மூன்று பேர் புகைப்பது அல்லது புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது என்பதில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பாதிபேர் அதாவது சுமார் 50 சதவிகித்தினரிடம் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்க்கம் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை ஐந்தில் ஒருவர் (20 சதவிகிதம்) புகையிலை உபயோகிப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 20 கோடி பேர் (இதில் 10% 17 வயதுக்கும் குறைந்தவர்கள்) புகையிலைப் பழக்கத்தைக் கைவிடக் கூட முடியாத நிலையை அடைந்துள்ளார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறுகிறது.

சிகரெட் பழக்கத்தைப் பொருத்தவரை இது சம்பந்தமாக எடுக்கப்பட்டத் தகவல்களின் படி சுமார் 55—60% பேர் இப்பழக்கத்தை தங்கள் பதின்ம வயதில் (13-20 வயதுக்குள்) துவக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். சுமார் 10 % பேர் சிறார்களாக (13 வயதுக்கும் குறைவாக)  இருக்கும் பொழுதேத் துவங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர். மீதமுள்ள 30% மட்டுமே 20 வயதுக்கு மேல் இப்பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

எனவே, பள்ளி-கல்லூரிகளின் அருகாமைப் பகுதிகளில் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடைச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.

சமீபத்தில் தில்லியில் 5000 புகைப்பழக்கம் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி புகைப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 27% மட்டுமே 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர். இதற்குக் காரணமாகக் கூறுவது என்னவெனில் பொது இடங்களில் புகைக்கதற்கும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்குப் புகைபொருட்கள் விற்பனைச் செய்வதில் போடப்பட்டத் தடையே. இந்தத் தடை பொதுவாக இந்தியா முழுவதும்  இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே முறையாகச் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இந்தத் தடையை பெருநகரங்களைத் தாண்டி மற்ற இடங்களிலும் முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

மேலும், தில்லியில் அரசு சார்ந்த அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த அரசு சார்ந்த பணியிடங்களில் புகைப் பிடிக்க உள்ளத் தடையும் ஒரு முக்கியக் காரணம் என்றும் கூறுகிறார்கள். எனவே தனியார் நிறுவனங்களையும் தங்கள் பணியிடங்களில் புகைபிடிக்கத் தடைசெய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தவிர இந்திய புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பாளர்களில் சிகரெட்  பிடிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 10 -20% விதம் தான். 50% மேலானவர்கள் உபயோகிப்பது புகையிலை, குட்கா போன்றவையே. இவற்றுக்கும் மேற்கூறியக் கட்டுப்பாடுகள் முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அறிக்கையின் படி ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புகையிலை பாதிப்பினால் இறக்கிறார்கள் என்று கூறுகிறது.  இதன் மற்றொரு அறிக்கைப்படி இந்தியாவில் வாய் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம் என்பதே. இதற்கு முக்கியக் காரணம் புகையிலையே.

உலகச் சுகாதார நிறுவனம் இவ்வாண்டு அறிக்கையில் புகையிலைப் பொருட்கள் சந்தைப் படுத்துவதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், முழுத் தடை என்பது இந்தியா போன்ற நாடுகளில் தற்போது சாத்தியமா பெரிய கேள்வி. குறைந்த பட்சம் இவற்றின் கட்டுப்படுத்துவதாவது முறைப்படுத்தப்படுவது தான் அவசியம்.

மற்றபடி, உலக சுகாதார நிறுவனம் மே-31 ஐ புகையிலை மறுப்பு தினமாக அறிவித்தாலும் மக்கள் தாங்களாகவே எப்பொழுது புகையிலையின் கெடுதல்களை உணர்ந்து கைவிடுகிறார்களோ அந்தத் தினம் தான் உண்மையான புகையிலை மறுப்பு தினம்.

திங்கள், மே 13, 2013

மூன்றா? நான்கா?


 
சமீபத்தில் தில்லி பல்கலைக் கழகம் வரும் ஜூலையில் துவங்கும் இந்த வருடக் கல்வியாண்டிலிருந்து பட்டப்படிப்பை மூன்று ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

இத்திட்டத்தின் படி இதுவரை இருந்த கலை, அறிவியல் ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் நீக்கப்பட்டு அனைத்து மாணவருக்கும் (அவர்கள் 11-12 ஆம் வகுப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும்) முதல் இரண்டு ஆண்டுகள் அடித்தளக் கல்வியும், மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பும் நான்காம் ஆண்டில் துறையின் நுணுக்க அறிவும் வழங்கப்படும் என்றுக் கூறப்படுகிறது.

இவ்வாறு மாற்றுவதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம் இந்தியப் பல்கலைக் கழகங்களைத் தவிர்த்து அனைத்து சர்வதேசக் கல்லூரிகளும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பைத் தருகின்றன. இந்திய மாணவர்கள் மேல் படிப்பிற்கு சர்வதேசக் கல்லூரிகளில் சேரும் பொழுது அவர்களுக்கு அங்கு ஒருவருடம் அடிப்படைக் கல்வி அளிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த மாற்றங்களின் தேவையைப் பற்றி நம் போன்ற பொதுமக்களின் கருத்து குழப்பத்தைத் தான் தரும். ஏனென்றால் கல்வியாளர்களும் துறைச் சார்ந்தவர்களும் தான் இதன் தேவையை விவாதிப்பது நல்லது.

இருந்தாலும் பொதுமக்களுக்கு இதில் சில கேள்விகள் உள்ளன. இதைப் பற்றி சரியான பதிலளிக்க தில்லி பல்கலைக் கழகம் கடமைப்பட்டுள்ளது. அக் கேள்விகள்…

1.    முதலில் இது பல்கலைக் கழக மானியக் குழுவால் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக மாற்றப்படாமல் தில்லி பல்கலைக் கழகத்தில் மட்டும் மாற்றம் நிகழ்வது ஏன்?
2.    இதன் சாதக பாதகங்கள் முறையாக கல்வியாளர்களாலும் துறைச் சார்ந்தவர்களிடமும் விவாதிக்கப்படாமல் திடீரென்று திணிக்கப்படுவது ஏன்?
3.    80-களுக்கு முன் வரை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாகத்தான் இருந்தது. ஆனால், அப்பொழுது, பத்தாம் வகுப்பிற்குப் பின் பி.யூ.சி என்று ஒரு ஆண்டு மாணவர் தேர்ந்தெடுக்கும் துறையில் அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. பின் அந்த அடிப்படைக் கல்வி இரண்டாண்டுகளுக்கு (+1, +2 என) நீட்டிக்கப்பட்டு பட்டப்படிப்பு மூன்றாண்டுகளாகத் திருத்தி அமைக்கப்பட்ட்து. தற்போது, 11-12 ஆம் வகுப்பில் அவர்கள் தங்கள் துறையை தேர்ந்தெடுக்கும் வழக்கம் நீக்கப்படுமா?
4.    சர்வதேசக் கல்லூரிகளில் மேல் படிப்பு பெற விழைபவர்கள் எத்தனைச் சதவிகித்த்தினர்? அவர்களை மட்டுமேக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரும் காரணம் என்ன?
5.    பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளதால் பட்ட மேற்படிப்பு ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று தில்லியில் மேற்படிப்புப் படிக்க விழையும் மாணவர்கள் இரண்டாண்டுகள் (முதல் ஆண்டு அடிப்படைக் கல்வியும் இரண்டாம் ஆண்டு துறை மேற்படிப்பும்) கல்வி பயில வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் பட்டப்படிப்பு படித்து மற்ற பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புப் படிக்க விழைவோரின் நிலைமை என்ன? அவர்களுக்கு ஓராண்டு வீணாகுவதை எப்படித் தடுக்க முடியும். இது பற்றி மற்ற பல்கலைக் கழகங்களுடன் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கல்வித்துறை மூலம் ஏதாவது அறிவிப்புகளோ வெளியிட ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவா?
6.    பட்டப் படிப்பு மூன்றாண்டுகள் நடக்கும் பொழுதே அதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது மேலும் ஓராண்டு அதிகமானால் அதற்காக ஆகும் மேற்செலவை யார் ஏற்பார்கள். மற்றவர்களைவிட வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை இது மேலும் சுமையேற்றி அவர்கள் பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட இது வழிவகுப்பதை எப்படி அரசு / மக்களால் சமாளிக்க முடியும்?
7.    நான்காண்டுகளுக்காக திருத்தி வடிவமைக்கப் பட்டப் பாடப்பகுதிகளை நட்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?
8.    புதிதாகப் பாடப்புத்தகங்கள் எப்பொழுது வடிவமைக்கப்படும்?

பெரும்பாலான (தில்லிக் கல்லூரிகளின்) ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே நேரம், இத்திட்டம் முன்னாள் மாணவர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தான் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு படிக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது சர்வதேச நிறுவன்ங்களால் நிராகரிக்கப்பட்டும் இருக்கலாம்.

இத்திட்டத்தால்  கல்வியின் தரம் உயரம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இது பொதுவெளியில் ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தவது தவறு தான். சென்ற வருடம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை இதுபோன்றே ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

பொதுவாக, இந்தத் திட்டம் மட்டுமல்ல அனைத்துத் திட்டங்களுமே அது அணு உலை அமைப்பதாகட்டும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் அல்லது தேர்தல் சீர்திருத்தம் ஆகட்டும் இவை எதுவுமே பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் திணிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது என்பது தான் இதில் வருத்தமான விஷயம்…

திங்கள், மே 06, 2013

குட்டிச் சுட்டீஸ் – ஒரு கோரிக்கை


சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ‘குட்டிச் சுட்டீஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


90களின் இறுதியில் (1999-2000) தூர்தர்ஷனில் DD-II என்ற சேனல் வந்து கொண்டிருந்தது. அதை DD-மெட்ரோ என்ற பெயரில் அழைத்து வந்தனர். நான்கு மெட்ரோ நகரங்களிலும் இதில் நிகழ்ச்சிகள் 9 கோல்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கூட்டுடன் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தன. பின்னர் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த 9 கோல்ட் ஸ்டார் டிவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் இது நிறுத்தப்பட்டுவிட்ட்து.

இதில் தில்லி மெட்ரோவில் ‘போல் பேபி போல்’ என்ற நிகழ்ச்சி நட்த்தப்பட்டு வந்தது. இந்தக் ’குட்டிச் சுட்டிஸ்’ நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியிலிருந்து வடிவமைக்கப்பட்ட்தே.

இந்த நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் ‘சொல்லுங்கண்ணே’ புகழ் இமான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ள அவர் தொகுத்து வழங்குவதால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அனைவருக் கண்டு களிக்கும் வகையில் நட்ததப்பட்டு வருகிறது. சன் குழுமத்தின் தெலுங்கு சேனல்களில் இந்நிகழ்ச்சி பின்னணிப் பாடகர் மனோ அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் இமான் கேட்கும் கேள்விகளுக்குக் குழந்தைகள் அளிக்கும் பதில்கள் மிகவும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க ஒரு நல்ல நிகழ்ச்சி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது. இமான் நிகழ்ச்சியில் அடிக்கடி தன் உருவத்தையும் தன் நிறத்தையும் கிண்டலடித்துக் கொண்டோ அல்லது குழந்தைகளை அதைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதத்திலோ கேள்விகளைக் கேட்கிறார். அனைவரும் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள்/சிரிக்கிறோம்.
 
ஆனால், இது குழந்தைகளிடம் அடுத்தவரின் உருவத்தையும் நிறத்தையும் (குறிப்பாக கரு நிறத்தில் இருப்பவர்களை) கிண்டல் செய்ய மேலும் தூண்டிவிடும். நாளடைவில், உடல் குறைப்பாடு உள்ளவர்களையும் கிண்டல் செய்வதிலும் இது வளர்ந்து விடும்.

இது சிறு குறை தான் என்றாலும் சிறு குழந்தைகளின் மனதில் இது போன்ற மாசுகளை மேலும் ஏறவிடாமல் செய்வது ஊடகங்களின் கடமை. அதிலும் குடும்பத்துடன் இணைந்து கண்டுகளிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த குறைபாட்டை நிறுத்துவது மிகவும் அவசியம்.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு மிகுந்த இமான் போன்றவர்களால் இது போன்ற குறைகள் இல்லாமலும் நடத்த முடியும்.

சன் தொலைக்காட்சியும் இமான் அவர்களும் இந்தக் குறையை நீக்கி மேலும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதே நம் கோரிக்கை.