சனி, ஜூன் 30, 2012

நின்ற ஒரு நொடி



Date
MJD
2008-12-31
54831
2005-12-31
53735
1998-12-31
51178
1997-06-30
50629
1995-12-31
50082
1994-06-30
49533
1993-06-30
49168
1992-06-30
48803
1990-12-31
48256
1989-12-31
47891
1987-12-31
47160
1985-06-30
46246
1983-06-30
45515
1982-06-30
45150
1981-06-30
44785
1979-12-31
44238
1978-12-31
43873
1977-12-31
43508
1976-12-31
43143
1975-12-31
42777
1974-12-31
42412
1973-12-31
42047
1972-12-31
41682
1972-06-30
414
இன்று (ஜூன் 30, 2012) இரவு ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் (Coordinated Universal Time), சுருக்கமாக UTC என்று கூறுவர், அது இரவு 11.59.59 நொடியைத் தொட்டவுடன் ஒரு நொடி நிறுத்தி வைக்கப்படும் (அல்லது அது 11.59.60 என்று ஒரு தனி நொடியாகக் காட்டப்படும்). மீண்டும் ஒரு நொடி கழித்து ஜூலை 1-ஆம் தேதி 00.00.00 (நள்ளிரவு 12.00.00 மணி) ஆகத் துவங்கும்.

அது ஏன்?

சாதாரணமாக உலக அளவில் பொது நேரமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட நேரம் GMT என்று அழைக்கப்படும் க்ரீன்விச் சராசரி நேரம். அது இந்திய நேரத்தை விட 5.30 மணி நேரம் பிந்தையது.

1961-ஆம் ஆண்டு முதல் அணுக் கடிகாரத்தைத் பயன்படுத்தத் துவங்கிய போது ஒரு நாளில் 86400-ல் ஒரு பங்கு (1/86400) ஒரு நொடி என்றக் கணக்கின்படி கடிகாரம் உருவாக்கப்பட்டது. அது முதல் GMT-க்கு பதில்   UTC-யே பொது நேரமாகக் கொள்ளப்படுகிறது.  

ஆனால், பூமியின் சுழர்ச்சி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது பூமியின் பனி உறைவு அதனால் ஏற்படும் அலை வேக மாற்றம் மற்றும் பூமி மையத்தின் (Core) வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வேகம் குறைவதாகக் கணக்கிட்டுள்ளனர். எனினும், இந்த வேகக் குறைவை கணிப்பது கடினம். ஏனென்றால் மேற்கூறிய காரணிகள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறாக இருப்பதால்.



எனவே, இதைச் சமச்சீர் செய்ய பூமியின் சுழற்ச்சியில் ஏற்பட்ட நேரக் குறைவைக் கணக்கிட்டு அது மொத்தமாக ஒரு நொடிக்கு அதிகமாக ஆகும்  பொழுது அந்த ஆண்டு ஜூன்-30 அல்லது டிசம்பர்-31 ஒரு நொடி அதிகமாகக் கணக்கிடப்படுகிறது. இதை ’லீப் நொடி’ என்று கூறுகிறார்கள்.

1971-ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப்பட்ட லீப் நொடிகளின் பட்டியல் இது. [இதில் MJD என்று கொடுக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்ட ஜூலியன் தினம் (Modified Julian Day)]

செவ்வாய், ஜூன் 26, 2012

பிற இரத்தினக் கற்கள்


நவரத்தினம் அல்லாத வேறு சிறப்புடைய கற்கள்

நவத்தினங்களைப் பற்றி இரண்டு இடுகைகள் (பாகம் 1, 2) இட்டிருந்தேன்.
நவரத்தினங்கள் மட்டுமன்றி வேறு சில இயற்கைக் கற்கள் கிடைப்பதற்கு அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதோடு மக்களால் நீண்ட காலமாக விரும்பி அணியப்பட்டும் வருகிறது.

நவரத்தினங்கள் பொதுவாக ஜோதிட ரீதியாக அணியப்படுபவை. சில கற்கள் நவரத்தினத்திற்கு மாற்றாகவும் சில அலங்காரத்திற்காவும் அணியப் படுகின்றன. அத்தகைய கற்கள் சிலவற்றைப் பார்ப்போம்…

ஜேட்:    வெளிர் பச்சை மற்றும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் இது ஒரு ஒளி புகாக் கல் ஆகும். மரகதத்திற்கு மாற்றாக இது பயன் படுத்தப் படுகிறது. நல்ல கடினத்தன்மையுடன் உள்ள இக்கல்லும் ஓர் அரிய வகைக் கல்லே. ஸர்பெண்டைன் என்ற கல் இந்த ஜேட்-க்கும் போலியாகக் கிடைக்கிறது.

ஸ்படிகம்:       ஆங்கிலத்தில் இது க்வார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நிறமற்றது. நிறமுள்ள ஸ்படிகக் கற்களும் உள்ளன, ஆனால் அவை வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன.

கத்திரிபூ நிறத்தில் இருப்பது ஆங்கிலத்தில் அமெதிஸ்ட் என்றழைக்கப்படும் செவ்வந்திக் கல்.

சிட்ரின் க்வார்ட்ஸ் என்ப்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

வெவ்வேறு வண்ண க்ரிஸ்டல்களைப் பாருங்கள்...

ஓபல்:    வெள்ளை நிறத்தில் ஒளிபுகாத கல்லான இது வெளிச்சத்தை பல வித வர்ணங்களை பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பு ஓபலஸ்கீன்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும். இதையொட்டியே இக்கற்கள் ஓபல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல் சூடானால் வெடித்துவிடும், எனவே இதனை அடிக்கடி நீரில் ஊற வைக்க வேண்டும்.

லேபிஸ்லசூலி:        கருநீல நிறமுடைய ஒளி புகாக் கல். மேலே தங்க நிறப் புள்ளிகளுடன் இருக்கும். நீலக்(ப்ளு ஸஃபையர்) கல்லுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவர்.

ப்ளட் ஸ்டோன் :     இக்கல் சிகப்பு புள்ளிகளுடன் பச்சை நிறத்தில் இருக்கும். மேலை நாட்டு  ஜோதிடத்தில் வயிற்றில் கட்டிகள், பாதிப்பு இருப்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
[சென்ற வருடம் சூபர் ஸ்டார் வயிறு சம்பந்தப் பட்ட நோய்க்காகச் சிகிச்சை எடுத்தார் என்று படித்த பொழுது அவர் நடித்த இந்தப் படத்தின் பெயரும் ஞாபகம் வந்தது].

மாலகைட் :    இதுவும் பச்சை நிறமுள்ள ஒளி புகா கல் தான். ஆனால், இதில் கருப்புப் புள்ளிகள்/கோடுகள் இருக்கும்


ஹெமடைட் :  இது கருப்பு நிறமுடைய ஒளி புகாக் கல். கன் மெட்டல் போலவே இருக்கும்.

சூர்ய காந்தம் : சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் வெல்வெட் போன்ற ஜொலிப்புடன் இருக்கும். இது மாணிக்கத்திற்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது. ராஜவர்த்தினி என்ற செயற்கை கல் சூரியகாந்தக் கல்லின் போலி.

ஜிர்கான் :      இது வெள்ளை, பிரவுன், நீலம், பச்சை ஆகிய நிறத்தில் கிடைத்தாலும் வெள்ளை தான் மிகப் பிரபலம். ஏனென்றால், இது வைரத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப் பட்டது.


டர்மலைன்ஸ் :        இவை பச்சை, சிகப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியவற்றின் மாற்றாகப் பயன் படுகின்றன.

 டோபாஸ் :    சஃபையர் போலவே வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் வண்ணம் புஷ்பராகத்தின் மாற்றாகக் கொள்ளப்படுகிறது.

அலெக்ஸாண்டிரைட் :      இது க்ரைஸ்பெரைல் வகையைச் சேர்ந்தது. சூரிய ஒளியில் பச்சையாகவும் செயற்கை ஒளியில் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டது.

பெரிடாட் :     பச்சையும் மஞ்சளும் கொண்ட ஒளி ஊடுறுவும் கல்.

அக்வாமெரைன் :     கடல் நீர் நிறத்தில் அதாவது நீல நிறத்தில் இருந்தாலும் இதுவும் மரகதத்தின் மாற்றாக இருக்கும். இது ஒரு ஒளி ஊடுறுவும் கல்.

சந்திர காந்தம் :       சாதாரணமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இக்கல் சில நேரங்களில் நீலம் கலந்த நிறத்திலும் கிடைக்கிறது.

டர்குவாய்ஸ் : கருப்பு வர்ணத்தில் கோடுகள் கொண்ட வான்நீல நிறம் கொண்ட கல்.

அயோலைட் : ஒரு புறம் நீலமும் மறு புறத்தில் மஞ்சள் அல்லது ப்ரௌன் நிறமும் கொண்ட டிகோரிஸம் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இருநிறத் தோற்றம் கொண்டது அயோலைட்.

இவற்றைத் தவிர, கார்னிட், பைரோப், அல்மேண்டைன், ஆம்பர், பெரிடாட், அசூரைட் போன்ற பல விதமான கற்கள் மக்களால் விரும்பி, சில நேரங்களில் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும், அணியப் படுகின்றன.



திங்கள், ஜூன் 25, 2012

துக்ளக் என்றால் இளக்காரமா?

இந்திய  சரித்திரத்தைப் படித்தவர்களானுலும் சரி படிக்காதவர்கள் என்றாலும் சரி ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது குளறுபடி செய்தால் அல்லது முட்டாள் தனமான முடிவுகளை எடுத்தால் அந்த ஆட்சியாளரை அல்லது அந்த அரசாங்கத்தை ‘துக்ளக் ஆட்சி’ என்று கூறுவது வழக்கம்.

உண்மையிலேயே துக்ளக் அவ்வளவு மோசமான அரசரா? அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் அத்தனை மோசமானவை தானா?

துக்ளக் வம்சம் என்பது கில்ஜி வம்சத்தைத் தொடர்ந்து கி.பி. 1321-1398 ஆண்டுவரை தில்லியில் நீடித்த ஒரு அரசாகும். இதில் ‘துக்ளக் ஆட்சி’ என்று அனைவராலும் இகழப்படும் அளவுக்கு ஒரு முட்டாள் அரசராகக் கருதப் படுபவர் 1325 முதல் 1351 வரை தில்லி சுல்தானாக இருந்த முகமது-பின்-துக்ளக் என்ற பெயரால் நாம் அனைவரும் அறிந்த சுல்தான் ஜௌனா-கான் தான்.

இவரது வாழ்க்கை அல்லது இவரது அரசைப் பற்றி நாம் அறிந்து கொள்ள அடிப்படையாகக் கருதப்படுபவை மூன்று வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டப் புத்தகங்கள். அவை

1.            ஜியா-உத்தீன் பர்னி எழுதிய தாரீக்-ஏ-ஃபிரோஷாஹீ;
2.            இஸாமி எழுதிய ஃபுதூஹுஸ்ஸலாதீன்;
3.            இப்ன்-பதூதா எழுதிய கிதாபுல் ரேஹ்லா.

முகமது பின் துக்ளக் அரசராக இருந்த பொழுது அவர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அவற்றுள் முக்கியக விமர்சிக்கப்படுபவை

1.    1327-28 இல் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத் என்ற பெயர் மாற்றப்பட்டு)  மாற்ற இட்ட ஆணை.
2.    கங்கை யமுனை ஆற்றுப் படுகையில் இருந்த விவசாய நிலங்களுக்கு  வரியேற்றம் (இரட்டை வரி) செய்து பின் அதைத் திரும்பப் பெற்றது.
3.    சீனாவின் குப்லாய் கானுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்தது.
4.    செம்பு, பித்தளை நாணயங்களை நீக்கி தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.

இதில் முதலில் தலைந்கர் மாற்றத்தைப் பொருத்தவரை அதற்குக் காரணம், பூகோல ரீதியாக தேவகிரி மத்திய இந்தியாவில் இருப்பது; மங்கோலியர்கள் வலிமை பெற்று இந்தியா எல்லைப்பகுதிகளை நெருங்கியது (இது ஓரளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைத் தான் ஏனென்றால், துக்ளக் வம்சம் தன் வலிமையை இழக்க ஆரம்பித்த  1398-ல் மங்கோலியர்கள் படையெடுத்து தில்லியை சூறையாடினர்.) ஆனால், இதைப் பற்றி அதிகமாக விமர்சித்தவர் இஸாமி. அவர் இதை ‘தில்லியைப் பெயர்த்தெடுத்தல்’ என்று குறிப்பிடுகிறார். தில்லியே காலி செய்யப்பட்டது என்கிறார். ஆனால், உண்மையில் நடந்தது இஸாமி-யின் நண்பர்களைப் (அரசு பதவியிலும் அரச குடும்பத்திலும் இருந்தவர்கள்) பிரிந்து தலை நகரை விட்டுச் சென்றதைத் தான் குறிப்பிடுகிறார் என்று பிற்கால வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இஸாமி தன் புத்தகத்தில் அதை சுல்தானின் மருமகனுக்கு சமர்த்தித்து இருக்கிறார். தேவகிரி செல்லும் வழியில் அவருடைய பாட்டனார் இறந்துள்ளார். அதுவே அவர் துக்ளக்-ஐ விமர்சிக்கக் காரணம் என்கின்றனர்.

அடுத்து இப்ன்-பதூதா-வைப் பொருத்தவரை,  மொராக்கோ-விலிருந்து (அப்பொழுது மராகஷ் என்று பெயர்) இந்தியா வந்த பதூதா-வை தில்லியின் காஜியாக நியமித்தார். பதூதா நிறைய திருமணங்கள் செய்து மனைவிகளைக் கைவிட்டார் என்ற தகவல் அறிந்ததும் அவரைப் பதவி நீக்கம் செய்து சிறையிலிட்டார். அங்கிருந்து மீண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி  பதூதா சிறையிலிருந்து தப்பினார். அவர்  துக்ளக்-ஐ அவர் விமர்சிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

கங்கை-யமுனை ஆற்றங்கரை இரட்டை வரியைப் பொறுத்தவரை, முதல் வருடம் விளைச்சல் அதிகமாக இருந்ததால் அங்கு இரட்டை வரியை விதிக்க ஆணையிட அந்த வருடமே அங்கு பெருவாரியான இடங்களில் பஞ்சம்.  எனவே, அதைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது கிட்டத்தட்ட நிதி நிர்வாகத்தில் அந்தந்த நேரத்திற்குத் தேவையான முடிவே. ஆனால், இதை அமுல் படுத்த நடக்கும் கால தாமதம் நிர்வாக ரீதியாக (அதுவும் தகவல் தொடர்பு சரியில்லாத எல்லைப் பகுதியில் பதட்டம் உள்ள நிலையில்) இயல்பானதே. 

குப்லாய்கானுடன் ஒப்பந்தம் செய்தது இவருக்கு நன்மை எதுவும் தரவில்லை. இவர் நம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதால் அந்த ஒப்பந்தமே தவரென்று கூற முடியாது. கிட்டத்தட்ட நேருவும் சீனாவால் இவ்வாறு தான் ஏமாற்றப்பட்டார். அதற்காக அவரை விமர்சனம் செய்தாலும் அதை முட்டாள் தனம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், துக்ளக் மட்டும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

துக்ளக்-க்கு முன்னும் சரி அவருக்குப் பின்னரும் சரி அவரை விட மோசமான முட்டாள் தனமான முடிவுகள் எடுத்த பல அரசர்களும் அரசாங்கங்களும்  இருக்கும் நிலையில் துக்ளக்-ஐ மட்டும், அதிலும் அவரிடம் தனிப்பட்ட சொந்த விரோதம் உள்ள ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு பிம்பத்தைக் கொண்டு, குற்றம் சாட்டுவது  சரியானதாகத் தெரியவில்லை.

வெள்ளி, ஜூன் 22, 2012

விளையாட்டும் சர்சையும்

திருவிளையாடல் படத்தில் வருவது போல இன்று கேள்வி-பதில் வைத்தால் ‘பிரிக்க முடியாதது?  சர்சையும் இந்திய விளையாட்டுத் துறையும்’ என்பதாகத் தான் இருக்கும்.

ஐபிஎல் சர்ச்சைகள் நாடு முழுவதும் அலசப் பட்டு வந்த நிலையில், ஆனந்த் – ஐந்தாவது முறை உலக சாம்பியன், சாய்னா – இரட்டைத் தங்கம், ஹாக்கியில் மூன்றாவது இடம், மகேஷ்-சானியாவின் க்ரண்ட் ஸ்லாம் என்று சற்றே சர்ச்சைகள் அடங்கித் தொடர் மகிழ்ச்சியில் விளையாட்டுத்துறை இருந்து வந்த நிலையில் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பம்.

இதில் சர்ச்சையை முதலில் துவக்கியது மகேஷ் தான். க்ராண்ட் ஸ்லாம் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடக் கூட முடியாமல் அவர் லியாண்டருடன் சேர்ந்து விளையாட முடியாது என்று லண்டனிலிருந்தே பேட்டி கொடுத்தது தான் இதற்கெல்லாம் ஆரம்பம்.

மகேஷுக்கும் லியாண்டருக்கும் இருக்கும் பிணக்கு வெள்ளிடை மலை. 2003-ம் ஆண்டு(ம்) மகேஷ் (பூபன்னா-வுடன் சேர்ந்து என்று ஞாபகம்) WTA போட்டிகளின் போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் லியாண்டர் அணித்தலைவராக இருந்தால் டேவிஸ் கோப்பைப் போட்டிகளில் ஆடமாட்டேன்(டோம்) என்று பேட்டியளித்தா(தன)ர். அதன் பின்னர் நடந்த இந்தியாவுக்காக விளையாடிய அணிப்போட்டிகளிலும் சரி மற்ற தனிப்பட்ட போட்டிகளிலும் சரி இருவரும் (பயஸ்-பூபதி) சில போட்டிகளில் பிரிந்தும் சிலவற்றில் இணைந்து விளையாடியுள்ளனர். கடைசியாக இருவரும் சென்ற ஆண்டு இணைந்து விளையாடினர். [அதில் எளிதாக இருவரும் வெல்லும் நிலையில் போட்டி திசைமாறி டை-ப்ரேகர் வரைச் சென்று தோல்வியைத் தழுவினர்] அப்போட்டி முடிந்ததுமே இருவரும் இனி சேர்ந்து விளையாடுவது சாத்தியம் இல்லை என்பது  விளையாட்டைப் பிந்தொடரும் அனைவருக்குமே புரிந்து விட்டது என்றே கூறலாம்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை, லியாண்டருடன் மகேஷும் சரி பூபன்னாவும் சரி ஜோடி சேரவில்லை என்பது தான் உண்மை. ஆனால், மகேஷும் பூபன்னாவும் சேர்ந்து விளையாடியுள்ளனர். எனவே, தாங்கள் இருவரும் ஜோடி சேர்ந்தால் ஒலிம்பிக் போட்டிகளில் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

ஆனால், ஒலிம்பிக் போட்டி என்பது தனிபட்டப் போட்டியில்லை. இது நாட்டிற்காக விளையாடுவது. இங்கு சங்கமோ, அணி பயிற்சியாளரோ, அணித் தலைவரோ எடுக்கும் முடிவுக்குக் கட்டுப் பட வேண்டியது வீரர்களின் கடமை. அணிக் கூட்டங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம். ஆனால், பொது அரங்கில் இவ்வாறு அறிக்கை விடுவது கூடாது.

லியாண்டரைப் பொறுத்தவரை சென்ற பல வருடங்களாகவே அவர் தனிப்பட்டப் போட்டிகளில் எப்படியிருந்தாலும் இந்தியாவிற்காக விளையாடும் பொழுது 100 சதத்திற்கும் அதிகமாகவேத் தன் திறமையை வெளிபடுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மகேஷாக இருந்தாலும் சரி பூபன்னாவாக இருந்தாலும் சரி அவர்களுடன் சேர்ந்து விளையாடவேத் தயாராக இருந்தார்.

இந்நிலையில் மகேஷும், பூபன்னாவும் லியாண்டருடன் இணைந்து விளையாட மறுத்து பொது வெளியில் அறிக்கை இட்டது ஒரு அத்துமீறலே. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் லியாண்டர் தான். லியாண்டருக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட விரோதத்தை இருவரும் இந்த நேரத்தில் வெளிப்படுத்தியதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த நிலைமையில், கீழ்கண்ட முடிவுகள் தான் சாத்தியமாக இருந்த்து:

1.    பூபதி-பூபன்னா மீது அத்துமீறல் நடவடிக்கை எடுப்பது. லியாண்டருடன் வேறு வீரரை இணைப்பது.
2.    பூபதி-பூபன்னா மீது அத்துமீறல் நடவடிக்கை எடுப்பது. லியாண்டருடன் யாரையும் இணைக்காமல் எந்த அணியையும் அனுப்பாமல் இருப்பது.
3.    லியாண்டருடன் பூபதியையோ அல்லது பூபன்னாவையோ கட்டாயப் படுத்தி இணைப்பது
4.    இரண்டு அணிகளை – (1) பூபதி-பூபன்னா, (2) பயஸ்-வேறு வீர்ர் (விஷ்ணுவர்தன்) – அனுப்புவது

ஆனால் சங்கம் இரண்டாவது முடிவை எடுக்க முடியாது. ஏனெனில் மூன்று முன்ணணி வீரர்கள் இருக்கும் நிலையில் ஒருவரைக் கூட அனுப்ப முடியவில்லை என்றால் அது சங்கத்தின் செயலற்ற நிலையைப் பறை சாற்றும்.

மூன்றாவது முடிவை எடுதாலும் வீர்ர்களிடையே புரிந்துணர்வு இல்லாத நிலையில் அது பதக்க வாய்ப்பை விட பதட்ட வாய்ப்பைத் தான் அதிகரிக்கும்.

முதல் முடிவைப் பொறுத்தவரை, சங்கம் இப்பொழுது அதை எடுக்க நினைத்தாலும் லியாண்டர்-விஷ்ணுவர்தனுடன் சேர்ந்தால் பதக்க வாய்ப்பு குறைவு என்பதால் பின்னர் அரசாலும் மீடியாவாலும் பெரிதளவில் விமர்சனத்தைச் சந்திக்க நேரிடும்.

ஆக நான்காவது முடிவை எடுப்பதைத் தவிர் வேறு வழியில்லை. போட்டி முடிந்த பின், ஒரு வேளை மகேஷ்-பூபன்னா பதக்கம் வெல்லவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்புள்ளது என்பது சாத்தியமே.

இதில் எந்த முடிவு எடுத்தாலும் அதில் பாதிப்பு லியாண்டருக்குத் தான். ஏனென்றால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது தான். அவரைச் சமாதானப்படுத்த மாற்று-இரட்டையர் போட்டியில் சானியா-வுடன் லியாண்டர் ஜோடி சேர்க்கப்படுவார் என்று கூறியுள்ளது. ஆனால், வைல்ட்-கார்ட் என்று கூறப்படும் பட்டியிலிலாதவர்களுக்கான நேரடி வாய்ப்பு சானியாவுக்குக் கிட்டினால் தான் அவருடன் ஜோடி சேர்க்க முடியும். இது பற்றி நல்ல வேளையாக சானியா லியாண்டருக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவா என்பது தெரியவில்லை; ஏனென்றால் மகேஷும் அவரும் சேர்ந்து க்ராண்ட்-ஸ்லாம் வென்றுள்ள நிலையில் மகேஷுடன் இருந்த புரிந்துணர்வு லியாண்டருடன் இருக்குமா என்பது கேள்வியே.

எப்படி இருந்தாலும், இன்றைய நிலையில் சங்கம், இது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்றாலும், இதைவிடச் சரியான முடிவை எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.  

ஞாயிறு, ஜூன் 17, 2012

நவரத்தினங்கள் (பாகம்-2)



நவரத்தினங்களில் நான்கை முதல் பகுதியில் பார்த்தோம். மீதமுள்ள ஐந்து கற்களை இப்போது பார்ப்போம்...

5.                  வைரம்

ஆங்கிலத்தில் டையமண்ட் என்றழைக்கப்படும் வைரம் ஹிந்தியில் ஹீரா என்று அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் இதன் பெயர் வஜ்ரம். இதிலுள்ள ரசாயனப் பொருள் கார்பன். நவரத்தினங்களிலேயே அதிகக் கடினத் தன்மைக் கொண்டது வைரம் தான். வைரத்தின் தெளிவு, நிறம், எடை ஆகியவற்றை வைத்து இதன் தரம் மற்றும் விலை நிர்ணயிக்கப் படுகிறது. இந்தியா, ஆஃப்ரிகா ஆகிய நாடுகளில் தான் இது அதிக கிடைக்கிறது என்றாலும் பெல்ஜியம் தான் வைரம் பட்டைத் தீட்டுவதில் பெயர் பெற்ற நாடாக இருக்கிறது.

5.        மரகதம்

மரகதத்தின் ஆங்கிலப் பெயர் எமரால்ட்; ஹிந்தி பெயர் பன்னா (पन्ना). இதன் புராதனப் பெயர் ஹரின்மணி. பெரில் வகையைச் சேர்ந்த இதன் ரசாயனப் பொருள் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட். எளிதில் நொறுங்கும் தன்மைக் கொண்டது மரகதம். மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவச் சிலை மரகதத்தால் ஆனது என்று கூறுவர். அதிர்வுகளால் இது தெரித்துவிடும் என்பதாலேயே கர்பகிரகத்தின் அருகில் மேள தாளங்கள் தவிர்க்கப் படுகிறது. இதிலிருந்து  குரோமியத்தை நீக்கி விட்டால் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படும். இந்த பச்சை நிற பெரிலை சூடாக்கினால் அக்வாமெரின் என்னும் நீலப்பச்சைக் கல்லாக மாறும்.

புளூரைட், மாலக்கைட், ஜேட், செர்ப்பெண்டின்கல் ஆகியவை மரகதத்தின் போலிகள்

7.        வைடூர்யம்

இந்தியிலும் வைடூர்யம் என்ற பெயரையே கொண்ட இதன் ஆங்கிலப் பெயர் ‘கேட்ஸ்-ஐ’. க்ரிஸோபெரில் என்ற வகையைச் சேர்ந்த இதில் உள்ள ரசாயனப் பொருள் பெரில்லியம் அலுமினேட். கேடோயன்ஸி (chatoyancy) என்ற பூனைக்கண்ணைப் போல ஒரு நூலிழையான ஒளி ஊடுறுவிச் செல்வதால் ஆங்கிலத்தில் இது கேட்ஸ்-ஐ என்றுக் கூறப்படுகிறது.

வைடூர்யம் போலவே க்வார்ட்ஸ் வகை வைடூர்யங்களும் கிடைக்கின்றன. இவை ப்ரவுன் கலந்த பச்சையாக இருக்கும். பழுப்பு நிற நூலிழை இருந்தால் டைகர்-ஐ என்றும் கருப்பு நிற நூலிழை இருந்தால் ‘புல்ஸ்-ஐ’ என்றும் அழைக்கப்படும். ஆனால், இவை வைடூர்யம் என்றுக் கொள்ளப்படுவதில்லை.

8.        நீலம்

புராதன காலத்தில் நீலகந்தி (அ) இந்திரநீலம் என்றழைக்கப்பட்டு தற்போது தமிழிலும் இந்தியிலும் நீலம் என்றழைக்கப்படும்  இதன் ஆங்கிலப் பெயர் ப்ளூ ஸஃபையர். யெல்லோ ஸஃபையர் என்றழைக்கப்படும் புஷ்பராகம் போலவே இதுவும் கொரண்டம் வகையைச் சேர்ந்த அலுமினியம்-ட்ரை-ஆக்ஸைட் என்ற ரசாயனப் பொருளையேக் கொண்டது. இதில் டைட்டானியம் என்ற வேதிப் பொருளும் இணைவதால் நீல நிறம் பெருகிறது. காஷ்மீர் நீலம் தான் மிகவும் புகழ்பெற்றது.

நீல டான்சானைட் கல் (கத்திரிபூ நிறம் சேர்ந்தது), நீல டர்மலின் (ராமர் பச்சை நிறம் கொண்டது) ஆகியவை இதன் போலிகள். இந்த போலிகளை டைக்ராஸ்கோப் (dichroscope) என்ற கருவியின் மூலம் கண்டறிகிறாகள்.

9.        பவழம்

முத்தைப் போலவே பவழமும் ஒரு ஆர்கானிக் ஜெம்ஸ்; அதாவது உயிரியிலிருந்து கிடைக்கும் கல்.  இதுவும் கடல் வாழ் உயிரியிலிருந்தே பெறப்படுகிறது. பவழப் பூச்சி  என்ற சிறிய உயிரியின் எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. கால்சியம் கார்பனேட்டால் ஆன இதன் ஆங்கிலப் பெயர் கோரல்; ஹிந்தி பெயர் மூங்கா (मूङ्गा).  பொதுவாக சிவப்பு நிறத்திலேயே இருந்தாலும், வெள்ளை, கருப்பு, நீல வண்ணங்களிலும் கிடைப்பது உண்டு. முத்தைப் போலவே இதன் கடினத் தன்மையும் மிகவும் குறைந்ததாகும்.

கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் ஆகியவை பவழத்தின் போலிகள்.

வெள்ளி, ஜூன் 15, 2012

நவரத்தினங்கள் (பாகம்-1)


உலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை...

1.                  மாணிக்கம்:

இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. இது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கல். ரோஸ் அல்லது சிகப்பு நிறமாக ஒளி ஊடுறவும் தன்மையுடனும் அதே நேரம் முழு சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறவா கல்லாக இரு விதமாகவும் கிடைக்கும்.

உயர் தர மாணிக்கங்கள் சாதரண வெளிச்சத்தில் சிகப்பு நிறத்தையும் அதிக வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரத்த சிவப்பையும் காட்டும். உலகிலேயே மிகவும் தரமான மாணிக்கம் பர்மாவிலும் அதற்கு அடுத்த நிலையில் இலங்கையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் ’மைசூர் ரூபி’ என்றத் தரத்தில் சற்று குறைந்த மாணிக்கமும் கிடைக்கிறது.

மாணிக்கத்தில் உள்ள ரசாயனப் பொருள் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு ஆகும்.வை கொரண்டம் (corundum) என்கிற வகையைச் சார்ந்தவை.

மாணிக்கம், போலியாக / செயற்கையாகத் தொழிற்சாலையிலும் தயார் செய்யப் படுகிறது. ஆனால் இதில் காற்றுக் குமிழ்கள் காணப்படும். இது பொதுவாக ஒளி ஊடுறுவக் கூடியதாகவே இருக்கிறது. அமெரிக்கன் டையமண்ட் கற்களில் சிகப்பு நிறத்திலும் கற்கள் வரும். அவையும் மாணிக்கம் போலவே இருக்கும்; இவற்றை சிகப்பு ஸ்பைனல் கற்கள் என்று கூறுவர். இதை Dichroscope என்ற கருவியின் மூலம் அறியலாம்.

புற ஊதா கதிர் விளக்குச் சோதனையிலும் மாணிக்கத்தைக் கண்டறிகிறார்கள். மாணிக்கத்திற்கு நிறம் தரும் குரோமியம், குறிப்பாக பர்மா மாணிக்கங்களில் அதிகமாக, உள்ளதால் அவை புற ஊதா கதிர் விளக்குகளில் அதிகமாக ஒளிர்கின்றன.

2.                  முத்து

இதன் ஆங்கிலப் பெயர் பியர்ல் (Pearl); இந்தியில் இதன் பெயர் மோத்தி (मोति). இதன் புராதனப் பெயர் ப்ரமௌக்திகம் என்பதாகும். உலகிலேயே பட்டைத் தீட்டப் படாத அல்லது பட்டைத் தீட்ட வேண்டிய அவசியமில்லாத ரத்தின வகை ஒன்ரு உண்டெண்றால் அது முத்து தான். மற்ற ரத்தினங்கள் பட்டைத் தீட்டத் தீட்ட ஜொலிக்கும். ஆனால், முத்து ஒன்றுதான் இயற்கையிலேயே ஜொலிப்பவை. முத்து வானவில்லின் ஏழு நிறங்களையும் காட்டி ஜொலிப்பிற்கு ‘ஷீன்’ என்று பெயர். அதே நேரம் மற்ற ரத்தினங்களைப் போலல்லாமல் முத்துக்கள் சில காலத்திற்குப் பின் நிறம் மங்கத் தொடங்கி விடுகின்றன.

இதில் உள்ள ரசாயனப் பொருள் கால்சியம் கார்பனேட். இது ஆர்கானிக் ஜெம்ஸ் என்ற வகையைச் சார்ந்தது. சாதாரணமாக சிப்பிகள் அவற்றின் உள்ளே அழுக்குகள் படிந்திருந்தால் அவை தாக்காமலிருக்க வேதிப்பொருளைச் சுரந்து அந்த அழுக்கைச் சுற்றி அடுக்குகளாகப் படிந்துவிடுகின்றன. இந்த அடுக்குகள் மேலும் மேலும் இறுகி திரண்டு முத்துக்களாக மாறிவிடுகின்றன.  

செயற்கை முத்துக்களைப் பொறுத்தவரை, இந்த சிப்பிகளில் துளை செய்து அதில் வேறு சிப்பிகளின் தசைகளை வைத்து விடுவார்கள் அவற்றைச் சுற்றி இந்த வேதிப் பொருள் படிந்து அதன் மூலம் முத்துக்கள் உருவாகின்றன. ஆனாலும் இவற்றின் அடுக்குகள் இயற்கை முத்துக்களைப் போல அல்லாமல் வெங்காயத்தைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக இருக்கின்றன.

3.                  புஷ்பராகம்

சாதாரணமாக இதை கனக புஷ்பராகம் அதாவது ஆங்கிலத்தில் Yellow Sapphire என்று அழைக்கப்படுகின்றன; சிலர் இதை மஞ்சள் டோபாஸ் என்றும் அழைப்பர். இதன் புராதனப் பெயர் பதுமராகம், பதுபராஜ் என்பவை ஆகும். இந்தியில் இதன் பெயர் புக்ராஜ். கொரண்டம் வகையைச் சார்ந்த இவற்றில் உள்ள வேதிப் பொருளும் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு தான். இது நிறமற்றது. ஆனால், இதனுடம் வேறு தாதுப் பொருட்கள் சேர அவற்றின்  தாக்கத்தால் இவை மாணிக்கமாக அல்லது நீலம் என்று மாற்றம் பெருகின்றன. நிறம் எதுவும் சேராதது வெண்புஷ்பராகம் என்றழைக்கப் படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா மாநிலத்திலும், இலங்கை, ஆஸ்த்ரேலியாவிலும் கிடைக்கின்றன. புஷ்பராகத்தைப் போலவே மஞ்சள் டோபாஸ், மஞ்சள் பெரில் அல்லது ஹெலியோடோர் ஆகியவையும் இருக்கும்; ஆனால், இவையும் அபூர்வக் கற்களே. புஷ்பராகத்தின் போலியாகக் கருதப் படுவது சைட்ரைன் குவார்ட்ஸ் என்ற கல்லே. ஆனால், இது புஷ்பராகத்தைவிட எடைக் குறைவாக இருக்கும்.


4.                  கோமேதகம்

கோமேதகத்தின் ஆங்கில பெயர் ஹெஸோநைட் (Hessonite). ஹிந்தியிலும் இதன் பெயர் கோமேதக் தான். இதன் நிறம் பசுவின் சிறுநீரின் நிறத்தில் இருப்பதால், புராதன காலத்தின் இதை கோமூத்திரம் என்றும் அழைப்பர். இது கார்னெட் வகையைச் சார்ந்தது. இதிலுள்ள ரசாயனப் பொருள் கால்சியம் அலுமினியம் சிலிகேட். ஆரஞ்சு நிறமுடைய அமெரிக்கன் டைமண்ட் கோமேதகம் போலத்தான் இருக்கும். தேன் நிற ஜிர்க்கானைக் கோமேதகத்திற்கு போலியாகக் கூறுவர்.