திங்கள், ஆகஸ்ட் 13, 2012

நூறு ரூபாய்க்கு நாலு உயிர்


சமீபத்தில் உத்திர பிரதேசத்தின் கான்பூரில் ஒரு சிறுவன் கையிலிருந்த 100 ரூபாய் நோட்டு தவறி சாக்கடையில் விழுந்துவிட்டது. எனவே, அதை எடுக்க அச்சிறுவன் சாக்கடையில் இறங்கினான். ஆனால், சாக்கடையின் உள்ளிருந்த விஷவாயு தாக்க அவன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டான். விழுந்த மகனைத் தூக்கிவர உள்ளிறங்கிய அவன் தந்தையும் மேலே வரமுடியாமால் அங்கேயே மயங்கி விழுந்தார். வெளியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பக்கத்து வீட்டினர் இருவர் உள்ளிறங்க அவர்களும் மேலே வரமுடியாமல் உயிர் துறந்தனர். வெறும் நூறு ரூபாய் நான்கு உயிர்களைக் காவு கொண்டுள்ளது.

ஆனால் அரசாளும் அகிலேஷுக்கோ அவர் தந்தை முலாயமுக்கோ ஏழைகள் பற்றி என்ன புரியும். அவர்களின் சொத்துக்களோ தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கின்றதே..

1977-ஆம் ஆண்டு வெறும் 77000 மதிப்பிலிருந்த முலாயம் சிங்கின் சொத்து 1993 ஆம் ஆண்டு அவர் அளித்த வருமான வரி அறிக்கையின் படி ரூபாய் 18¼ லட்சம். 2005 ஆம் ஆண்டில் அவர் வசமுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 4½ கோடிகள். 1993-2003 வரையான 12 வருடங்களில் அவர் வருமானம் ரூ.6¼ கோடியாகவும் செலவுகள் ரூ.4½ கோடியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆக அவர்களின் சொத்து மதிப்பு உயர்வு ரூ.1¾  கோடியாக இருக்க வேண்டும். ஆக, சுமார் ரூ.2½ கோடி சொத்து வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று சி.பி.ஐ.-ஆல் போடப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. [எப்பொழுதெல்லாம்  மத்திய அரசுக்கும் (காங்கிரஸ் என்றும் படித்துக் கொள்ளலாம்) சமாஜ்வாதி கட்சிக்கும் பிணக்குள் வருமோ அப்பொழுதெல்லாம் இந்த வழக்குத் தூசி தட்டப்படும் (உதா. அமெரிக்க ந்யூக்லியர் 123 உடண்பாடு, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரே நாளில் முலாயம் அடித்த பல்டி)]. மேற்கூறிய சொத்துக்கள் அனைத்தும் காகித மதிப்புகள். இதன் 2005-ஆம் ஆண்டு சந்தை மதிப்பு 100 கோடி என்று சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதன் விவரங்கள்...

எண்
சொத்து
மதிப்பு
2005 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு
1.
எடாவா ஃப்ரெண்ட்ஸ் காலணி வீடு
56000
1 கோடி
2.
லக்னௌ ரமணா தில்குஷ் பண்ணை
20 லட்சம்
4 கோடி
3.
லக்னௌ ஹஸரத் கஞ்ச்
35 லட்சம்
12 கோடி
4.
சைஃபையில் உள்ள விவசாய நிலம்
5.4 லட்சம்
2 கோடி
5.
எடாவா சிவில் லைன்ஸின் உள்ள ப்ளாட்
10 லட்சம்
8 கோடி
6.
சைஃபையில் உள்ள சௌத்ரி சரண்சிங் கல்லூரி
10000
½ கோடி
7.
சைஃபை வீடு
20000
10 லட்சம்

இதைத் தவிர, முலாயாம், அவர் மனைவி காலம் சென்ற மாலதி தேவி, அகிலேஷ், அவர் மனைவி டிம்பிள் ஆகியோரின் நகைகள், அவர்கள் பெயரில் உள்ள முதலீடுகள், இருப்புத் தொகைகள் என்று பலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இது அனைத்தும் 2005-ஆம் ஆண்டுச் சந்தை மதிப்பு. இன்று இதன் மதிப்பு மேலும் அதிகரித்திருக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை...

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி வளர்ச்சித் திட்டங்களை கவனிக்காமல் சிலைகளுக்கும் தலைவர்கள் பெயரில் அழகுப் பூங்காக்களுக்கும் அதிக நேரத்தையும் செலவிட்டதைத் தேர்தல் சமயத்தில் அதிகம் விமர்சித்தது சமாஜ்வாதி கட்சி. ஆனால், தற்போது அகிலேஷ் யாதவ், உத்திர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மாயாவதி அமைத்ததைவிடப் பெரிய அதிக செலவிலானப் பூங்காக்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இது போன்ற மூடப்படாத சாக்கடைகளுக்கும் பள்ளங்களுக்கும் செலவிட அரசாங்கங்களிடம் பணம் இருப்பதில்லை. திட்டக்குழுத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ரூ.32/- சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழாக இருப்பவராகக் கருதப்பட மாட்டார் என்று கூறியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாட்டில் ஏழைகளின் உயிர் இந்த 32 ரூபாய்க்கும் குறைவாகவே நம் அரசாங்கங்களால் கருதப்படுகின்றன என்பது மீண்டும் நிரூபணமாகின்றது....

8 கருத்துகள்:

  1. முதல் பகுதி மிக வருந்த வைக்கிறது.

    அகிலேஷுக்கும் பூங்கா தான் வைக்கிறாரா? வெளங்கிடும் உ. பி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூங்கா வைப்பதோடு, தமிழக அரசியல்வா(வியா)திகள் போலவே மாயாவதி மாவட்டங்கள்/நகரங்களுக்கு இட்ட பெயர்கள், அவரின் திட்டங்களை (at least அதன் பெயர்களை) மாற்றுவது என்று பல வேளைகளையும் செய்து வருகிறார். தப்பித்தவறி புதிதாக ஏதாவது அறிவித்தால் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் அதை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது (இதிலிருந்தே அந்தத் திட்டங்களின் தொலைநோக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்).

      நீக்கு
  2. புள்ளி விவரங்களோடு அம்பலப் படுத்தி இருக்கிறீர்கள்.மக்கள் புரிந்துகொண்டால் சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக புரிந்து அடுத்த முறை மாயாவதியைத் தேர்ந்தெடுத்து அவரை மீண்டும் புரிந்து கொள்வார்கள்.

      நீக்கு
    2. //நன்றாக புரிந்து அடுத்த முறை மாயாவதியைத் தேர்ந்தெடுத்து அவரை மீண்டும் புரிந்து கொள்வார்கள்.//

      மக்களின் நாடியை நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்களே!

      நீக்கு
    3. தமிழகத்தில் இதைத் தானேப் பார்க்கிறோம்.

      மதம், மொழி, மாநிலம் என்பவைச் சும்மா மேல் பூச்சுக்குத் தான். மக்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  3. இவரும் ஒரு அரசியல்வாதிதானே. சிலை வைப்பதும், மாவட்டங்களுக்குப் பெயர் வைப்பதும் தொடரும். அடுத்த தேர்தலில் இவர் செய்தவற்றையெல்லாம் அவர் மாற்றுவார்... எங்கு போய் முடியுமோ! :(

    பதிலளிநீக்கு