வெள்ளி, நவம்பர் 23, 2012

கேகயம்



56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.



கேகயம் அல்லது கைகேயம் என்பது வடமேற்கு பஞ்சாபில் காந்தார தேசத்திற்கும் பியஸ் நதிக்கும் இடையில் உள்ள பகுதி.

கைகேயத்தைப் பற்றிப் பல புராண இதிகாசங்களில் குறிப்புகள் உள்ளன.

ரிக் வேதத்தில் கைகேயர்கள் பருஸ்னி (தற்போதைய ராவி நதி) நதிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகக் குறிக்கப் படுகின்றனர். விதேகத்தைச் சேர்ந்த ஜனகரின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்படுவர் கைகேய மன்னர் அஸ்வபதி. சதபத ப்ரமானத்திலும் சாண்டோகிய உபநிஷத்திலும் கூட கைகேய மன்னர் அஸ்வபதி குறிப்பிடப்படுகிறார். ஜனகரைப் போலவே அஸ்வபதியும் அரசராக இருந்தாலும் யோகியாகவும் கருதப்படுகிறார். ப்ரமாணங்களில் இவர் அர்ஜுன ஔபவேசி, கௌதமர், சத்யாக்ஞ பௌலௌஷி, மஹாசல ஜாபாலா, புதிலா அஸ்வதரஷ்வி, இந்த்ரத்யும்ன பல்லவேயர், ஞான சர்கரக்‌ஷ்யர், ப்ராசின்ஷலா, அவுபமன்யவர், அருணி உத்தாலகர் ஆகியோருடன் நடந்த உரையாடல்களால் குறிப்பிடப்படுவதன் மூலம் அவர்களின் சமகாலத்தவராக தெரிகிறது.

ராமாயணத்தின் தசரதனின் மனைவியும் பரதனின் தாயுமான கைகேயி நாம் அனைவரும் ஏற்கனவே அறிவோம். பெயரிலிருந்தே அவர் கைகேய நாட்டைச் சேர்ந்தவர் என்று அறியமுடியும். அந்யந்தண ராமாயணத்தில் கைகேயி அஸ்வபதியின் மகளாகக் குறிப்பிடப்படுகிறார். ஜனகரின் சமகாலத்தவர் என்பதால் இதற்குச் சாத்தியம் உண்டு. வால்மீகி ராமாயணத்தில் கைகேய ராஜ்ஜியம் சௌதாமா (தற்போதைய சரேஞ்ஜஸ்) நதியைத் தாண்டி, ராஜக்ரஹம் அல்லது கிரிவ்ரஜ நகரத்தைத் தலைநகராகக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இது ஜீலம் நதிக்கரையில் அமைந்த கிரிஜக் என்ற ஜலால்பூராக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் (குறிப்பக கன்னிங்ஹாமின் Ancient Geography of India- என்ற புத்தகத்தில்) கருதுகின்றனர்.

பாகவதத்தைப் பொறுத்தவரை கைகேயர்கள் யயாதி-யின் நான்காவது மகன் அனு-வின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மத்ர தேசத்தைப் பற்றி எழுதும் பொழுது அனுவின் வம்ச வழியைக் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் பார்ப்போம்..

யயாதியின் நான்காவது மகன் அனு; இந்த அனுவின் வம்சம் பின் வருமாறு:

அனு
சுபநரன்
காலநரன்
ச்ருஞ்ஜயன்
ஜனமேஜயன் (பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)

இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.

இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மகன்கள் நால்வர். அவர்கள் (1)வ்ரஸ்த்ரபன் (2) சுதிரன் (3) மத்ரன். சிபியின் நான்காவது மகன் ஆத்ம-தத்வ கேகயன் என்று பாகவதம் கூறுகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் அன்வர்கள் என்பது யயாதியின் மகனான இந்த அனு-வின் வம்சமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவர்கள் இரானிய வம்சமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.

விஷ்ணு புராணம், கைகேயர்கள் விதிஸா நதியைத் (தற்போதைய ஜீலம் நதி) தாண்டி கைகேயம் அமைந்ததாகக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான் வரலாற்று ஆசிரியர்கள் கைகேயம் பாகிஸ்தானின் ஜீலம், ஷாபூர், குஜரத் பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மஹாபாரதத்தில் கைகேயர்கள் இருபிரிவினராக கௌரவர், பாண்டவர் சார்பில் போரிட்டனர். வ்ரிஹத்க்ஷத்ரன் தலைமையில் ஐந்து சகோதரர்கள் பாண்டவர் சார்பில் போரிட்டனர் (வேறு சில புராணங்களில் இவர் பெயர் த்ருஷ்டகேது என்றும் குறிப்பிடப்படுகிறது). இவர்கள், பாண்டவர்களைப் போலவே பங்காளி சகோதரர்களால் நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராக யாரையெல்லாம் தங்களுடன் சேர்க்கலாம் என்று யோசிக்கும் பொழுது க்ருஷ்ணர் முதலில் குறிப்பிட்டது இந்த ஐவரையே. இவர்களை நாட்டைவிட்டுத் துரத்திய பங்காளி சகோதரர்கள் துரியோதனனை ஆதரித்தனர். இவர்கள் கர்ணன் படைத்தலைமை வகித்தபோது அவனுக்கு உதவியதாகவும் அப்பொழுது அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மஹாபாரதத்தில் குரு வம்சத்தில் பல அரசர்களின் மனைவியராகவும் கைகேயப் பெண்கள் குறிப்பிடப்படுகின்றனர். குறிப்பாக புரு-வின் மகன் ஜனமேஜயனின் கொள்ளுப்பேரன் ஸர்வபௌமன் கைகேய இளவரசி சுந்தா-வைக் கவர்ந்து வந்துத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ப்ரதீபனின் தாத்தா பீமசேனனின் மனைவி குமாரி-யும் கைகேயத்தைச் சேர்ந்தவரே.

தவிர, பாண்டவர்கள் வனவாசம் செய்த விராட தேசத்தின் மஹாராணி சுதேஷனா-உம், அவளுடைய அண்ணன் கீசகனும் மற்ற 105 சகோதரர்கள் உபகீசகர்களும் கைகேயர்களே. (கீசகன் கொல்லப்பட்டதும் அவன் உடலுடன் சைரிந்திரியை (த்ரௌபதி) ’சதி’யாக எரிக்க வேண்டும் என்று வற்புறுத்திய 105 உபகீசகர்களையும் பீமன் கொன்றதாகக் குறிப்பிடப்படுகிறது). ஆனால், இவர்களைக் குறிப்பிடும் பொழுது சூத கைகேய மன்னரின் புதல்வர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் தாய் மால்வி (மால்வ தேசத்தைச் சேர்ந்தவர்).

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின் பொழுது காந்தாரத்தின் அம்பி குமாரன் அலெக்ஸாண்டருடன் பணிந்ததாகப் படித்துள்ளோம். அதற்குக் காரணமாகக் கூறப்படுவது அலெக்ஸாண்டர் கைகேயத்தை வென்று அதைக் காந்தாரத்துடன் இணைத்து அதை அம்பி-யின் பொறுப்பில் விடுவார் என்று கூறுகின்றனர். அப்பொழுது கைகேய நாட்டை ஆண்டவர் மன்னர் பர்வதேஸ்வரர்; இவரது மற்றொரு பெயர் போரஸ். இவருக்கும் அம்பிக்கும் இருந்த பகையை அலெக்ஸாண்டர் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. [போரஸ்-ஐ த்ரிகர்தத்தின் கடோச் வம்சமும் சொந்தம் கொண்டாடுகிறது.] பின்னர், போரஸ் சாணக்கியரின் ஆலோசனையின் பேரில் சந்த்ரகுப்தருக்கு உதவி அவர் நந்தர்களை அகற்றி மௌரிய வம்சம் உருவாக உதவினார். நந்தர்களின் மந்திரிகளில் ஒருவரான ராக்ஷசனால் போரஸ் (சந்திரகுப்தருக்கு பதிலாக தவறுதலாகக்) கொல்லப்பட்டதாகக் கூறுவர். போரஸ்-இன் மகன் பெயர் மலையகேது என்று கூறுவர்.

கொங்கணப் பகுதிகளிலும் கைகேயர்கள் இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலைக் கோயிலின் தலவரலாறு அக்கோவில் கைகேய மன்னன் ’கார்த்தவீர்யாஜுன’னால் புணருத்தாரணம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் கொங்கணம் பகுதியைச் சேர்ந்தவன். அவன் பரசுராமரால் கொல்லப்பட்ட்தை நாம் புராணங்களில் படித்திருப்போம்.

7 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள்...

    விளக்கங்களுக்கு நன்றி...
    tm1

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள். கேகயம் என்றவுடன் நினைவுக்கு வந்தது கைகேயி தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் வெங்கட்!

      ஆம்! புராணங்களில் பொதுவாக பெண்களின் பெயர்களைக் கூறாமல் கைகேயி, காந்தாரி, குந்தி, மைதிலி, பாஞ்சாலி, மாத்ரி என்று தேசத்தின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரில் த்ரௌபதி, ஜானகி என்றோ குறிக்கப்பட்டே வந்துள்ளன. [Of course, exceptions உண்டு]

      நீக்கு
  3. பல தகவல்கள் அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு