வெள்ளி, டிசம்பர் 11, 2020

இரையாகத் துடிக்கும் புழுக்கள்


இரையாகத் துடிக்கும் புழுக்கள்

 [வல்லமை இதழின் 287-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 


கருமுட்டைதனிலிருந்து
உயிர் கொண்டு,
மேல்புழுவாய் வளர்ந்து
சிறகு வளர்த்து
சீர்வண்ணப் பூச்சியாகி
உலகளந்து ஊர் மெச்ச வலம்வந்து
மலரமர்ந்து
மதுரத்தேன் தான் குடித்து
முழுவாழ்க்கை வாழ்ந்திடாமல்
சிறுத்தொகைக்கும்
சிற்றின்ப போதைக்கும்
சாதிமதச் சார்பு கொண்டும்
மதுக்கோப்பைக் குப்பிக்கும்,
ஆள்பவரை அமர்த்தவைக்கும்
வாய்ப்பதனைத் தவறவிட்டு
ஆண்டுகள் ஐந்தும் அழுதுநின்று
அரசியல் வல்லூறுகளின் அலகினிலே
இரையாகத் துடிக்கும் புழுக்களெனப்
புரியாமல் தவிக்கின்றோம்…

புதுத்தேர்தல் வரும் நேரம்!
புதுப்பாதை வகுப்போமா? – அன்றி
புதைச்சேற்றில் வெளியேற வழியின்றி
புலம்பல்களை மொழியாக்கி
தலைவிதியை நொந்திருந்து
தவிப்பதையேத் தொடர்வோமா?


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக