திங்கள், பிப்ரவரி 20, 2012

சிவராத்திரி



சிவராத்திரி என்பது மாசி மாதத் தேய்பிறை 14-ஆவது நாள் (க்ருஷ்ண பட்ச சதுர்தசி திதி) அன்று வருவது. எல்லா மாதங்களிலும் சிவராத்திரி வரும். மக (மாசி மாதம்) மாதத்தில் வருவதால் ’மக சிவராத்திரி’ என்று கூறப்பட்டு பின் ’மஹா சிவராத்திரி’ என்று திரிந்திருக்கலாம்.

த்ரயோதசி உமையின் வடிவம்; சதுர்தசி சிவனின் வடிவம் – இரண்டு திதிகளும் சேர்வது தான் சிவராத்திரி. [நாம் பங்குனி உத்திரத்தை தான் சிவ-பார்வதி திருமண நாளாகக் கூறுகிறோம்; ஆனால், வட இந்தியாவில் சிவராத்திரியை சிவ-பார்வதி திருமண தினமாகக் கூறுகிறார்கள். காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்] இவை இரண்டும் சேர்வதை வைத்து இதை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். அவை

1.   உத்தம சிவராத்திரி:    பகலில் த்ரயோதசி இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது சதுர்தசி வந்து அது இரவு முழுவதும் நீடித்து மறுநாள் பகல் வரை இருக்க வேண்டும். அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் 10 நாழிகைக்குள் சதுர்தசி வந்து விட வேண்டும். அது தான் உத்தமம் (சிறந்தது)
2.   மத்திம சிவராத்திரி:    சதுர்தசி காலை முதல் மறுநாள் வரை60 நாழிகை இருப்பது;  அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு முன்னர் வருவது அல்லது இரவின் 10 நாழிகைக்குப் பின்னர் சதுர்தசி வந்தாலும் அது மத்திமமே (ஏற்றுக் கொள்ளத் தக்கது).
3.   அதம சிவராத்திரி:      இரவு 20 நாழிகை நேரம் சதுர்தசி இருந்து அதன் பின் அமாவாசை வந்தால் அது அதம சிவராத்திரி (ஏற்கத் தக்கதல்ல). அன்று விரதம் அனுஷ்டிக்க மாட்டார்கள். முதல் நாளே சிவராத்திரி விரதம் இருப்பார்கள்.

இதில் வேறு இரண்டு விஷயமும் கவனிப்பார்கள் அவை மகாநிசி காலமும் லிங்கோத்பவ காலமும்.

மகாநிசி காலம் என்பது இரண்டாம் ஜாமத்தின் கடைசி நாழிகையும் மூன்றாம் ஜாமத்தின் முதல் நாழிகையும் கொண்ட 48 நிமிடங்கள் மகாநிசி என்று கூறுவர். மகாநிசி காலத்தில் அமாவாசை சேரக்கூடாது.

சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் மறுநாள் உஷாக்காலத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன் உள்ள நேரத்திற்கு இடைப்பட்ட நேரம் அதாவது மாலை 7 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை (இது சூரிய அஸ்தமன உதய நேரத்தைப் பொறுத்து மாறும்) சிவராத்திரி நேரம். இதை நான்காகப் பிரித்து நான்கு கால பூஜை செய்வார்கள். இதில் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம். லிங்கோத்பவ காலத்தில் சதுர்தசி இருப்பது நல்லது.

இந்த வருடம் திங்கட்கிழமை காலை 4.06 முதல் அடுத்த நாள் காலை 3.53 வரை சதுர்தசி (திருக்கணித முறை) இருக்கிறது. அதாவது, மகாநிசி காலத்தில்  அமாவாசை வரவில்லை, லிங்கோத்பவ காலத்தில் சதுர்தசி இருக்கிறது.   ஆனால், பகலில் த்ரயோதசி இல்லை. எனவே இது மத்திம சிவராத்திரி தான்.

ஆனால், நட்சத்திரத்திற்கும் கிழமைக்கும் கூட முக்கியத்துவம் உண்டு. பொதுவாக மகாசிவராத்திரியன்று திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களே வரும். அதில் திருவோணம் சிறந்தது. கிழமைகளில் சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்); அன்று அதம சிவராத்திரியாக இருந்தாலும் கூட கொண்டாடலாம் என்றும் சிலர் கூறுவர். இந்த வருடம் சிவராத்திரி திருவோண நட்சத்திரத்துடன் கூடிய திங்கட்கிழமை. எனவே இது மிகச் சிறந்தது என்றும் கூறுவர்.

கோவில்களில், சிவராத்திரியன்று நான்கு காலத்திலும் செய்யும் பூஜைகளைப் பார்ப்போம்.

முதல் காலம்:       சோமஸ்கந்த ரூபம்
                             பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்வர்
                             பின் சந்தனப் பூச்சு பூசுவர்
                             சிவப்பு பட்டு சாற்றுவர்
                             காய்கறியுடன் அன்னம் நைவேத்யம் செய்வர்
வில்வ பழம் படைப்பர்
                             ரிக் வேதம் ஓதுவர்
                             விளக்கெண்ணெயால் ரதரத்தி என்ற தீபம் ஏற்றுவர்
                             திருநீற்றுபச்சிலை, தாமரை, அரளி பூ சமர்பிப்பர்
                             மாணிக்க வாசகரின் சிவபுராணம் படிப்பர்

2-ஆம் காலம்:      தக்ஷிணாமூர்த்தி ரூபம்
                             பஞ்சாமிர்த அபிஷேகம்
                             பச்சைக் கர்பூர பூச்சு
                             மஞ்சள் பருத்தி ஆடை
                             பாயசம், லட்டு நைவேத்யம்
                             பலா பழம் படைப்பர்
                             யஜுர் வேதம் ஓதுவர்
                             இலுப்பை எண்ணெயால் ஏக தீபம் ஏற்றுவர்
                             தாமரை, வில்வம் சமர்பிப்பர்
                             ருத்திர தாண்டகம் (எ)நின்ற திருத்தாண்டகம் படிப்பர்

3-ஆம் காலம்       லிங்கோத்பவ ரூபம்
                             தேன் அபிஷேகம்
                             அகில் பூச்சு
                             வெள்ளைக் கம்பளி
                             சத்துமாவு, பாயசம் நைவேத்யம்
                             மாதுளம் பழம் படைப்பர்
                             சாம வேதம் ஓதுவர்
                             நெய் விட்டு கும்ப தீபம் ஏற்றுவர்
                             அருகம் புல், தாழம்பூ சமர்பிப்பர்
                             லிங்கபுராண திருக்குறுந்தொகை படிப்பர்

 [இதே நேரத்தில் கருவரைக்குப் பின் உள்ள லிங்கோத்பவ மூர்த்திகு, நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் பாராயணம் செய்வர். சிவசஹஸ்ரநாம அர்ச்சனை செய்து எள் சாதம், பொரி உருண்டைகள் நிவேதனம் செய்வர்.]

4-ம் காலம்           சிவ ஸ்வரூபம்
                             கருப்பஞ்சாறு அபிஷேகம்
                             கஸ்தூரி பூச்சு
                             பச்சை மலர் ஆடை
                             கோதுமை நெய் சீனி சேர்த்த உணவு நைவேத்யம்
                             அதர்வண வேதம்
                             நல்லெண்ணெய் விட்டு மகாமேரு தீபம்
                             எல்லா விதமான பூக்களும் கலந்து சமர்பிப்பர்
                             அப்பர் எழுதிய திருத்தாண்டகம் படிப்பர்

வியாழன், பிப்ரவரி 16, 2012

விருதுகள்


கோவை2தில்லி, ஆதி தன்னுடைய இந்த பதிவில் எனக்கு Versatile Blogger என்ற விருதைத் தந்துள்ளார்.

முதலில் அதற்கு நன்றிகள்.

வலைப்பூ ஆரம்பித்து நான் வாங்கும் முதல் விருது என்பதால் மகிழ்ச்சி. முதலில் versatile என்பதற்கு பல பொருள்கள் உண்டு. போதுவாக எல்லோராருலும் அவதானிக்கப்படுவது ’பல்துறை வல்லுநர்’ (All Rounder) என்பதுதான். நான் பல்துறை வல்லுனனா என்பதுத் தெரியாது.

ஆனால், இந்த versatile-க்கு வேறு பல பொருளும் உண்டு அதில் Adaptable, flexible போன்றவை பெருமளவில் எனக்குப் பொருந்தும். சாதாரணமாக, நான் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் இருக்கும் மனிதர்களையும் அனுசரித்துதான் சென்று வந்துள்ளேன். அந்த அளவில் இந்த விருதை ஏற்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

விருதை ஏற்கும் சமயத்தில் தனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவை..

1. படிப்பது – இது சிறுவயதிலிருந்தேத் துவங்கியது. எங்கள் வீட்டில் இரண்டு நூலகங்களிலிருந்து நான்கு நான்கு அட்டைகளாக எட்டு அட்டைகள் இருந்தன.  
2.    குறுக்கெழுத்து
3.    கணிதப் புதிர்கள்.
4.    இசை
5.    கிரிக்கெட்
6.    வரலாற்று, வானவியல் (Astronomy), புராணங்கள்
7.    மழையில் நனைவது. இப்பொழுது என் மகளுக்கும் அது பிடிக்கும். [என்ன, கூடவே ’சளியும்’ பிடிக்கும்!!]

 இந்த விருதுகளை எனக்குப் பிடித்த ஐந்து பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

          நண்பர்கள் என்று அனைவரிடமும் நட்பு பாராட்டும் K.S.S.Rajah. சிறிய வயதிலும் நல்லத் தேர்ந்த எழுத்தும் கருத்தும் கொண்டவர்.
         சமுத்ரா -  மௌனத்தைப் போன்ற மென்மையான வார்த்தைகளால், அணுவிலிருந்து அண்டம் என்று அறிவியலை சுஜாதாவிற்குப் பின் இத்தனை எளிமையாக யாராலும் எழுத முடியாமா என்பதுத் தெரியவில்லை; கலைடாஸ்கோபில் இவரின் பன்முகத் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.
           புதுகைத் தென்றல் – ஹைதை ஆவக்காய் பிரியாணி என்று ஹைதராபாத் பற்றி அவ்வப்போது எழுதுவதுடன் பயணக் கட்டுரை, அனுபவ பகிர்வு, ஆன்மீகம் என்று பல்துறையிலும் (வணிகப் பத்திரிகைகளில் வெளியிடும் அளவு) தேர்ச்சியாக எழுதுபவர்.
அப்பாவி தங்கமணி – நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பதிவர். புனைவுகளில் நகைச்சுவை இழையோடும்.
           கவிதைவீதி சௌந்தர் பெயரிலேயே கவிதை இருப்பதால் வெறும் கவிதைகள் மட்டுமே எழுதாமல் பப்பரமிட்டாய் போல பல்சுவையும் தருவார்

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஆய கலைகள் அறுபத்தி நான்கு


 ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
                        ஏய உய்விக்கும் என் அன்னை
தூய உறுபளிங்கு போல் வாழ் என்
                        உள்ளத்தில் இருப்பள் வாராது இடரே!

என்ற பாடலைக் கேள்வி பட்டிருக்கிறோம்.

அந்த அறுபத்தி நான்கு ஆயகலைகள் எவை?

போஜராஜன் பற்றிய ஜாதகக் கதைகளில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றின் வடமொழிப் பெயர்களும் விளக்கமும்

வரிசை எண்
வடமொழிப் பெயர்
தமிழ் பெயர் / விளக்கம்
1.                   
கீதம்
பாடல்
2.                   
வாத்யம்
இசைக்கருவிகள்
3.                   
நர்த்தனம்
ஆடல்
4.                   
நாடகம்
நாடகம்
5.                   
சித்ரம்
ஓவியம்
6.                   
தண்டுலகுஸுமபலிவிகரம்
திருஷ்டிகழித்தல் கோலமிடுதல் முதலியவை
7.                   
புஷ்பாஸ்தரணம்
பூ வேலைப்பாடுகள் மட்டும் அலங்கரிப்புகள்
8.                   
விசேஷ கச்சேத்யம்
விசேஷ முக அலங்கரிப்பு
9.                   
தசனவஸநாங்கராகம்
மருதாணி மற்றும் மூலிகை அலங்கரிப்பு
10.               
மணிபூமிகாகர்மா
நகைகள் செய்வதற்கான ஆயத்த வேலைகள்
நகை வடிவமைப்பு
11.               
சயனஸுகம்
படுக்கை, மெத்தை, அமருகைகள் வடிவமைத்தல்
12.               
உதக வாத்யம் / உதககாதம்
புலன் விளையாடுதல்
13.               
சித்தயோகம்
யோகக் கலை
14.               
மால்யக்ரதனம்
பூ மாலை, தோரணங்கள்  கட்டுதல்
15.               
சேகராபீடயோஜனம்
கொண்டை அலங்காரம் (Hair style)
16.               
நைபத்ய யோஜனம்
எதிர்பாலரை ஈர்த்தல்
17.               
கர்ணபத்ரபங்கம்
தோடு, தொங்கட்டான் நகை வடிவமைப்பு
18.               
ஸுகந்தயுக்தி
வாசனைப் பொருட்கள் தயாரிப்பு
19.               
பூஷன யோஜனம்
உடையலங்காரம் / ஆடை அலங்கரிப்பு
20.               
பதாதிசஸ்த்ர ஸந்தானம்
காலாட்படை பராமரிப்பு மற்றும் அவற்றின் ஆயுத வடிமவைப்பு, பயிற்சிகள்
21.               
சுளசுமாரயோகம்
மளிகைப் பொருட்களை தாயாரித்தல்
22.               
ஹஸ்தலாவகம்
கை வேலைப்பாடுகள்
23.               
பாகக்ஞானம் / பாகசாஸ்த்ரம்
சமையல் கலை
24.               
ஆஸவாதிரசனை
நீர் ஆகாரங்கள் பானங்கள் தயாரித்தல்
25.               
ஸூசீவாபகர்மம்
தையல், ஊசி  வேலைகள்
26.               
ஸூத்ரக்ரீடை
நூல் வேலைப் பாடுகள்
27.               
வீணாதிரசனை
வாத்யக்கருவிகள் தயாரித்தல்
28.               
ப்ரஹேளிகை
தண்ட நீதி
29.               
ப்ரதிமாலா
போட்டி பாடல் / எதிர் பாட்டு பாடுதல்
30.               
துர்வாசக யோகம்
மல்யுத்தம், குத்துச்சண்டை பயிற்சிகள்
31.               
புஸ்தகவாசனம்
கல்வியறிவு
32.               
ஆக்யாயிகாகதனம்
பழைய நிகழ்வுகள், கதைகள், வரலாற்று அறிவு
33.               
காவ்ய ஸமஸ்யா
நீதிக்கதை, காவிய (இலக்கிய) அறிவு
34.               
பட்டிகாவேத்ரவிகல்பம்
தற்காப்பு ஆயுதங்கள் செய்தல்
35.               
தர்க்க சாஸ்த்ரம்
தர்கக் கலை
36.               
தக்ஷணம்
தச்சு வேலை
37.               
வாஸ்துவித்யா
கட்டிடக்கலை
38.               
ரத்னபரீக்ஷை
ரத்தினக்கற்களைப் பற்றிய அறிவு
39.               
க்ரஹக்ஞானம்
சோதிட அறிவு
40.               
தாது வாதம்
உலோகங்களைப் பற்றிய அறிவு
41.               
ஆகரக்ஞானம்
அகழ்வாய்வு
42.               
வ்ருக்ஷாயுர்வேதம்
மரம், தோட்டக்கலை, மூலிகையறிவு
43.               
குக்குடாதி யுத்தவிதி
விலங்குப் போட்டிக்கு பயிற்பித்தல்
44.               
சுகசாரிகாலாபம்
கிளி, புறா போன்ற பறவை பயிற்சி
45.               
உத்ஸாதனம்
அழுத்தங்களிலிருந்து மனதையும் உடலையும் விடிவித்தல் (relaxing / relieving from tension etc.)
46.               
தேசாடனம்
பிற தேசங்களைப் பற்றிய அறிவு
47.               
அக்ஷரமாத்ருகை / பால சிக்ஷை
விரல்களால் சைகை செய்தல்
48.               
குவிகல்பம்
விகடம்
49.               
தேசபாஷாஞானம்
பிற மொழியறிவு
50.               
யந்த்ர மாத்ரகம்
இயந்திர அறிவு
51.               
தாரணஞானம்
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு (சில இடங்களில் பொருட்கள் மற்றுமன்றி வார்த்தைகளின் உள்ளர்த்தம் அறிவதையும் குறிப்பதால், ரகசியங்களை குறிப்பாக ஒற்றர்களின் சங்கேதங்களை விடுவிக்கும் கலை (cryptology) என்றும் கூறலாம்
52.               
ஸம்வாச்யம்
சங்கேதக் குறிப்புகளை உருவாக்குதல்
53.               
மானஸீக்ரியா
அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் மாயவித்தைகள் போன்ற அறிவு
54.               
அபிதான கோசம்
நிகண்டுகள், இலக்கண அறிவு
55.               
சந்தோகஞானம்
மருத்துவ அறிவு
56.               
க்ரியா விகல்பம்
நித்திய கர்மங்கள் பற்றிய அறிவு
57.               
சலிதகயோகம்
சாகச வேலைகளைச் செய்தல்
58.               
கோபனம்
உடல் கூறுகள் மற்றும் கலவி அறிவு (உள்ளாடைகள் வடிவமைப்பு வஸ்தர கோபம் என்றும் கூறுவர்)
59.               
த்யூதவிசேஷம்
சூதாட்டம்  [சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் (indoor games) பற்றிய அறிவு என்றும் கூறுவர்]
60.               
ஆகர்ஷக்ரீடை
போர் பயிற்சி
61.               
பாலககிரித்னகம்
குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் செய்தல்
62.               
வைநயிகி வித்யா
நீதி பரிபாலனம்
63.               
ரஜ்ஜுக்ஞானம்
கயிறு, சங்கிலி, ஏணி, கூடாரம் போன்றவைத் தயாரித்தல்
64.               
வைதரளகம்
ஓடம், கப்பல் கட்டுதல், கடல் பயணம் செய்தல்

இவையனைத்தும் வடமொழி நூலிலிருந்துத் தொகுக்கப்பட்டவை. இவற்றில் சில இன்றைக்கு பொருந்துவதில்லை; சில வழக்கொழிந்து விட்டன. இன்றைய நிலையில் மேலும் பல கலைகள் சேர்க்கலாம். வாத்சாயனரின் காமசூத்திரத்திலும் இது போல ஒரு பட்டியல் இருக்கிறது. ”மொழி ஞாயிறு” தேவநேயபாவணர் தொகுத்த செந்தமிழ் பேரகரமுதலியில் இவற்றைத் தொகுத்துள்ளார். அவை:

            1.         எழுத்திலக்கணம்                              அக்கரவிலக்கணம்
            2.         எழுத்தாற்றல்                                     லிகிதம்
            3.         கணிதம்                                              கணிதம்
            4.         மறைநூல்                                           வேதம்
            5.         தொன்மம்                                          புராணம்
            6.         இலக்கணம்                                       வியாகரணம்
            7.         நயனூல்                                             நீதி சாத்திரம்
            8.         கணியம்                                             சோதிடம்
            9.         அற நூல்                                             தரும சாத்திரம்
10        ஓகநூல்                                               யோக சாத்திரம்
            11.       மந்திர நூல்                                        மந்திர சாத்திரம்
            12.       நிமித்திகம்                                         சகுனம்
            13.       கம்மியம்                                            சிற்பம்
            14.       மருத்துவம்                                         வைத்தியம்
            15.       உறுவமைப்பு                                     சாமுத்ரிகா லட்சணம்
            16.       மறவனப்பு                                         இதிகாசம்
            17.       வனப்பு                                               அழகு
            18.       அணிநூல்                                          அலங்காரம்
            19.       மதுரமொழிவு                                                மதுர பாஷணம்
            20.       நாடகம்                                              நாடகம்
            21.       நடம்                                                   ந்ருத்யம்
            22.       ஒலிநுட்ப அறிவு                                சத்த ப்ரமம்
            23.       யாழ்                                                    வீணை வாதனம்
            24.       குழல்                                                  வேணு கானம்
            25.       மதங்கம்                                             மிருதங்கம்    
            26.       தாளம்                                                 தாளம்
            27.       விற்பயிற்சி                                         அஸ்த்ர கலை
            28.       பொன் நோட்டம்                              கனக பரீக்ஷா
            29.       தேர் பயிற்சி                                       ரத பரீக்ஷா
            30.       யானையேற்றம்                                கஜ பரீக்ஷா
            31.       குதிரையேற்றம்                                 அஸ்வ பரீக்ஷா
            32.       மணிநோட்டம்                                  ரத்தின பரீக்ஷா
            33.       மண்ணியல்                                       பூமி பரீக்ஷா
            34.       போர்ப் பயிற்சி                                  ஸங்கிரமண சாத்திரம்
            35.       மல்லம் (மல்யுத்தம்)                          துவந்த யுத்தம்
            36.       கவர்ச்சி                                              ஆகர்ஷணம்
            37.       ஓட்டுகை                                            உச்சாடணம்
            38.       நட்பு பிரிப்பு (பேதம்)                        வித்வேஷணம்
            39.       காமநூல்                                            மதன சாத்திரம்
            40.       மயக்கு நூல்                                       மோஹன சாத்திரம்
            41.       வசியம்                                               வஷ்ய கரணம்
            42.       இதளீயம்                                           ரச வாதம்
            43.       இன்னிசைப் பயிற்சி                         காந்தருவ வாதம்
            44.       பிறவுயிர் மொழியறிவு                     பைபீல வாதம்
            45.       மகிழுற்த்தம்                                       கவுத்துக வாதம்
            46.       நாடிப் பயிற்சி                                    தாது வாதம்
            47.       கலுழம்                                               காருடம்
            48.       இழப்பறிகை                                      நஷ்டம்
            49.       மறைபொருள் அறிதல்                     முஷ்டி
            50        வான்புகவு                                         ஆகாய ப்ரவேசம்
            51.       வான் செலவு                                     ஆகாய கமனம்
            52.       கூடுவிட்டு பாய்தல்                          பரகாய ப்ரவேசம்
            53.       தன்னுருக் கரத்தல்                            அதிருஷ்யம்
            54.       மாயச்செய்கை                                  இந்திர ஜாலம்
            55.       பெருமாயச்செய்கை                         மகேந்த்ர ஜாலம்
            56.       அழற்கட்டு                                         அக்னிஸ்தம்பம்
            57.       நீர்க்கட்டு                                           ஜலஸ்தம்பம்
            58.       வளிக்கட்டு                                        வாயுஸ்தம்பம்
            59.       கண்கட்டு                                           த்ருஷ்டுஸ்தம்பம்
            60.       நாவுக்கட்டு                                        வாக் ஸ்தம்பம்
            61.       விந்துக் கட்டு                                     சுக்கிலஸ்தம்பம்
            62.       புதையற்கட்டு                                   கனனஸ்தம்பம்
            63.       வாட்க்கட்டு                                       கட்க ஸ்தம்பம்
            64.       சூனியம்                                             அவஸ்த்யா ப்ரயோகம்

இவை, பிற்காலத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், முதல் பட்டியலைவிட இவை ஓரளவு ஏற்புடையதாக இருக்கின்றன.