கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 28, 2021

உளியின் வலி

உளியின் வலி

[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




உள்ளத்தில் எண்ணிய சிந்தை
உருக் கொண்டு எழுந்ததோர் விந்தை
உளி கொண்டு உருவாக்கிய கவிதை
உருவாக்கியவன் கையிலோ கந்தை

விரல்களில் விளையாடும் கலை
வியப்பூட்ட உருவான சிலை
உழைத்து உருவாக்கியவன் நிலை
எண்ணிப் பார்த்தவர் எவரும் இலை

ஆலயங்காணும் கடவுளர் திருமேனி
காலங்கள்தோறும் நிலைத்திடும் வண்ணம்
மாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்
காயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்?!



[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

திங்கள், மார்ச் 22, 2021

குறி கேளீர்

 குறி கேளீர்

[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



அறமும் திறமும் கொண்டோரை
அறச்சொல் ஏதும் செய்வதில்லை
அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை

நற்சிந்தைக் கொண்டு வாழ்வோரை
நாளும் கோளும் கெடுப்பதில்லை
இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
இன்பம் வாழ்வில் தொலைவதில்லை

நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
நித்தமும் நிறைவு தேய்வதில்லை
சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
சுகத்துக்கு எப்போதும் கேடில்லை

கடமையைத் தொடர்ந்துச் செய்திருக்கக்
காலம் கணியாமல் போவதில்லை
கட்டுப்பாடும் கலந்திருந்தால்
கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை

எறும்பாய் என்றும் உழைத்திருக்க
எதிர்காலக் கவலை ஏதுமில்லை
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்க
குறிச்சொல் கேட்கத் தேவையில்லை

ஞாயிறு, மார்ச் 14, 2021

வாழை

வாழை

[வல்லமை இதழின் 297-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



உழைக்கும் மக்கள் குறும்பசியைத் 

தீர்த்து வைக்கும் வாழை
ஏழை மக்கள் வீட்டினிலும்
குடியிருக்கும் வாழை


உயிர்ச்சத்து தாதுஉப்பு
உயர்ந்திருக்கும் வாழை
உடல் நலத்தைச் சீராக்க
உதவி செய்யும் வாழை


மருந்தாக மக்கள் நலம்
காத்து நிற்கும் வாழை
விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
வீற்றிருக்கும் வாழை


மனிதர் வாழ்வில் மங்களங்கள்
சேர்த்திருக்கும் வாழை
புனிதச் சின்னமாக என்றும்
பூத்திருக்கும் வாழை



[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது]


ஞாயிறு, மார்ச் 07, 2021

பயணம் தொடர்

பயணம் தொடர்

[வல்லமை இதழின் 296-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




எதிர்பார்த்து காத்திருந்து
ஏங்கித் தவித்து ஏமாறி
காயத்தின் வடுக்களை
காலமெலாம் சுமந்து
மயங்கித் தவித்து
மனமொடிந்து மாள்கின்றோம்

மெய்யன்புத் தேடலிலே
துரோகத்தின் தாக்கத்தால்
தூக்கி எறியப்படும் நேரம்
சந்தேகத்தின் பாரம்
நம்பிக்கையின் அச்சை
முறிக்காமல் காத்திருப்போம்

நடக்காதவற்றை நீக்கி
நம்பிக்கை மனதிருத்தி
நேர்மறை நல்லெண்ணம்
நமதாக்கித் தொடர்ந்திருந்து
நாளைய பொழுதை நமதாக்கி
நம் பயணம் நாம் தொடர்வோம்

சனி, பிப்ரவரி 27, 2021

குருட்டுப் பூனை

குருட்டுப் பூனை

[வல்லமை இதழின் 295-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




பால் வைத்து பரிவுகாட்டி
மடிமீது தானமார்த்தி
தாலாட்டித் தூங்கவைத்து
அன்பு காட்டி வளர்த்தாலும்
முழுவதுமாய் நம்பவில்லை
மதிலமர்ந்த பூனையிது

தாவிச்சென்று சட்டென்று கவ்வி
தூரமாய்த் தூக்கிச் சென்று
கண்ணில் காட்டாமல்
மறைத்துப் பதுக்கிவைத்து
சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
முக்காடிட்டச் சைவப் பூனை

உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
வெளியிலே வேடமிட்டு
கள்ளத்தின் நாற்றத்தை
வார்த்தை புனுகுபூசி
தினந்தோறும் மறைத்ததினால்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வேற்றுமையை அறியாமல்
தன் பிம்பக் காட்சியினை
பிறர்மீது ஏற்றிவைத்து
இருண்டு போன உலகமென்று
கண்மூடி அழுகின்றோம்

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

பிள்ளை உள்ளம்

பிள்ளை உள்ளம்

[வல்லமை இதழின் 292-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
பள்ளம் மேடு பார்ப்பதில்லை
கள்ளம் இல்லா உள்ளத்தில்
பொய்யும் கசடும் சேர்வதில்லை

விரிந்து மலர்ந்த மலரைப் போல்
சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
திறந்து வைத்த புத்தகமென – மனதை
மறைத்து மூடிப் பூட்டவில்லை

சொல்லும் சொல்லில் பொய்யில்லை
வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை

செவ்வாய், ஜனவரி 26, 2021

காலம் இது

காலம் இது



போட்டு வைத்த படக்கட்டைப்
பொறுக்கியெடுக்கப் பழக்கிவைத்து
எதிர்காலம் உரைப்பேனென்று
ஏமாற்றிப் பிழைப்பவர் போல்
பணக்கட்டும் சின்னப்படமும்
போட்டிப்போட வாக்கு வாங்கி
காட்டி வைத்த வித்தைகளை
மீட்டெடுக்க விழையும் காலமிது!

ஆண்ட ஆளின் முதுகிலேறி
அவர் உரையை மொழிந்துவிட்டு
ஐந்தாண்டு கழித்து மீண்டும்
அடியவரின் வாசல் வந்து
காத்து நிற்கும் காலமிது!

பறந்து செல்லும் பச்சைக்கிளி
அரிசிமணி ஆசையிலே
சுதந்திரத்தை இழந்ததுபோல்
பெற்றெடுத்த உரிமைதனை
விற்றுவிட்டுத் தவித்திடாமல்
குற்றமற்ற தலைவர்களைத்
தேர்வு செய்யும் காலமிது

வெள்ளி, ஜனவரி 15, 2021

குத்துவிளக்கு

 குத்துவிளக்கு





கடவுள் வேடம் போட்டும் கவலைகள் ஏதும் தீரவில்லை

கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும் பேசிட இங்கே உரிமையில்லை

மணிமுடியணிகளம் யாவும் இருந்தும் அடிமைக்கோலம் மறைந்திடவில்லை

மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித் தடைகள் எப்போதும் உடைவதில்லை


பச்சை நிறங்கள் இருந்தாலும் பாசியில் வளங்கள் ஏதுமில்லை

இச்சைபேச்சு வார்த்தையன்றி உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை

பச்சைக்காளிகள் அழித்தாலும் தஞ்சகன் என்றும் மாய்வதில்லை

பவழக்காளியாய் மாறினாலன்றித் தீமைகள் எதுவும் அழிவதில்லை


பெண்ணினம் சரிநிகரெனினும் அவர் ஆண்டிடும் வழிகள் இங்கில்லை

கண்ணிமையாகக் காப்பதாய்க்கூறி அடைத்து வைத்தல் ஞாயமில்லை

குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால் வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை

கைவிளங்குடைத்து வெளியேறாவிடில் சுதந்திர வாசம் கிடைப்பதில்லை



வெள்ளி, ஜனவரி 08, 2021

குழந்தைப் பருவம்

 குழந்தைப் பருவம்

[வல்லமை இதழின் 291-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கி
கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை

பணிச்சுமைகள் ஏதுமில்லை
பிணிப்புடுங்கள் நோய்களில்லை
கனியமது மொழிகள் போல
தேனமுதுச் சுவைகள் இல்லை

கள்ளங் கபடம் ஏதுமின்றி
வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
பிள்ளைப்பருவம் போல் வேறில்லை

அச்சம் நாண வேடங்கள் போட்டு
நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…

வெள்ளி, ஜனவரி 01, 2021

புதுப்பாதை

 


புதுப்பாதை

[வல்லமை இதழின் 290-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




துள்ளிக் குதித்து
புத்தகப் பையைத் தூக்கி
பள்ளிக்குச் செல்ல முடியவில்லை
அள்ளித் தெளித்துப் போட்டு வைத்தக் கோலம் அழித்து ஓடி
விஷமம் செய்ய முடியவில்லை
வெயிலில் புழுதியில்
உடைகள் அழுக்காக்கி
ஆட்டம் போட முடியவில்லை
கையில் காலில் சிறுகாயம் கொள்ள
தாய்தந்தைத் தேற்றும்
விளையாடல் இருக்கவில்லை….

முகமறியா நபர்களிடம் பழகத்
தடை விதித்தார்கள்; இப்போது
முகம்மூடா நபர்களைக் காணமுடிவதில்லை….

வீட்டை விட்டு வெளியே வந்து
ஆட்டம் போடமுடியவில்ல
கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
சிறகை விறித்து உலகம் காணவில்லை…

ஜன்னல் காட்சியே உலகம் ஆனது
பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது
எத்தனைக் காலம் சும்மா இருப்பது
புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

திங்கள், டிசம்பர் 28, 2020

பிடிகொம்பு

பிடிகொம்பு

[வல்லமை இதழின் 289-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


வெட்டி ஒட்டி கச்சிதமாய் இணைத்து
தட்டிச் செதுக்கும் சிற்பியைப் போல்
கட்டி அழகு பார்க்க வைக்கும்
ஆடைகள் தைத்துக்கொள்ள யாருமில்லை….

பல்பொருள் அங்காடிகளால் படுத்துவிட்டப்
பக்கத்து மளிகைக்கடை…
இணையவழி வணிகத்தால் அழிந்துவரும்
சிறுவணிகக் கூட்டம்…
துரித உணவைப் போல் கேட்டதும்
துரிதமாய்க் கிட்டும் தைத்த ஆடைகள்…
வசதியற்றோரின் வாழ்வாதாரம்
கிழிந்துப்போனது நிறுவணப்படுத்தலால்…

சுகத்தைக் கெடுக்கும் நுண்ணுயிரி
முகத்தை மூடும் கவசம் தைத்து
பசியைத் தீர்க்க வழிசெய்த நிலைமை என
அடித்துச் செல்லும் காலச்சுழற்சி வெள்ளத்தில்
பிடிகொம்புகள் சில கிட்டும் அவ்வப்போது!!


ஞாயிறு, டிசம்பர் 20, 2020

கொத்தடிமைக் கடவுள்கள்

கொத்தடிமைக் கடவுள்கள்

[வல்லமை இதழின் 288-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



பொதுவெளியில்….
பெண் சக்தி தெய்வமென்று
கற்சிலைக் கடவுளாக்கிப்
பூசனைகள் பல செய்து
கருவறையில் தொழுதிருப்போம்!

விட்டினிலோ….
படுக்கையைறை தாசியாக்கி
பணிவிடைகள் செய்ய வைத்து
காரிகையைக் கொத்தடிமையாக்கி
அடுக்களையில் அடைத்து வைப்போம்!

கலைகளின் தேவியென்று
கொண்டாடி வணங்கவும் வேண்டாம்
சதிராடும் தாசியென்று
சாக்கடையில் எறியவும் வேண்டாம்!

அன்னையடி நீயென்று
அன்புச் சங்கிலிப் போட்டு
அடிமையாக்கி வைத்திருக்கும்
அவலநிலை இனி வேண்டாம்!

சக மனிதப் பெண்ணுக்கு
சம உரிமைக் கிட்டி – அவள்
சாதனைகள் சபையேறும்
சமச்சீர்மை நிலை போதும்!!!

புதன், டிசம்பர் 16, 2020

மார்கழி

மார்கழி



காரிருளை நீக்கிவிடும்

கதிரவனை வரவேற்க

வானவீதி வாசலிலே

வண்ணக்கோலமிட்டு எழில் கூட்ட

வானமகள் பனிநீர் தெளித்து

குளிர்விக்கும் நேரமிது!


பாவையர்கள் அதிகாலை

கூவினம்போல் முன் எழுந்து

நோன்பிருந்து பூசையிட்டு

குலம் விளங்கக்I கோலமிட்டு

கூடிநின்று கொண்டாடி

சிறப்பிக்கும் காலமிது


பாடகர்கள் காணமிட

நர்த்தகர்கள் ஆடிவர

கலைகள் பரிணமித்து

காண்போரைப் புணர்ப்பிக்கும்

பண்பாட்டை மீட்டெடுக்கும்

பணி சிறக்கும் மாதமிது...


வெள்ளி, டிசம்பர் 11, 2020

இரையாகத் துடிக்கும் புழுக்கள்


இரையாகத் துடிக்கும் புழுக்கள்

 [வல்லமை இதழின் 287-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 


கருமுட்டைதனிலிருந்து
உயிர் கொண்டு,
மேல்புழுவாய் வளர்ந்து
சிறகு வளர்த்து
சீர்வண்ணப் பூச்சியாகி
உலகளந்து ஊர் மெச்ச வலம்வந்து
மலரமர்ந்து
மதுரத்தேன் தான் குடித்து
முழுவாழ்க்கை வாழ்ந்திடாமல்
சிறுத்தொகைக்கும்
சிற்றின்ப போதைக்கும்
சாதிமதச் சார்பு கொண்டும்
மதுக்கோப்பைக் குப்பிக்கும்,
ஆள்பவரை அமர்த்தவைக்கும்
வாய்ப்பதனைத் தவறவிட்டு
ஆண்டுகள் ஐந்தும் அழுதுநின்று
அரசியல் வல்லூறுகளின் அலகினிலே
இரையாகத் துடிக்கும் புழுக்களெனப்
புரியாமல் தவிக்கின்றோம்…

புதுத்தேர்தல் வரும் நேரம்!
புதுப்பாதை வகுப்போமா? – அன்றி
புதைச்சேற்றில் வெளியேற வழியின்றி
புலம்பல்களை மொழியாக்கி
தலைவிதியை நொந்திருந்து
தவிப்பதையேத் தொடர்வோமா?


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

சனி, டிசம்பர் 05, 2020

மெய் இன்பம்

மெய் இன்பம்

 [வல்லமை இதழின் 286-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




துள்ளிக் குதித்து வானம் தொட்டு
உள்ளம் உவந்துக் களித்திருக்க
நித்தமும் ஏங்கித் தவித்திருந்தால்
இன்பம் கிட்டிட வாய்ப்பு இல்லை..

வெள்ளத்தளவே மலர் நீட்டம் என்று
வள்ளுவம் கூறும் கூற்றைப் போல்
தெள்ளிய சிந்தையின் வழிவந்த
தன் திறம் இன்றி தந்திரம் இல்லை

வெள்ளை மனமும் கருணைக் குணமும்
உள்ளவர் இன்பம் அழிவதில்லை
கள்ளும் கயமையும் தந்திடும் களிப்பு
காலம் முழுவதும் தொடர்வதில்லை

தொல்லிய பெரியோர் உரைத்தது போல்
நல்லறம் செய்து உய்தலன்றி
இந்திரன் உலகம் எட்டிடவே
மந்திரம் ஏதும் இங்கு இல்லை!

 


ஞாயிறு, நவம்பர் 29, 2020

ஆறுபடையப்பன்


ஆறுபடையப்பன்

[வல்லமை இதழின் 285-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 

நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்து
தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்தி
சேயோனாய் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்க
தென்பொதிகை பழனிபதி நின்ற பாலகுருநாதா!

ஓரெழுத்து மந்திரத்து பொருள் மறந்த காரணத்தால்
பிரமனையே சிறைபிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து
சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

துள்ளிவரு வேலெடுத்து சூரர்தலை கிள்ளி
சினம்விடுத்து தேவவேழ வாகனத்திலேறி
வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்து
குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்தி
சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இடம் எனவே
செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

சனி, நவம்பர் 21, 2020

தீப ஒளி

 தீப ஒளி!

[வல்லமை இதழின் 284-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
இருளெனும் மௌனம் விரட்டிட
வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை

மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
வெளிச்சக் கீற்றெனும் தேவதை
அறியாமை இருளை நீக்கி உண்மை
ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை

இருளை விலக்கி வாழ்வில் தினமும்
வெளிச்சம் செதுக்கும் உளி
காரிருள் நீக்கிப் பார்வையில்
தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி

தனிமை வெக்கைப் போக்கித்
துணையைக் காட்டும் இன்ப வளி
இனிமை பொங்கி நம் இல்லம் சிறக்க
ஒளிரட்டும் நல் தீப ஒளி!


[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

சனி, நவம்பர் 07, 2020

தேவைகள்

 தேவைகள்

[வல்லமை இதழின் 282-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
கனிவும் இனிமையும் தர வேண்டும்

கூச்சல் குழப்பம் பொய்மைகள் நடுவே
உண்மையை அறியும் அறிவு வேண்டும்
வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
தன்நிலை உணரும் மெய்ஞானம் வேண்டும்

கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்