செவ்வாய், செப்டம்பர் 17, 2013

கொல்லம் ஆண்டு



கொல்லம் ஆண்டு!

இதன் மற்றொரு பெயர் மலபார் ஆண்டு.  இது கேரளத்தின் மலபார் பகுதியில் வழக்கத்தில் இருக்கும் ஆண்டுக் கணக்காகும்.

பெரும்பாலான இந்திய வருடங்கள் இது கீழ் காணும் வழிமுறைகளில் வேறுபடுகிறது…

1.            பெரும்பாலான இந்திய ஆண்டுகள் சந்திரமான முறையையோ சந்திர-சௌர முறையையோ அடிப்படையாகக் கொண்டவை;
2.            பெரும்பாலும் அவை மேஷாதி (மேஷ ராசியை ஆரம்பமாகக்)  கொண்டவை.
3.            இந்திய ஆண்டுகளின் எண்ணிக்கை நிறைவடைந்தவற்றைக் குறிப்பவை (உதாரணமாக தற்போது சக ஆண்டு 1935 என்பது 1935 ஆண்டுகள் முடிந்து 1936-ஆவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கும்.

ஆனால், கொல்லம் ஆண்டு என்பது முழுக்க முழுக்க சௌரமானத்தை (சூரியனை) அடிப்படையாகக் கொண்டது. இதன் ஆரம்பம் சிம்ம ராசியில் இருந்துத் துவங்கும். இதன் ஆண்டு எண்ணிக்கை நடப்பு ஆண்டின் எண்ணிக்கையைக் குறிக்கும். அதாவது, ஆண்டு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திலிருந்துத் துவக்காமல் ஒன்றிலிருந்துத் துவக்குவர். அதாவது, ஆங்கில முறைப்படி 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் என்றால் 2012 ஆண்டுகள் முடிந்து 2013ஆவது ஆண்டு தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கணக்கிடுவது போல் தற்போது நடக்கும் ஆண்டின் எண்ணிக்கையையே கொல்லம் ஆண்டிலும் கூறுவர்.

’கடபயாதி’ முறை என்றழைக்கப்படும் இந்த முறையின் ஆரம்பம் தொன்மங்களில் பல்வேறு வழிகளில் கூறப்பட்டாலும் வரலாற்று ரீதியாக மேற்குக் கேரளக் கரையோர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் முன்னிலையில் அவரது தலைநகரான கொல்லத்தில் வானவியல் நிபுணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகார பூர்வமாக ஏற்கப்பட்டது.

இம்முறை கி.பி. 824-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. ஆனால், வட கேரளத்தில் இது சிம்ம மாதத்தில் துவங்காமல் கன்னி மாதத்தில், அதாவது செப்டம்பர் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. பின்னர், ஜூலியன் ஆண்டிற்கும் க்ரெகேரியன் ஆண்டிற்கும் சமநிலை ஏற்படுத்த 10 நாட்கள் கணக்கிலெடுக்கப்படாமல் விட்ட பொழுது இந்த ஆண்டின் துவக்கம் ஆகஸ்ட் 15/செப்டம்பர் 15 ஆம் நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டது. சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் இதன் மாதங்கள் நம் தமிழ் மாதங்களைப் போலவே சங்கராந்தியை (அதாவது சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுவதைக்) கொண்டு கணக்கிடப்படும்.

’கடபயாதி’ முறை என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்…

வடமொழியைப் போலவே மலயாளத்திலும் க்ரந்தத்திலிலும் க, ச, ட, த, ப ஆகிய வல்லின எழுத்துக்கள் நான்கு விதமாக ஒலிக்கப்படும். அந்த எழுத்துக்களை தசம எண்களுக்கு மாற்றாகக் கொண்டு எண்ணும் பொழுது அவை கீழ்கண்டவாறு அமையும்

1        2          3        4          5         6        7            8          9        0
க       க்க     க      க்க     ங       ச        ச்ச       ஜ       ஜ்ஜ   ஞ 

ட       ட்ட    ட      ட்ட   ண      த       த்த        த      த்த    

ப       ப்ப      ப      ப்ப     

ய       ர        ல       வ       ஸ      ஷ    ஷ்ஷ  ஹ     ழ

இதில் நாட்களைக் குறிக்க இந்த எழுத்து முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
            
தொன்மத்தின்படி சங்கராச்சாரியாரால் கொல்லம் ஆண்டு கன்னி மாதத்தைத் துவக்கமாகக் கொள்ள வேண்டும் என்றுகூறியதாகவும் அதையே தெய்வ வாக்காகக் கொண்டுத் துவக்கப்பட்டதாகக் கூறுவர்.

‘ஆசார்ய வாகா பேதயா’ என்ற பிரபலமான வாக்கியம் உண்டு.

சாதாரணமாக இந்த வாக்கியத்தின் பொருள் ’ஆசாரியரின் (சங்கரரின்) வாக்கே சட்டம்’ என்பதாகும். இதையே ‘கடபயாதி’ முறையில் எண்களாக மாற்ற அது கீழ்காணும் எண்ணைக் குறிக்கும்.

0           6          1          4        3          4                 1
ஆ      சார்    ய       வா     கா      ப்பேத         யா

’கடபயாதி’ முறையில் மற்றொரு விதியும் உண்டு. அது என்னவெனில் வாக்கியமாக மாற்றிய எண்களை அப்படியே எழுதாமல் பின் வரிசையில் எழுத வேண்டும் என்பதே. அதன்படி இந்த வார்த்தை 1434160 என்ற எண்ணைக் குறிக்கும். கலியுகத்தின் 1434160-ஆவது நாளைக் கணக்கிட்டால், அது கி.பி. 824, செப்டம்பர் 25ஐக் குறிக்கும். இந்த நாளே வட மலபார் பகுதியின் கொல்லம் ஆண்டுத் துவக்க நாளான கன்னி மாதத்தின் முதல் நாள்.

இன்று இந்த கன்னி சங்கராந்தி நாள்.