கடந்த
ஹைதராபாத் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டியை வென்றதன் மூலம் தோனி சௌரவ் கங்குலியின் 21 வெற்றிகளைத் தாண்டி 22 போட்டிகளை வென்று இந்தியாவின்
அதிக ஐந்து நாள் போட்டிகளை வென்ற அணித் தலைவர் என்ற பெருமையை எட்டியுள்ளார்.
முதல்
முறையாக 20-20 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 2007-ஆம் ஆண்டு முடிவெடுத்த பொழுது அந்த ஆண்டுத் துவக்கத்தில் நடந்த உலகக்
கோப்பைப் போட்டியில் ’சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில் அப்பொழுதிருந்த 30 வயதைத் தாண்டிய முதன்மை கிரிக்கெட்
வீரர்கள் விமர்சிக்கப்பட்டு அவர்கள் விலகி/விலக்கி வைக்கப் பட்டு இளைஞர்களைக் கொண்ட
ஒரு அணியின் தலைமையை தோனியிடம் கொடுக்க, அவர் சற்றும் சளைக்காமல்
அணியை வழி நடத்திச் சென்று முதல் 20-20 உலகக் கோப்பை வென்று வந்த
பிறகு ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து நாள் போட்டிகளிலும் தலைமை
பதவிக்கு அவர் பெயர் அடிபடத் துவங்கியது. ஆஸ்த்ரேலியா
பயணத் தொடரைத் தொடர்ந்து கும்ப்லே காயத்தினால் ஓய்வை அறிவித்ததும் அணியில் மூத்த சேவாக்,
லக்ஷ்மண் ஆகியோரையும் மீறி தோனிக்குத் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது.
இந்திய
ரசிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்கள்
அடுத்தப் போட்டியில் தோற்றால் அவரது தலையைத் துண்டிக்கவும் தலைபடுவார்கள்.
துவக்கத்தில்
வெற்றிகளைத் தொடர்ந்து கொடுத்து வந்த தோனி, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பாக ஐந்து
நாள் போட்டிகளில் தொடர் தோல்விகளைக் கொடுத்ததால் ரசிகர்கள் மட்டுமன்றி விமர்சகர்களும்
அவரைத் தலைமைப் பதவியிலிருந்து (குறைந்த பட்சம் ஐந்து நாள் போட்டிகளிலிருந்தாவது) நீக்க
வேண்டும் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில்
நடப்பு ஆஸ்த்ரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் சௌரவ் கங்குலியின்
21 வெற்றி என்ற சாதனையை முறியடித்து 22 போட்டிகளில் வென்ற அணித்தலைவர் என்ற நிலையை
எட்டியவுடன் மீண்டும் ஊடகங்களில் இந்திய கிரிகெட் அணியின் மிகச் சிறந்த அணித்தலைவர்
யார் என்ற விவாதம் எழ ஆரம்பித்துள்ளது.
இதில்
தோனிதான் மிகச் சிறந்த அணித்தலைவர் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் முன் வைப்பவை….
- இரண்டு உலகக் கோப்பை வெற்றிகள்;
- புள்ளி விவரத்தின் படி அதிக போட்டிகள் ஜெயித்தது;
- அணி தடுமாறும் நிலையிலும் நிதானமாக இருப்பது
- விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்ற இரண்டு மிக முக்கிய பொறுப்பிற்குப் பின்னரும் அணியைச் சிறப்பாக வழி நட்த்திச் செல்வது.
ஆகியவையே.
இளம் வீர்ர்களைக் கொண்டு இரண்டு உலகக் கோப்பைகளை அவர் வெற்றி பெற செய்த்து என்றுமெ
பெரிய அளவில் பேசப் பட்டுக் கொண்டுதான் இருக்கும். உதாரணத்திற்கு, கபில் தேவ் புள்ளி
விவரக் கணக்கின் படி மிகச் சிறந்த அணித் தலைவராக இல்லாத போதும் 1983 உலக்க் கோப்பை
வெற்றி அவரது தலைமையை என்றும் சிறப்பித்தே கூறும். அடுத்து இன்றைய நிலையில் ஒருநாள்
போட்டிகளிலும் (77 வெற்றிகள்) சரி டெஸ்ட் போட்டிகளிலும் (22 வெற்றிகள்) அதிக வெற்றியைப்
பெற்றுத் தந்த அணித்தலைவர் தோனிதான். பொதுவாக விக்கெட் கீப்பர்கள் அணித்தலைவராக செயல்
பட முடியாது என்று கூறுவதுண்டு. காரணம், ஒரு விக்கெட் கீப்பர் மற்ற ஆட்டக்காரர்களை
போலன்றி எல்லா நேரமும் கவனமுடன் இருக்க வேண்டும்
இது உடலளவிலும் மன அளவிலும் நிறைய அயர்ச்சியை உண்டு செய்யும். அதிலும் குறிப்பாக போட்டியில்
எதிரணியின் கை சற்று ஓங்கி இருக்கும் பொழுது அதைச் சமாளிக்க மிகுந்த மன தைரியமும் திடமான
உடளுருதியும் தேவைப்படும். அது தோனியிடம் நிறையவே இருக்கிறது.
அவர்
சிறந்தத் தலைவர் எண்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் ’மிகச்’ சிறந்த தலைவரா
என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்று அவரை விமர்சிப்பவர்கள் முன்வைப்பவை…
1.
எதிரணியை அடக்கும் ஆக்ரோஷமான
தலைமைப் பண்பு;
2.
வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கும்
திறன்;
3.
புதிய முயற்சி எதுவும் எடுக்காமல்
நிலைமை மாறும் வரைக் காத்திருப்பது;
4.
முன்முடிவுகளுடன் ஆட்டக்காரர்களைத்
தேர்ந்தெடுப்பது;
5.
பெரும்பாலான மேற்கூறிய வெற்றிகள்
இந்தியாவிலேயே ஈட்டியது.
தோனி
ஒரு அதிரடி மட்டையாடுபவர் என்றாலும் பெரும்பாலும் நிலைமை கை மீறும் வரை அதிரடியாக ஆடாமல்
நிதானமாக ஆடி கடைசியில் தன் அதிரடியைக் காட்டுவார். ஒருநாள் போட்டிகளில் இது பெரும்பாலும்
நல்லது செய்யும். ஆனால், ஐந்து நாள் போட்டிகளைப் பொறுத்தவரை எதிரணியைத் தவறு செய்யத்
தூண்டுவது மிகவும் அவசியம். மேலும், ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் முன்
முடிவுடன் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங்,
ஜடேஜா, விஜய், இஷாந்த் என்று குறிப்பிட்ட ஆட்டக் காரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு
தந்து மனோஜ் திவாரி, ஓஜா, ரஹானே போன்றவர்களுக்கு வாய்பளிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
22 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றாலும் அதில் 5 தான் வெளிநாடுகளில் பெற்றது. (சவுரவ் கங்குலி
11 வெற்றிகளை வெளிநாட்டில் பெற்றுள்ளார்). அதிலும் குறிப்பாக கடந்த இங்கிலாந்து, ஆஸ்த்ரேலிய
பயணத்தில் 8-0 என்ற கணக்கில் தோல்வி என்ற குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள்.
இந்நிலையில்
அடுத்த தென்னாப்பிரிக பயணம் தோனியின் தலைமைப் பண்பின்பிற்கு பெறும் சவாலாக அமையும்.
அதில் பெறப்போகும் வெற்றி/தோல்வி தோனி ’சிறந்த’ அணித் தலைவரா அல்லது ’மிகச்சிறந்த’
அணித்தலைவரா என்பதைத் தீர்மாணிக்கும்.

