புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 24, 2011

கடமை கண்ணியம் கட்டுப்பாடு (அனுமத் ஜெயந்தி)

இன்று அனுமத் ஜெயந்தி. அதை ஒட்டிய ஒரு கதை.

பூலோகத்தில் திருகார்த்திகை நாள்.

தேவலோகம். அங்கு, அது நள்ளிரவுக்கும் பொழுது புலருவதற்கும் இடைப்பட்ட நேரம். ஆம், பூமியின் ஒர் ஆண்டு தேவலோகத்தில் ஒரு நாள் அல்லவா?

ஆயினும் இந்திரனால் ஓய்வெடுக்க முடியவில்லை. காரணம், இராவணன். அவனை நினைத்தாலே தேவர்களுக்கு அச்சம் தான். ஆம், ”அவன் பிரமனிடமும் பரமசிவனிடமும் எண்ணிலா வரங்களைப் பெற்றுள்ளானே, என்ன செய்வது. விஷ்ணு நேரம் வரும் போது அவனை அழிக்க, தானே அவதரிப்பதாகக் கூறியிருகிறார். என்றாலும், அவர் ஒரு சாதாரண மானிடனாகத் தானே அவதரிப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இராவணனோ  கொடிய அரக்கன். அவனை ஒரு  சாதாரண மானிடனால் எப்படி அழிக்க முடியும்? நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்என்று நினைத்தான்.

உடனே, இந்திரனின் மனதில் நாமும் மற்ற தேவர்களும் பூமியில் தங்கள் அம்சங்களை பூமிக்கு அனுப்பலாம். அதற்கு பிரம்ம தேவரின் உதவியை நாடலாமா? ஆனால், அவர் ராவணனுக்குக் கொடுத்த வரங்கள் தானே இத்தனைக்கும் காரணம். அதனால், அவர் உதவியைத் தானாக வேண்டக்கூடாதுஎன்றும் நினைத்தான்.

சத்திய லோகம்.

பிரம்மனுக்கு, பூவுலகில்  நடக்கும் திருகார்த்திகைத் திருவிழாவை கண்டதும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் பரமேஸ்வரன்; தனக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போட்டியில் அவர்தம் அடிமுடியைக் கண்டவரே பெரியவர் என்று கூற, தான் அவருடைய முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தது நினைவுக்கு வந்து, ”மனம் ஒரு குரங்கு - என்று கூறுவர்; அன்று என் மனம் ஏன் இந்தக் குரங்குத் தனத்தைச் செய்ததுஎன்று பெண் போல நாணமுற்றார். ஆனாலும், அந்த பரமன் தன்னை மன்னித்து அருளியதை எண்ணி, “என்னே! அவரது கருணைஎன்று நினைத்தார்.

உடனே அவர் திருக்கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு பூமியில் விழுந்தது.

அது என்ன சாதாரண நீரா?

படைப்பவனின் கண்ணீர் அல்லவா. உடனே, அது ஒரு உருவம் எடுத்தது. அழகான ஆகிருதியுடனான உருவம். ஆனால், அதன் முகமோ வானரம். அதைக் கண்டவுடன் பிரம்மனுக்குத் தான் தன் மனம் குரங்கு என்று எண்ணியதால் அது குரங்கு முகத்துடன் ரிஷ்யமுகனாகப் பிறந்தது புரிந்த்து.

அது மட்டுமா? மஹா விஷ்ணு பூமியில் தோன்றுவதற்கு முன் செய்யும் ஆயத்தத்தின் ஒரு பகுதிதான் அது என்பதும் புரிந்தது. சற்று முன், தேவலோகத்தில் இந்திரன் மனதில் தோன்றிய எண்ணங்களையும் இனி நடக்க இருப்பவைகளையும் எண்ணி மனதில் சிரித்துக் கொண்டார். உடனே மஹா மாயையை அழைத்து, “தாயே, தாங்கள் அங்கு ஒரு மாயக் குளத்தை உருவாக்குங்கள்.” என்று வேண்டினார்.

அதன் படியே அங்கு ஒரு குளம் உருவானது. குளத்தைக்  கண்டதும்  அந்த ரிஷ்யமுகன்வேகமாக அந்த குளத்தில் இறங்கி நீராடினான்.

! என்ன இது. நீரில் நனைந்ததும் அவன் அழகிய பெண்ணாக உருமாறிவிட்டானே. இனி என்ன நடக்கும்?

தேவலோகத்தில் பூமியில் எப்படித் தன் அம்சத்தை அனுப்புவது என்று எண்ணிக் கொண்டிருந்த இந்திரன், பூமியில் திடீரென்று முளைத்த அந்த அதிசயக் குளத்தையும் அதில் நனைந்த உடைகளுடன் கூடிய அந்த அழகியைக் கண்டான். கண்டதும் காமுற்று இந்தப் பெண் மூலம் தன் அம்சத்தை பூமிக்கு அனுப்பத் தீர்மாணித்தான். அகலிகையைக் கண்டு காமுற்று, உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் தோன்றும்படி பெற்ற சாபமெல்லாம்  மறந்து போய்விட்டது. அப்பெண்ணை காமத்துடன் நோக்கினான். உடனே, பெண் உருவில் இருந்த அந்த ரிஷ்ய முகன் ஒரு குழந்தையை ஈன்றான்(ள்). பெண் உருவில் இருந்தாலும், அது வானரம் தானே குழந்தையும் வானரமாகப் பிறந்தது. அதைக் கண்டவுடன் ரிஷ்ய முகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆணாகிய தனக்கு எப்படி குழந்தைப் பிறந்தது என்று புரியாமல் விழித்த அவன் முன் தோன்றிய இந்திரன்  நடந்ததை விளக்கினான். அப்பொழுதுதான் அவனுக்கு தான் குளத்தில் இறங்கியவுடன் பெண்ணாக மாறியது எல்லாம் புரிந்தது. ஆனால், ஆணாகிய தான் எப்படி அந்த குழந்தையை வளர்க்க முடியும் என்று நினைத்த அவனிடம் இந்திரன், “இந்த குழந்தை பலவான். என் பலமும் உன் பலமும் சேர்ந்து, இருவரின் பலமும் கொண்டு இருக்கும்.

அதே நேரம்  தேவலோகத்தில் சூரியனின் மனம், தன் காதல் மனைவி உஷாவுடன் சேர்வதற்கான காலமானஉஷாகாலத்தை எண்ணிக் கொண்டிருந்தது. ”பூவுலகில் மானிடனாக அவதரிக்கும் விஷ்ணு, சூரிய வம்சத்தில் பிறக்கப் போவதையும் அவருக்கு துணையிருக்க தன் அம்சத்தை எப்படி அனுப்புவது?” என்றும் நினைத்துக் கொண்டிருந்தான்

அவன் முன் தோன்றிய நாரதர் பூலோகத்தில் இந்திரனின் அம்சம் பிறந்துவிட்டது என்று நடந்ததைத் தெரிவித்தார். இந்திரன் தன்னை முந்தியதை அறிந்தவுடன் சூரியன் அவசரபுத்தியுடன் தானும் உடனே அந்த பூலோகப் பெண்ணின் மூலம் தன் அம்சத்தை அனுப்ப முடிவெடுத்தான்.

அதேவேளையில் பூமியில், தான் முதல் முறை பெண்ணாக மாறிய போது இந்திரனையே மயக்கிய தன் முகத்தைப் பார்க்காததை எண்ணியரிஷ்ய முகன்அதை பார்க்க விரும்பி மீண்டும் அந்த மாயக் குளத்தில் மூழ்கி எழுந்து தன் முகத்தைப் பார்த்தான். அதே சமயத்தில் சூரியனும் இந்திரனின் அம்சத்தைப் பார்க்க பூலோகத்தில் தன் பார்வையை செலுத்தினான். அங்கே தேவர்களும் மயங்கும் அந்தரிஷ்ய முகன்-இன் பெண்ணுருவைப் பார்த்தான். உடனே தன் மனைவி உஷாவை மறந்து அந்தப் பெண் மேல் மோகம் கொண்டு அவளைக் காமத்துடன் நோக்கினான். உடனே அவள் மீண்டும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அங்கு தோன்றிய சூரியன் அக்குழந்தை தன் அம்சம் என்றும், மஹாவிஷ்ணு பூமியில் சூரிய வம்சத்தில் தோன்றும் பொழுது அவருக்கு அக்குழந்தை உதவும் என்று எடுத்துரைதான்.

நடந்த அனைத்தையும் வாயுதேவனுக்கும் நாரதர் எடுத்துரைத்து “வாயுதேவனே! நீ எப்பொழுது உன் அம்சத்தை பூமிக்கு அனுப்பப் போகிறாய்?” என குறும்புடன் கேட்டார்.

உடனே வாயுதேவனும், “முனி ச்ரேஷ்டரே! என் அம்சம் எப்போதுத் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். பூலோகத்தில் திருகார்த்திகை நேரமான இப்பொழுது, சிவபெருமானை நினைப்பது தான் தற்சமயம் என் கடமை. இதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்என்று கூறி சிவபூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

அவன் பக்தியில் மனம் உருகிய சிவபெருமான் அவன் முன் தோன்றி, “வாயுதேவனே, பூலோகத்தில் அஞ்சனா தேவியும் கேசரியும் என்னைத் தன் மகனாகப் பெற வேண்டி தவமிருந்து வருகின்றனர். விஷ்ணு, பூலோகத்தில் ராமாவதாரம் செய்யவுள்ளார். அவருக்கு உதவியாக என் ருத்ராம்சம், அஞ்சனை புத்திரன் ஆஞ்சனேயனாகத் தோன்ற இருக்கிறது. என் அம்சத்தை அஞ்சனையிடம் சேர்க்க உன்னை விட தகுதி வாய்ந்தவர் யாருமில்லை. குழந்தை என் அம்சமாக கேசரி நந்தனாக இருந்தாலும், நீ கொண்டு சேர்ப்பதால் உன் அம்சமாக உன் மனோ வேகத்தோடு மாருத புத்ரன்மாருதியாக ஈரேழு பதினான்கு லோகத்திலும் கொண்டாடப் படும்என்று அருளினார்.

தான் ப்ரம்மதேவனின் கண்ணீரிலிருந்து தோன்றிய காரணம் ரிஷ்யமுகனுக்கு விலங்கியதும் அவன் முன் இருந்த மாயையும் மாயக்குளமும் விலகின. ரிஷ்யமுகனும் தன் மானிட ரூபம் விலக்கி தன் மக்களுக்கு காவலாக அங்கேயே பர்வதமாக உருமாறினான்.

ராமாவதாரம் பூலோகத்தில் நடைபெற்ற போது, அகங்காரமும் காமமும் கொண்டு பெற்ற இந்திரனின் மகனான வாலி தானும் அகங்காரமும் காமமும் கொண்டு தன் இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியையே சிறைபிடித்தான்.  

அவசரபுத்தி கொண்ட சுக்ரீவனோ ஆராயாமல் தன் அண்ணன் வாலிதான் இறந்தான் என்று மாயாவியுடன் அவன் போரிட்டுக்கொண்டிருந்த குகையின் வாயிலை பாறையால் மூடினான். சூரியன் கண் எதிரே அழகிய பெண்ணைக் கண்டதும் தன் மனைவி உஷாவை மறந்தது போல் அரசும் அரசியும் கிடைத்தவுடன் சீதாதேவியைத் தேடுவதைக் கூட மறந்து கள்ளுண்டு களித்திருந்தான்.

ஆனால், பக்தியும் தெய்வத் தொண்டுமே கருத்தில் கொண்டிருந்த வாயுவின் புத்திரன், வாயுதேவனைப் போலவே கடமையை கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக செய்ததால் கடவுளாகவேப் போற்றப் படுகிறான். வெறும் எண்ணம் மட்டும் நன்மையை விழைந்தால் போதாது, அதற்கானச் செயலும் முறையான தானக இருக்க வேண்டும் என்று அந்த அஞ்ஜனை மைந்தனைத் துதிப்போம்.

குறிப்பு:      பொதுவாக, வாலி, சுக்ரீவனின் தாய்-தந்தையரைப் பற்றி குறிப்புகள் ராமாயணப் புத்தகங்களில் இல்லை. வட இந்தியாவின் செவி வழிக் கதைகளில், இந்திரனும் சூரியனும்  அகலிகையுடன் இணைந்ததால், வாலி சுக்ரீவர்கள் பிறந்தனர் என்று கூறுவர். ஆனால், இதற்கு புராண குறிப்பு எதுவும் இல்லை. மேலும், ஒரு முறை நடந்தால் அது மன்னிக்கக் கூடியது. அதனால் ராமன், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தது. எனவே, இது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும். இந்த ரிஷ்ய முகனைப் பற்றிக் கேரள செவி வழி கதைகளில் குறிப்புகள் உள்ளன. அதை ஒட்டியே மேலே உள்ள இந்த புனைவு.

வியாழன், நவம்பர் 03, 2011

இன்று சுடுவது நிச்சயம் - ‘சவால் சிறுகதை-2011’


இன்று சுடுவது நிச்சயம்

ன்றைக்கு நிச்சயம் சுட்டு விடவேண்டும்!! என்று மனதில் நினைத்துக் கொண்டார் கோகுல்நாத். பாவம் அவரும் எத்தனை நாள் தான் மனைவி ரூபலா செய்வதைப் பொருத்திருப்பார். கடந்த 40 வருடங்களில் இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதிலும், கடந்த இரண்டு வருடமாக அதாவது ரிடையர் ஆனபின் தான் இத்தனை மோசம். காரணம் அந்த விவேக் தான். அவனை நினைத்த உடனேயே அவர் உடல் வேர்க்கத் துவங்கியது.

ஆம் இன்று சுடுவது நிச்சயம்.

அதற்கு, அவர் தேர்ந்தெடுத்த ஆள் விஷ்ணு. ஆம், அதே விஷ்ணு தான். எவன், தன் அத்தை மகள் ரூபலாவை தனக்கு அறிமுகம் செய்து தன் காதல் திருமணம் நடக்க உதவினானோ, அந்த பால்ய நண்பன் விஷ்ணு தான் இதற்கு சரியான ஆள்.

இந்த ரூபலாவோ விஷ்ணு தன் மாமன் மகன், தன் காதலுக்கு உதவியவன் என்பதை எல்லாம் மறந்து அவனை எப்பொழுதும் ஏசிக் கொண்டே இருக்கிறாள். அவனைக் கண்டாளே இவளுக்கு எட்டிக் காய்தான். அதுவும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் ஏதோ வெளிநாட்டு ஒற்றன் போல் வேவு பார்க்க வந்து விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்; எங்கள் நட்பு இவள் வருவதற்கு முன்பே சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இன்றைக்கும் என் ஒரே நண்பன் என்றால் அவன் விஷ்ணுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

உடனே அவர் மனசாட்சி எதிரில் இருந்த கண்ணாடியில் வந்து,  ஏன் விவேக் உன்னை விட சிறியவன் என்றாலும் அவனும் உன் நண்பன் தானே?” என்று கேட்டது.

நண்பன்!! யார்?  அந்த விவேகா!! துரோகி, அவன் தான் இது எல்லாத்துக்கும் காரணம். அவனைப் பற்றி பேசாதேஎன்று திட்டி அதைத் துரத்தினார்

அவன் பெயரை நினைத்ததுமே அவருக்கு அன்று அந்த விவேக்-இன் 50-வது பிறந்த நாளில் நடந்தது தான் நினைவுக்கு வந்த்து. அவருக்கும் விஷ்ணுவுக்கும் முன்னாலேயே ரூபலாவும் விஷ்ணுவின் மனைவி பாமாவும் ஒரு பெரிய கேக் துண்டை எடுத்து விவேக்-இன் வாயில் ஊட்ட அவனும் சிறிது கூடத் தயக்கம் இல்லாமல் பெரிய கேக் துண்டை அவர்களுக்கு ஊட்ட இவருக்கு வந்ததே பெரிய கோபம். ஆனால், மனதுக்குள் புழுங்குவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும். வயதாகிவிட்டதால் இது போன்ற நிலை சகஜம் தான். அதற்காக இந்த பெண்கள் இப்படியா நடப்பார்கள். அவருக்கு ஒரே ஆத்திரம். அவருக்குள் மீண்டும் அந்த மிருகம் விழித்துக் கொண்டது.

இன்று நிச்சயம் சுட வேண்டும்.

அன்று, தனியே விஷ்ணுவிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு, அந்த வாய்ப்பு சாப்பிடும் போது தான் கிடைத்தது. அதுவும், அப்போது ரூபலாவும் பாமாவும் விவேக்-உடன் ஒட்டிக்கொண்டு ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்ததால்.

ரூபலா நடந்து கொள்வதைப் பற்றி விஷ்ணுவிடம் விவரித்த கோகுலுக்கோ விஷ்ணு சொன்னது அதைவிட அதிர்ச்சியைத் தந்தது. ஆம், பாமா விஷ்ணு விஷயத்தை கேட்ட போது தன் நிலைமையே தேவலாம் என்று கூட அவர்க்குத் தோன்றியது. இதற்கும் இந்த விவேக் தான் காரணம்!! வேறு யாரால் இது மாதிரி செய்ய முடியும். அப்பொழுதுதான் அவருக்கு அந்த யோசனைத் தோன்றியது. அதைக் கேட்டவுடன் விஷ்ணுவுக்கோ ஒரே ஷாக்.

இது முடியுமா? நடக்குமா? உனக்கு சுடக் கூடத் தெரியுமா? எனக்குத் தெரியாதே என்று விஷ்ணு கேள்வி மேல் கேள்வி கேட்டான்

“அடப்பாவி, நான் உனக்குச் சுடத் தெரியும். நீ உதவுவாய் என நினைத்தேன். இப்படிக் காலை வாருகிறாயே!! என்று கோகுல் அறட்ரவே ஆரம்பித்தார்.

உடனே விஷ்ணு சரி சரி, நீ கவலைப்படாதே நான் என் பி.ஏ. ரமணியை விசாரித்து உனக்குக் கூறுகிறேன் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என்ன ரெண்டு பேரும் கோட் வேர்டில் பேசிக் கொண்டிருக்கிறிர்கள்? என்று கேட்ட படியே ரூபலா வேவு பார்க்க வந்ததைக் கண்டு இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

கிளம்பும் போது விஷ்ணு, யாருக்கும் தெரியாமல், எப்படி சுடுவது என்பதை ரமணியிடம் கோட் வேர்டிலேயே அனுப்பச் சொல்வதாகக் கூறினான்.

ஒருவழியாக இன்று காலை ரமணி ரூபலாவிடம் ஏதோ கொடுப்பது போல் அந்த பேப்பரை கையில் திணித்த போது கோகுலால் தான் தரையில் நிற்பதையே உணர முடியவில்லை. அதற்குள் ரூபலா வந்துவிட அவசர அவசரமாக அங்கிருந்த புத்தகத்தில் அதை வைத்துவிட்டு எதுவும் தெரியாமல் நின்றுகொண்டார்.

உள்ளேயிர்ந்து வந்த ரூபலா என்ன இது இன்னும் சின்ன குழந்தை மாதிரி படித்த புத்தகத்தை எல்லாம் அடுக்க மாட்டீர்களா என்று கூறி அவற்றை கபோர்டில் அடுக்கி, என்றும் இல்லாத திருநாளாக “நான் பாமாவுடன் கோவிலுக்குப் போகிறேன். மாலைபில் தான் வருவேன் என்ற போது கோகுலுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. அதனால் தான் கோவிலுக்கு போனால் அத்தனை நேரம் ஏன்? விவேக்-ஐப் பார்க்கப் போகிறாயா? என்று வாய் வரை வந்த கேள்வியைத் தவிர்த்து பஸ்ஸில் போகவேண்டாம் ஆட்டோவில் சென்று வா என்று (வழிந்து கொண்டே) வழியனுப்பினார்.

ரூபலா சென்றவுடன் மெதுவாக, தன் சட்டைப் பாக்கெட்டில் கை விட்டவருக்கோ அதிர்ச்சி. ரமணி கொடுத்த குறிப்பு எங்கே என்று தலையை பிய்த்து கொள்ள, மெதுவாக தான் அங்கேயிருந்த புத்தகத்துக்குள் வைத்தது ஞாபகம் வந்தது. ஆனால், எந்த புத்தகம் என்பது சரியாக நினைவுக்கு வரவில்லை. சே!! என்ன ஞாபக மறதி. இப்படி காலை வாருகிறதே இன்றைக்கு விட்டு விட்டால் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டுமா?  அதுவுமின்றி அந்த காகிதம் மட்டும் ரூபலாவிடம் கிடைத்தால் தன் கதி என்ன நினைக்க நினைக்க அவருக்கு மீண்டும் வேர்த்தது. என்ன ஆனாலும் சரி இன்று நிச்சயம் சுட்டுவிட வேண்டும் என்று குறிப்பு வைத்த புத்தகத்தைத் தேட ஆரம்பித்தார்.

அப்பாடா ஒருவழியாக குறிப்பு கிடைத்தவுடன் தான் கோகுலுக்கு போன உயிர் திரும்பி வந்த்து.

முதலில் “S W H2 6F“.என்றிருந்த அந்த குறிப்பு அவருக்குப் புரிபடவில்லை. சற்று யோசித்தவருக்கு காதலித்த போது விஷ்ணு வீட்டிற்குத் தெரியாமல் தகவல் அனுப்பும் கோட் ஞாபகம் வர மெதுவாகத் தெளிவு வர ஆரம்பித்த்து.

பல வருடங்களுக்குப் பின், சில நாட்களாக ரூபலா தன்னை அனுமதிகாத, அந்த அறைக்குள் நுழைந்தவர் அந்த வாசனையிலேயே சற்றுத் தன்னை மறந்து நின்றார். மெதுவாக சுய நினைவு அடைந்தவராய், அந்த கபோர்டை திறந்து கண் முன் இருந்த அந்த கண்டெய்னரைக் கண்டார். மெல்ல அதைத் திறந்து பார்த்தவுடனேயே அவர், போதை பழக்கம் கொண்டவன் போதை மருந்தைப் பார்த்தால் ஏற்படும் உன்மத்த நிலையை அடைந்தாலும், நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து அதில் கையை விட்டார். கையை விட்ட அவருக்கோ அதிர்ச்சி. ஆம், அதனுள்ளும் ஒரு காகிதம். அது என்ன? ஏதோ எழுதியுள்ளது தெரிகிறது. ஆனால், அந்த அறை வெளிச்சத்தில் அதில் என்ன எழுதியுள்ளது என்பது விளங்கவில்லை.

மெல்ல தன் வாசிப்பு மேசைக்கு வந்தவர் ”To Vivek” என்று எழுதப் பட்டிருந்த அந்த காகிதத்தைப் பார்த்தார். அந்த துரோகி விவேக், தனக்கு வந்த லெட்டரை ரூபலாவிடம் படிக்க்க் கொடுத்திருகிறானா அல்லது ரூபலா அந்த துரோகிக்குக் கொடுக்க வைத்திருக்கிறாளா என்ற கேள்வியுடன் விவேக்-இற்கு சாபமிட்டபடியேப் பேப்பரைப் பிரித்துப் படித்தார்.

படித்ததும் அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் கண்களை மட்டுமா நம்ப முடிய வில்லை. தன் கண் – அடச்சே கண் என்ன கண் – தன் உயிரே அவன் தான் என்று நினைத்த தன் நண்பன் விஷ்ணுவின் துரோகம் அவர் கண் முன்னே விரிந்து அவரை நிலை குலையச் செய்தது.

அதில் விவேகிடம், “சார், எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்என்று விஷ்ணு எழுதியிருந்த்தைக் கண்டால் அவரால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா என்ன?.

சற்று நேரம் கற்சிலையாய் அமர்ந்த அவருக்கு விஷ்ணுவின் இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, அதுவும் அவருடைய தற்போதைய விரோதி அந்த விவேக்-உடன் சேர்ந்து அவன் செய்த இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, என்ன செய்யலாம் என்று புரியாமல் விழித்தார். மெல்ல மெல்ல தன்நிலையை அடந்தவருக்கு காலை முதல் விஷ்ணு ஏன் இன்னமும் Phone செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. சட்டென்று செல்லை எடுத்தவருக்கு அதுவும் துரோகம் செய்தது.

ஆம், சார்ஜ் இல்லாமல் அணைந்திருகிறது.


சார்ஜ் செய்தவுடன் போன் “நண்பனே எனது உயிர் நண்பனேஎன்று அழைத்தது. ஆம் விஷ்ணுவின் போன் தான். அந்த நம்பருக்குத்தான் அந்த ரிங்டோன்.

“சே!! எத்தனை அப்பாவியாக  இருந்திருக்கிறேன். இந்த விஷ்ணு கூட அவர்கள் பக்கம் தான் என்று நினைத்தாலும் அவன் துரோகம் தனக்குத் தெரிந்துவிட்டதை அவனுக்குக் காட்டக் கூடாது என்று நினைத்து போனை இயக்க, விஷ்ணுவோ “டேய், எஸ்.பி.ஜீ, என்னாடா காலையிலிருந்து போனில் யாரை பிலேட் போட்டுக்கொண்டிருக்கிறாய்என்று கேட்கவும் வாசலில் காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்த்து.

விஷ்ணுவின் போன்காலை அணைத்து வாசல் கதவைத் திறந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

ஆம் அவர் முன்னே, ரூபலா, விவேக், பாமா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் மட்டுமா? பின்னாலேயே விஷ்ணுவும், ரமணியும் நின்றிருந்தனர்.

கதவைத் திறக்க இவ்வளவு நேரமா என்று கூறியபடியே வீட்டில் நுழைந்த அவர்களின் கண்ணிற்கு நேரேயே அந்த காகிதங்கள் மேசையில் இருந்தன. அவை நேராக ரூபலா கண்ணிலும் பட்டுவிட, அவள்  கோகுலையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்த்தாள்.

மெல்ல அவள் கோகுலிடம், என் மீது இத்தனைக் கோபமா. உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தானே நான் கேக் சாப்பிடவிடுவதில்லை. அதற்காக நீங்களே அவனில் கேக் சுடுவதா? உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்வேன். இதுக்கு இவன் வேறு “Sugar as Wish; Honey 2 (Spoon); 6 (cup) Flour“ என்று recipe கொடுதிருக்கிறான்”, என கோபத்துடன் விஷ்ணுவைப் பார்க்க அவன் தலையை குனிந்து கொண்டான்.

“நல்ல வேளையாக இந்த ரமணி பொண்ணு போனில் என்னிடம் சொன்னதால் இப்படி ஒரு மாற்று காகித்தத்தை சர்க்கரை டப்பாவில் வைத்தேன். இனிமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். நான் கேள்வி கேட்க மாட்டேன். நான் ஒருத்தி இருப்பது உங்களுக்கு சுமைதானே!!என்று கோபமாகக் கூறினாள்.

என்னை மன்னித்து விடு ரூபலா. இரண்டு வருடம் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு தானே இருந்தேன். அன்னிக்கு இந்த விவேக் பிறந்த நாளில் எங்களுக்கு ஒரு துண்டு கேக் கூட கொடுக்காமல் நீங்க மூணு பேரும் சாப்பிட்டதுதான் என்னை இப்படி ஆக்கிவிட்ட்துஎன்று கோகுல் அவளைத் தேற்றினார்.

உடனே விஷ்ணு, போதும் ரூபலா அவனை ரோம்ப படுத்தாதே. இன்று அவனுக்கு 60-வது பிறந்த நாள்; அதற்கு தான், “Sweet Wishes Here to (complete) 6 Full Decades“ என்பதுதான் அதன் விளக்கம் என்பதை சொல்லி, அவன் சர்க்கரை அளவு சரியாகிவிட்டதால் அவன் கேக் சாப்பிடலாம் என்று டாக்டர் விவேக் சார் கொடுத்த ரிபோர்டையும் காட்டி கொண்டு வந்த கேக்கை கட் பண்ணச் சொல் என்று சொல்ல, “அவர் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கட்டுப்பாட்டுடன் இருந்ததால் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் அவர் சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு இன்னமும் சர்க்கரையும் குறையல; கொழுப்பும் குறையல. அதனால், உங்களுக்கு கேக் கிடையாது என்று பாமா கூற, விஷ்ணு ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  

வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஒரு வார்த்தை ஒரு லட்சம்



ஹய்யா!! தம்பி பாப்பா!! என்று மகள் துள்ளிக் குதித்ததைப் பார்த்த மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஒரே குழந்தையாக இருந்தால், அதற்கு ஒரே அடியாக செல்லம் கொடுத்து அது சுயநல வாதியாகவும், சொல் பேச்சு கேட்காமலும் போய் விடும் என்பதை நெருங்கிய குடும்பங்களில் பார்த்தும், அப்பெற்றொரின் நாங்கள் தான் அந்த தவறைச் செய்துவிட்டோம்; நீங்களாவது ஒன்றோடு நிறுத்தி விடாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளைக் கேட்டும் மற்றொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துவிட்டாலும், மகள் அதை எப்படி எதிர்கொள்வாள் என்ற கவலை இருந்ததென்னவோ உண்மை.

மருத்துவமனையில் கூடவே கவலையுடன் தம்பியா தங்கையா என்று ஆர்வத்துடன் பார்த்தும், அதே நேரம் அது என்னுடன் பேசுமா விளையாடுமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தவள் துள்ளிக் குதித்த்தும் மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஆனால், அந்த மகிழ்ச்சி 6-7 மாதங்களில் கவலையாக மாறும் என்று அன்று தெரியவில்லை.

அம்மா, பக்கத்து வீட்டு ஆன்டி தம்பியை பற்றியே உன்னிடம் விசாரிக்கிறாள். என்னைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டேன் என்கிறாரே, அது ஏன்?

அப்பா, உன் ஃப்ரெண்ட், தம்பிக்கு மட்டும் கிஃப்ட் தருகிறாரே? எனக்குக் கிடையாதா?

பாட்டி, தம்பியையே தூக்கிக் கொள்கிறாளே. என்னைத் தூக்க மாட்டாளா?

மாமா, தம்பிக்கு மட்டும பால் பாட்டில் வாங்கித் தந்திருக்கிறாரே எனக்கு இல்லையா?

தம்பி வந்த்திலிருந்தே நீ என்னை கவனிப்பதில்லை. அவனை மட்டும் கொஞ்சுகிறாய்.

இப்படி தினமும் எதற்காகவாவது போட்டி. அழுகை. இத்தனைக்கும் நாங்களும் சரி எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களும், உறவினர்களும் அவளையும் விசாரிக்கவும் அவள் தேவையை கவணித்து, கணித்து அன்பாக உரையாற்றவும் தவறியதில்லை.

இது போல் தினமும் நடந்தால் அவளுக்கு தம்பியிடம் பாசமே இல்லாமல் போட்டியும் வெறுப்பும் அல்லவா வளரும். அதனால் தினமும் லட்சம் முறை நீதான் எங்களுக்கு முக்கியம் என்பதை நானும் அவள் தாயும் சொல்லத் தவறியதே இல்லை. ஆனாலும், அவள் முழுதாக திருப்தி அடைந்த்தாக/அடைவதாகத் தான் தெரியவில்லை.

எங்கள் கவலையை மேலும் மேலும் வளர்க்க இவன் வேறு ரொம்ப படுத்துகிறான். ஒன்றரை வயதுதான் ஆகிறது; ஆனாலும், இவன் நாள் முழுவதும் ஒரு நொடி கூட சும்மா இருப்பதில்லை.

பொதுவாகவே, முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை சற்று active-ஆக இருக்கும் என்று கூறுவர். இவனோ hyper-active. அதிலும் அக்காவைச் சீண்டுவதென்றால் தேன் குடித்த நரிதான். பேச்சு தான் வரவில்லை. விஷமம் மட்டும் தேவைக்கு அதிகமாகவே.

இன்று காலை மகள், அப்பா, நாளைக்கு எனக்கு பர்த் டே கொண்டாட வேண்டாம் என்றதும் எங்களுக்கு அதிர்ச்சி.

ஏண்டா செல்லம். உன் ஃப்ரெண்ட்ஸ்-லாம் வருவார்கள். ஜாலியாக இருக்கும். எல்லோரோடும் விளையாடலாம். போன வருடம் கூட விளையாடினாயே. போன வருடம் தம்பி தூங்கிக் கொண்டே இருந்தான். இந்த வருடம் அவனும் விளையாடுவான். நல்லா இருக்கும் என்று சமாதானம் கூறினோம்

ஆமாம் அப்பா, தம்பி நன்றாக ஆடுவான். எல்லோரும் அவனையே கொஞ்சுவார்கள். என்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். அதுவும் இல்லாமல் அவன் எப்பவும் என் தலை முடியை இழுத்து, ட்ரெஸெல்லாம் கலைத்து அழுக்காக்கி விடுவான். அதனால் தான் கொண்டாட வேண்டாம். அப்படி கொண்டாடினால் அவனை கீழ் வீட்டு அங்கிளோடோ அல்லது வேறு யார் வீட்டிலோ விட்டுவிடு என்றவுடன் எங்களுக்கு ஒரே ஷாக்

என்னாடா நீயே தம்பியை வேண்டாம்னு சொன்னால் யார் அவனை வைத்துக் கொள்வார்கள். நாங்கள் அவன் உன் உடையைக் கலைக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மீண்டும் லட்சம் சமாதானங்கள்.
ஒருவழியாக சமாதானக் கொடி பறக்கவிட்டாகிவிட்டது.
மனைவி மெல்ல எனக்கு மட்டும் கேட்கும் படி, அப்பாடா ஓரளவு நிலமையை சமாளித்தாகி விட்டது. மீண்டும் அவளுக்கு வேறு டவுட் வருவதற்குள் டீவியை போட்டு சமாளிங்க என்றாள்.
செல்லம், நாம டீவி பார்கலாமா என்று அவளுக்குப் பிடித்த கார்டூன் நெட்வொர்க் போட்டால் அதில் - சிவ லீலாவோ பால் கணேஷோ - அண்ணன் முருகன், தம்பி மூஷிக வாகனனுக்கு பழம் கொடுத்ததால் (ஆமாங்க அண்ணன் தான்; வட இந்தியாவில் கார்த்திக் தான் அண்ணன்; கணேஷ் தம்பி) “உங்களுக்கு எப்பவுமே தம்பிதான் முக்கியம் என்று கோவித்துக் கொண்டிருந்தான். சடாரென்று சேனல் மாற்றினால் அங்கு, அண்ணன் ரகுவரன் தன் பெற்றோர் சிவகுமார்-ராதிகா, தம்பி சூர்யா மேல் அதிக பாசம் காட்டுவதால் அவரை மலை மேலிருந்து தள்ளிவிட, அடச்சே என்று அதைவிட வேகமாக சேனல் மாற்றினேன். அங்கேயும் விட்டார்களா கல்யாணியை கயவர்கள், அந்த சேனலில் பார்த்திபன் காவேரியின் மூத்த மகன் இளைய மகனை பூச்சிமருந்தால் கொல்ல எத்தனிக்க, “ஹூஹூம், இன்னிக்கு டீவி சரியாகவேத் தெரியவில்லை என்று கூறி அணைத்து மூட நேர்ந்தது.
மறுநாள்
ஒரு வழியாக இன்று எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. இல்லையெனில், பிறந்த நாளும் அதுவுமாக அழ ஆரம்பித்து விடுவாளோ என்று கவலைப்பட்டுக் கொண்டே புத்தாடை அணிய கூப்பிட்ட அம்மாவிடம் எதுவுமே கூறாமல் ஒத்துழைக்கிறாளே.
மெதுவாக நண்பர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராக வர, மகனுக்கோ ஒரே குஷி, ஆட்டம் பாட்டம். வந்தவர்களும் அவனின் உற்சாகத்தில் பங்கு கொண்டு அவனை உற்சாகப் படுத்தி வாயைத் திறந்து அவனை பேசத் தூண்டி அவனிடம் விளையாட, மெல்ல மெல்ல மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல் அவள் முகத்தில் கவலை, அழுகையின் ரேகைகள். சற்று தீ(சீ)ண்டினாலும் அழுதுவிடுவாள். எப்படியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும் என மனைவி வேறு ஜாடை காட்டுகிறாள்.
குழந்தையும் எத்தனை நேரம் தான் மற்றவர்களுடன் விளையாடும். அங்கிருந்த  ஒரு ஓரத்தில் ஒட்டி போய் கவலையாக நின்றிருந்த அக்காவைக் காட்டி அவளிடம் போக ஒரே அழுகை. எங்களுக்கோ வயிற்றில் புளி.
நண்பரின் கையிலிருந்துத் திமிறி அழுது அவன் பேசிய அந்த முதல் வார்த்தையில் நாங்கள் அனைவரும் அதிர்ந்தோம். அந்த ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் அது வரை இடி விழுந்த மரம் போல் இருந்த மகளின் முகத்தில் லட்சம் வாட் மின்னல்.
நண்பரின் கரத்திலிருந்துத் தாவி குதித்து மகளிடம் வந்து அவளைக் கட்டியணைத்து அவன் அன்புடன் சொன்ன அந்தஅக்கா!! என்ற ஒரு வார்த்தை எங்களின் லட்சம் சமாதான வார்த்தைகளால் ஏற்படுத்த முடியாத அமைதியையும், தன் தம்பிக்குத் தான் தான் மிகவும் முக்கியமானவள் என்ற உண்மையையும் உணர்த்திவிட்டது.
இனிமேல், அவர்களிருவரைப் பற்றி  வீணாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்ற நிம்மதியையும் எங்களுக்கு தந்தது.