திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 09, 2013

ஒதுக்கப்பட்டக் காதல் கடிதம்



[’திடங்கொண்டு போராடு’ சீனு காதல் கடிதப் போட்டி வைத்தாலும் வைத்தார் எந்த வலைப்பூவில் பார்த்தாலும் காதல் கடிதமாகவே இருக்கிறது. நாமும் கடிதம் எழுதவில்லை என்றால் நாளை வரலாறு நம்மைப் பழிக்கும். அதனால் இந்த ஜோதியில் நாமும் கலந்து கொள்வதை (கொல்வதை-னுலாம் படிக்கக் கூடாது) தவிர வேறு வழியில்லை]

பரிசு வெல்லும் கடிதம் எழுதப்
பணித்திட்டக் காதலியே,

போட்டியிலே கலந்துள்ளோர்
பேரெல்லாம் கேட்கும் போது
‘திடங்கொண்டுப் போராடு’ம்
திறனெனக்கு இல்லையடி!

தமிழுக்கு ’சுழி’கள் மொத்தம்
இரண்டா ’மூன்றா’ என்று கேட்கும்
’அப்பாவி துரை’யெனக்கு
’ரஞ்சன’மாய் எழுதிடவோ
’மின்னல் வரி’ சொல்லிடவோ
தனித்திறமைத் தான் பெற்று
‘எங்கள் இடம்’ என்றியம்பும்
திறமையெதும் இல்லையடி

’நண்பர்கள்’ நடுவினிலே
நானும் ஓர் ‘ராஜா’ தான் – என்றாலும்
உந்தன் முன்னே
ஓரடிமை ஆனேனடி!

’கவரிமான்’ ஜாதியெனக்
கண்ணிரங்கா நடந்த என்னைக்
காலாலே இட்ட பணி
தலையாலே முடிக்கும் வண்ணம்
கட்டடிமை ஆக்கிவிட்டாய்!

பந்தயக் குதிரையா நான்
பரிசு பெறும் கடிதம் எழுத
என்று சொல்ல நினைத்தாலும்
என் இச்’சை தை’யல் உன்வார்த்தை
எப்படி நான் தட்டிடுவேன்!

’என் ரசனையில்’ எப்போதும்
உன் ‘ப்ரேம’ம் ஒன்றுதானே
இப்போதே ஒரு கடிதம்
எழுத நானும் முயன்றிடுவேன்.

கடிதமெழுத மையெடுக்க
‘முகிலின் பக்கம்’ சென்றிட்டேன்
என் ’தமிழே’ உன் கூந்தல்
கருமை அதற்கில்லையடி!

’இரவினதுப் புன்னகை’யின்
மை வாங்கி எழுத  வந்தால் – உன்
’வெற்றிவேல்’ கண்ணொளியால்
இரவுபகலானதுவே!

‘வந்து! வந்து! யோசித்து’ம்
மையெனக்குக் கிட்டவில்லை
என்றபோதும் உன் ஆணை
‘(ஜே)ஜோதா’வில் நான் இறங்கிவிட்டேன்!

’தனிமரமா’ய் நான் நின்றிருந்து
தக்கவழி தெரியாமல்
தடுமாறி நின்ற போது
தடுத்து ‘ஜீவன்’ தந்தவள் நீ!

‘உன்னைப் போல் ஒருவன்’ என
ஊராரில் பலர் இருக்க
‘அகில’மே நான் என்று
என்னை ஏன் நீ நினைத்தாய்?

காலம் அதன் சுழற்சியிலே
கரைந்து நானும் போய்விடா’மல்
ஆதியின் சிந்தனைகள்’ அனைத்தும்
எனக்கு அளித்தவள் நீதானன்றோ!

‘தென்றல்’ என என் வாழ்வில்
தினம் வந்து நீ நின்று
தேய்ந்த ‘சசிக் கலை’களையே
வளர்க்க என்னைச் சூடியவள் நீ!

’வண்ணத்துப் பூச்சி’ போல
வானில் வலம் வந்து நிற்க
’ஜீவன்’ உய்ய இனிக்கும் நல்ல
தேனமுதுத் தந்தவள் நீ!

’தேன் மதுரத் தமிழி’னிலே
திவ்வியமாய் ஓர் கடிதம்
நான் எழுதச் சொல்லியென்
‘மதிமாற்றம் (craze)' செய்தவள் நீ!

கடிதமெழுத நினைத்தாலும் – அதன்
கருப்பொருளாய் ஏதெழுத
என்பதனை உன்னையன்றி
யாரெனக்குக் கூறிடுவார்?

நீயோ
என் எண்ணமதில் உள்ளவற்றை
எடுத்தியம்பி எழுதச் சொன்னாய் – என்
எண்ணமதில் உன்னையன்றி
ஏதுமில்லை என்பதனால்
உன் உருவம் நான் வரைந்து
உடனேயே அனுப்பிவைத்தேன்

ஓவியப் போட்டி இதுவல்ல என்று கூறி
ஒதுக்கியே வைத்திட்டார்
உன்னுருவைத் தாங்கிய ஓர்
உன்னதக் கடிதத்தையே!

கடிதப் போட்டியிலே
கவிதையதை ஏற்கின்றார்
காரிகையுன் திருவுருவ
ஓவியத்தை ஒதுக்கிவிட்டார்
கசங்கியது கடிதமல்ல
காதலன் என் நெஞ்சமென்று
யாரிங்கே எடுத்துரைப்பார்?

[பின் குறிப்பு: மூன்று வாரங்களில் போட்டியில் கலந்து கொண்டவர்களை வைத்து எழுதியது. அவர்கள் மன்னிப்பார்களாக! அதிலும் குறிப்பாக ஜே.தா., மாலதி, க்ரேஸ் ஆகியோரிடம் கூடுதல் மன்னிப்பு அவர்களின் பெயர்களைச் சிதைத்தமைக்காக!]