தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 17, 2013

நோய்டா நாள்



ஏப்ரல் 17 நோய்டா நாள் என்று கொண்டாடப்படுகிறது.

1976-ஆம் ஆண்டு இந்த நாளில் தான் தில்லியில் ஓக்லா-வை ஒட்டிய யமுனையின் மறுகரையில் ’புது ஓக்லா தொழில் வளர்ச்சி பகுதி’ என்று உருவாக்கப்பட்டது (ஆங்கிலத்தில் New Okhla Industrial Development Area). இது சுருக்கமாக NOIDA என்று அழைக்கப்பட்டு நாளடைவில் நோய்டா என்பதே இப்பகுதியின் பெயராக ஆகிவிட்டது.

ஆனால், இன்றைய நோய்டாவின் நிலையே வேறு.  தில்லி-நோய்டா-ஆக்ரா வெகுவேக சாலை, சுங்கப்பாலம், மெட்ரோ ரயில் என்று தில்லியின் மையத்தை (கனாட் ப்ளேஸ், இந்தியா கேட், தில்லி கேட் ஆகிய பகுதிகளை தில்லியின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களை விட விரைவாக அடைந்துவிட முடியும்.

ஒரு காலத்தில் தில்லியில் துணைநகராக ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய்டாவே இன்று நோய்டா-க்ரேட்டர்நோய்டா என்று இரட்டை நகரங்களாகப் பரிமளிக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் என்றாலே தில்லியிலிருந்து குடியேற யாரும் தயங்குவர். ஆனால் நோய்டா உத்திரப் பிரதேசத்திலிருந்தும் அதைப் பொதுவாக யாரும் தவிர்ப்பதில்லை. காரணம், நோய்டா உத்திரப் பிரதேச மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல் நோய்டா அதாரிடி-யின் கட்டுப்பாட்டில் விளங்குவதே.

இன்றைய நிலையில் நோய்டாவின் மக்கள் தொகை சுமார் 1.7 மில்லியன். தவிரவும், சுமார் மூன்று லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தில்லியில் வீடுகள் கட்டப்பட இடம் இல்லாத நிலையி, தில்லியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இவற்றுக்குக் குடிபெயர வாய்ப்புகள் அதிகம்.

தவிர நோய்டா-வினால் மத்திய-மாநில அரசுகளுக்கு ஆண்டொன்றுக்குச் சுமார் 10000 கோடி ரூபாய் வருமானம் கிட்டுகிறது. நோய்டாவின் தனிநபர் வருமானம் (Percapita Income) சுமார் 20000 ரூபாய். நோய்டாவில் 15000 தொழிற்கூடங்கள் உள்ளன.

நோய்டாவில் பல்வேறு குறைபாடுகளும் உள்ளன. குறிப்பாக்க் கூற வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கு (மற்ற உத்திர பிரதேசப் பகுதிகளைக் காட்டிலும் பரவாயில்லை என்றாலும் தில்லியுடன் ஒப்பிடும் பொழுது சற்று கவலை அளிக்கும் விஷயம் தான்), மின்சாரம், பொது போக்குவரத்து (மெட்ரோவைத் தவிர நோய்டா அதாரிடியின் பேருந்துகள் இருந்தாலும் அவை சரியாக இயக்கப்படுவதில்லை). அரசியலைப் பொறுத்தவரையில் இப்பகுதியில் மாயாவதியின் தொகுதி இந்த பகுதியில் அமைந்திருப்பதால் அவரது ஆட்சியில் இப்பகுதியின் வளர்ச்சி, கட்டுமானப்பணிகள் தடையில்லாமல் நடைபெற்றது. ஆனால், அதே காரணத்திற்காகவே இப்பொழுது அதில் சுணக்கம் உள்ளது. இது பொதுவாகவே அனைத்து மாநிலங்களுக்கும் உரித்தானதுதான் என்றாலும் உத்திர பிரதேசத்தில் இந்த தனிநபர் அரசியல் மிகவும் பிரசித்தி பெற்றது.

தில்லி வந்த பிறகு சுமார் இரண்டு வருடம் கழித்து (1992-93 ஆம் ஆண்டில்) தான் முதன் முறையாக இந்த நோய்டாவிற்கு சென்றேன். தில்லி எல்லைவரை பேருந்துகள் செல்லும். நோய்டாவின் பிற இடங்களுக்குச் செல்ல ஆட்டோவும் ‘ஃபட்ஃபடி’ என்றழக்கப்படும் புல்லட்டுகளுடன் பிணைக்கப்பட்ட பத்துபேர் அமரும் வகையில் மூடப்பட்ட ஷேர்ஆட்டோவும் தான் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக இருந்தன.

அப்போது மட்டும் யாராவது நீ இந்த நோய்டாவில் தான் இருக்கப் போகிறாய் என்று கூறியிருந்தால் ‘தில்லி’யை விட்டே ஓடி வந்திருக்ககூடும்.

திங்கள், ஏப்ரல் 01, 2013

ஆயிரம் ட்ரக் கழிவும் அழிந்து வரும் நதியும்



யமுனை நதியின் இன்றைய நிலைப் பற்றி முன்னரே சிலமுறை எழுதியுள்ளேன்.

இதில் ’யமுனா ஜியே அப்யான்’ (யமுனை வாழ்க/மீட்பு போராட்டம்) என்ற அமைப்பின் தலைவர் மஜோஜ் மிஸ்ரா என்பவர் சென்ற ஆண்டு தேசிய பசுமைத் தீர்பாயத்தில் யமுனையை மீட்க ஒரு வழக்கைப் பதிவு செய்தார். இதில் யமுனையை மாசு படுத்துபவர்களே அதை மீட்கத் தேவையாகும் செலவை ஏற்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

சென்ற ஜனவரி மாதம் யமுனையில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு இந்தத் தீர்ப்பாயம் தடை  விதித்த்து.

சென்ற வாரம் இவ்வழக்குத் தீர்ப்பாயத்தின் வாதத்திற்கு வந்த பொழுது தீர்ப்பாயம் தில்லி அரசு மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், தில்லியின் மாநகராட்சிகள், மாநில நீர்வளத்துறைச் செயலர் ஆகியோரை யமுனையில் கொட்டப்படும் மாசுக்களின் அளவையும் அவற்றின் தன்மையையும் பற்றி அறிக்கை இரு வாரங்களுக்குள் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. மேலும், DDA,  தில்லி மெட்ரோ, உத்திர பிரதேச அரசு ஆகியவற்றை இந்த வருட மேமாத இறுதிக்குள் யமுனையில் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு இந்த கழிவு அகற்றும் பணியைக் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தில்லியில் மெட்ரோ தன் கட்டிடக் கழிவுகளை இரண்டு இடங்களில் கொட்டி வருகிறது. அவை  சராய் காலேகாவ்(ன்) (நிஜாமுதின் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது) என்ற இடமும்  சாஸ்த்ரி பார்க் என்ற இடமும் தான். ஆனால் இந்த இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்ட அவர்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்க முடியாது. காரணம், இவை இரண்டும் நதியின் படுகைப் பகுதிகள். அரசு நிறுவனமான மெட்ரோவே அனுமதியில்லாமல் கழிவுகளை ஆற்றில் கொட்டிவந்துள்ளது என்றால் தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கூறவேத் தேவையில்லை.

இதன் முதல்கட்டமாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டுத் துறை செயலர் தலைமையில் ஒரு குழு நேற்று முன்தினம் யமுனையின் கழிவுகளை மேற்பார்வையிட்டது.

அப்பொழுது இந்தக் கழிவுகளில் பிலாஸ்டிக், திடக்கழிவுகள் பல இருந்தாலும் முக்கிய கழிவு கட்டிடக் கழிவு என்றும் இதற்கு மெட்ரோ, DDA  ஆகியவையே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தற்போது ஹரியானா, உத்திர பிரதேசத்திலிருந்து கழிவு ஏற்றிவரும் லாரிகள் தில்லியில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், இந்த லாரிகள் தங்கள் கழிவுகளை தில்லி எல்லையில் ஆற்றில் கொட்டிவிடுகிறார்கள். கழிவுகளை தில்லியில் கொட்டத்தான் அனுமதிக்க கூடாது; குறைந்த பட்சம் லாரிகள் கழிவுகளை எடுத்து தில்லியில் நுழைந்து மறுபுறம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதித்தாலாவது அவர்கள் நதியில் இதுபோல கொட்டுவது தடுக்க/தவிர்க்கப்படலாம்.

யமுனையாற்றின் கிழக்குப்பகுதியில் சுமார் 53000 கன மீட்டர் கழிவுகளும் மேற்குப் பகுதியில் 27000 கன மீட்டர் கழிவுகளும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். ஆக மொத்தம் 90000 கன மீட்டர் கழிவுகள். அதாவது சுமார் 10000 ட்ரக் லோடு கழிவுகள். ஒரு ட்ரக்கிற்கு 2500 ரூபாய்கள் என்று வைத்துக் கொண்டாலும் 2 1/2 கோடி ரூபாயாவது செலவாகும்.
 
இந்தக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் மேலும் கழிவுகள் சேராமலும் இருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் தில்லி அரசு 10000 கோடி ரூபாய்களை நதியைத் தூய்மைப் படுத்த செலவிட்டுள்ளது. பயன் தான் எதுவுமில்லை. இந்த முயற்சி பலனளிக்க யமுனையின் துணைநதிகள் பலப்படுத்தப்பட வேண்டும். யமுனையின் பல துணையாறுகள் மெல்ல மெல்ல கழிவுகள் கொட்டி மூடப்பட்டு மேடாக்கப்பட்டு மனை நிலங்களாக ஆக்ரமிக்கப்படுகின்றன. யமுனையாற்றின் படுகைகளிலேயே பல மனை நிலங்களாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. உத்திரபிரதேசத்தின் நோய்டா, காஜியாபாத் பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் யமுனையாற்றின் படுகைகளை ஆக்ரமித்தே கட்டப்பட்டுள்ளன. இதனால் நதியின் நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டன. ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாவிட்டால் ஆறு மீண்டும் மாசுபட்டுப் போகத்தான் செய்யும்.

இது போன்ற ஆக்ரமிப்புகள் தடுக்கப்படாத வரை, வெறும் கழிவு அகற்றலால் அதிக பலன் கிடைக்கும் என்றுத் தோன்றவில்லை….

புதன், மார்ச் 20, 2013

சிட்டுக்குருவி தினம்


இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

மெல்ல மெல்ல அழிந்து வரும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. சிட்டுக்குருவி இனத்தின் அழிவைப் பற்றி - நகரங்களில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையே உருவாகி விட்டது - பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி, ’உலக சிட்டுக்குருவிகள் தினம்’-ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு தில்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக சென்ற அக்டோபர் மாதம் அறிவித்தது. [இதைப் பற்றி ஏற்கனவே
இங்கே எழுதியுள்ளேன்].

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வாழ விரும்புகின்றன. தற்போது, கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து வெளியேறி விட்டன. செல்போன் அலைவரிசை கோபுரங்கள் சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கருத்து நிலவுகிறது. குருவிகளின் உணவான கம்பு, வரகு, சோளம், தினை, சாமை போன்றச் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், தானியப் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம் அதிகரித்ததும் கூட முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

இன்று தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் வைக்க ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) கொடுக்க இருக்கிறார். இவை 2000 தனியார் பள்ளிகளில் வைத்துக் கண்காணிக்கப்படும். தவிர, தில்லியில் 170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே தில்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).

அதே நேரத்தில், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தில்லி அரசின் இந்த நடவடிக்கைகள் தேவைக்கும் மிகக் குறைவே என்று கூறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் மக்கள் நலச் சங்கங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இது போல கூடுகளை வழங்கவும் அங்குக் கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மரம் நடுவிழாக்கள் போல பெயரளவில் இல்லாமல் உண்மையிலேயே நன்மைத் தரும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பட்டும் வந்தால் நல்லது!

திங்கள், மார்ச் 04, 2013

கனாட் ப்ளேஸ் – புதுப்பிக்கும் பணி

 
தில்லியில் எத்தனையோ வியாபாரத் தளங்கள் இருந்தாலும் கனாட் ப்ளேஸ்-க்கு என்றுமே தனி இடம் உண்டு. மற்ற வியாபாரத் தளங்களைப் போலல்லாமல் இது நகரத்தின் மையத்தில் இருப்பது முக்கியக் காரணம்.

1933-ஆம் ஆண்டு ல்யூடியன் புது தில்லியின் அரசுக் கட்டடங்களை வடிவமைத்த பொழுது நகரத்தின் மையப்பகுதியில் ஒரு வணிக நகரத்தை அமைக்க எண்ணி வட்ட வடிவில் அமைக்கப்பட்டது இந்த இடம். இது ஐரோப்பிய கட்டிடக்கலையைக் கொண்டு கட்டப்பட்டது.

இந்த வியாபாரத் தளத்தில் 1940-ஆம் ஆண்டுக்கும் முன்னரே ஆரம்பிக்கப் பட்டு இன்றும் நடந்து கொண்டிருக்கும் சில கடைகளும் இருக்கின்றன. இங்கு சுமார் 300 பெரிய கடைகளும் 300 சிறிய கடைகளும் உள்ளன. தவிர 75 வங்கிகள், 4 சினிமா த்யேடர்கள், 400 அலுவலகங்களும் உள்ளன. சுமார் 80 உணவகங்களும் உள்ளன.

இந்த மார்கெட்டைத் தவிர அருகிலேயே ஜன்பத் மார்கெட்டும் இருக்கிறது. அருகில் புராதானச் சின்னமான அக்ரசேன் கி பாவ்லி (அக்ரசேனர் கிணறு) ASI-ஆல் பராமரிக்கப்பட்டும் வருகிறது

ஆனால், கடந்த மூன்று-நான்கு வருடங்களாக இந்த கனாட் ப்ளேஸ் பகுதிக்குச் சென்றவர்கள் ஏதோ போர்களத்திற்கு தான் வந்து விட்டோமோ என்று எண்ணுமளவுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டும், இடிபாடுகள் கொட்டியும் இருக்கிறது.

2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடபெற்றதைத் தொடர்ந்து தில்லியில் பல இடங்கள் அழகு படுத்தப்பட்டும் புது கட்டமைப்புப் பணிகள் பலவும் நடைபெற்றன. அதே நோக்கில் 2009-ஆம் ஆண்டு மேமாதத்தில் இந்த கனாட் ப்ளேஸ்-ஐ புதுப்பிக்கும் பணிகள் புது தில்லி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டிகள் முடிவடைந்த நிலையிலும் இந்த பணிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நீட்டிக்கப் பட்டுக் கொண்டே இருந்து வருகிறது.

முதலில் ஒரு மாதிரி வேலையாக சி-ப்ளாக் புதுபிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த வேளை திட்டமிட்டத் தரத்துடன் நடை பெறவில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டது.

மாநகராட்சி 2005-ஆம் இஞ்சினியர் இந்தியா நிறுவனத்தை இந்த வேளைக்குத் திட்ட மேளாண்மை ஆலோசகராக (Project Management Consultant) ஆக நியமித்தது. அவர்கள் இத்திட்டத்தை 11 பாகங்களாகப் பிரித்து சிறுசிறு துணை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிட்டது. 2005-ஆம் ஆண்டு வெறும் 76 கோடி ரூபாயில் போடப்பட்ட திட்டம் 2007-ஆம் ஆண்டு 671 கோடியாக உயர்ந்தது.

முதலில் இத்திட்டம் 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2011-ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவேறும் என்று அறிவித்தனர். அதுவும் பின்னர் 2012-ஆம் ஆண்டு மேமாதம் வரை நீட்டிக்கப்பட்டும் தற்போது 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை அடைந்து விட்டது.

இத்தனைக்கும் ஆரம்பத்தில் இங்கு உள்சுற்றையும் வெளிச்சுற்றையும் இணைக்கும் வகையில் 8 சுரங்கப்பாதைகள் திட்டமிடப்பட்டது. பின்னர் அது நான்காகக் குறைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான செலவும் 477 கோடி ரூபாயாக குறைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது புதுதில்லி மாநகராட்சி இத்திட்டத்தை மீண்டும் ஜூன் 30-ஆம் தேதி வரை  நீட்டித்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.

ஆக்ரா செல்பவர்கள் அங்கு ராதாஸ்வாமி மந்திர் என்ற கோவிலைக் கண்டிருப்பார்கள். அங்கு எப்பொழுதும் ஏதாவது கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டே இருக்கும். அந்தக் கோவிலில் கட்டுமான வேலைகள் தொடர்ந்து நிறுத்தாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் தீமை விளையும் என்று நம்பப்படுவதாகவும், அதனால் 1904 ஆம் ஆண்டிலிருந்து வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன என்று கூறப்படுவதுண்டு.

கனாட் ப்ளேஸின் இந்த புதுப்பிக்கும் பணியில் அது போன்ற விஷயம் இல்லாமல் இருந்தால் சரிதான்!

புதன், பிப்ரவரி 27, 2013

கழிவு அகற்றல் - தடை



தில்லி மாநிலத்தில், கழிவு நீக்கப் பணிகளில் மனிதர்கள் நேரடியாக ஈடுபடுத்தப் படுவது நேற்று முதல் தடை செய்யப்படுத்தப் பட்டுள்ளது.

 தில்லி துப்புரவுப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் செய்யப்பட்ட ஒரு விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ‘இந்நேரம் முதல் எந்த மனிதரும் கழிவுகளை அகற்ற நேரடியாக ஈடுபடுத்தப்படமாட்டார்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

2012 ஆம் ஆண்டிலிருந்தே ‘கைமுறை துப்புரவுத் தொழிலாளி வேலை தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் விவாதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் உச்ச நீதி மன்றம் இதில் மத்திய அரசின் இயலாமையைக் கண்டித்தது.

இந்நிலையில் தில்லி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்தியாவிலே இத்தடையைச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது.

மாநகராட்சிகள் (தில்லியில் மூன்று மாநகராட்சிகள் உள்ளன) இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆணையிடப்பட்டுள்ளன.

தில்லி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும்!

அமிர்கான் நடத்திய சத்யமேவ ஜயதே தொடரிலும் மனிதர்கள் நேரடியாக கழிவு அகற்றுவது பற்றிய ஒரு episode வந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்

[யூட்யூபில் இதன் தமிழ் வடிவம் கிடைக்கவில்லை]