ஏப்ரல்
17 நோய்டா நாள் என்று கொண்டாடப்படுகிறது.
1976-ஆம்
ஆண்டு இந்த நாளில் தான் தில்லியில் ஓக்லா-வை ஒட்டிய யமுனையின் மறுகரையில் ’புது ஓக்லா
தொழில் வளர்ச்சி பகுதி’ என்று உருவாக்கப்பட்டது (ஆங்கிலத்தில் New Okhla Industrial
Development Area). இது சுருக்கமாக NOIDA என்று அழைக்கப்பட்டு நாளடைவில் நோய்டா
என்பதே இப்பகுதியின் பெயராக ஆகிவிட்டது.
ஆனால்,
இன்றைய நோய்டாவின் நிலையே வேறு. தில்லி-நோய்டா-ஆக்ரா வெகுவேக சாலை,
சுங்கப்பாலம், மெட்ரோ ரயில் என்று தில்லியின் மையத்தை (கனாட் ப்ளேஸ், இந்தியா
கேட், தில்லி கேட் ஆகிய பகுதிகளை தில்லியின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களை விட
விரைவாக அடைந்துவிட முடியும்.
ஒரு
காலத்தில் தில்லியில் துணைநகராக ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய்டாவே இன்று
நோய்டா-க்ரேட்டர்நோய்டா என்று இரட்டை நகரங்களாகப் பரிமளிக்கிறது.
உத்திரப்
பிரதேச மாநிலம் என்றாலே தில்லியிலிருந்து குடியேற யாரும் தயங்குவர். ஆனால் நோய்டா
உத்திரப் பிரதேசத்திலிருந்தும் அதைப் பொதுவாக யாரும் தவிர்ப்பதில்லை. காரணம்,
நோய்டா உத்திரப் பிரதேச மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல் நோய்டா அதாரிடி-யின்
கட்டுப்பாட்டில் விளங்குவதே.
இன்றைய
நிலையில் நோய்டாவின் மக்கள் தொகை சுமார் 1.7 மில்லியன். தவிரவும், சுமார் மூன்று
லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தில்லியில் வீடுகள் கட்டப்பட இடம் இல்லாத
நிலையி, தில்லியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இவற்றுக்குக் குடிபெயர வாய்ப்புகள்
அதிகம்.
தவிர
நோய்டா-வினால் மத்திய-மாநில அரசுகளுக்கு ஆண்டொன்றுக்குச் சுமார் 10000 கோடி ரூபாய்
வருமானம் கிட்டுகிறது. நோய்டாவின் தனிநபர் வருமானம் (Percapita Income) சுமார்
20000 ரூபாய். நோய்டாவில் 15000 தொழிற்கூடங்கள் உள்ளன.
நோய்டாவில்
பல்வேறு குறைபாடுகளும் உள்ளன. குறிப்பாக்க் கூற வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கு
(மற்ற உத்திர பிரதேசப் பகுதிகளைக் காட்டிலும் பரவாயில்லை என்றாலும் தில்லியுடன்
ஒப்பிடும் பொழுது சற்று கவலை அளிக்கும் விஷயம் தான்), மின்சாரம், பொது
போக்குவரத்து (மெட்ரோவைத் தவிர நோய்டா அதாரிடியின் பேருந்துகள் இருந்தாலும் அவை
சரியாக இயக்கப்படுவதில்லை). அரசியலைப் பொறுத்தவரையில் இப்பகுதியில் மாயாவதியின்
தொகுதி இந்த பகுதியில் அமைந்திருப்பதால் அவரது ஆட்சியில் இப்பகுதியின் வளர்ச்சி,
கட்டுமானப்பணிகள் தடையில்லாமல் நடைபெற்றது. ஆனால், அதே காரணத்திற்காகவே இப்பொழுது
அதில் சுணக்கம் உள்ளது. இது பொதுவாகவே அனைத்து மாநிலங்களுக்கும் உரித்தானதுதான்
என்றாலும் உத்திர பிரதேசத்தில் இந்த தனிநபர் அரசியல் மிகவும் பிரசித்தி பெற்றது.
தில்லி
வந்த பிறகு சுமார் இரண்டு வருடம் கழித்து (1992-93 ஆம் ஆண்டில்) தான் முதன்
முறையாக இந்த நோய்டாவிற்கு சென்றேன். தில்லி எல்லைவரை பேருந்துகள் செல்லும்.
நோய்டாவின் பிற இடங்களுக்குச் செல்ல ஆட்டோவும் ‘ஃபட்ஃபடி’ என்றழக்கப்படும்
புல்லட்டுகளுடன் பிணைக்கப்பட்ட பத்துபேர் அமரும் வகையில் மூடப்பட்ட ஷேர்ஆட்டோவும்
தான் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக இருந்தன.
அப்போது மட்டும் யாராவது நீ இந்த
நோய்டாவில் தான் இருக்கப் போகிறாய் என்று கூறியிருந்தால் ‘தில்லி’யை விட்டே ஓடி
வந்திருக்ககூடும்.






