வெள்ளி, செப்டம்பர் 18, 2015

இருபத்தைந்து வருடம்


இருபத்தைந்து வருடம்




[தில்லி வந்து சேர்ந்து இன்றோடு 25 வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் பழைய நினைவுகளும் தொடர்புகளும் மனதைவிட்டு அகலவில்லை]


தலைநகரின் திசைநோக்கித்

தடம் வைத்தத் துவக்கம் அது.



அறியாத தேசம்

புரியாத மொழி

தெரியாத ஊர்

புகலில்லா இடம்

திசையறியா வழி

திக்கற்ற வாசம்

பெயரறியா மனிதர்கள்

நிலையறியா உறவு



இடையே…

பாலைவனச் சோலையென

கிட்டியதோர் நண்பர் குழாம்

பரிவும் பாசமும் கலந்த நட்பில்

பறந்ததோர் பத்து வருடம்



பின்னர்…

மணவாழ்க்கை

மக்கட் செல்வம்

ஒதுங்க ஓர் இடம்

ஓங்கிய மகிழ்ச்சி



என்ன இருந்து என்ன?

சொர்கம் என்றால்

சொந்த ஊர் என்று

சும்மாவா சொன்னார்கள்



வீடு திரும்பும் ஏக்கம்

விட்டு விட்டு போகவில்லை

ஆவி விட்டு போனாலும் – அந்த

ஆவல் விட்டு போகாது.

திங்கள், செப்டம்பர் 07, 2015

நாகா ஒப்பந்தம் (தொடர்ச்சி)


இது சென்ற பகுதியின் தொடர்ச்சி

 

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள், அங்காமி ஸபூ பிழோ-வின் தலைமையில் நாகா தேசிய அமைப்பின் ஒரு குழு நாகாலாந்தை சுதந்திர நாடாக அறிவித்தது. நிலைமையை அடக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது. 1948-இல் பிழோ கைது செய்யப்பட்டார். பின்னர் பிழோ 1950-ஆம் ஆண்டு நாகா தேசிய அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். உடனே, 1951-ஆம் ஆண்டு மே மாதம் நாகாலாந்தில் இந்தியாவுடன் சேருவதா அல்லது தனி நாடாக இயங்குவதா என்று ஒரு பொது கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில் 99% தனிநாடாக இயங்க வாக்களித்தனர். இந்தியா இந்தக் கருத்துக் கணிப்பை ஏற்கவில்லை. இந்தியா குடியரசு ஆனதைத் தொடர்ந்து 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலை நாகாலாந்து புறக்கணித்தது.

 

ஆனால், நிலைமையை மேலும் மோசமாக்கியது வேறு ஒரு நிகழ்வு. நேரு பர்மா பிரதமர் தகின் யூனு-உடன் நாகாலாந்து சென்றார். அப்போது அவர் பேச எழுந்த போது அதை புறக்கணிக்கும் வண்ணம் நாகா உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். இது நேருவிற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இந்திய அரசும் ராணுவமும் நாகாக்களை தங்கள் விரோதிகளாகப் பார்க்கத் துவங்கி அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டதாக நாகாக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

பின்னர், 1956-இல் பிழோ ‘நாகா கூட்டாச்சி அரசு’ என்ற பல இனக்குழுக்களை உள்ளடக்கிய தனி அரசை நிறுவினார். பல்வேறு 11 துறைகளை உள்ளடக்கிய இந்த அரசில் நாகா கூட்டு படை என்ற ராணுவம் இந்தியாவிற்கு எதிராக போராடத் துவங்கியது.  அச்சமயத்தில் எழுந்த கொள்கை வேறுபாட்டின் காரணமாக நாகா தேசிய அமைப்பின் செயலாளர் டி.செக்ரி-ஐ பிழோ கொன்ற நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து 1958-இல் இந்திய அரசு AFSPA-என்ற ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை செயல் படுத்தியது. ஆனால், அதற்கு முன்னரே பிழோ கிழக்கு பாகீஸ்தானுக்குத் (தற்போதைய வங்க தேசம்) தப்பிச் சென்றார். பின்னர், 1960-இல் லண்டனுக்குச் சென்று, அங்கு 1990-இல் மரணமடைந்தார்.

 

இடையில் 1963-ஆம் ஆண்டு நாகாலாந்து தனி மாநிலமாக உருவானது. 1964-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ஒரு குழு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வன்முறையைக் கைவிட ஓர் ஒப்பந்தம் செய்தது. ஆனாலும், வன்முறையாளர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் செயல் பட்டதால்  இந்த ஒப்பந்தம் தோல்வியுற்றது; 1967-இல் இந்த அமைதிப் பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது.  இதன் மூலம் நாகா தேசிய அமைப்பு, நாகா கூட்டாட்சி அரசு, நாகா கூட்டு படை ஆகியவை தடை செய்யப்பட்டன.

 

பின்னர், நாகாக்களின் போராட்டம் வங்க தேசம் தனி நாடாகப் பிரிந்த்தால் கிழக்குப் பாகீஸ்தானிலிருந்து வந்த ஆதரவு  குறைந்ததாலும் அந்தப் போருக்காக அங்கு இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்ததாலும் சற்று வலுவிழந்தது. மேலும், அதீத வன்முறை, பல்வேறு குழுக்களின் போட்டி மனப்பான்மை ஆகியவற்றாலும் மக்களின் ஆதரவும் குறைந்திருந்தது. நிலைமையை சாதகமாக பயன்படுத்திய இந்திய அரசு 1975-இல் பல்வேறு இனக்குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஷில்லாங் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதில், நாகா தேசிய அமைப்பின் சார்பில் பிழோ-வின் சகோதரர் கேவியாலே கலந்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் நாகா குழுக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று தனிநாட்டிற்கான கோரிக்கையை கைவிட்டு தங்கள் ஆயுதங்களையும்  ஒப்படைக்க ஒத்துக் கொண்டனர்.  மேலும், நாகா குழுக்கள் தனிநாடு கோரிக்கையைத் தவிர மீதமுள்ள கோரிக்கைகளில் தங்களிடம் இருந்த வேறுபாடுகளைக் களைந்து ஒரு பொது நிலை எடுக்கக் கால அவகாசம் கோரியது. இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது.

 

ஆனால், நாகா தேசிய அமைப்பைச் சேர்ந்த, சீனாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த 140-பேர் குழு இதை ஆதரிக்காமல் விலகி சரணடைய மறுத்தனர். பின்னர் 1980-ஆம் ஆண்டு, அவர்கள் துயங்லிங் முவையா, ஐசக் சிசி சூ, கப்லாங் ஆகியோர் தலைமையில் நாகா தேசிய சோஷியலிஸ அமைப்பை பர்மாவில் உருவாக்கினர். இவர்களின் 9-பேர் அடங்கிய ஒரு குழு பிழோ-வை சந்தித்து ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து அறிக்கை விட வலியுறுத்தினர். ஆனால், பிழோ ஒப்பந்த்ததை ஆதரித்தோ அல்லது ஏற்க மறுத்தோ கருத்துகள் கூற மறுத்து மௌனமாகவே இருந்துவிட்டார். மற்ற குழுக்கள் ஆயுதங்களை சமர்பித்து தலைவர்கள் சரணடைந்து வலுவிழந்த நிலையில் இந்தக் குழுவே மிகவும் வலிமையான குழுவாகத் திகழ்ந்தது.

 

என்னதான் நாகாக்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று ஒன்றாகப் போராடினாலும் அவர்களுக்குள் பல்வேறு இன வேறுபாடுகள் உள்ளன. நாகா தேசிய சோசியலிஸ அமைப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் கோன்யாக் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால், இதன் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்குல் இனத்தவர்களே. இது நாளடைவில் – 1988 - அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. கோன்யாக் இனத்தவர்கள் கோலே கோன்யாக் என்பவர் தலைமையில் தனியாக பிரிந்தனர்; பர்மாவின் ஹெமி நாகா பிரிவைச் சேர்ந்தவரான கப்லாங்-ஐ தங்கள் தலைவராக அறிவித்தனர். ஆக, இந்த அமைப்பு NSCN(IM) என்று முவையா-ஐசக் தலைமையிலும், NSCM(K) என்று கப்லாங் தலைமையிலும் இரு வேறு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதில் கப்லாங் தலைமையிலான இயக்கத்தின் வேர்களும் செயல்பாடுகளும் பர்மாவை மையமாகக் கொண்டுள்ளன. பின்னர் 2011, இதுவும் உடைந்து NSCN(KK) - கோலே கோன்யாக் – என்று பிரிந்தது.

 

இதைத் தவிர ஸெலியாங்ராங் இனத்தவர்கள் ஸெலியாங்ராங் கூட்டு முன்னணி என்ற அமைப்பையும்  உள்ளது. நாகா தேசிய சோஷலிச அமைப்பின் நோக்கத்திலேயே அது கிருத்துவ மத அடிப்படையில் அமைந்த சோஷலிஸ அரசை உருவாக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. கிருத்துவ மதத்திலும் ப்ரொடஸ்டண்ட் மதமான பாப்டிஸ்ட் பிரிவு கிருத்துவ மதத்தைத் தான் இந்த அமைப்பு ஆதரிக்கிறது. இடையில் சில கத்தோலிக பாதிரியார்கள் கடத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதனாலேயே, முன்பு ஸெலியாங்ராங் இனத்தவர்கள் பிரிட்டனுடன் மதமாற்றத்தை எதிர்து பொரிட்டதை வைத்து ஹிந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதல்களால் ஸெலியாங்ராங் கூட்டு முன்னணி அமைப்பு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ராணி கைடின்லியூ ஸெலியாங்ராங் இனத்தவரே. எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஐசக்-முவையாவின் இயக்கம் தான் தற்போது வலுவான நிலையில் உள்ளது.

 

நாகாக் குழுக்கள் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது பொதுமக்களிடம் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்ற 2014-ஆம் ஆண்டு தேர்தலில் நாகாலாந்தில் 87% வாக்குப் பதிவு நடந்துள்ளது. இது நாகா பிரிவினை வாதிகளுக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருவதை  காட்டுவதாக வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

முன்பே கூறியது போல், இந்தியாவைப் பொறுத்தவரை ஐசக்-முவையாவின் இயக்கம் தான் தற்போது வலுவான நிலையில் உள்ளது. எனவே இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட முறை பேச்சு வார்த்தை நடந்தாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்நிலையில், இவர்கள் இந்த ஒப்பந்த்தை ஏற்படுத்தியிருப்பது ஓரளவு வெற்றிதான். ஆனாலும், இதில் சில சிக்கல்கள் உள்ளன.

 

முதலில், இன்னமும் இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் வெளியிடப் படவில்லை. தனிநாடு என்ற நாகா குழுக்களின் கோரிக்கையை கொள்கையளவில் இந்தியா ஏற்க முடியாது. ஆனால், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் – அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் –  நாகாக்கள் வாழும் பகுதிகளை இனைத்து நாகாலிம் என்ற பெரிய மாநிலமாக மறுசீரமைப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சம உரிமை, சம மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறியதைக் கருத்தில் கொண்டால் சில சிறப்புச் சலுகைகள் (ஜம்மு-காஷ்மீரத்திற்கு அளித்துள்ளது போல்) – தனி கொடி, தனி அரசியல் அமைப்புச்சட்டம் – ஆகியவை அளிக்கப்படலாம். இச்சலுகைகளால் பொது மக்களுக்கு பெருமளவில் நன்மை கிட்டாவிட்டாலும், ஐசக்-முவையா குழு தன் சுயமரியாதையை தனிநாடு கோரிக்கையை விட்டுக் கொடுத்த நிலையில் காப்பாற்றிக் கொள்ள இது போன்றவை உதவும். மேலும், கனிம வளங்களை – குறிப்பாக பெட்ரோலிய, இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவை – எடுப்பதில் நாகா மாநிலத்திற்குத் தனி உரிமை வழங்கப்படலாம். [சாதாரணமாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எடுக்கப்படும் கனிமவளத்திற்கு ராயல்டியில் 22% அந்த மாநிலத்திற்குக் கொடுக்கப்படும்; இங்கு, அதன் பங்கு மேலும் உயர்த்தப்படலாம்].

 

கப்லாங்-இன் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை இது வரை ஏற்கவில்லை. அவர்கள் ஏற்பதும் கடினம் தான். காரணம், அவர்கள் பெருவாரியாக இயங்குவது பர்மாவின் இந்திய எல்லைப் பகுதிகளில் தான். சென்ற மாதம் இந்திய அரசு பர்மாவின் பகுதிகளில் இருந்த தீவிரவாத இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தியதை படித்திருப்போம். அது பொதுவாக இந்தக் குழுவினர் மீது தான். பேச்சு வார்த்தையின் போது ஐசக்-முவையா குழுவின் ஆதரவைக் கொணர்வதர்காகவோ அல்லது அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் கூட இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம். தற்போது கப்லாங் குழுவினர் வலுவாக இல்லாமல் இருந்தாலும், வரும் காலங்களில் சீனா, பர்மா அல்லது வேறு நாட்டினரின் உதவி அவர்களுக்குக் கிட்டினால் அவர்கள் வலுப்பெற முடியும். அந்த நிலைமையில் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினம்.

 

மற்றொரு பிரச்சனை என்னவெனில் நாகாக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களின் பகுதிகளை நாகாலாந்துடன் இணைத்தால் அந்த மாநிலங்கள், அதிலும் குறிப்பாக மணிப்பூர், இதனை எதிர்க்கும். சென்ற மாதம் மணிப்பூர் சட்டசபையில் உட்கோட்டு அனுமதி-யை ஆதரித்து மசோதா நிறைவேறிய நிலையில் மீண்டும் கலவரம் நிகழ்ந்தது, அங்குள்ள இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் போட்டி மனப்பான்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

 

ஆனால், ஒப்பந்தத்திற்குப் பிறகு நாகாலாந்தில் நடைபெற்ற முதல் பொதுக் கூட்டத்தில் பேசிய முவையா, மற்ற மாநிலங்களின் உரிமையையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டிய கடமை இந்தியாவிற்கு இருக்கும் நிலமையையும் அதைக் கருத்தில் கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது. அதே நேரம் முவையாவிற்கு தங்களின் இந்த ஒப்பந்தம் 1964-இல் பிழோ ஏற்படுத்திய ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் சிறந்தது என்று நிறுவ வேண்டிய அவசியமும் இருக்கிறது.

 

எப்படியோ அமைதி ஏற்பட்டால் சரிதான்!