கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 13, 2013

மூன்றா? நான்கா?


 
சமீபத்தில் தில்லி பல்கலைக் கழகம் வரும் ஜூலையில் துவங்கும் இந்த வருடக் கல்வியாண்டிலிருந்து பட்டப்படிப்பை மூன்று ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

இத்திட்டத்தின் படி இதுவரை இருந்த கலை, அறிவியல் ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் நீக்கப்பட்டு அனைத்து மாணவருக்கும் (அவர்கள் 11-12 ஆம் வகுப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும்) முதல் இரண்டு ஆண்டுகள் அடித்தளக் கல்வியும், மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பும் நான்காம் ஆண்டில் துறையின் நுணுக்க அறிவும் வழங்கப்படும் என்றுக் கூறப்படுகிறது.

இவ்வாறு மாற்றுவதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம் இந்தியப் பல்கலைக் கழகங்களைத் தவிர்த்து அனைத்து சர்வதேசக் கல்லூரிகளும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பைத் தருகின்றன. இந்திய மாணவர்கள் மேல் படிப்பிற்கு சர்வதேசக் கல்லூரிகளில் சேரும் பொழுது அவர்களுக்கு அங்கு ஒருவருடம் அடிப்படைக் கல்வி அளிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த மாற்றங்களின் தேவையைப் பற்றி நம் போன்ற பொதுமக்களின் கருத்து குழப்பத்தைத் தான் தரும். ஏனென்றால் கல்வியாளர்களும் துறைச் சார்ந்தவர்களும் தான் இதன் தேவையை விவாதிப்பது நல்லது.

இருந்தாலும் பொதுமக்களுக்கு இதில் சில கேள்விகள் உள்ளன. இதைப் பற்றி சரியான பதிலளிக்க தில்லி பல்கலைக் கழகம் கடமைப்பட்டுள்ளது. அக் கேள்விகள்…

1.    முதலில் இது பல்கலைக் கழக மானியக் குழுவால் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக மாற்றப்படாமல் தில்லி பல்கலைக் கழகத்தில் மட்டும் மாற்றம் நிகழ்வது ஏன்?
2.    இதன் சாதக பாதகங்கள் முறையாக கல்வியாளர்களாலும் துறைச் சார்ந்தவர்களிடமும் விவாதிக்கப்படாமல் திடீரென்று திணிக்கப்படுவது ஏன்?
3.    80-களுக்கு முன் வரை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாகத்தான் இருந்தது. ஆனால், அப்பொழுது, பத்தாம் வகுப்பிற்குப் பின் பி.யூ.சி என்று ஒரு ஆண்டு மாணவர் தேர்ந்தெடுக்கும் துறையில் அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. பின் அந்த அடிப்படைக் கல்வி இரண்டாண்டுகளுக்கு (+1, +2 என) நீட்டிக்கப்பட்டு பட்டப்படிப்பு மூன்றாண்டுகளாகத் திருத்தி அமைக்கப்பட்ட்து. தற்போது, 11-12 ஆம் வகுப்பில் அவர்கள் தங்கள் துறையை தேர்ந்தெடுக்கும் வழக்கம் நீக்கப்படுமா?
4.    சர்வதேசக் கல்லூரிகளில் மேல் படிப்பு பெற விழைபவர்கள் எத்தனைச் சதவிகித்த்தினர்? அவர்களை மட்டுமேக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரும் காரணம் என்ன?
5.    பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளதால் பட்ட மேற்படிப்பு ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று தில்லியில் மேற்படிப்புப் படிக்க விழையும் மாணவர்கள் இரண்டாண்டுகள் (முதல் ஆண்டு அடிப்படைக் கல்வியும் இரண்டாம் ஆண்டு துறை மேற்படிப்பும்) கல்வி பயில வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் பட்டப்படிப்பு படித்து மற்ற பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புப் படிக்க விழைவோரின் நிலைமை என்ன? அவர்களுக்கு ஓராண்டு வீணாகுவதை எப்படித் தடுக்க முடியும். இது பற்றி மற்ற பல்கலைக் கழகங்களுடன் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கல்வித்துறை மூலம் ஏதாவது அறிவிப்புகளோ வெளியிட ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவா?
6.    பட்டப் படிப்பு மூன்றாண்டுகள் நடக்கும் பொழுதே அதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது மேலும் ஓராண்டு அதிகமானால் அதற்காக ஆகும் மேற்செலவை யார் ஏற்பார்கள். மற்றவர்களைவிட வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை இது மேலும் சுமையேற்றி அவர்கள் பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட இது வழிவகுப்பதை எப்படி அரசு / மக்களால் சமாளிக்க முடியும்?
7.    நான்காண்டுகளுக்காக திருத்தி வடிவமைக்கப் பட்டப் பாடப்பகுதிகளை நட்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?
8.    புதிதாகப் பாடப்புத்தகங்கள் எப்பொழுது வடிவமைக்கப்படும்?

பெரும்பாலான (தில்லிக் கல்லூரிகளின்) ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே நேரம், இத்திட்டம் முன்னாள் மாணவர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தான் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு படிக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது சர்வதேச நிறுவன்ங்களால் நிராகரிக்கப்பட்டும் இருக்கலாம்.

இத்திட்டத்தால்  கல்வியின் தரம் உயரம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இது பொதுவெளியில் ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தவது தவறு தான். சென்ற வருடம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை இதுபோன்றே ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

பொதுவாக, இந்தத் திட்டம் மட்டுமல்ல அனைத்துத் திட்டங்களுமே அது அணு உலை அமைப்பதாகட்டும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் அல்லது தேர்தல் சீர்திருத்தம் ஆகட்டும் இவை எதுவுமே பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் திணிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது என்பது தான் இதில் வருத்தமான விஷயம்…

செவ்வாய், ஏப்ரல் 30, 2013

அடித்தளம் இல்லாக் கட்டிடம்



’எனக்கு பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மெண்ட்-தான் வீக்’

இது வடிவேலு நகைச்சுவைக்காகச் சொன்னது. ஆனால், நிஜத்தில் அடித்தளம் நன்றாக இல்லாவிட்டால் கட்டிடம் ஆட்டம் காணும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த அடித்தளமே இல்லாமல் கட்டிடம் கட்ட முடியுமா?

இந்திய அரசு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அதைத்தான் செய்ய நினைத்தது அதுவும் கல்வி உரிமை சட்டம் என்ற பெயரில்.

பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தமே காரணம் என்றும் அந்த அழுத்தத்தை நீக்க அவர்கள் எட்டாம் வகுப்புவரை தேர்வுகளின் வெற்றி-தோல்வியைக் கணக்கில் கொள்ளாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை நீக்க எடுக்கப் பட்ட இந்த முடிவு இப்பிரச்சனையின் சில அடிப்படை உண்மைகளைக் கூட ஆராயாமல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பாடத்திட்டச் சீரமைப்பு. பாடங்களில் தேர்வு எழுதவில்லை என்றாலும் தொடர்ந்து அந்தந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தால் ஓரளவு அப்பாடத்தின் அடிப்படைகளை அறியும் அளவு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் சென்ற நிலையிலும் இதில் எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. அடுத்து, ஆசிரியர்களின் அர்பணிப்பு. இன்றைய நிலையில் மாநிலங்களில் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர் நியமிப்பு என்பது பெருமளவில் அரசியலாக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக நிதீஷ்குமார் பீஹாரின் முதலமைச்சரானவுடன் அதற்கு முந்திய அரசின் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை நீக்கி தேர்வையும் தடைசெய்து பட்டம் பெற்ற அனைவரையும்  முறையான பயிர்சி இல்லாமல் ஆசிரியராக நியமித்தது - இவர்களில் பெரும்பாலானோர் முறைதவறி பட்டம் பெற்றவர்கள் – இதுதான் பெரும்பாலான மாநிலங்களில் நடக்கிறது) இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அதைப் பகுதி நேரத் தொழிலாகவே ஆக்கிவிட்டுள்ளனர். மூன்றாவதாக, சரியான பெற்றோர்-ஆசிரியத் தொடர்பு இல்லாதமை. குறைந்த பட்சம் பாடங்களில் மேலதிக கவணிப்புத் தேவைப்படும் மாணாக்கர்களின் பெற்றோருக்கு அதைப்பற்றித் தெரிவிக்கப் பட வேண்டும். ஆனால், இது, Private tuition என்று அவர்களுக்கு மேலும் சுமையேற்ற மட்டுமே பயன்படுத்தி வருவது.

இதனால் கல்வியின் தரம் மிகவும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

2010-ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பில் தேரிய மாணவர்களில் 43% சதவிகத்தினர் 2ஆம் வகுப்பு பாடத்தையே புரிந்து கொள்ள முடியாத நிலைமையில் இருந்தனர். அதிலும் 29% மாணாக்கர்கள் இரு இலக்க ‘கடன் வாங்கி’ கழித்தல்களைச் செய்ய முடியாமல் திணறியுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு கணக்கின்படி இவர்களின் சதவிகிதம் 53% ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இரு இலக்கக் கழித்தல்களைச் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 46.5% ஆக உயர்ந்துள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு கல்விக்கான நாடாளுமன்றக் குழு இந்த முறையை மறு பரிசீலனைச் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அரசு இதை மறு பரிசீலனைச் செய்து கல்வி சீர்திருத்தம் செய்யுமா அல்லது மீண்டும் பழைய படியே தேர்வுகளை நடத்தி சும்மா இருக்குமா என்பது தான் தெரியவில்லை.

பெரும்பாலும் இரண்டாவது நடக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். கல்வி சீரமைப்பிற்கெல்லாம் நேரம் ஏது?

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

நாலந்தா பல்கலைக் கழகம்


பழங்கால இந்தியாவின் முக்கியக் கல்வி மையமாகக் கருதப்படுபவை நாலந்தாவும் தட்சசீலமும் ஆகும். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டினரும் இங்கு வந்து இங்கிருந்தப் பல்கலைக் கழகங்களில் வந்து கல்வி பயின்று சென்று வந்ததாகப் படித்துள்ளோம்.

கிரிஸ்து பிறப்பதற்கு முன்னரே சுமார் கி.மு 4 ஆம் நூற்றாண்டிலேயே மிகுந்த சிறப்புடன் விளங்கிய தட்சசீலம் குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் கலையிழந்து இங்கிருந்த பல்கலைக் கழகங்களும் அழிந்தன. தட்சசீலம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ளது.

நாலந்தா தன் சிறப்பை குப்தர்களின் காலத்தில் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு) தான் பெற்றது. சீனா மற்றும் வேறு வெளிநாட்டு யாத்ரிகர்களும் தங்கள் குறிப்புகளில் இதன் சிறப்புகளை விளக்கியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூலம் 10000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வந்ததாக யுவான் சுவாங்-இன் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நாலந்தா மூன்று முறை அழிவைச் சந்தித்துள்ளது. முதலில் ஹூனர்களால் (மிஹிர்குலன் தலைமையில்) ஸ்கந்த குப்தரின் காலத்தில் (5-ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்னர் ஸ்கந்த குப்தரின் வாரிசுகளாலேயே புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக கௌடர்கள் என்ற இனத்தவர்களால் 7-ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்னர் ஹர்ஷவர்தனரால் புதுப்பிக்கப்பட்டது.

கடைசியாக 1193-ஆம் ஆண்டு துருக்கியர்களால் (பக்தியார் கில்ஜி தலைமையில்) அழிக்கப்பட்டது. இது பற்றி மின்ஹஜ்-இ-சிராஜ் என்பவர் அராபிய மொழியில் தன் வரலாற்றுக் குறிப்பான ‘தபகத்-இ-நஸீரி’ என்ற நூலில் நாலந்தாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இதில் கொல்லப்பட்டதாகவும் இதல் கல்லூரி முழுவதும் அழிக்கப்பட்டதுடன்  9 அடுக்குகள் கொண்ட கல்லூரி நூலகம் இடிக்கப்பட்டு அதிலிருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகவும் அந்த புத்தகங்கள் எரிந்த நெருப்பு 6மாதத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாலந்தா இந்தியாவின் தற்போதைய பீஹார் மாநிலத்தில் உள்ளது.

2006-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள் நாலந்தாவில் ஒரு சர்வதேசப் பல்கலைக் கழகத்தை நிறுவி மீண்டும் பழைய காலம் போன்று இதைப் பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் நிறுவ முற்பட்டு முயற்சிகள் மேற்கொண்டார்.

சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கல்லூரி புதுப்பிக்கப்பட்டு சர்வதேச அளவில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. சிங்கப்பூர், சீனா, இங்கிலாந்து ஆகிய நாட்டினரும் இதனைப் புதுப்பிக்க முன் வந்துள்ளனர். இந்திய அரசும் 2010 ஆம் ஆண்டு நாலந்தா கல்லூரி மசோதாவைக் கொண்டு வந்தது. நவம்பர், 2010 ஆம் ஆண்டு கல்லூரி சுமார் 450 ஏக்கரில் மீண்டும் நிறுவப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமிர்த்யா சென் இதன் துணை முதல்வராக (Vice Chancellor) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

2014 அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இங்கு மாணவர்கள் சேர்க்கப் பட்டு முதல் கட்டமாக ‘School of History & Archeology’  ‘School of Environmental Studies & Ecology’ ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் நாலந்தாவை-யும் யுனெஸ்கோ-வின் ‘இந்திய பாரம்பரிய இடங்களின் பட்டியலில்’ இடம் பெற கோரிக்கைகள் ஆரம்பித்துள்ளன. அமர்த்யாசென் ஆரம்பித்து வைத்த இந்தக் கோரிக்கையை தற்போது பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரும் வழி மொழிந்து அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாலந்தா தன் பழைய பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்!

வெள்ளி, ஜூலை 13, 2012

திருமணமும் பள்ளிச் சேர்க்கையும்


சமீபத்தில் மதுரையருகே ஓர் அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகளைப் பதினோறாம் வகுப்பில் சேர்க்க அப்பள்ளியின் முதல்வர் மறுத்துள்ளார். காரணம் அவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பது தான்.

பள்ளியின் முதல்வர், திருமணமானப் பெண்களைப் பள்ளியில் சேர்த்தால் அவர்களுடன் வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளை அது பாதிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால், திருமண வயதுக்கு வரும் முன்னரே சட்ட்த்திற்குப் புறம்பாக திருமணம் செய்வது தவறு; அதனால் தவறு செய்த அவர்களைப் பள்ளியில் சேர்த்தால் மற்றவர்களையும் (அதே போல்) தவறு செய்யத் தூண்டும் என்பதால் அந்தப் பள்ளி முதல்வரின் இச்செய்கையைச் சரியானதாக நினைக்கத் தூண்டும். போதாக் குறைக்கு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும், குழந்தைத் திருமணம் செய்த் பெண்களுக்கு பள்ளிகள் தடை விதித்தால் அது அதைச் செய்ய விழையும் பெற்றோரை யோசிக்க வைக்கும் என்று ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், உண்மையில் நிலைமை இவ்வாறு இல்லை….

குழந்தைத் திருமணம் செய்யும் பெற்றோர் பெரும்பாலும் அவர்களின் படிப்பைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை என்பது தான் உண்மை. கூறப்போனால் அவர்களுக்குக் குழந்தையைப் பற்றியதை விட தங்களின் சுமையை (அவர்களைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் சுமைதான்) அல்லது கடமையைச் செய்ய வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. குழந்தைகள் மிகச் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க நேரிடுகிறதே என்பதைக் கூட எண்ணாதவர்கள் அவர்களின் எதிர்காலத்தையோ அதிலும் அவர்களின் கல்வியைப் பற்றி அதிகம் கவலைப் படுவார்கள் என்று சொல்வதற்கில்லை.

சில சமயங்களில் மேற்கூறிய சிறுமிகளின் பெற்றோர் போல ஒரு சிலர் திருமணம் ஆன பின்பும் அவர்களின் எதிர்காலத்தை பற்றியச் சிந்தனையுடன் குறைந்த பட்சம் அவர்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முயலும் போது அதையும் முளையிலேயே கிள்ளிவிட்டால் என்ன சொல்வது?

மேலும், குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு எதிரானது; அதனால் அச்சிறுமியர் குற்றமிழைத்தவர்; எனவே, அவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற வாதத்திலும் வலுவில்லை. ஏனென்றால், அவர்கள் குழந்தைகள் அவர்களின் விருப்பமோ விருப்பமின்மையோ அவர்களின் பெற்றோரிடம் எடுபடப் போவதில்லை. இத்திருமணங்கள் பெரும்பாலும் அவர்கள் மேல் திணிக்கப்பட்டுத்தான் இருக்கும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கூற வேண்டுமானால் அது அவர்களின் பெற்றோரைத் தான் கூற வேண்டியிருக்கும். இக்குழந்தைகளோ பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களுக்குக் கல்வியும் மறுக்கப்படுவது நியாயமில்லை.

திருமணம் ஆன குழந்தைகளுடன் சேர்ந்துப் படிப்பதால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படும் என்ற வாதத்திலும் சாரம் இல்லை. ஏனென்றால், பெரும்பாலானத் திருமணங்கள் பெற்றோரால் தான் தீர்மானிக்கப் படுகின்றன. உடன் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழல் பெரும்பாலும் யாரையும் பாதிப்பதில்லை என்பது தான் உண்மை.

பெண்கள் அமைப்புகள் ஒன்றைச் சிந்திக்க மறந்துவிட்டன. பெரும்பாலும் இது போன்ற கல்விக் கூடங்களில் சேர்ப்பது மறுக்கப்படுவது பெண்களுக்கு மட்டுமே இருக்கும். காரணம், பெரும்பாலும் அவர்களின் திருமணச் சின்னங்கள் வெளியில் தெரிவது தான். ஆண்களுக்கு இது போன்ற சின்னங்கள் எதுவும் இல்லாத்தால் அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்தாலும் வெளியில் தெரியாமல் அவர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவதுதான் நடக்கும்.

நல்ல வேளையாக மாநில முக்கிய கல்வி அதிகாரி திரு. நாகராஜ முருகன் அவர்களின் தலையீட்டால், சென்ற வாரம் அந்தப் பள்ளி முதல்வர் இரண்டு சிறுமியரையும் பள்ளியில் சேர்க்கச் சம்மதித்துள்ளார் என்பது தான் இதில் ஆறுதல் தரும் விஷயம்.  

இந்தக் கட்டுரை வல்லமையில் வெளியாகியுள்ளது.