திங்கள், ஜூலை 28, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின்


Never think that war,

          No matter how necessary, nor justified,

                   Is not a Crime

                             - Ernest Hemigway

 

[என்னதான் தேவை என்று நிறுவினாலும் எவ்வளவுதான் ஞாயப்படுத்தினாலும், போர் குற்றமற்றது என்று எண்ணிவிடக் கூடாது]

 

1914-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள்...

ஐரோப்பாவின் ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு செர்பியாமீது போர் அறிவித்தது. ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் செர்பியாவிற்கும் இடையே போர் ஆரம்பித்தாலும் சில நாட்களிலேயே அது ஐரோப்பா முழுவதும் பரவி மெல்ல மற்ற நாடுகளும் பங்கெடுக்க நேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் அளவிற்கு இல்லாவிடினும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் (ஸ்கேண்டிநேவியா,ஸ்விட்சர்லாண்ட், நெதர்லாண்ட்(ஹாலந்து) தவிர்த்த அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க, ஆசியாவின் முக்கிய நாடுகளும், ஆஸ்த்ரேலிய-ந்யூசிலாந்து நாடுகளும் பங்கு பெற்றன. இந்த போர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து 1918-ஆம் ஆண்டு நவம்பர் 11மணிக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட வரை நீடித்தது.

போருக்குக் காரணமான முக்கிய நிகழ்வாக ஜூன் 28,1914அன்று ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து இளவரசான Archduke - (51-வயது!) ஃப்ரன்ஸ் ஃபெர்டினண்ட்-உம் அவர் மனைவி ஸோஃபி சோடெக்வான்-உம் செர்பியாவின் கருங்கை (The Black Hand) இயக்கத்தைச் சேர்ந்த கார்விலோ ப்ரின்சிப்-என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டதே.

இதற்குக் காரணம் என்ன? இது எப்படி உலகப் போருக்கு வழி வகுத்திருக்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் மனதில் எழும். இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

பொதுவாக இந்த சம்பவத்தினால் ஆஸ்த்ரிய-ஹங்கேரி செர்பியா (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தெற்கில் க்ரேக்கத்திற்கு வடக்கில் அமைந்த ஐரோப்பிய நாடு)மீது தாக்குதல் தொடுக்க செர்பியாவை ஆதரிக்கும் ரஷ்யா செர்பியாவிற்கு உதவக் கூடாதென ஆஸ்திரிய-ஹங்கேரியின் நட்பு நாடான ஜெர்மனி ரஷ்யாவை தாக்கியது. இதுதான் இந்த உலகப் போருக்கான துவக்கம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

ஆனால்,இந்த உலகப் போருக்கான தீப்பொறி இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னறே விழுந்துவிட்டது.

இந்தப் போருக்கான காரணங்களாக நான்கு விஷய்ங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவை

 

தேசபக்தி; இல்லை இல்லை தேசவெறி;

ஆதிக்க வெறி

நட்புறவு

படை குவிப்பு  - ஆகியவையே

 

தேசபக்தி

ஓரினம் மற்றும் ஒரே மொழி பேசுபவர்கள் என்பதால் ஜெர்மனிக்கு ஆஸ்த்ரிய-ஹங்கேரியை எப்பொழுதும் சகோதரநாடாகவே கருதும். ஆஸ்த்ரிய-ஹங்கேரியினரும் தங்களை ஜெர்மனியின் ஓர் அங்கமாகவே கருதி வந்தனர். மற்றொருபுரம் செர்பியா சிறுநாடாக இருந்தும் போஸ்னியா, க்ரொஷியா, செர்பியா போன்ற பல இனக்குழுக்களை கொண்டது. அதில் பால்கன்பகுதியின் (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தென்பகுதியை எல்லையாகக் கொண்ட செர்பியாவின் வடமேற்கு பகுதி) பொஸ்னியா இனக்குழு தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆஸ்திரிய-ஹங்கேரி கருதியது. இதற்கு அடிப்படைக் காரணம் ஜெர்மனி. அதிலும் முக்கியமானது ஜெர்மனியின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட சான்சிலர் ஓட்டோ வான் பிஸ்மார்க்-இன் ராஜதந்திரம். நெப்போலிய போரினால் துண்டுதுண்டாக இருந்த ஜெர்மனியை  இணைத்து ஒரு பெரிய அரசை நிறுவ நினைத்தார். அதற்கு அவர் எடுத்து வைத்த கோஷம் ஒன்றுபட்ட  ஜெர்மானிய தேசம் என்பது தான். ஜெர்மனி ஒன்று சேர இத்தேசிய கோஷம் தேவையாக இருந்தது.அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப, மெல்ல இதன் மூலம் அருகிலிருக்கும் மற்ற நாடுகளையும் தன்னுடன் இணைக்க முற்பட்டது. அத்தேசிய உணர்வை ஆஸ்த்ரிய-ஹங்கேரியிலும் பரப்பி அவர்களையும் ஜெர்மனியின் ஓர் அங்கமாக உணரவைத்தது. அதே அடிப்படையில் அது போஸ்னியாவையும் தன்னுடன் இணைக்க நினைத்தது. அதேநேரம் தான் நேரடியாக ஈடுபடாமல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியை இறக்கியது. ஆஸ்த்ரியா-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போஸ்னியாவை முழுவதுமாக தன்னுடன் இணைக்க ஒரு அரசு முறை பயணம் உதவும் என்று எண்ணியதால் தான் ஃபெர்டினண்ட் போஸ்னியாவின் தலைநகரான ஹெர்ஸெகோவினா-விற்கு சென்றார். முதலில் க்ரனெய்ட் குண்டு தாக்குதலில் தப்பித்த அவர், மதியம் காயமடைந்த வீரர்களைக் காண மருத்துவமனை சென்ற போது தான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக இந்த தேசியவெறி உலகப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆதிக்க வெறி

19-20 ஆம் நூற்றாண்டுகள் ஐரோப்பின் முழுவது தொழிற்புரட்சி நடந்த காலம். ஐரோப்பிய் நாடுகள் அனைத்தும் உலகளவில் தங்கள் பொருட்களுக்கான கச்சாப் பொருட்களை தேடியலைந்து பலநாடுகளைத் தங்கள் அடிமை நாடுகளாக் ஆக்கி காலனிஆதிக்கம் செலுத்திவந்தன. இந்த காலனி ஆதிக்க வெறி அவர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றியிருந்தது. ஐரோப்பாவின் அப்போதைய மூன்று பெரிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். பிரிட்டன், பிரான்ஸ் இரண்டும் பெரிய கடல் எல்லைகளைக் கொண்டவை. பிரிட்டன் ஐந்து கண்டங்களிலும் தனது காலனிகளாக பல நாடுகளைக் கொண்டிருந்தது. அதன் போட்டி நாடான பிரான்ஸ் ஆப்பிரிகாவின் பல நாடுகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இவை ஐரோப்பாவில் மட்டுமன்றி தங்கள் காலனி நாடுகளிலும் பல மோதல்களை செய்தன. [இந்தியாவின் மூன்று கர்நாடக போர்களும், பிளாஸிப் போரும் ஆர்காடு சிராஜ் உத்தல்லா, திப்பு சுல்தான், கான் சாஹிப் (மருதநாயகம்!) என்று சொல்லிக் கொண்டே போகலாம்].  எனவே, தன் எதிரியான பிரான்ஸ் வளரக் கூடாதென பிரிட்டன் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்தது. ஆனால், ஜெர்மனோ பிரான்ஸைப் போலவே பிரிட்டனையும் தனக்குப் போட்டியாகக் கருதியது. காரணம், அதனிடம் நீண்ட கடல் பிரதேசம் இல்லை. இதனால், காலணி ஆதிக்கப் போட்டியில் அது மெதுவாகத்தான் இறங்க முடிந்தது. அதனால், அது ஐரோப்பாபின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயன்றது. பிரிட்டன் பிரான்ஸ் மோதலில் இந்தியாவில் பிரிட்டன் வெற்றி பெற்றிருந்தாலும் - மற்ற இடங்களில் பிரான்ஸின் கை ஓங்கியிருந்தது.  அதனால், 1904-இல் மொராக்கோவை பிரிட்டன் பிரான்ஸிடம் ஒப்படைத்தது. போட்டியின் காரணமாக ஜெர்மன் மொராக்கோவிற்கு சுதந்திரம் தரவேண்டும் என வலியுறுத்தியது. 1908-இல் ஆஸ்திரிய-ஹங்கேரியைத் தூண்டி போஸ்னியாவை கைப்பற்ற வைத்தது. கேள்வி கேட்ட நாடுகளுக்கு பிரான்ஸ் மொராக்கோவை கைப்பற்றியிருப்பதைக் காரணம் காட்டியது. இந்த காலணி ஆதிக்க வெறியும் போருக்கு முக்கிய காரணம்.

நட்புறவு

காலணி ஆதிக்க வெறியும் தேசிய வெறியும், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒருவருக்கொருவர் நம்ப முடியாத நிலையையும் அதே நேரம் தன் ஒரு எதிரியைத் தாக்க மற்றவரின் உதவியை கைக்கொள்ள வேண்டிய நிலையையும் தந்தது. தன் முதன்மை எதிரியான பிரான்ஸின் வளர்ச்சியைத் தடுக்க அதன் கிழக்கு எல்லையில் இருக்கும் ஜெர்மனுக்கு மறைமுக உதவி செய்துவந்த பிரிட்டன், அதே ஜெர்மனி வளர்ந்து அதன் கடல் வாணிபத்திற்காக தன் கப்பல்களைத் தாக்கும் சாத்தியத்தை உணர்ந்த பிரிட்டன் ஜெர்மனியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தது. மேலும், பல காலணி நாடுகளில் பிரான்ஸுடன் நடந்து வந்த போரின் இழப்பையும் கணித்த பிரிட்டன் பிரான்ஸுடன் சமாதானம் செய்து கொண்டது. ஜெர்மனியின் மெற்கு எல்லையில் இருக்கும் பிரான்ஸுடன் சமாதானம் செய்து கொண்டது போல் ஜெர்மனியின் கிழக்கு எல்லையின் மிகப்பெரிய நாடான ரஷ்யா அரசுடனும் சமாதானம் செய்து கொண்டது. 1907-ஆம் ஆண்டு ரஷ்யா, ப்ரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்றும் ஜெர்மனியின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக முக்கூட்டு ஒப்பந்த செய்து கொண்டன; இவை நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. மற்ற மூன்று நாடுகளாக முதலில் ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகிய நாடுகள் இருந்தன. இவை மத்திய கூட்டணி என்று அழைக்கப்பட்டன. பின்னர், இத்தாலி இந்த கூட்டணியிலிருந்து விலகி நேச நாடுகளுடன் சேர துருக்கியின் ஒட்டமான் அரசு மத்திய கூட்டணியில் இணைந்தது. [இடையில் 1881-ஆம் ஆண்டு முக்கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இத்தாலி விலகிய போது ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரியுடன் ரஷ்யா இணைந்தது; பின்னர் ரஷ்யா விலகிக் கொண்டாலும். பிஸ்மார்கின் சாணக்கியத் தந்திரத்தால் ரஷ்யா நடுநிலை வகிக்க ஒப்புக் கொண்டிருந்தது வேறுகதை] பிஸ்மார்க் இருந்த வரை அவர் தன் ராஜதந்திரத்தால் பல்வேறு அழுத்தங்களுக்கிடையே இருந்த ஐரோப்பாவின் அமைதியைக் காத்து தான் வந்தார். 1890-இல் அவர் நீக்கப்பட்டபோது சரியான திட்டங்கள் ஏதுமில்லாமல் கூட்டணிகள் வெவ்வேறு விதமாக மாறிவந்தன. இது போன்ற விநோதக் கூட்டறவு ஒப்பந்தங்களால் ஒரு நாடு ஆரம்பித்து வைத்த போரில் மற்ற நாடுகளும் மாறி மாறி இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பாண்டவ கௌரவர்களுக்காக மற்ற அரசர்களும் போர்களத்தில் இறங்கியது போல் உலக நாடுகள் அனைத்தும் களமிறங்க நேர்ந்தது.

படை குவிப்பு 


மெல்ல மெல்ல ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டைத் தாக்க ஏதாவது ஒரு காரணம் தேடிக் கொண்டே இருந்தன. எப்படியும் ஒரு போர் உருவாகும் என்று காத்திருந்து அதற்காக ஆயுதங்களை சேகரித்தும் படைக்குவிப்பு செய்தும்  காத்துக் கொண்டிருந்தன.
 
இந்தப் போரின் நிகழ்வுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்

வியாழன், ஜூலை 03, 2014

பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்


பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்

 

இது என்ன ஒப்பந்தத்தின் பின்னணி தான் என்ன?

 

இதன் துவக்கம் 1904-ஆம் ஆண்டு நடந்த லாசா மாநாட்டில் சீனா அம்பன் (அலுவலகர்/தூதுவர்) முன்னிலையில் இந்திய நேபாள அலுவலகரிடையே நடந்த ஒப்பந்ததிலிருந்து ஆரம்பித்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் வணிகத்தளம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. 1910-ஆம் ஆண்டு இந்திய (பிரிடிஷ்) அரசு சிக்கிம்-க்யாண்ட்ஸே வழித்தளத்தில் 11 ஓய்வு இல்லங்களும் தொலைதொடர்பு வசதியும் கட்டமைத்தது.

 

1908-ஆம் ஆண்டு பிரிட்டன், சீனா, திபெத் ஆகியவற்றிடையே திபெத் வணிக நியதிகள் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதிலிருந்து சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடுவது அடிப்படையற்றது என்பது விளங்கும். தவிர, 1914-ஆம் ஆண்டு சிம்லாவில் நடந்த மாநாட்டில் பிரிட்டன், சீனாவையும் திபெத்தையும் அழைத்து தங்களின் எல்லைகளை முடிவெடுக்கப் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த ஒப்பந்தகளின் அடிப்படையிலேயே திபெத் ஒரு தனி நாடு என்பது விளங்கும்.

 

ஆயினும், பிரிட்டன் திபெத் தனித்து இயங்குவதை விரும்பவில்லை. காரணம், 1902-ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜார் அரசு மங்கோலியாவை பிடித்தது. தொடர்ந்து ஜார் நிகோலஸுக்கு திபெத்-ஐயும் பிடிக்கும் எண்ணம் எழுந்தது. மங்கோலிய புத்த துறவி டோர்ஜிவ் சீன ஆக்கரமிப்பைத் தடுக்க நிகோலஸுக்கு ஆதரவாக இருந்தார். [ஜார்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ரஷ்யா ஸ்டாலின்-இன் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை டோர்ஜிவ் லெனினின் கம்யூனிஸ்ட் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே இருந்தது தனி கதை.]  டோர்ஜிவ்-உம் தலாய் லாமா-வும் நண்பர்கள். திபெத் தனி நாடாக இருக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க வாய்பிருந்ததாக பிரிட்டன் கருதியது. அதை தடுக்க தான் நேரடியாக இறங்காமல் சீனாவை முன் நிறுத்த எண்ணியது. அதனால், சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடியதை கண்டுகொள்ளாமல் விட்டது. மேலும், திபெத் மீதான சீனாவின் கட்டுப்பாட்டு உரிமையை (suzerainty)யை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. 1914-ஆம் ஆண்டு நடந்த எல்லை ஒப்பந்தத்தில் பிரிட்டன் (இந்தியா), சீனா, திபெத் ஆகிய  நாடுகளின் அலுவலகர்கள் கையொப்பமிட்டாலும். சீனா அந்த ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்தியது. அதனால், பின்னர் பிர்ட்டன் திபெத்துடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டது.

 

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் லாசாவின் பிர்ட்டிஷ் தூதரகம் இந்திய தூதரகமாக இந்தியக் கொடியுடன் இயங்கினாலும் அதன் தூதுவராக ஹக் ரிசர்ட்சனே தொடர்ந்தார்.

 

1949-ஆம் ஆண்டு நேரு சீன அரசிற்கு எதிராக கம்யூனிஸ்ட் சீனா-வை ஆதரித்தார். சீன அரசு தன் குறிக்கோளில் நிலையாக நின்று திபெத்தின் மீது முழு உரிமைக் கொண்டாடியது. பின்னர், 1950-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனா கம்யூனிஸ்ட்கள் வசம் வந்த போது கம்யூனிஸ்ட்களின் மக்கள் விடுதலை ராணுவம் திபெத்திலும் நுழைந்து அதை தன் வசப்படுத்தியது. 1951-இல், திபெத் கம்யூனிஸ்ட் சீன அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதில், சீனா தலாய்லாமா-வை திபெத்தின் சமயத் தலைவராகவும் திபெத்-இன் உள் விவகாரங்களைத் தீர்மாணிக்க  வழி வகுத்தது.

 

1954-ஆம் ஆண்டு நேரு திபெத்துடன் தனி வணிக ஒப்பந்தம் செய்ய தலைப்பட்டார். அதே நேரம் அதற்கு சீனாவின் சம்மதமும் பெற நினைத்தார். அதற்காக, சீனாவிற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார்; அதே நேரம் சீனாவுடன் தங்களிடையே இருக்கும் எல்லை (லடாக் மற்றும் அருணாசலபிரதேச) பிரச்சனைகளைப் பற்றி சீனாவே விரும்பினாலன்றி விவாதிக்க விரும்பவில்லை. அந்த குழு சீனாவில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தம் ஐந்து கொள்கைகளை அடிப்படையாக்க் கொண்டு அமைக்கப்பட்ட்து. அவையே பஞ்சசீலக் கொள்கைகள்.

 

பஞ்சசிலம் என்றால் ஐந்து வழிமுறைகள் அல்லது ஒழுக்கங்கள். அந்த வழிமுறைகள் தான் யாவை?

1. ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் கொள்கை வேறுபட்டனவேனும், சமாதானமாக வாழவேண்டும்.

2. எந்த நாடும், பிற நாட்டை ஆக்கிரமிக்கத் தாக்கக்கூடாது.

3. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.

4. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி, சமமதிப்பு கொடுத்தல் வேண்டும்.

5. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமையையும், இறையாண்மையை மதிக்க வேண்டும்.

 

கொள்கை அடிப்படையில் மேற்கூறிய ஐந்தும் முக்கியமானவையே. ஆனால், ஒப்பந்த ஷரத்துகளில் இந்தியா, திபெத்தின் மீதான சீனாவின் முழுஉரிமையை (sovereignty) முதன்முதலில் அங்கீகரித்தது. இதன் மூலம் திபெத்-இன் தனித்தன்மையை இந்தியா விட்டுக் கொடுத்தது. திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் இருந்த வணிகத்தளம் மற்றும் தொலைத் தொடர்பு மையங்களையும் இந்தியா விட்டுக் கொடுக்க நேர்ந்தது.

 

இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகள் வரை நிலைத்திருந்தது. பின் 1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போருக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவேயில்லை. தற்போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன.

 

இடையில் நேரு இந்த பஞ்சசீல கொள்கையை உலகலாவிய அளவில் எடுத்துச் சென்று நாடுகளுக்கிடையே வெளியுறவு ஒப்பந்தகள் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே  இருக்க வேண்டுமென முயன்றார். 1958-ஆம் ஆண்டிற்குள் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பஞ்சசீலக் கொள்கைகளை ஏற்றன.

 

தற்போது இந்திய வெளியுறவுக் கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்படுகின்றன.

 

இந்நிலையில், சீன பஞ்சசீல ஒப்பந்தத்தின்  60-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு அன்சாரி கலந்து கொண்டுள்ளார்.

 

பஞ்சசீலக் கொள்கையின் 60 ஆண்டு விழாவாக இருந்தால் இந்தியா இதைக் ஏன் கொண்டாடவில்லை?

 

ஒப்பந்தத்தின் 60-ஆண்டு நிறைவு விழா என்றால், ஒப்பந்தம் நிலுவையில் இல்லாத நிலையில், போர் நடந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் எல்லைகள் பிரச்சனைத் தீர்க்கப்படாத நிலையில் சீனா கொண்டாடும் இந்த 60-ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் இந்தியா கலந்து கொள்வது வேதனை தரும் வேடிக்கையாக உள்ளது!