புதன், ஆகஸ்ட் 21, 2013

ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?


வட மாநிலங்களில் ரக்ஷாபந்தனம் என்ற பண்டிகைக் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரர்களுக்கு கையில் ‘ராக்கி’ என்ற கயிற்றைக் கட்டி தங்கள் அன்பைத் தெரிவிப்பார்கள்.

இந்தப் பண்டிகை வட இந்தியர்களின் ‘ச்ரவண’ மாதத்தின் பௌர்ணமியன்றுக் கொண்டாடப்படும். இந்த வருடம் பொதுவாக நாட்காட்டிகளில் 20.08.2013 அன்று ரக்ஷாபந்தனம் என்று போட்டிருந்தாலும் சிலர் 21.08.2013 அன்று கொண்டாடுகிறார்கள். [என் மகள் பள்ளியில் நேற்று விடுமுறை விட்டிருந்தார்கள்; ஆனால் என் மகனின் பள்ளியில் இன்றுதான் விடுமுறை].

காரணம் என்ன? ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?

இந்த வருடம் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருக்கிறது. பௌர்ணமியின் முதல் பாகம் பத்ர கரணம் ஆகும் (கரணத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இந்த இடுகையில் எழுதியுள்ளேன்).

பொதுவாக பத்ர கரணத்தில் திருமணம், முடிகாணிக்கை, ரக்ஷாபந்தனம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவர்.

ரக்ஷாபந்தனத்தைப் பொறுத்தவரை அதற்கு ஏற்ற நேரமாக ப்ரதோஷ காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். பிரதோஷம் சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய முந்தைய பிந்தைய 10 நாழிகைகளைக் குறிக்கும். இந்த ஆடி மாதத்தில் பொதுவாக சூரிய அஸ்தமனம் மாலை 7 மணியளவில் இருக்கும். ஆகவே பிரதோஷ நேரமாக மாலை சுமார் 5 மணியிலிருந்து சுமார் 9 மணிவரை குறிப்பிடுவர்.

இந்த மாதப் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் மாலை 8.15 / 8.20 மணிவரையான முதல் பாதி (மொத்த பௌர்ணமி நேரமான சுமார் 22 1/2 மணி நேரத்தில் பாதியான 11 1/4 மணிநேரத்தை காலை 10 மணியுடன் கூட்டினால் வரும் நேரம்) பத்ர கரணம்.

இந்த பத்ர கரணத்திற்குப் பின்னர் வரும் பௌர்ணமியின் பின்பாதி (பவ கரணத்தில்) ரக்ஷாபந்தனம் கொண்டாடலாம். பத்ர கரணம் முடிந்து 8.20 முதல் பிரதோஷம் முடியும் சுமார் 9 மணி வரையிலான நேரம்  மிகச் சிறந்த நேரமாகக் கருதப்பட்டு நாட்காட்டிகளில் நேற்றைய தினம் ரக்ஷாபந்தனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேற்கூறிய நேரங்கள் அனைத்தும் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், மற்ற சில சித்தாந்தைங்களை (சூரிய சித்தாந்தம், வாக்கிய பஞ்சாங்கங்கள் மற்றும் மற்றைய இடங்களில் பயன் படுத்தும் பஞ்சாங்கங்கள் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கங்கங்களில் இந்த நேரக் கணிப்புகள் வேறுபட்டுள்ளன. மேலும், சில ஜோதிடர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ரக்ஷாபந்தனம் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனால் சிலரால் ரக்ஷாபந்தனம் இன்று (21.08.2013) கொண்டாடப் படுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

தீஜ்



தீஜ் என்பது வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உத்திரபிரதேசப் பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை.

இந்தப் பண்டிகை மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது.

தீஜ் என்பது திரிதியை திதியைக் குறிக்கும். அக்ஷய திரிதியை என்பது ’அக்க தீஜ்’ என்று அழைக்கப்படும். மேற்கூறிய மூன்றில் அக்ஷய திரிதியை சேராது. இம்மூன்றும் வேறு தினங்களில் அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் கொண்டாடப்படுபவை. இதைத் தவிர கங்குவார் தீஜ் என்று அழைக்கப்படும் கௌரி திரிதியை யுகாதியை ஒட்டிக் கொண்டாடப்படும்.

இப்பொழுது தீஜ் என்றப் பொதுப் பெயரில் மூன்று தினங்களில் தனித்தனியாகக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாகக் கொண்டாடப்படுவது  ’சோடி தீஜ்’ (சின்ன திரிதியை) அல்லது ஹரியாலி தீஜ் (பசுமை திரிதியை) என்று வழங்கப்படுகிறது. இது வட இந்திய மாதமான ஷ்ரவண மாதத்தில் சுக்ல பக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. இது இன்று 09.08.2013 வருகிறது.

இரண்டாவதாக வருவது ’படி தீஜ்’ (பெரிய தீஜ்) அல்லது காஜரி தீஜ் (கண்மை திரிதியை) என்றுப் பெயர். இது ஹரியாலி தீஜ்-க்கு அடுத்த க்ருஷ்ணபக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. அதாவது ரக்ஷாபந்தனுக்கு அடுத்த த்ரிதியையில் கொண்டாடப்படும் (இந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் நாள் வரும்). இந்த நாளில் இரவு முழுவதும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவதால் அல்லது க்ருஷ்ண பக்ஷத்தில் வருவதால் கருமையைக் குறிக்க இந்தப் பெயரை உபயோகித்திருக்கலாம்.

மூன்றாவதாக வருவது ஷ்ரவண மாதத்தின் அடுத்த மாதமான பாத்ரபாத மாத்த்தின் சுக்கில பட்சத்தில் கொண்டாடப்படுகிறது. அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் வரும். இது ஹரதாலிகா தீஜ் என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக இந்தப் பண்டிகை சிவ-பார்வதி விவாஹத்தை ஒட்டிக் கொண்டாடப் படுகிறது. காமதகனத்தைத் தொடர்ந்து சிவன் அங்கிருந்து மறைந்து விட நாரதர் அறிவுரையால் பார்வதி கானகம் எய்தி அங்கு விரதமிருந்ததாள். (அவள் கானகம்  செல்வதைக் கேட்ட அவள் தாய் மீனாள் ‘ஓ’ மா! என்று கூற அதுவே பார்வதிக்கு உமா என்ற பெயர் கொடுத்த்தாகவும் கூறுகிறார்கள்). அங்கு அவளை ஸப்தரிஷிகள் பரிசோதிக்க இறுதியில் ஜடாமுடி சன்யாசியாக சிவன் வந்து அவளிடம் சிவனைப் பற்றித் தாழ்வாகக் கூற அதைக் கேட்க இயலாமல் அவள் தீ புகுந்த்தாள். ஆனால், அவள் தவ வலிமையின் காரணமாக நெருப்பு உறைந்து விட பார்வதி ஜடாமுடியானிடம் சிவ பெருமைகளை உரைத்தாள். பிறகு சிவன் தன் உருகாட்ட, உமை தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னை மணமுடிக்க வேண்டினாள். அதை ஈசன் ஏற்க, தன் நாடு திரும்பினாள்.

முதலாவதாக்க் கொண்டாடப்படும் ஹரியாலி தீஜ் அன்று தன் பெற்றோரிடம் விடை பெற்று கானகம் எய்திய நாள் என்பதால் அன்று பெற்றோர் தங்கள் மகள்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் உள்ளது.

இரண்டாவது கொண்டாடப்படும் காஜரி தீஜ் அன்று தான் ஸப்தரிஷிகளும் ஜடாதாரியும் உமையைச் சோதித்த நாட்கள் அன்று உபவாசம் இருந்து இரவு சந்திரனை தரிசித்து உணவு உண்பர். நாள் முழுவதும் நிர்ஜல (நீர் அருந்தாமல்) உபவாசம் இருப்பவர்களும் உண்டு.

மூன்றாவதாகக் கொண்டாடப்படும் ஹரதாலிகா விரதத்தன்று உமையின் கோரிக்கையை ஏற்று சிவன் அவள் பெற்றோரிடம் பெண் கேட்க ஒப்புக்கொண்ட தினம் என்று சிலரும் கானகத்தில் கடுந்தவத்திலிருந்துத் திரும்பிய உமை  வீடு திரும்பிய தினம் என்று சிலரும் கூறுகிறார்கள். அன்று பார்வதி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுவர்.

ஆனாலும் தற்போது ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் இந்த நாட்களில் ஊஞ்சல் கொண்டாட்டமும் ஆட்டம் பாட்டத்துடன் பெரும் விழாக்களாகக் பொதுவெளியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊஞ்சல் ஆட்டமும் கோலாட்டமும் முக்கிய நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.

ப்ருந்தாவனத்தில் ஹரியாலி தீஜ் அன்று ‘பங்கே பிஹாரி’ கோவிலில் ராதா-க்ருஷ்ணர் இருவரும் வெளிக் கொணரப்பட்டு ஒரு சேர தங்க ஊஞ்சலில் ’ஜோலாட்டம்’ நடைபெறும். இதற்கு ‘ஜூலன் லீலா’ என்று பெயர். இதில் முக்கியமாக வருட்த்தில் ஒரே முறையாக க்ருஷ்ணருக்கு கட்கம் (வாள்) வைத்து வணங்கப்படுவது வழக்கம்.
 
தீஜ் நேரத்தில் கேவர் என்ற இனிப்பு இப்பகுதிகளில் மிகவும் பிரபலம். 

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

தெலுங்கு ஆனா(ல்)?



ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா பகுதிகளைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தின் 10 மாவட்டங்களை (அடிலாபாத், நிஜாமாபாத், கரீம் நகர், மேடக், வராங்கல், ரங்காரெட்டி, மஹபூப் நகர், நால்கொந்தா, கம்மம், ஹைதராபாத்) தனியாகப் பிரித்து ’தெலுங்கானா’ மாநிலமாக அறிவிக்கப்பட உள்ளது. மீதமுள்ள 13 ஆந்திரபிரதேசத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதிகளும், கடலோர ஆந்திரமும் ’சீமாந்திரா’ என்ற பெயரில் வழங்கப்படும்.

சென்ற சென்சஸ் நிலவரப்படி, தெலுங்கானா பகுதியின் மக்கள் தொகை 3 1/2 கோடிகள். பிற ஆந்திரப் பகுதிகளின் மக்கள் தொகை சுமார் 5 கோடிகள்.

1948 ஆம் ஆண்டு நிஜாம் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட்தும் ‘தெலுங்கானா’ பகுதிகள் ஹைதாராபாத் மாகாணமாகவே இயங்கி வந்தது. 1950-களின் மொழிவாரி மாநிலக் கோரிக்கையைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு ஆந்திர, ராயலசீமா பகுதிகள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து ஹைதராபாத்-உடன் இணைக்கப்பட்டு ஆந்திரபிரதேசமாக உருமாறியது.

1969-இல் தான் முதல் முதலாக தெலுங்கானா பகுதிகளை தனியாக பிரிக்க்க் கோரிக்கை எழுப்பப் பட்டது. அதை எழுப்பியவர்கள் தெலுங்கானா பிரஜா சமிதி அமைப்பை மதன் மோகன் என்பவர் உருவாக்கினார். அதில் முன்னாள் தமிழக ஆளுனர் சென்னாரெட்டி முக்கிய உறுப்பினராக இருந்தார். 1969-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இவர்கள் 1971-ஆம் ஆண்டு தேர்தலில் 14 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றனர். உடனே இந்திராகாந்தி இந்த அமைப்புடன் ஒரு ஆறு அம்ச திட்டத்துடன் உடன்படிக்கைச் செய்து கொண்டு 1972-ஆம் ஆண்டில் தெ.பி.ச.-யை காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வைத்தார். சென்னாரெட்டியை 1974-ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் ஆளுநராக நியமித்தார். இவ்வாறு, தெலுங்கானா போராட்டத்தை இந்திரா நீர்த்துப் போக வைத்தாலும் அது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு 2001-ஆம் ஆண்டு சந்த்ரசேகர ராவ் ’தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை உறுவாக்கி மீண்டும் தெலுங்கானா பிரச்சனையை முன் கொண்டுவந்தார்.

இதற்குக் காரணமாக இவர்கள் கூறுபவை…

ஆந்திரபிரதேசத்தின் கனிமவளம் நிறைந்த பகுதி தெலுங்கானா (இந்திய கனிம வளங்களின் 20% தெலுங்கானா பகுதிகளிலேயே உள்ளது). அதே நேரம் ஆந்திரத்தின் 11 பின் தங்கிய மாவட்டங்களில் 7 தெலுங்கானாவில் உள்ளன (மீதமுள்ளவற்றில் 3 ஆந்திரவிலும் 1 ராயல்சீமாவிலும் உள்ளன)

கோதாவரி, க்ருஷ்ணா ஆகிய நதிகளின் நீர் பிடிப்பு பகுதிகளின் பெரும்பான்மையானவை தெலுங்கானா பகுதியிலேயே உள்ளது. ஆனால் ஆந்திராவின் வறண்ட பகுதிகளில் தெலுங்கானாவைச் சேர்ந்தவையே அதிகம். [இதற்குக் காரணம் இது பெரும்பாலும் மலைப்பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதனாலும் தான் என்றாலும் அரசியலில் உண்மை நிலையை விட இது போன்ற புள்ளிவிவரங்கள் தான் வைக்கப்படும்].

இன்றைய நிலையில் வருமான வரி, கலால் தீர்வை ஆகியவற்றில் தெலுங்கானாவின் பங்கு 60%க்கும் அதிகம். ஆனால், இவை ஆந்திராவின் மற்ற பகுதிகளுக்கே அதிகம் செலவிடப்படுகின்றன என்பதும் தெலுங்கானா ஆதரவாளர்களின் வாதம்.

இதற்கெல்லாம் ஆதாரமாக அவர்கள் கருதுவது 1956-2001க்கு இடைப்பட்டக் காலத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாக இருந்தது மொத்தமாக ஐந்து வருடங்கள் கூட இல்லை. அதிலும் முதல்வராக இருந்த காலத்தில் ஊடகங்களால் அதிக அளவு விமர்சிக்கப்பட்டவர் அஞ்சையா. இவர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர். அதற்கு அப்போதைய வறட்சி நிலைமையை அவர் கையாண்ட விதம் என்றாலும் தெலுங்கானா ஆதரவாளர்களைப் பொறுத்தவரை ஊடகங்கள் பெரும்பாலும் பிற ஆந்திர பகுதிகளைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த்து என்பது தான்.

 தனி தெலுங்கானா கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் போராட்டமாகவும் வன்முறை கலவரமாகவும் திசை திரும்பியதுமே தனி மாநிலமாக பிரிப்பது தவிர்க்க முடியாதது என்பது புரிந்து போனது.

தெலுங்கானாவைத் தனியாக பிரிப்பதில் அனைத்துக் கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தான் தேடுகின்றன.

காங்கிரஸைப் பொறுத்தவரை பிரிவினால் தெலுங்கானா பகுதிகளில் தெ.ரா.ச. ஆதரவுடன் 17 உறுப்பினர்களைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறது. அதனால் தான் திக்விஜய் சிங் தெலுங்கானா உருப்பெற்றால் தெ.ரா.ச. தன் கட்சியைக் கலைத்து மீண்டும் காங்கிரஸில் இணைவதாகக் கூறியதை மீண்டும் மீண்டும் ஊடகங்களின் வாயிலாகக் கூறுகிறார். பிற ஆந்திர பகுதிகளைப் பொறுத்தவரை ஜகன்ரெட்டி காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளைக் கைப்பற்றினாலும் அவருடைய வாக்கு வங்கி (சிறுபான்மையினரை – ராயல் சீமாவில் இஸ்லாமியர்களையும் கடலோர ஆந்திரத்தில் கிருத்துவர்களையும் - அடிப்படையாகக் கொண்டது) என்பதால் பாஜக-உடன் கூட்டணி சேரமுடியாது; தெலுங்கு தேசம் கட்சியுடனும் கூட்டு சேர முடியாது (கருணாநிதி-ஜெயலலிதா போல் ஆந்திராவைப் பொறுத்தவரை சந்த்ரபாபு நாயுடுவும் ராஜசேகர ரெட்டியும்) என்பதால் இழுபறி சமயத்தில் அவரது கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ அல்லது குறைந்த பட்சம் தேசிய மு.முன்னணியை ஆதரிக்காமலோ இருப்பார்கள் என்பதுதான்.

பாஜாக-வைப் பொறுத்தவரை மேற்போக்காக தாங்கள் சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் என்று கூறினாலும்,  தெலுங்கானாவில் என்றுமே MIM  போன்ற இஸ்லாமிய கட்சிகள் தெலுங்கானாவில் வலுபெற்று இருப்பதால் அவற்றை எதிர்ப்தை வைத்தே சிறுபான்மையினருக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முடியும் என்று நம்புவது போல் தான் தெரிகிறது.

கம்யூனிஸ்ட்களில் இந்திய கம்யூனிஸ்ட் இந்த பிரிவினையை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு மே.வங்கத்தில் வாக்கு வங்கி இல்லை. இங்கு இந்தப் பிரிவினையால் மத்திய அரசில் இல்லாவிட்டாலும் சட்டமன்றத்தில் கனிசமான எண்ணிக்கையைப் பெற முடியும். மார்க்ஸிஸ்டைப் பொறுத்தவரை அவர்கள் இதனை எதிர்த்துதான் வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மொழிவாரி மாநிலப் பிரிவைத் தவிர மற்றவற்றை எதிர்ப்பதாகக் கூறினாலும் இது மேற்கு வங்கத்தின் கூர்காலாந்து கோரிக்கைக்கு வலுசேர்க்கும் என்பது தான் காரணம்.

தெலுங்கு தேசம் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும்  சீமாந்திர பகுதிகளில் அவர்களின் செல்வாக்கு அதிகம். அதனால் அங்கு அடுத்தமுறை வாய்ப்பு கிட்டும் என்று நினைக்கிறார்கள். தெலுங்கானாவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்காலம் சற்று கேள்விக் குறிதான் என்றாலும் பாஜக-உடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை குறிவைக்கத் திட்டமிடும் என்று தோன்றுகிறது.

தெலுங்கானா ராஷ்டிரய சமிதியைப் பொறுத்தவரை தெலுங்கானா மாவட்டத்தில் அவர்களின் செல்வாக்கு நிலை பெற்றுவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் நினைப்பது போல் அவர்கள் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸுடன் இணைவார்கள் என்றுத் தோன்றவில்லை. மேலும், அவர்களுக்கு வலு சேர்க்க காங்கிரஸ் ஹைதராபாத்-ஐ 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக அறிவித்துள்ளது. இதை காரணமாக வைத்தே தனியாகத் தான் இயங்குவார்கள் என்றுத் தோன்றுகிறது.

கடைசியாக மக்கள்…
தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் தங்களின் வறுமை நிலைக்கு இது தீர்வு என்று நினைக்கிறார்கள். [10 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பின் தங்கியவை என்றாலும் இதற்குக் காரணம் வளர்ச்சிப்பணிகள் ஹைதராபாத், வராங்கல் பகுதிகளில் மட்டுமே இருப்பதும் மற்ற மாநிலங்களைப் போலவே வருமானம் பரவலாக அனைவரையும் சேராமல் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சேர்வது தான் காரணம் என்றுத் தோன்றுகிறது. மேலும், பிற ஆந்திர மக்கள் தங்களின் வளங்களைச் சுரண்டுவது நிற்கும் என்று நினைக்கிறார்கள் [அதே நேரத்தில் ஹைதராபாத்-இன் இன்றைய வளர்ச்சிக்கு ஆந்திரத்தின் பிற பகுதி மக்களின் பங்கும் இருக்கிறது என்பதை சுலபமாக மறந்துவிடுகிறார்கள்].

பிற ஆந்திர பகுதி மக்கள் தாங்கள் கைவிடப் பட்டுள்ளதாகவே கருதுகிறார்கள். கடந்த 50 வருடங்களில் ஹைதராபாத்-இன் வளர்ச்சிக்கும் அங்கு தாங்கள் செய்துள்ள முதலீடும் தங்களுக்கு கிடைப்பதை எண்ணியே கவலை கொள்கிறார்கள். ஆந்திராவில் ஹைதராபாத் பகுதியைத் தவிர சிறந்தத் தொழில் நிறுவன்ங்களோ, கல்வி நிறுவணங்களோ இல்லை.  10 ஆண்டுகளுக்குள் ஒரு சிறந்த நகரை உருவாக்கி அதை தலைநகராக மாற்றினாலும் அதுவரை கல்வி, மருத்துவ வசதிகளுக்கு தெலுங்கானா பகுதியையே எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பதும் அவர்களின் கவலைக்குக் காரணம். பிற ஆந்திரப் பகுதிகளின் முக்கியத் தொழிலே விவசாயம். ஆனால், அதற்கான நீர்த் தேவைகளுக்கு தெலுங்கானாவையே எதிர்பார்க்க வேண்டியிருக்கும். கர்நாடகம் தமிழகத்திற்கு நீர் தர மறுப்பது போல் பிற்காலத்தில் ஆந்திராவிற்கு தெலுங்கானா நீர் தர மறுக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

உடனடியாக தெலுங்கானா பகுதிகளின் வன்முறைக்குத் தீர்வு கண்டு விட்டாலும் இது நீண்ட காலத் தீர்வு தானா என்பது தெரியவில்லை!