ஹோலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹோலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 27, 2013

வண்ணக் கொண்டாட்டம்



வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படும் பண்டிகை ஹோலி.

ஹோலி என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது வண்ண வண்ண பொடிகளையும் சாயங்களையும் ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழும் காட்சிதான் நம் அனைவரின் மனக்கண் முன் தோன்றும். திரைப்படங்களில் ஒரு ஆண் (நாயகன்!) ஒரு கூட்டத்துடன் (நண்பர்கள்!) ஒரு பெண்ணை (நாயகி!) அல்லது பெண் கூட்டத்தை (நாயகியின் தோழிகள்) வண்ணம் பூசி ஆடுவதைத் தான் ஹோலி பண்டிகையாகக் காட்சி படுத்தி வருகின்றன. சில இடங்களில் நாயகன் ‘பாங்க்’ என்ற போதை வஸ்துவை அருந்தி ஆடுவது போல் காட்டப்படுவதும் உண்டு.  ஊடகங்களிலும் பெரும்பாலும் இது போன்றக் காட்சிகளே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தப் பட்டு வரும்.

ஆனால், இந்த வண்ணங்களைப் பூசி மகிழ்ந்து கொண்டாடப் படுவதைத் தாண்டியும் இப்பண்டிகை, சில இடங்களில் ’வசந்தோஸ்தவம்’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படும். இது வசந்த பஞ்சமி தினத்தில் துவங்கி ஹோலிவரைக் கொண்டாடப்படும். சில இடங்களில் வேறு வகையிலும் ‘ரங்பஞ்சமி’ (வண்ண ஐந்து நாள்) என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இது ஹோலிக்கு முதல் தினத்திலுருந்து துவங்கி பஞ்சமி வரைக் கொண்டாடப்படும்

இந்த வசந்தோஸ்தவ/ரங்பஞ்சமி கொண்டாட்டங்கள் கீழ் கண்ட இடங்களில் மிகவும் பிரபலம்...

1.            மதுரா
மதுரா பகவான் கண்ணன் கம்சனின் சிறைச்சாலையில் அவதரித்த இடம். இங்கு இந்த ரங்பஞ்சமி 40 நாட்கள் தொடர்ந்து (வசந்த பஞ்சமியிலிருந்து துவங்கும்) நடைபெறும். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நடனக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, அந்த நடனக் கலைஞர்கள், கிருஷ்ணரும் கோபியரும் நடத்திய  ராசலீலைகளை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர். மதுராவின் க்ருஷ்ணர் கோவிலை மையமாகக் கொண்டு இந்த உற்சவங்கள் நடைபெறும்.

2.                  வ்ருந்தாவன் (ப்ருந்தாவனம்)
வ்ருந்தாவனத்தில் பங்கே-பிஹாரி ஆலயத்தில் இந்த உற்சவங்கள் கொண்டாடப்படும். வ்ருந்தாவனும் மதுராவும் இரட்டை நகரங்கள். எனவே, மதுராவின் கொண்டாட்டங்களில் இடம் பெறும் கலைஞர்கள் இங்கேயும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விப்பர்.

3.                  பர்ஸானா
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த ஊர் ராதை பிறந்த ஊர். ராதையைக் காண வந்த கிருஷ்ணர் அவள் மீது விளையாட்டாக வண்ணக்கலவைச் சேர்த்த நீரை விளையாட்டாக வீசி/ஊற்றி மகிழ்ந்து விளையாட தன் கையில் இருந்த மத்தால் ராதை கிருஷ்ணரை அடித்ததாகத் தொன்மக் கதைக் கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்றும் நந்தகிராமத்திலிருந்து ஆண்கள் இந்த ஹோலி தினத்தன்று இந்த கிராமத்திற்கு வர இங்கிருக்கும் பெண்கள் அவ்வாறு இங்கு வரும் ஆண்களை சிறுகுச்சியால் அடித்து விளையாடுவது வழக்கம். இதை லாட்டி-கி-ஹோலி என்று அழைப்பர்.

4.                  வ்ரஜ கிராமம்
வ்ரஜ் கிராமத்தில் கோவர்த்தன மலையை ஒட்டிய குலால் குந்த் என்ற ஏரிக்கரைப் பகுதியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண லீலை நடனங்கள் இப்பகுதியில் மிகவும் பிரபலம்.

5.                  புர்ணிலா
மேற்கு வங்கத்தின் புர்ணிலா மாவட்டத்திலும் இந்த ரங்பஞ்சமி நாற்பது நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சமயத்தில் வங்கத்தின் கிராமியக் கலைகளான சாஹூ, தர்பாரி, ஜுமூர், நட்வா போன்ற நடங்கள் இச்சமயத்தில் ஆடப்பட்டு மக்களை மகிழ்விக்கின்றன.

6.                  சாந்தி நிகேதனம்
சாந்திநிகேதனைப் பொறுத்தவரை இந்த ரங்பஞ்சமி விழா இதன் நிறுவனர் கவிஞர் ரவீந்த்ரநாத் தாகூர் காலத்தில் அவராலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று வரைத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வசந்தகாலக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக விஷ்வபாரதி பல்கலைக் கழக மாணாக்கர்களால் நடத்தப்படும் இக்கொண்டாட்டங்கள் இந்த ஹோலியன்று நிறைவு பெறும். பல்வண்ண ஆடைகளைக் கொண்டு இதைக் கண்டு களிக்கவரும் ஆர்வலர்களை பரவசப்படுத்தும்.
 
வெறும் வண்ணம் பூசி மகிழ்வதைத் தாண்டிக் கலைஞர்களை ஊக்குவித்துக் கலையை வளர்க்கும் இவற்றையும் ஊடகங்கள் காட்சிப் படுத்தினால் நல்லது.

புதன், மார்ச் 07, 2012

வண்ணத் திருவிழா



ஹோலிப் பண்டிகை என்று வட இந்தியாவில் கொண்டாடப் படுவது வண்ணத் திருவிழா. இது வட இந்தியர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படுகிறது. சில இடங்களில், ஹோலிக்கான ஏற்பாடுகள் வசந்த பஞ்சமியன்றேத் துவங்கி ஒரு மண்டலம் (40 நாட்கள்) நடைபெற்று முடிவில் ஹோலியாகக் கொண்டாடப் படுகிறது. குறிப்பாக வங்காளத்தில் வசந்தோஸ்தவமாகவே கொண்டாடப் படுகிறது.

வட இந்தியாவில் ஹோலிக்கு முன் தினம் பொது இடத்தில் கட்டைகளை எரியூட்டி அதைச் சுற்றி அனைவரும் இசைத்துப் பாடி மகிழ்வர். இவ்வாறு எரியூட்டுவதைப் பற்றியப் புராணக்கதைகளில் இரண்டு மிகவும் பிரபலமானவை. 
முதலாகவதாகக் கூறப்படுவது ஹோலிகா தகனம். ஹிரண்ய கஷ்யப் (கஷ்யப் என்பது அவனது குலப் பெயர்; அவன் கஷ்யப முனிவருக்கும் தக்ஷனின் மகள் திதிக்கும் பிறந்தவன்) தன் மகன் ப்ரஹ்லாதனைக் கொல்ல ஆணையிட அவனுடையப் படை அதை முடிக்க முடியாமல் தவித்ததால் அவனுடையத் தங்கை ஹோலிகா ப்ரஹ்லாதனை தன்னுடன் வைத்து எரியூட்டும்படியும், தான் பெற்ற சிறப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டுத் தான் எரியாமல் ப்ரஹ்லாதனைப் பிடித்துக் கொண்டு அவனை அழித்துவிடலாம் என்று யோசனைக் கூற, ஹிரண்யனும் அவ்வாறேச் சிதை மூட்டினான். ஆனால், விஷ்ணுவின் அருளால் போர்வை நழுவி, ப்ரஹ்லாதன் மேல் விழுந்து அவனை மூடிக் கொள்ள, ஹோலிகா எரிந்து சாம்பலானாள். அதுதான் ஹோலிகா தகனம். 
இரண்டாவதாகக் கூறப்படுவது காம தகனம். சதிதேவியின் இறப்பிற்குப் பின் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடக்க, ஆழ்ந்த தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி காமதேவன் மலர்கணைத் தொடுக்க, அவர் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறக்க, அதன்  வெப்பம் தாங்காமல் காமதேவன் எரிந்தது தான் காம தகனம். 

ஆனால் மூன்றாவதாக அவ்வளவாகப் பிரபலமாகாத  ஒரு கதை பாகவதத்தில் இருக்கிறது அதுதான் துந்தியின் கதை.....

உலகின் முதல் மனிதன் ஸ்வயம்புவ மனு; அவன் மனைவி சதரூபா.

அவர்களின் முதல் மகன் உத்தனபாதன், இரண்டாவது மகன் ப்ரியவ்ரதன்

உத்தனபாதனுக்கு இரண்டு மகன்கள் துருவன் (சுநிதியின் மகன்); உத்தமன் (சுருசியின் மகன்).

துருவனின் வம்சத்தில் பின்னர் தோன்றியவன் ப்ரிது. அவன் நல்ல அரசன் தான். ஆனாலும் அவனுடைய ஆட்சியில் பல பகுதிகளில் திடீரென்று உணவுப் பொருட்கள் காணாமல் போய் மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்தனர். ப்ரிது, அதற்கு என்ன செய்வது என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது,  ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாட சென்றிருந்த பொழுது, மிகவும் பசியுடன் இருந்தான். திடீரென்று, அவன் முன் ஒரு கிழப்பசுத் தோன்றியது. அதை வேட்டையாட அவன் துரத்திச் சென்றான்; அது அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்றது.  

மிகவும் கலைத்துப் போன அவன் ஒரு இடத்தில் தன் வில்லைக் கூடத் தூக்க முடியாமல் நிற்க, அந்த பசு  ஒரு சிறு பெண்ணாக மாறியது.
உடனே மன்னன் அச்சிறுமியை நோக்கி,  “மகளே! நீ யார்” என்று கேட்டான். 

அச்சிறுமி, “நான் ஒரு தேவபசு! கேட்டவர்களுக்கு அனைத்தையும் தரும் காமதேனுவைப் போன்றவள். ஆனால்,  இப்பொழுது எதுவும் அளிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டேன். அதனால் என்னை ஆதரிப்பார் யாருமில்லாமல் நான் அநாதை ஆகிவிட்டேன்” என்று கூறினாள். 

மேலும் தொடர்ந்து, “மன்னா! எனக்கு தற்போது உன் மக்களுக்கு உணவு கிடைகாததன் காரணம் தெரியும். என்னிடம் எல்லா உணவுப் பொருட்களின் விதைகளும் பயிர்களும் இருந்தன. அவை, மேலேயே இருந்ததால் ‘டுண்டி’ என்ற பெரிய அரக்கி அவற்றைத் தானே உண்டு மக்களுக்குத் தராமல் தின்று விடுகிறாள். அதனால், நான் அவற்றை என் உள்ளுக்குள் யாருக்கும் தெரியாதபடி புதைத்துக் கொண்டு விட்டேன்.  என்னுள் புதைந்துள்ள அப்பொருட்களை எடுக்க மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே, அவன் தேவைக்கு ஏற்ப வெளியிடுவேன்” என்று கூறினாள். 

உடனே மன்னன் டுண்டி-யை அழிப்பது எப்படி என்று வினவினான்.

அதற்குப் பசு, “அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. அதைக் கொல்ல முதலில் அதை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு, என்னைத் தோண்டி என் உள்ளில் இருக்கும் உணவை அணைவருக்கும் அளி! ‘டுண்டி’ என்றால் மகிழ்ச்சியொலி; மக்களின் மகிழ்ச்சி சத்தத்தில் தான் அந்த  அரக்கியும் அழிவாள். அதனால் தான் அவள் பெயர் ‘டுண்டி’  ” என்று கூறியது.

அனைத்தையும் கேட்ட மன்னன், “மகளே, உன்னை ஆதரிப்பார் யாருமில்லை என்ற கவலை வேண்டாம். இனி நீ என் மகள்” என்று அச்சிறுமியை ஆரத் தழுவினான். உடனே அப்பெண்ணின் உடல் பச்சை நிறமாக மாற அவள் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.


மன்னனுக்கு வந்தது பூமித் தாய் என்று புரிந்தது. பூமியில்  இதுவரைத் தானாகத் தோன்றி வரும் உணவுப் பொருட்கள் இனிமேல் கிடைக்க வேண்டுமென்றால் பூமியைச் சீர் செய்து அதைச் சமன் படுத்தி விதையிட்டு பயிர் செய்ய வேண்டுமென்று புரிந்து கொண்டான். அவ்வாறேச் செய்து பூமியில் முதல் முதலாகப் பயிர்த் தொழிலைத் துவங்கி வைத்தான். ஆம்! பூமியின் முதல் விவசாயி ‘ப்ரிது’. பூமித் தாயும் அன்று முதல் ‘ப்ரித்வி’ (ப்ரிது-வின் மகள்) என்று அழைக்கப்பட்டாள்.

பயிரை அறுவடைச் செய்து அன்றிரவு அதில் உணவுப் பொருட்களை தன் மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அணைவரும், அக்கால வழக்கப்படி பொது இடத்தில் நடுவில் எரியூட்டிப் பாடி மகிழ, டுண்டி என்ற அந்த பட்டினி அரக்கி அழிந்து போனாள். அதுவே ஹோலியன்று முதல் நாள் நடக்கும் விழா என்ற தொன்மமும் உண்டு.


ப்ரிதுவின் கதை என்பது மனிதன் வேட்டுவத் தொழிலிலிருந்து உழவுத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் கதையாகக் கொள்ளப் படுகிறது. 

அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துகள்...