வியாழன், ஜூலை 03, 2014

பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்


பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்

 

இது என்ன ஒப்பந்தத்தின் பின்னணி தான் என்ன?

 

இதன் துவக்கம் 1904-ஆம் ஆண்டு நடந்த லாசா மாநாட்டில் சீனா அம்பன் (அலுவலகர்/தூதுவர்) முன்னிலையில் இந்திய நேபாள அலுவலகரிடையே நடந்த ஒப்பந்ததிலிருந்து ஆரம்பித்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் வணிகத்தளம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. 1910-ஆம் ஆண்டு இந்திய (பிரிடிஷ்) அரசு சிக்கிம்-க்யாண்ட்ஸே வழித்தளத்தில் 11 ஓய்வு இல்லங்களும் தொலைதொடர்பு வசதியும் கட்டமைத்தது.

 

1908-ஆம் ஆண்டு பிரிட்டன், சீனா, திபெத் ஆகியவற்றிடையே திபெத் வணிக நியதிகள் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதிலிருந்து சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடுவது அடிப்படையற்றது என்பது விளங்கும். தவிர, 1914-ஆம் ஆண்டு சிம்லாவில் நடந்த மாநாட்டில் பிரிட்டன், சீனாவையும் திபெத்தையும் அழைத்து தங்களின் எல்லைகளை முடிவெடுக்கப் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த ஒப்பந்தகளின் அடிப்படையிலேயே திபெத் ஒரு தனி நாடு என்பது விளங்கும்.

 

ஆயினும், பிரிட்டன் திபெத் தனித்து இயங்குவதை விரும்பவில்லை. காரணம், 1902-ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜார் அரசு மங்கோலியாவை பிடித்தது. தொடர்ந்து ஜார் நிகோலஸுக்கு திபெத்-ஐயும் பிடிக்கும் எண்ணம் எழுந்தது. மங்கோலிய புத்த துறவி டோர்ஜிவ் சீன ஆக்கரமிப்பைத் தடுக்க நிகோலஸுக்கு ஆதரவாக இருந்தார். [ஜார்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ரஷ்யா ஸ்டாலின்-இன் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை டோர்ஜிவ் லெனினின் கம்யூனிஸ்ட் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே இருந்தது தனி கதை.]  டோர்ஜிவ்-உம் தலாய் லாமா-வும் நண்பர்கள். திபெத் தனி நாடாக இருக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க வாய்பிருந்ததாக பிரிட்டன் கருதியது. அதை தடுக்க தான் நேரடியாக இறங்காமல் சீனாவை முன் நிறுத்த எண்ணியது. அதனால், சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடியதை கண்டுகொள்ளாமல் விட்டது. மேலும், திபெத் மீதான சீனாவின் கட்டுப்பாட்டு உரிமையை (suzerainty)யை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. 1914-ஆம் ஆண்டு நடந்த எல்லை ஒப்பந்தத்தில் பிரிட்டன் (இந்தியா), சீனா, திபெத் ஆகிய  நாடுகளின் அலுவலகர்கள் கையொப்பமிட்டாலும். சீனா அந்த ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்தியது. அதனால், பின்னர் பிர்ட்டன் திபெத்துடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டது.

 

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் லாசாவின் பிர்ட்டிஷ் தூதரகம் இந்திய தூதரகமாக இந்தியக் கொடியுடன் இயங்கினாலும் அதன் தூதுவராக ஹக் ரிசர்ட்சனே தொடர்ந்தார்.

 

1949-ஆம் ஆண்டு நேரு சீன அரசிற்கு எதிராக கம்யூனிஸ்ட் சீனா-வை ஆதரித்தார். சீன அரசு தன் குறிக்கோளில் நிலையாக நின்று திபெத்தின் மீது முழு உரிமைக் கொண்டாடியது. பின்னர், 1950-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனா கம்யூனிஸ்ட்கள் வசம் வந்த போது கம்யூனிஸ்ட்களின் மக்கள் விடுதலை ராணுவம் திபெத்திலும் நுழைந்து அதை தன் வசப்படுத்தியது. 1951-இல், திபெத் கம்யூனிஸ்ட் சீன அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதில், சீனா தலாய்லாமா-வை திபெத்தின் சமயத் தலைவராகவும் திபெத்-இன் உள் விவகாரங்களைத் தீர்மாணிக்க  வழி வகுத்தது.

 

1954-ஆம் ஆண்டு நேரு திபெத்துடன் தனி வணிக ஒப்பந்தம் செய்ய தலைப்பட்டார். அதே நேரம் அதற்கு சீனாவின் சம்மதமும் பெற நினைத்தார். அதற்காக, சீனாவிற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார்; அதே நேரம் சீனாவுடன் தங்களிடையே இருக்கும் எல்லை (லடாக் மற்றும் அருணாசலபிரதேச) பிரச்சனைகளைப் பற்றி சீனாவே விரும்பினாலன்றி விவாதிக்க விரும்பவில்லை. அந்த குழு சீனாவில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தம் ஐந்து கொள்கைகளை அடிப்படையாக்க் கொண்டு அமைக்கப்பட்ட்து. அவையே பஞ்சசீலக் கொள்கைகள்.

 

பஞ்சசிலம் என்றால் ஐந்து வழிமுறைகள் அல்லது ஒழுக்கங்கள். அந்த வழிமுறைகள் தான் யாவை?

1. ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் கொள்கை வேறுபட்டனவேனும், சமாதானமாக வாழவேண்டும்.

2. எந்த நாடும், பிற நாட்டை ஆக்கிரமிக்கத் தாக்கக்கூடாது.

3. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.

4. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி, சமமதிப்பு கொடுத்தல் வேண்டும்.

5. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமையையும், இறையாண்மையை மதிக்க வேண்டும்.

 

கொள்கை அடிப்படையில் மேற்கூறிய ஐந்தும் முக்கியமானவையே. ஆனால், ஒப்பந்த ஷரத்துகளில் இந்தியா, திபெத்தின் மீதான சீனாவின் முழுஉரிமையை (sovereignty) முதன்முதலில் அங்கீகரித்தது. இதன் மூலம் திபெத்-இன் தனித்தன்மையை இந்தியா விட்டுக் கொடுத்தது. திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் இருந்த வணிகத்தளம் மற்றும் தொலைத் தொடர்பு மையங்களையும் இந்தியா விட்டுக் கொடுக்க நேர்ந்தது.

 

இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகள் வரை நிலைத்திருந்தது. பின் 1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போருக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவேயில்லை. தற்போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன.

 

இடையில் நேரு இந்த பஞ்சசீல கொள்கையை உலகலாவிய அளவில் எடுத்துச் சென்று நாடுகளுக்கிடையே வெளியுறவு ஒப்பந்தகள் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே  இருக்க வேண்டுமென முயன்றார். 1958-ஆம் ஆண்டிற்குள் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பஞ்சசீலக் கொள்கைகளை ஏற்றன.

 

தற்போது இந்திய வெளியுறவுக் கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்படுகின்றன.

 

இந்நிலையில், சீன பஞ்சசீல ஒப்பந்தத்தின்  60-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு அன்சாரி கலந்து கொண்டுள்ளார்.

 

பஞ்சசீலக் கொள்கையின் 60 ஆண்டு விழாவாக இருந்தால் இந்தியா இதைக் ஏன் கொண்டாடவில்லை?

 

ஒப்பந்தத்தின் 60-ஆண்டு நிறைவு விழா என்றால், ஒப்பந்தம் நிலுவையில் இல்லாத நிலையில், போர் நடந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் எல்லைகள் பிரச்சனைத் தீர்க்கப்படாத நிலையில் சீனா கொண்டாடும் இந்த 60-ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் இந்தியா கலந்து கொள்வது வேதனை தரும் வேடிக்கையாக உள்ளது!

 

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் த.ம. வாக்கிற்கும் நன்றிகள் ஜெயக்குமார்!

      நீக்கு
  2. பஞ்சசீலக் கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டனவோ, இல்லையோ, அது பற்றிய எமது அறிவு கொஞ்சம் புதுப்பிக்கப் பட்டது, உங்கள் கட்டுரை மூலமாக.

    அந்த நாலாவது கொள்கை குழப்புகிறதே!

    பதிலளிநீக்கு