வியாழன், ஆகஸ்ட் 07, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (இறுதிப் பகுதி)

சென்ற இரண்டு பகுதிகளில் முதல் உலகப் போருக்கானக் காரணத்தையும் அதன் நிகழ்வுகளையும் பார்த்தோம். இப்போது இப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில், அமெரிக்கா இந்தப் போரில் நடுநிலையை வகிப்பதாக அறிவித்தாலும், அது நேசநாடுகளுக்கு மறைமுகமாக உதவி வந்தது. அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆயுதங்களையும் மற்ற சாதனங்களையும் வழங்கி வந்தது.  1915-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஜெர்மனால் மூழ்கடிக்கப் பட்டதில், அதன் 1195 பயணிகளும் இறந்தனர். அவர்களில் 128 பேர் அமெரிக்கர்கள். இதனால், அமெரிக்காவும் போரில் ஈடுபடவேண்டும் என்று குரல்கள் எழும்பின. ஆனாலும், அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் அமைதி ஏற்பட முயற்சிகள் எடுத்தார்.

ஆனால் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மன் பிரிட்டனுக்கு எதிராக கட்டுபாடற்ற நீர்மூழ்கி தாக்குதலை அறிவித்தது. இதன் மூலம் பிரிட்டனுக்கு வரும் அனைத்து கப்பல்களும் அது ராணுவ கப்பலாக இருந்தாலும் சரி பயணிகள் கப்பலாக இருந்தாலும் சரி அதை மூழ்கடிக்க முடிவெடுத்தது. தொடர்ந்த நிகழ்வுகளில் அமெரிக்க அதிபர் வில்சன் ஏப்ரல் மாதம் 3-ஆம் நாள், ஐரொப்பாவில் அமைதி திரும்ப தேவைபட்டால் அமெரிக்காவும் போரில் இறங்கும் என்று அறிவித்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி ஜெர்மனுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்த இரு தரப்பினரும் சோர்ந்து போய் இருந்த நிலையில் அமெரிக்காவின் வரவு நேசநாடுகளுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. மேலும், அமெரிக்க வரவினால் நேச நாடுகளுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை பிரயோகிக்கக் கூடிய பொருளாதார பலத்தைக் கொடுத்தது. தொடர்ந்து போரில் பீரங்கி டாங்கிகளும் போர்விமானங்களும் பெருமளவில் உபயோகிக்கப் பட்டன.

ஜெர்மன் கிழக்கில் ரஷ்யாவுடன் பெரும் வெற்றி ஈட்டியிருந்தும் மேற்கில் அமெரிக்கப் படை நேச நாடுகளின் படையுடன் சேரும் முன்னர் அதை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ரஷ்ய வெற்றியின் நாயகனான கமாண்டர் எரிச் லுடெண்டார்ஃப் மேற்கு நோக்கி அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் ஜெர்மன் வெற்றிகள் ஈட்டினாலும் அமெரிக்கப்படையின் வரவையொட்டி ஜெர்மன் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மெல்ல போரின் கோரத்தை மக்கள் உணர ஆரம்பித்தனர். மேலும், ஐரோப்பியா மக்களிடம் அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. மக்களிடம் முடியாட்சிக்கு எதிரான மனநிலை உருவாக  ஆரம்பித்தது. தொடர்ந்து ஜெர்மன் அரசருக்கு எதிராக மக்கள் போராட்டமும் வேலை நிறுத்தமும் செய்தனர்.  தொடர்ந்து 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனின் கடற்படை அரசுக்கு எதிராகத் திரும்பியது; கமாண்டர் லுடெண்ட்ராஃப் பதவி விலகினார். நவம்பர் 9-ஆம் தேதி ஜெர்மன் அரசர் இரண்டாம் கெய்சர் வில்ஹெம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1918 அக்டோபர் 11-ஆம் தேதி இரு தரப்பின் தலைவர்களும் கூடிப் பேசி அமைதி ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லாய்ட் ஜார்ஜ், இத்தாலியின் ஒர்லண்டோ, பிரான்ஸின் க்லெமென்க்யூ ஆகியோர் வுட்ரோ வில்சனுடன் கூடி ஐரோப்பாவில் அரசியல் நிலைத் தன்மையை மீட்கவும் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டையும் தீர்மானித்தனர்.

அதில் அமெரிக்க அதிபர் 14 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அவை...

 
திறந்த ராஜீய உறவு இதன் மூலம் முன்னர் இருந்தது போல் எந்த நாடும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளக் கூடாது.
தடையற்ற கடற்பயணம் கடற்பகுதிக்கு எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது.
ஆயுதக் குறைப்பு எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
காலணி ஐரோப்பாவின் காலணிகளின் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
ரஷ்யா அது விரும்பிய அரசை அது தானே தீர்மாணிக்கவும் அதை மற்ற நாடுகள் அங்கீகரிக்கவும் வேண்டும்.
பெல்ஜியம் பெல்ஜியத்தில் போருக்கு முந்தய நிலை திரும்ப வேண்டும்.
பிரான்ஸ் போரில் ஜெர்மனால் கைப்பற்றப்பட்ட அதன் நிலங்கள் அதற்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும்.
இத்தாலி இத்தாலியின் எல்லை திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
நாடுகளின் சுய நிர்ணயம் ஐரோப்பிய நாடுகள் அதன் மக்களின் விருப்பப்படி சுய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ரொமானியா, மாண்டேநெக்ரோ, செர்பியா மற்ற நாடுகளின் படைகள் செர்பியாவிலிருந்து விலக்கப்பட்டு மத்திய தரைக்கடல் வரை அதன் எல்லை நீட்டிக்கப்பட வேண்டும்.
துருக்கி மக்களுக்கு அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மாணிக்க அனுமதி.
போலந்து தனி நாடாக இயங்க வேண்டும்.                                 
நாடுகளின் கூட்டமைப்பு அமைதியை நிலை நாட்ட அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு நிறுவப் பட வேண்டும்.
 
என்பவையே இதன் முக்கிய அம்சங்கள். இந்த திட்டத்தை முழுமையாக அனைத்துத் தரப்பினரும் ஏற்கவில்லை. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகள் சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பதை பிரான்ஸ் ஏற்க மறுத்தது. அது ஆஸ்த்ரியா ஜெர்மனியுடன் இணைந்தால் தன் இறையாண்மைக்கு அது ஆபத்து உண்டாக்கும் என்று எண்ணியது. பிற்காலத்தில் (ஹிட்லர்) அது உண்மையாகவும் மாறியது. சில அம்சங்களை அனைவரும் ஏற்காவிட்டாலும் ஒப்பந்தம் கிட்டத்தட்ட இந்த அம்சங்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது.

ஜெர்மனி நஷ்ட ஈடாக 6600 மில்லியன் பவுண்டுகள் தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெர்மனியின் படை எண்ணிக்கை ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டது. அது பீரங்கி டாங்கிகள் வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப் பட்டது. அதன் கடற்படை 6 கப்பல்களைக் கொண்டதாக தீர்மாணிக்கப்பட்டது. அதன் விமானப்படை தடை செய்யப்பட்டது.

மேலும், அரசியல் ரீதியாக ஜெர்மனும் ஆஸ்த்ரியாவும் சேர தடை விதிக்கப்பட்டது. ஜெர்மனி கிழக்குப் பகுதியில் வென்ற அனைத்து பகுதிகளும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் பொறுப்பு நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆஸ்த்ரியா வென்ற நிலங்கள் இத்தாலிக்கும் செகோஸ்லோவாகியாவிற்கும் செர்பியவிற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. ஹங்கேரியின் 2.80 லட்சம் ச.கி.மீ நிலம் செகோஸ்லோவாகியா, ரொமானியா, செர்பியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது. பல்கேரியாவின் நிலங்கள் க்ரீஸ், ரொமானியா, யுகோஸ்லேவியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது.

துருக்கி வென்ற பகுதிகள் க்ரீஸிடம் தரப்பட்டது. துருக்கியின் காலணிகள் நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், துருக்கியின் இந்த காலணிகளை பிரிட்டனும், பிரான்ஸும்

அரேபியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.

போரில் தோல்வியுற்றதுமல்லாமல் ஆட்சி அதன் முந்தைய அரசரிடமும் இல்லாமல் இருந்ததால் ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை   வேறு வழியில்லாமல் ஏற்க வேண்டியிருந்தது.
நேச நாடுகள் சார்பில் 3 ½ கோடி வீரர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்ய நாடுகள் சார்பில் 2 ¼ கோடி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்திகளைத் தவிர, 1917-ஆம் ஆண்டு அமெரிக்கா போரில் இறங்கிய போது அதன்  சார்பில் 45 லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

போரில் சுமார் 85 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். 2 ¼ கோடி வீரர்கள் காயமுற்றனர். 75 லட்சம் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.

போரில் உபயோகப்படுத்தப்பட்ட நச்சு வாயுக்களால் 1919-ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் கடும் ப்ளூ ஜுரம் பரவியது. போரின் கோரத்தால் தான் இந்த ஜுரம் பரவியது என்பதை அரசாங்கங்கள் மறைத்து வந்தன. ஆனால், இந்தப் போரில் ஈடுபடாத ஸ்பெயின் இதில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தாராளமாக வெளியிட்டது. தங்களின் தவறுகளை மறைக்க பிரிட்டனும் பிரான்ஸும் இதை ’ஸ்பெயின் ப்ளூ’ என்று கிண்டலடித்தன. தற்சமயம், நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பறவைக் காய்சல் என்ற ‘bird flu’  இந்தப் போரைத் தொடர்ந்து தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

போரைத் தொடர்ந்த 10-12 ஆண்டுகள் ஐரோப்பியா பெரும் உணவுப் பஞ்சத்தையும் அதனால் விலைவாசி ஏற்றத்தையும் சந்தித்தன.

சென்ற பதிவுகளில் கூறியது போல் முதல் உலகப் போரை பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரித்து வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும். ஐரோப்பிய ஊடகங்களும் இந்தப் போரை ’எல்லா சச்சரவுகளையும் தீர்த்துவைக்கப் போகும் போர்’ என்றே நம்பினார்கள்.

இந்தப் போரினால் ஏற்படப் போகும் அழிவையும் அதன் கோரத்தையும் அவர்கள் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.

இவையனைத்திற்கும் மெலாக போரில் தோல்வியுற்ற ஜெர்மனி தனிமைப் படுத்தப்பட்டதால் அதையே தன் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் அடுத்தொரு பெரிய போருக்கு அஸ்திவாரம் போடுவான் என்பதை யாராலுமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழி எல்லாவற்றிர்கும் பொருந்தாது. போரைப் போரால் தடுக்க முடியாது.

இனியாவது பாரதி தாசன் கூறியது போல்…

 
புதியதோர் உலகம் செய்வோம்
         கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்… 

2 கருத்துகள்:

  1. இணையத்தில் முதல் உலகப் போரைப் பற்றி தமிழில் இவ்வவளவு விரிவாக வேறு எங்கும் படுத்ததில்லை. நல்ல முயற்சி அப்படியே இரண்டாம் உலகப் போரைப் பற்றியும் தொடரவும்.
    இது போன்ற பதிவுகள் எக்காலத்திலும் படிக்கக் கூடியவை.

    பதிலளிநீக்கு