திங்கள், ஜூலை 13, 2015

உட்கோட்டு அனுமதிச் சீட்டு (Inner Line Permit)


சென்ற வாரம் மணிப்பூரில் ‘உட்கோட்டு அனுமதிச் சீட்டு’ முறையை அம்மாநிலத்தில் நடைமுறைப் படுத்தக் கோரி எழுந்தப் போராட்டத்தில் ஒரு மாணவர் உயிர் இழந்த்தாகச் செய்திகளில் படித்தோம்.


அந்த ‘உட்கோட்டு அனுமதி’ என்றால் என்ன?

ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய/செல்ல, ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். குறிப்பாக, இது இந்தியாவின் சில வடகிழக்கு  மாநில எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வழங்கப்படும் அனுமதியைக் குறிக்கும்.

இந்தச் சீட்டு வெறும் நுழைவு/பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. சாதாரணமாக, 15 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு.
                                          
வரலாற்றின் அடிப்படையில் இந்த அனுமதி, 1873-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு  தனது தேநீர், எண்ணெய், யானை தந்தம், காண்டாமிருக கொம்பு மற்றும் தோல் ஆகிய தொழில்களுக்குப் போட்டியாக பிற ஆங்கில நிறுவனங்கள் மற்றும் தனியார் வருவதைத் தடுக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்ட ‘வங்க எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறை’யின் மூலம் மிசோரம், நாகாலாந்தின் மலைப்பகுதிகளான சின், லுஷாய் மற்றும் நாகா குன்றுகளில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கியதில் இருந்து துவங்கியது. பின்னர், இது மற்ற வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் செயல் படுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்குப்பின், 1950-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் சட்டத்தில் ’பிரிட்டிஷார்’ என்ற வார்த்தையை அகற்றி ‘இந்திய குடிமகன்’ என்று மாற்றப்பட்டு அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் மணிப்பூர் மட்டும் சேர்க்கப்படவில்லை.


இதற்கு முக்கிய காரணம் ஆங்கில அரசைப் பொறுத்தவரை இந்த அனுமதி வணிக அடிப்படையைக் கொண்டது. ஆனால், இந்திய அரசு இதை நடைமுறைப் படுத்தக் காரணம் இப்பகுதியைச் சேர்ந்த ஆதிகுடிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமை. மற்ற முன்று மாநிலங்களிலும் பெரும்பலான மக்கள் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆதிகுடிகள். தவிர, இந்த மூன்று மாநிலங்களும் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருந்தவை.

ஆனால் மணிப்பூரைப் பொறுத்தவரை அது நேரடியாக பிரிட்டிஷாரின் ஆட்சியில் இல்லாமல் தனி சமஸ்தானமாக அரச பரம்பரை வழியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இதன் பெரும்பான்மை மக்கள் மலைவாழ் ஆதிகுடிகள் அல்லர். மேலும், மணிப்பூரின் முன்னாள் அரசர் சௌரசந்தர் நேபாள இளவரசியை மணந்தவர். அதனால், பெருமளவில் நேபாள இனத்தவரும் இங்கு குடியேறி வசித்து வருகின்றனர். (சமீப காலமாக நேபாள இனத்தவர்கள் நாகா, மெய்தி, குகி இனத்தவர்களால் தாக்கப்படுவதால் இங்கிருந்து வெளியேறி டார்ஜிலிங்கில் குடியேறி வருகின்றனர்.)  எனவே, மணிப்பூரில் இந்த அனுமதி சீட்டு முறை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

ஆனால், சமீபகாலமாக மணிப்பூர் மாநில மக்களிடம் இந்த முறையைக் கொண்டு வர  கோரிக்கை எழும்பியுள்ளது. இதற்காக, அவர்கள் FREINDS என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்; இது பிராந்திய  பழங்குடிச் சமூகங்களின் கூட்டமைப்பு (Federation of Regional Indigenous Societies) என்பதன் சுருக்கமே.

இந்த உட்கோட்டு அனுமதியின் தேவைக்கு அவர்கள் கூறும் காரணங்கள் :

சுதந்திரத்திற்குப் பின் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு. மேலும், பங்களாதேஷ், மயன்மார் (பர்மா) போன்ற இடங்களிலிருந்தும் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களும் நடக்கிறது. இதனால், அம்மண்ணின் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் போட்டி. வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் குடியுரிமையும் பெற்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றது நடந்துள்ளது. இவ்வாறு, வெளியிலிருந்து வரும் மக்கள் இவர்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டையும் முறைகேடாக அனுபவிக்கிறார்கள். மேலும், வெளி மக்களால் இவர்களின் மொழியும் கலாச்சாரமும் பாதிப்படைவதையும் குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர, போதைப் பொருள், பாலியல் வன்புணர்வு (இதன் பின்னணியில் சில மாதங்களுக்கு முன் நாகாலாந்தில் சிறைச்சாலையை உடைத்து ஒருவரை பொதுவெளியில் காவு கொடுத்த நடவடிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது), அதிகரிக்கும் HIV தொற்று (மணிப்பூர் இந்தியாவில் முதல் ஆறாவது இடத்தில் உள்ளது) ஆகிய சீர்கேட்டிற்கும் வெளி மக்கள் தான் காரணம் என்று நினைக்கின்றனர்.

மேலும், மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் போன்ற மற்ற வட கிழக்கு மாநிலங்களில் இது நடைமுறையில் இருக்கும் பொழுது இவற்றுக்கு நடுவில் உள்ள இந்த மாநிலத்தில் மட்டும் நடமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்க முடியாது என்பதையும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக AFSPA மூலம் இந்திய ராணுவம் மற்ற மாநிலங்களையும் சேர்த்து இங்கு இருப்பதை (இதற்கு எதிராக ஐரோம் ஷர்மிலா நவ-2, 2000 முதல் உண்ணா நிலை போராட்டம் நட்த்துவது நாம் அறிந்த்தே!) நியாயப் படுத்தும் பொழுது, இந்த அனுமதி மறுப்பதை அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமாகப் பார்க்கின்றனர்.
ஆனால் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. சாதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவம் போன்ற பயிற்சி பெற்ற தொழில் முறை பணியாற்றுபவர்கள் குறைவு. பிற மாநிலத்தவர் குடியேற்றம் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிகழ்வதே! (குறிப்பாக பீகார், ஒரிசா போன்ற மாநிலத்தவர்கள் பஞ்சாப், மகாராக்ஷ்ட்ரம், டெல்லி, தமிழ்நாடு, பெங்களூர் போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களில்/நகரங்களில் குடியேறுகின்றனர். அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்கள் போன்ற கோரிக்கைகள் எழுந்தாலும்  அவை சிறிய அளவிலேயே உள்ளன). எனவே இதை அனுமதித்தால் மற்ற மாநிலங்களும் இது போன்ற கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.  தவிர சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டவர் குடியேற்றத்திற்குக் காரணம் மோசமான நிர்வாகமே. இதை இந்த உட்சீட்டு அனுமதியால் மட்டுமே சீர்செய்ய முடியாது.

சென்ற வருடம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்த பொழுது

2010-ஆம் ஆண்டு மத்திய அரசு (உள்துறை) இதை நடைமுறைப் படுத்த முடியாது என்று அறிவித்தது.

2012-ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில சட்டசபை இந்திய அரசுக்கு இந்த முறையை கொண்டுவரக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு தன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை.


இந்தக் கோரிக்கைத் தற்போது மேகாலயா-விலும் எழுந்துள்ளது. 

4 கருத்துகள்: