திங்கள், மே 01, 2017

உழைப்பாளர் தினம்

மேதினி உயர்ந்திட உழைப்பவரை
மேதினம் தனிலே வாழ்த்திடுவோம்

உடலே விதையாக விதைத்திட்டார்
உழைப்பே உரமாகத் தூவிவிட்டார்
வியர்வை நீராகத் தெளித்திட்டார்
முயற்சியே ஏராக  உழுதிட்டார்

எண்ணமே வினையாகப் புரிந்து நின்றார்-மனத்
திண்ணமே துணையாக இருந்திருந்தார்
சன்னமும் சோர்வின்றிக் காத்து நின்றார்
இன்னமுன் பல வேலைப் பார்த்து வந்தார்

கையிலே பெருவேலைத் திறனிருந்தும் - பிறர்
பையிலே  பெருந்தனந்தான் சேருதிங்கே
பொய்மையே மிக நிறைந்த புவனியிலே
உழவுக்கும்  தொழிலுக்கும் நிந்தனையோ?

தனியொருவன் பசி போக்க ஜகமழிக்கச்
சொன்னவனின் தேசத்திலே - உழவு
பணிபுரியும் தொழிலாளி பட்டினியால்
மடிவதுவும் நியாயம் தானோ?

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு- அவர்
செய்தொழிலை தினம் நாமும் போற்றிடுவோம்
தொழிலாளி தன் தேவைக் காத்திடுவோம்- அவர்
உய்திடவே உபாயங்கள் செய்திடுவோம்.

நெற்றி வேர்வை நிலம் சேர்ந்து காயும் முன்னே
சுற்றந்தன் தேவை தீர்க்கும் கூலி பெறும்
சட்டம் தனைத் திறம்படவே செயலாக்கும்
திட்டமொன்று சீராகச் செய்திடுவோம்

எட்டு போகம் விளைந்த நிலம் தரிசாக
ஓட்டு துணி கட்டி தினம் அவர் வாட
மெத்தனமாய் கண்மூடி தவிர்த்திடாத
வித்தக தலைமையை நாம் தேர்ந்தெடுப்போம்

உழவையேத் தொழிலாகக் கொண்டவர் தம்
உரிமையை மீட்டெடுக்கச் செய்திடுவோம்.

4 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. பாராட்டுக்கள்.

    மே தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மே தின சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இரமணி

      நீக்கு