புதன், ஜூலை 25, 2012

புலிகளின் கா(த)வலர்

முப்பது வருடங்களில்  19 புலிகள் 14 சிறுத்தைகள் ஆகியவற்றைக் கொன்ற ஒருவனை நாம் என்ன செய்யலாம்?...

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனை கொடுத்து ஆயுள் முழுதும் சிறையில் தள்ளலாமா?...

அது தான் இல்லை. ஏனென்றால், அந்த மனிதனுக்கு வேறு முகம் இருக்கிறது…இந்தக் கொலைகளுக்கான காரணமும் இருக்கின்றன. அவைதான் ஆயிரக்கணக்கன மனித உயிர்கள். ஆம்… இவர் கொன்றது அனைத்தும் Man-eaters.

இந்தியாவின் பாரம்பரிய இடங்களின் (29) பட்டியலில் மனிதனால் உருவாக்கப்படாத இயற்கை இடங்கள் ஐந்து உண்டு. அவற்றில் முக்கியமானது ஜிம் கா(ர்)பெட் தேசிய வனவிலங்குப் பூங்கா. இது வட இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தின் நைனிதால் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்தப் பகுதியை குமாவ்(ன்) மலைப்பகுதி என்று கூறுவர்.முதலில் ஹெலி தேசிய பூங்கா என்று மால்கம் ஹேலி பிரபுவின் பெயரால் அழைக்கப்பட்டு வந்த இதன் பெயர் 1957-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1908) இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு புலி 459 பேரைக்  கொன்றது. அப்பொழுது, அப்புலியை அடக்க/கொல்ல வரவழைக்கப் பட்டவரின் பெயர் ‘ஜிம் கா(ர்)பெட்’. மேலே குறிப்பிடப்பட்ட அந்த வேட்டைக்காரர் ஜிம் தான். ஜிம் தன் உயிரையும் பொருட்படுத்தாது அதை வேட்டையாடினார். தொடர்ந்து அவர் ருத்ரப்ரயாகில் பத்ரிநாத-கேதார்நாத் பகுதிகளில் பயணிக்கும் சுமார் 400 பேரைக் கொன்ற சிறுத்தையையும் கொன்றார். தொடர்ந்து பல இடங்களில் பல புலி/சிறுத்தைகளை (Man-eaters) வேட்டையாடியுள்ளார்.

புலிகளையும் சிறுத்தைகளையும் (Man-eaters–ஆக இருந்தாலும்) கொன்றது மட்டுமே இவரது சாதனைகளா? அதற்காக இந்தியாவில் முதல் தேசிய வனவிலங்கு பாதுகாப்பிற்காக அதிலும் புலிகளைப் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இடத்திற்கு பெயர் மாற்றம் செய்யும் அளவிற்கு என்ன தேவை?

இன்றைக்கு இந்தியாவில் புலிகள் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. 20 நூற்றாண்டின் ஆரம்பங்களில் நிலைமை இவ்வாறு இல்லை. உலக அளிவிலேயும் சுற்றுச் சூழல் வனவிலங்கு பராமரிப்பு ஆகியவை யாராலும் எடுத்துரைக்கப் படாத நிலைதான். இச்சமயத்தில் தான், ஜிம் கா(ர்)பெட் புலிகளை வேட்டையாடுவதை மட்டுமே தன் தொழிலாகக் கொள்ளாமல் அதற்கானக் காரணங்களை ஆராயமுற்பட்டார். புலிகளை வேட்டையாடும் முன் அவற்றின் பழக்கங்களை கண்டிறிந்து கொல்லாமல் அவற்றை பிடிக்கவும் பராமரிக்கவும் முயன்றும் பார்த்துள்ளார். தவிர்க்க இயலாத நிலைகளிலேயே அவற்றைக் கொன்றுள்ளார். அவை இறந்த பின்னும் அவற்றின் உடல்களை அறிவியல் முறையில் ஆராய்ந்தார். அவை மனிதக் கொல்லிகளாக மாறும் காரணத்தையும் கண்டறிந்தார்.

சாதாரண புலிக்கும் Man-eaters-கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண புலிகள் (அல்லது சிறுத்தைகள்) மனித நடமாட்டம் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து வேறு இடங்களில் வாழும். மனிதர்களைப் பார்த்தால் பெரும்பாலும் காட்டிற்குள் ஓடிவிடும். ஆனால், மனிதர்கள் தொடர்ந்து காடுகளுக்கு ஊடுருவும் பொழுது அல்லது இந்தப் புலிகளைத் தாக்க முற்படும் பொழுது இவையும் திருப்பித் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. காயமடைந்த புலிகளும் விலங்குகளை வேட்டையாட முடியாத அல்லது விலங்குகள் கிடைக்காத புலிகளும் மனிதர்களைத் தாக்கும். (மற்ற விலங்குகளை விட மனிதர்களைத் தாக்குவது எளிது). ஒருமுறை மனித ரத்தத்தை ருசித்த இவை தொடர்ந்து அவற்றைத் தேடி நாட்டிற்குள் புகுந்து Man-eaters ஆகிவிடுகின்றன.

இவற்றை அவர் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தார். அவரால் வேட்டையாடப்பட்ட ருத்ரப்ரயாகை சிறுத்தையின் உடலில் வேறு இரண்டு குண்டுகள் இருந்தன. அதனால் ஏற்பட்ட காயம் புரையோடி போகும் அளவிற்கு இருந்தது. தன் அனுபவத்தைக் கொண்டு, வனவிலங்களைத் தனியே பராமரிக்கும் அவசியத்தை அரசுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பகுதி மக்களுடன் தங்கி அவர்களுக்கு வன பராமரிப்பின் அவசியம் மற்றும் புலிகள் மட்டுமல்ல மற்ற வனவிலங்குகளின் பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி நேரடியாக விளக்கியுள்ளார். இப்பகுதி மக்கள் அவரை ஒரு யோகியாகவே பார்த்தனர்.

வனவிலங்குகளுடனுன் தனக்கான அனுபவங்களை அவர் புத்தகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
  • Man-eaters of Kumaon.
  • The Man-eating Leopard of Rudraprayag
  • My India.
  • Jungle Lore.
  • The Temple Tiger and more man-eaters of Kumaon
  • Tree Tops.
  • My Kumaon: Uncollected Writings.
தவிரவும் அவரைப் பற்றி Jim Corbett's India - Selections by R.E. Hawkins என்ற புத்தகமும் உள்ளது. ’Man-eaters of Kumaon ’ ஹாலிவுட் படமும் வெளியாகியுள்ளது. (ஆனால், இதில் அவர் எழுதிய சம்பவமோ அல்லது அவரைப் பற்றியோ எதுவும் இல்லை. இப்படத்தைப் பார்த்த ஜிம் இதில் புலி மட்டுமே நடித்துள்ளது என்று வேடிக்கையாக்க் குறிப்பிட்டிருந்தார்).  
அவரின், நீண்ட பல கால முயற்சிக்குப் பின் முதலில் இந்த தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. 1955-ல் அவரது மறைவுக்குப் பின், இந்திய அரசு இந்த பூங்காவிற்கு அவரின் பெயரை வைத்தது.

இன்று (ஜூலை 25) அவரின் பிறந்த நாள். இதையொட்டி, இவ்வருடம் அமர்சித்ரகதை குழுமம் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவரைப் பற்றி புதிதாக 45 பக்கங்களைக் கொண்ட காமிக்ஸ்-ஐ வெளியிட்டுள்ளது. (விலை 50 ரூபாய்).

இதனால் வனவிலங்குகள் பராமரிப்பு பற்றி நம் குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வு கிட்ட வாய்ப்பு இருக்கிறது.

அமர்சித்ரகதை குழுமத்திற்கு நன்றிகள்…

9 கருத்துகள்:

  1. ஜிம் அவர்களை அவரின் பிறந்த நாளன்று ஞாபகம் வைத்து நினைவு கூர்ந்தது பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  2. நன்று! நன்று! இதுவரை தெரியாத பல விபரங்கள். ஜிம் கார்பெட் என்றாலே, ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணம் மட்டுமே எழுகின்ற வேளையில், அதன் பின்னால் இவ்வளவு வரலாறு இருப்பதை தெரியப்படுத்துகிறீர்கள். வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து, வாழ்த்திற்கு நன்றிகள். இது போன்ற விவரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் அமர்-சித்ர கதை குழுமத்திற்குத் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  3. அற்புதமான எழுத்து ஏதோ ஆராய்சிக் கட்டுரை படித்தது போல் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆராய்சிக் கட்டுரை படித்தது போல்//
      ஓ... ஒன்னும் புரியலையா...:-)

      வருகைகு நன்றிகள்

      நீக்கு
  4. வருகைக்கு நன்றிகள் மோகன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கட்டுரை சீனு. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் தான் ஜிம்.... வேட்டையாடி வேட்டையாடி புலிகளை ஒழித்து விட்டவர்களில் இருந்து இவர் மேலானவர்.

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  6. உங்கள் விருப்பத்தை எதிர்பார்த்து ஒரு பதிவு ... படித்து உங்கள் உங்கள் விருப்பம் கூறுங்கள்
    http://seenuguru.blogspot.in/2012/07/blog-post_27.html

    பதிலளிநீக்கு