வெள்ளி, செப்டம்பர் 14, 2012

தராடம்


56 புராதன தேசங்களின் வரிசையில் காம்போஜத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது தராடம். 

 

2.  தராடம் (Daradam)

இது தற்போதைய பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள வடக்குக் காஷ்மீர பகுதியாகும். இதன் தலைநகர் கல்லதா. இது, தற்போது கில்கிட் (Gilgit) என்று அழைக்கப்படுகிறது. இது முன் காலத்தில் பட்டு வணிகப் பகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, சீன மற்றும் காஷ்மீர பட்டு வணிகம் நடைபெற்று வந்துள்ளது.

 

வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், வாமன புராணங்களில் இந்த தராட தேசம் காம்போஜ காஷ்மீர நாடுகளின் அண்டை நாடாகக் குறிப்பிடப்படுகிறது.

 

மஹாபாரதத்தில், இது ஒரு ஹிமவாத (இமயமலை) பிரதேசமாகக்  குறிப்பிடப்படுகிறது. சபா பர்வத்தம், யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் நடத்திய பொழுது வட இந்திய பகுதிகளில் அர்ஜுனன் தலைமையில் சேனையை அனுப்பியதாகக் கூறுகிறது. [பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும் சகாதேவன் தெற்கிலும் சென்றார்கள்] அதில், அர்ஜுனன், பனிஹல் கணவாய் வழியாக காம்போஜர்களின் தலைநகராகக் குறிப்பிடப்படும் சிம்ஹபுரம் வரை வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. (பனிஹல் கணவாய் தற்போது ஆஃப்கானிஸ்தான் – தஜாகிஸ்தான் பகுதியில் இருக்கிறது.) விஜயனின் இந்த வட நாட்டு விஜயத்தின் முக்கியத்துவமே ராஜசூய யாகத்திற்கு பொருள் சேர்ப்பதுதான். சிம்ஹபுரி அந்த காலத்தில் முக்கிய வணிக நகரமாக இருந்துள்ளது. இந்த பாதையே உலகின் பட்டு வணிகப் பாதையின் மையமாகக் குறிக்கப்படுகிறது. சீனாவில் தயாராகிய பட்டுத் துணிகள் மற்றும் ஆடைகள் காம்போஜம் வந்து அங்கிருந்து தராடம் வழியாகத் தான் இந்தியா வந்துள்ளது. இந்த விஜயத்தின் பொழுது அர்ஜுனன் பெரும் பொருள் திரட்டியதினாலேயே அவனுக்கு “தனஞ்ஜயன்” என்ற சிறப்புப் பெயர் கிட்டியது.

 

அதே போல், துரோண பர்வதத்தில் கிருஷ்ணர் வென்றதாகப் பட்டியலிடப்படும் நாடுகளிலும் இது குறிப்பிடப்படுகிறது. மேலும், யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் பரிசளித்தவர்களிலும், மஹாபாரதப் போரில் துரியோதனன் சார்பில் போரிட்டவர்களிலும் தராடம் குறிப்பிடப் படுகிறது.


 

தராடம் தனி தேசமாகக் குறிப்பிடப்பட்ட போதிலும்,  காம்போஜம் போன்றோ அல்லது காந்தாரம் போன்றோ இந்த தேசத்திற்கு பெரிய அளவில் குறிப்புகள் இல்லை. குறிக்கப் படும் இடங்களிலும் இந்த தேசத்தின் அரசன் பெயரோ அல்லது அரச வம்சத்தின் பெயரோ குறிப்புகளில் இல்லை. ஆனாலும் இது தனி தேசமாகவே கருதப் பட்டு வந்துள்ளது.

 

தராடர்களைப் பற்றி திபெத்தியரின் முக்கிய புத்தகங்களிலும் காஷ்மீர தேச வரலாற்றைக் கூறும் 'ராஜ தரங்கினி'யிலும் குறிப்புகள் உள்ளன.

 

காஷ்மீரத்தின் டர் (Dar)  வம்சத்தினர் இவர்களின் சந்ததியாகக் கூட இருக்கலாம். அதே போல் சந்திர வம்ச ஜாட்-களிலும் தராட் (दराड) கோத்திரம் என்று உண்டு; அதனால், அவர்களும் இந்த வம்சத்தினர் என்ற கருத்தும் உண்டு. ஜாட் வீர கதைகளில் திலிப் சிங் அஹ்லாவத், ஜாட்கள் மத்திய ஆசியா வரை ஆண்டதாகக் கூறுவார். அவர்கள், தராதர தேசத்தை மையமாகக் கொண்டு ஆண்டிருந்தால் இதற்கு சாத்தியம் உண்டு. [ஏனென்றால் காம்போஜத்தின் வடபகுதி மத்திய ஆசியாவை ஒட்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த தராத மன்னன் காம்போஜத்தை வென்றிருக்க சாத்தியம் உண்டு என்பதே.]

 

சாணக்கியரின் ‘அர்த்த்சாஸ்த்திர’த்தில், காம்போஜப் பகுதியில்  ஒரு மன்னனின் தலைமையில் இல்லாமல் ஒரு குழுவின் தலைமையில் (மந்திரிகளின் தலைமையில் Limited Monarchy-ஆக இருக்கலாம்) அரசு நடந்ததாகக் குறிக்கப் பட்டுள்ளது. ஒருவேளை, அது இந்த தராட தேசப் பகுதியாக இருந்திருக்கலாம்.

 

8 கருத்துகள்:

  1. காமபோஜம் பற்றியாவது கொஞ்சம் கேள்விப்பட்டதுண்டு நான். இந்த தராடம் பற்றிய விவரங்கள் அனைத்தும் முற்றிலும் புதிது எனக்கு. அருமையான தகவல்களுக்கு நன்றி. 56 புராதன தேசங்களையும் எழுதி தொகுத்து வாருங்கள். பின்னாளில் புத்தகமாக வெளியிட வேண்டும் அவசியம். தொடர்கிறேன் நானும்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றிகள்.

    முதலிலேயேத் தொடராக எழுத வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால், சில தகவல்கள் திரட்டுவதற்காக புத்தகங்கள் தேடுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. எத்தனை முடியும் என்று பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  3. புராண இந்தியாவின் தேசங்களைப் பற்றிய தொடர் எழுதுவது சாதாரண் பணியன்று.அந்தப் பணியை அழகாகச் செய்திருகிரீர்கள்.தொடர்க. தராடம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தொடரட்டும் பதிவுகள்.... தராடம் - கேள்விப்பட்டதில்லை....

    த.ம. 3

    பதிலளிநீக்கு
  5. புதுத் தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு