செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா




Once in a Blue Moon என்று ஆங்கிலத்தில் ஒரு செலவடை உண்டு. மிகவும் அரிதான நிகழ்வுகளுக்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவர்.

வானவியல் ஆர்வலர்களைப் பொறுத்தவரை இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதுமே அது போன்ற ஏதாவது நிகழ்வுகள் நடந்து வந்துள்ளன.

இந்த மாதம் நாசா-வின் ‘க்யூரியாசிட்டி’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி அங்குத் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27), செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகம் மிகப் பெரிதாகத் தெரியும் (கிட்டத்தட்ட இன்னொறு நிலாப் போல) என்றும் இது 60000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வென்றும் hoax மின்னஞ்சல் வலைகளில் உலாவரத் துவங்கியது. வான்வியலில் பொதுவாக ஆர்வமுள்ளவர்களுக்கு இது சாத்தியமில்லை என்பது புரிந்தாலும் பொதுமக்களில் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் இருந்த்து.

செவ்வாயைப் பொறுத்தவரை அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக வந்தது 2003-ஆம் ஆண்டு (ஆகஸ்ட் 27 தான்); அதுவும் சுமார் 3.60 கோடி மைல்கள் / 5.60 கோடி கி.மீ தூரத்தில். அதன் நீள்வட்ட பாதையில் பூமியும் செவ்வாயும் இதைவிட சற்றேறக் குறைய 1000 கி.மீ வரை நெருங்கிவர சாத்தியம் இருக்கலாம். செவ்வாய் நிலா அளவு பெரிதாகத் தெரிய வேண்டுமானால், அது பூமியிலிருந்து நிலா இருக்கும் தூரத்தைவிட (சந்திரன் பூமியிலிருந்து சுமார் 2.40 லட்சம் மைல் தொலைவில் இருக்கிறது) இருமடங்கு தூரத்தில் அதாவது 5 லட்சம் மைல்களுக்குள் இருந்தால் தான் சாத்தியம்.

ஆனால் இந்த மாதம் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரு கோள்களும் மிக அருகில் வந்தன. 14-15-ம் தேதி சமயத்தில் சந்திரனும் அதன் அருகில்  வர மிக நல்ல காட்சிகள் காணக் கிடைத்தன. [இப்பொழுதும் மாலை நேரங்களில் சூரியன் மறைந்து 90 நிமிடங்கள் வரை வெள்ளி, செவ்வாய் இரண்டையும் மேற்கு-தென்மேற்குப் பகுதியில்  10 டிகிரி வித்யாசத்தில் காணமுடியும்; வெள்ளி சற்று ஜொலிப்பாகவும் செவ்வாய் ஆரஞ்சு நிறத்திலும் நட்சத்திரம் அளவிற்கு இருக்கும்]

அதே போல சென்ற மாதம் ஒரு நட்சத்திரம் (‘BD+48 740’ என்று குறிப்பிடப்படுகிறது) அதன் கிரகத்தை விழுங்குவதை [நட்சத்திரம் மெல்ல எரிந்து அதன் எரி பொருள்கள் தீர்ந்துவிடும் நிலையில் அருகிலுருக்கும் அதன் கோள்களை விழுங்கி நாளடைவில் கருந்துளையாக மாறும் – அதற்கு சில ஆயிரம் வருடங்கள் ஆகும்] முதல் முறையாக படம் பிடித்துள்ளார்கள்.

மேலும் ஒரு சோக நிகழ்வாக நிலவில் முதன் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்-இன் மரணம் நிகழ்ந்தது. ஆனால், அது நிலவு பயணத்தைத் தொடர்ந்த செவ்வாய் பயணக் கனவை ஆராய்சியாளர்களிடம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலவில் 12 பேர் காலடி வைத்துள்ளனர். அவர்கள்….
1.              நீல் ஆம்ஸ்ட்ராங்           1969  அப்பொலோ-11
2.              பஸ் அல்ட்ரின்               1969  அப்பொலோ-11
3.              சார்லஸ் பீடே கனார்ட்   1969  அப்பொலோ-12
4.              அலன் பீன்                    1969  அப்பொலோ-12
5.              அலன் ஷெபெர்ட்          1971  அப்பொலோ-14
6.              மிட்செல் எட்கர்              1971  அப்பொலோ-14
7.              டேவிட் ஸ்காட்              1971  அப்பொலோ-15
8.              ஜேம்ஸ் இர்வின்            1971  அப்பொலோ-15
9.              ஜேம்ஸ் யங்                             1972  அப்பொலோ-16
10.           சார்லஸ் ட்யூக்                1972  அப்பொலோ-16
11.           யூகென் செரெமன்          1972  அப்பொலோ-17
12.           ஸ்கிமிட் ஹைரிசன்        1972 அப்பொலோ-17
                        
இதுவரைச் சொன்னதெல்லாம் Once in a Blue Moon  என்று எப்பொழுதாவது நிகழும் நிகழ்வுகள். ஆனால், அந்த செலவடையின் அசல் நிகழ்வு வரும் 31-ஆம் தேதி நிகழ்கிறது.

ஆம்! இந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிகழும் முழுநிலவு ‘நீல நிலவு’ என்றே அழைக்கப்படும். ஒரே மாதத்தில் (ஆங்கில மாதம்) இருமுறை முழுநிலவு நிகழ்வதை ‘நீல நிலவு’ என்றே அழைக்கிறார்கள். இந்த Once in a Blue Moon என்ற செலவடையும் கிட்டத்தட்ட இந்த நிகழ்வுகளிலிருந்தே உண்டானது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு வருடத்தின் நான்கு பருவக்காலங்களில் (கிழக்கில், இந்தியாவில் தான் 6 பருவக்காலங்கள்!! மேற்கு நாடுகளில் நான்கு பருவங்கள் தான்), சாதாரணமாக மூன்று மூன்று முழுநிலவுகள் நிகழும் நிலையில், ஏதாவது ஒரு பருவகாலத்தில் நான்கு முழுநிலவுகள் வந்தால் அதைத் தான் ‘நீல நிலவு’ என்று அழைத்து வந்தார்கள். காலப்போக்கில் இது ஒரு மாதத்தில் இரு முழு நிலவுகள் நிகழ்வதைக் குறிப்பதாக மாறிவிட்டது.

11 கருத்துகள்:

  1. நீல நிலா பற்றி, அழகாக,
    தெளிவாக, தெரிந்துகொள்ளவேண்டியதை
    வான இயல் படித்திராதவருக்கும் புரியும் வகையில்
    எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் நிலவில் இறங்கியயவர்களிப் பற்றித்தான் அறிந்திருக்கிறேன்.அதன் பின்னர் நில்வுக்குச் சென்றவர்கள் பட்டியல் அருமை.நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவுகள் வித்தியாசமாகத்தான் உள்ளன

    பதிலளிநீக்கு