வியாழன், ஜனவரி 24, 2013

ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம்


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இராகுல் காந்தி நியமிக்கப்பட்டது அரசியலில் வியப்பாகக் கருதப்படவில்லை. பல நாட்களாகவே காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ ஏதேனும் பொறுப்பை ஏற்க கட்சியின் பல்வேறு நிலைகளிலிருந்துக் கோரிக்கை எழுந்த வண்ணமே இருந்து வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இராகுல் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் –  தன் நேரு-காந்தி குடும்பப் பின்னணியை வைத்து – தனக்கு நெருக்கமானவர்களுக்கும் தான் விரும்பியவர்களுக்கும் கட்சியிலும் அரசிலும் பதவியும் பொறுப்புகளும் வழங்கியே வந்துள்ளார். அதனால், இந்த அறிவிப்பால் இராகுலுக்கு புதிதாகக் கிடைக்கப் போவது எதுவுமில்லை.

மாறாக, கட்சியின் தினசரி நடவடிக்கைகளிலும் பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலையை பிரதிபலிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்குக் கூடியிருக்கிறது. கூடுதலாக அடுத்த ஆண்டு நட்க்க இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் தற்போதையச் சரிவைத் தடுத்து நிறுத்தி வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் சேர்ந்துள்ளது. இதுவரை நடந்தத் தேர்தல் தோல்விகளுக்கு அந்தந்த மாநில தலைமையைக் குறைக் கூறியது போல பொறுப்பைத் தட்டிக் கழித்து விட முடியாது.

ஆனால், இதுவரை இராகுல் கடந்த தேர்தல்களில் தன் நாடாளுமன்றத் தொகுதியில் (அது காலங்காலமாக அவர்கள் குடும்பத்தினராலேயே ஆளப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி தான்) தொடர்ந்து வெற்றிப் பெற்றதைத் தவிர சிறப்பாக வேறு எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை. மாநிலத் தேர்தல்கள் எதிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க முடியவும் இல்லை. இரண்டாம் முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைமைக்க பாஜக சரியான போட்டியைக் கொடுக்கவில்லை / கொடுக்கும் நிலையில் இருக்கவில்லை என்பது தான் காரணமேயன்றி இராகுலின் பங்கு அதில் எதுவும் இல்லை.

பொது பிரச்சனைகளிலும் அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இளைஞர் சக்தியை அவர் பிரதிபலிப்பதாகக் கூறுவதும் ஒரு பிரமையே. கடந்த ஆண்டில் தில்லியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கு பெற்ற இரண்டு முக்கியப் பிரச்சனையில் அவர் பங்கு எதுவுமில்லை.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த லோக்பால் போராட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர் பேசிய போது லோக்பாலை அரசியலமைப்பு சட்ட்த்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறினார். ஆனால், அதன் பிறகு லோக்பால் சட்ட மசோதாவிலோ அல்லது அதைச் செயல்படுத்தும் விதத்திலோ அவர் எதுவுமே செய்யவில்லை. ஆண்டின் கடைசியில் பாலியல் வன்முறைக்கு எதிரானப் போராட்டின் போது அவர் வெளியில் தலைக் கூடக் காட்டவில்லை.

அவர் இருக்கும் தலைநகரிலேயே இளைஞர்களிடம் அவருக்குத் தொடர்பில்லாமல் இருக்கும் பொழுது நாடு முழுவதும் இளைஞர்களின் பிரதிநிதியாக அவர் எப்படி இருக்கமுடியும் என்பது கேள்விக் குறியே!

இருந்தாலும் எந்த நேரு-காந்தி குடும்ப பின்னணியை வைத்துக் காங்கிரஸ் கட்சி குறைக் கூறப்படுகிறதோ அதே நேரு-காந்தி குடும்பம் தான் கடந்த 10-15 ஆண்டுகளாக அக்கட்சியைச் சிதறாமல் ஒருங்கிணைக்கும் ஒரு காந்தமாகக் கட்டி வைத்துள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் அதாவது சோனியாவின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னால் அது தமிழகத்தில் தமாக, மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், வங்கத்தில் திரிணாமுல் என்று பிரிந்தது போல் மற்ற மாநிலங்களிலும் பிரிந்திருக்கும். பாஜாக-விற்கு ஆர்.எஸ்.எஸ் என்னும் காந்தம் இருப்பது போல் காங்கிரஸுக்கு இந்த நேரு-காந்தி குடும்பம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்றக் கட்சிகள் எதுவும் குடும்ப அரசியல் செய்யாமல் இருக்கவில்லை என்பது தான் உண்மை. பாஜக-வும் சங் குடும்பம் (ஆம், இந்தியில் பரிவார் என்றால் குடும்பம் என்று தான் பொருள்) சொல்படி நடக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.

எனவே, காங்கிரஸ் கட்சியில் இராகுலுக்கு பதவி அளித்தது ஆச்சரியமான விஷயமாக கொள்ளவோ அல்லது மற்றக் கட்சிகள் அதைக் குறைக் கூறவோத் தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸுக்கு நேரு-காந்தி குடும்பத்தின் தேவையும் நேரு-காந்தி குடும்பத்திற்கு காங்கிரஸின் தேவையும் இருக்கும் வரை இது நடக்கத் தான் செய்யும். மக்கள் தலைவர்களின் குடும்பத்தினருக்கு வாக்களிப்பதுத் தொடரும் வரை இதைத் தடுக்க முடியாது.

2 கருத்துகள்: