வெள்ளி, ஜனவரி 04, 2013

ஸௌவீர தேசம்



56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.



ஸௌவீரம் என்றால் ஸு + வீரம் அதாவது நல்ல வீரன் என்று பொருள். [ஸௌ என்றால் நூறு என்ற பொருளும் இருந்தாலும் அது இங்கு பொருந்தாது]. 

ஸிபி சக்ரவர்த்தியின் இரண்டாவது மகனான ஸுதீரன்-ஆல் (அவன் பெயர் ஸுவீரன் என்று கொண்டு) தேற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. இஷ்வாகு-வின் பத்தாவது மகன் பெயர் தசஸ்வன். இவன் மஹிஷ்மதி (கார்த்தவீர்யாஜுனின் தலைநகர்) என்ற நகரை நிர்மாணித்து அதனை ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவன் மகன் மதிரசன்; மதிரசனின் மகன் த்யுதிமதன். த்யுதிமதனின் மகன் ஸுவீரன் இதனை நிர்மாணித்த்தாகவும் கூறுவதும் உண்டு.

மஹாபாரதத்தில் சௌவீர தேசம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டாலும் இதன் அரசனாக ஜயத்ரதனே குறிப்பிடப்படுகிறான். ஜயத்ரதன் சிந்து, சிபி உட்பட பத்து தேசங்களின் அரசனாகக் குறிப்பிடப்படுகிறான்.

ஸௌவீர தேசம் ஜயத்ரதனின் கீழ் இருந்தாலும் ஸுவீர தேசத்தவரும் சிந்து தேசத்தவரும் எதிரிகளாக இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. அரக்க மாளிகையிலிருந்து தப்பித்தப் பாண்டவர்களுக்கு மன உறுதி கொடுக்க குந்தி, ஸௌவீர தேசத்தின் விதுலை என்பவளின் கதையைக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினாள். அக்கதையின் படி, விதுலையின் மகன் சிந்து மன்னர்களால் தேற்கடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட அவள் அவனைத் தூண்டி போரிட வைத்த்தைக் கூறுகிறாள்.

ஆனால், த்ரௌபதியின் சுயம்வரத்தில் ஜயத்ரதன் கலந்து கொண்ட பொழுது அவனுடைய பிரதாபங்களை ஸௌவீர இளவரசன் ப்ரஸ்தாபித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

கோடிகன் என்ற அந்த இளவரசன் தான் ஸௌவீர மன்னன் சுரதனின் மகன் என்றும் சுயம்வரத்தில் தான் ஜயத்ரதனின் கொடியை ஏந்தி வந்துள்ளதாகவும் தன்னைத் தவிர அங்காரகன், குஞ்சரன்ம் குப்தகன், சத்ருஞ்ஜயன், ஸ்ரீஞ்ஜய்ன், சுப்ரபிதன், ப்ரமரன், ப்ரபங்கரன், ரவி, சூரன், ப்ரதாபன், குஹன் ஆகிய பன்னிரண்டு சௌவீர இளவரசர்களும் கொடியேந்தி வந்துள்ளதாகக் கூறுகிறான்.

இதில் சத்ருஞ்ஜயன் மற்றொரு இடத்தில் பாரத்வாஜ முனிவரின் வழிவந்தவர்களுடன் உரையாடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தங்கள் ஸௌவீர வம்சம் பாண்டு மன்னனாலும் தோற்கடிக்க முடியாத வம்சம் என்றும் அர்ஜுனன் தங்களுடன் போரிட்டபோது அவன் தத்தமித்ரன் (அ) சுமித்ரன் என்ற தங்கள் மன்னனால் தாக்கப்பட்டதையும் கூறுகிறான்.

இவர்களது தேசம் சிந்து, சிவி ராஜ்ஜியங்களுக்குத் தெற்கில் இருந்திருக்கக் கூடும் என்றும் பின்னர் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து இன்றைய கொங்கணப் பகுதிகளுக்கு நகர்ந்த பின்னால், கார்த்தவீர்யார்ஜுனனுடன் தொன்மங்களால் இணைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக