சனி, ஆகஸ்ட் 08, 2020

வளைவி சொல்லும் சரிதம்

வளைவி சொல்லும் சரிதம்
[வல்லமை இதழின் 268-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


கடைவீதி மாடத்திலே
குலுங்கிச் சிரிக்கும் வளைவி
சொல்லிடுமே வளையோசை
சிறப்பதனின் சரிதம்!

கருவினிலே வளர்கையிலே
தாயின் தியாகம் சொல்லும் – தூளி
தொட்டிலிலே உறங்குகையில் – அவள்
அண்மைக் காட்டிக் காக்கும்…

கைக்குழவிக் கைகளிலே
கருவளையாய்க் காக்கும்
சின்னஞ்சிறு சிறுமிகளின்
குறும்பில் துள்ளி நகைபுரியும்…

பெண் பூவாய் மலர்கையில் – அவள்
கைகளில் பூத்துக் குலுங்கும்
கன்னிப் பெண்ணின் கரங்களிலே
கணீரென்று ஒலிக்கும்…

மணமேடை மங்கைக் கையில்
மங்களமாய் முழங்கும்
மணவாளன் தொடுகையிலே
நாணம் கொண்டுச் சிணுங்கும்…

கட்டில் விளையாடலிலேக்
கைகொட்டிச் சிரிக்கும்
இடைஞ்சல் ஏதும் செய்திடாமல்
உடைந்து உயிர் நீக்கும்…

புதுபிறப்பு எடுத்து மீண்டுமவர்
பூங்கரங்கள் ஏறும்
இல்வாழ்க்கை இன்னிசையின்
இன்பமதைக் கூட்டும்…

உயிரற்றப் பொருளென்ற
உதாசீனம் வேண்டாம்
உணர்வுகளின் உரைகல்லாய்
உலவி நிற்கும் வளைவி….

2 கருத்துகள்: