வியாழன், நவம்பர் 22, 2012

இந்திய-சீனப் போர் (தொடர்ச்சி…)


இதன் முதல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்திய-சீனப் போருக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. எல்லைப் பிரச்சனை முக்கிய காரணமாகக் கூறப்பட்டாலும் வேறு சில காரணிகளும் இதற்குக் காரணமாக இருந்தன.

முதலில் எல்லைப் பிரச்சனையைப் பார்ப்போம்…

இந்திய சீன எல்லையின் மூன்று பகுதிகளைச் சென்ற பகுதியில் பார்த்தோம், இதில் மேற்குப் பகுதி எல்லை 1834-இல் ரஞ்சித் சிங் தலைமியிலான சீக்கிய கூட்டமைப்பு லடாக் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் உருவானது. 1846-ஆம் ஆண்டு சீக்கியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் சீனாவுடன் எல்லைகளை வரையறுக்கப் பேச்சு வார்த்தை நடத்தினர். காரகோரம் கணவாயும் பாங்-ஆங் ஏரியும் இதன் இரு எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. ஆனாலும், அக்சய் சீனா பகுதி எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதில் உடன்படிக்கை எட்டவில்லை (இன்றளவிலும் இந்தப் பகுதியை இரு நாடுகளுக்கும் சொந்தம் கொண்டாடுகின்றன). 1865-ஆம் ஆண்டு ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் மன்னர், ஆங்கில ஆய்வாளர் ஜான்சன் தலைமையில் ஒரு குழுவை எல்லைப் பகுதியை வரையறுக்க நியமித்தார். ஜான்சன், அக்சய் சீனா பகுதியை காஷ்மீரத்துடன் இணைத்து ஜான்சன் கோடு என்னும் எல்லையை வரையறுத்தார். சீனா இந்த ஜான்சன் கோட்டை நிராகரித்தது. ஆங்கில அரசும் ஜான்சனின் இந்தக் கோட்டை அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை. 1892-ஆம் ஆண்டு சீனா, காரகோரம் கணவாய் பகுதியில் லடாகுக்கும் சீனாவின் ஸிங்சியாங்-க்கும் இடையில் இருந்த சர்வதேச பட்டு வழி என்று கூறப்படும் வழியில் எல்லை-கற்களை நட்டது. ஆனால், இதை ஆங்கில அரசு ஏற்கவில்லை.

ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் அச்சுறுத்தலால் அக்சய் சீனா பகுதியைச் சீனாவிற்குச் சொந்தமாகக் காட்ட புதிய எல்லையைத் தீர்மாணித்தது. இந்தக் கோட்டிற்கு மெக்கார்ட்டி-மெக்டொனால்ட் கோடு என்று பெயர்.

ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலைமை மாறியது. 1911-ஆம் ஆண்டு சின்காய் புரட்சியைத் தொடர்ந்து சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேலும், 1918-இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து அக்சய் சீனா பகுதி சீனாவிடம் இருப்பது தனக்கு எந்தப் பயனையும் தராது என்றுணர்ந்த பிரிட்டிஷ்  அரசு மீண்டும் ஜான்சன் கோட்டைத் தூசி தட்டி எடுத்து அதை அதிகாரபூர்வமான எல்லையாக நிர்ணயித்தது. சீனா இதை ஏற்கவும் இல்லை; அதே நேரம் இதை மறுத்து அறிக்கை எதுவும் தரவும் இல்லை. பிரிட்டிஷ் அரசியல் நிலைக்கேற்ப இந்த எல்லையை 10-12 முறை மாற்றிவந்துள்ளது.

1954-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ஜான்சன் எல்லைக் கோடே அதிகாரபூர்வமான எல்லை என்று உறுதிபடக் கூறினார். சீனா எப்பொழுதும் போல் இதை உறுதி செய்தோ, மறுத்தோ எதுவும் கூறவில்லை. மேலும், சீனப் பிரதமர் பஞ்சசீல ஒப்பந்தம் செய்து இந்தியாவுடன் எந்த எல்லைப் பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள எந்தப் பகுதியையும் சீனா உரிமைக் கொண்டாடாது என்றும்  அறிவித்தார். ஆனால், 1956-57 இல் அக்சய் சீனா வழியாக ஸிங்ஸியாங்-ஐயும் திபெத்தையும் இணைக்கும் சாலையைக் கட்டியது. இதில், இந்திய அரசின் உளவுத் துறைக்கு வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால், இந்த சாலை சீன வரைபடத்தில், 1957-ஆம் ஆண்டு, வெளியிடப்படும் வரை இந்தியாவிற்கு சீனா கட்டிய இந்தச் சாலைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான்.

அடுத்து கிழக்குப் பகுதி எல்லை. 1826-இல் நடைபெற்ற முதல் பர்மிய போரில் மணிப்பூர், அஸாம் பகுதிகளை ஆங்கில அரசாங்கம் கைப்பற்றியது. வடகிழக்கு எல்லைப்பகுதியின் முகவராகச் செயல்பட்ட தளபதி ஜெங்கின்ஸ், 1847-இல் தவாங்-ஐ திபெத்தைச் சேர்ந்ததாக அறிவித்தார். அதேபோல், 1872-இல் திபெத்துடன் பிரிட்டிஷ் தளபதி செய்து கொண்ட உடன்படிக்கையின் படியும் தவாங் திபெத்தைச் சேர்ந்ததாகக் குறிக்கப்பட்டது. ஆனால், 1912-ஆம் ஆண்டு பிரிட்டனின் இந்திய அதிகாரி மெக்மோகன் தற்போதைய எல்லை தவாங்-இற்கு தெற்கிலிருந்து மேற்கு நோக்கி பூடானின் உகல்குரி மலை எல்லை வரை உள்ளதாக வரையறுத்தார். சிம்லா-வில் 1913-இல் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சீனா பின்னர் இந்த எல்லைக்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியா-வின் கருத்துபடி, இமயமலை பன்னெடுங்காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லையாக இருப்பதால் அதுவே இந்தியாவின் தற்போதைய எல்லை என்பதாகும். ஆனால், சீனாவின் கருத்துப்படி இந்தப் பிரச்சனைக்குரிய பகுதிகள் பண்பாட்டு அடிப்படையில் திபெத்துடன் இணைந்தவை என்பதே ஆகும். ஆனால், திபெத்தைப் பொறுத்தவரை அது ஆரம்பத்திலிருந்தே அது மெக்மோஹன் எல்லையை ஏற்றுக் கொண்டுள்ளது.

நேருவை பொறுத்தவரை அவர் சீனாவைத் தன் எதிரி நாடாக நினைக்கவில்லை. நேரு-வின் இடதுசாரி சார்பு நிலை அனைவரும் அறிந்ததே. என்னதான் கூட்டு சேரா கொள்கையைக் கொண்டிருந்தாலும் ரஷ்யாவுடன் நல்ல உறவு கொள்வதையே விரும்பினார். மேலும், அமெரிக்கா ரஷ்யாவையும் அதன் ஆதரவு ஆஃப்கானையும்  எதிர்க்க பாகிஸ்தான் சார்பு நிலையை எடுத்தது நேரு-வை ஆசியாவின் மற்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை நம்பும் நிலைக்குத் தள்ளியது. சீனா-வில் கம்யூனிஸ்ட் அரசு இருப்பதால் அமெரிக்கா-விற்கு எதிர்நிலையை எடுத்து இந்திய சார்பு நிலையை எடுக்கும் என்று நம்பினார். இதன் விளைவு தான் ‘இந்தி-சீனி பாய் பாய் (இந்திய சீன சகோதரத்துவம்)’ என்ற கோஷம்.

1954-ஆம் ஆண்டு பெய்ஜிங்-இல் நடந்த இந்திய-சீன வியாபார மற்றும் நல்லுறவு ஒப்பந்த மாநாட்டில் கலந்து கொண்ட நேரு எல்லைப் பிரச்சனையை எழுப்பவில்லை. காரணம், இந்தியா முதலில் இந்தப் பிரச்சனையை எழுப்பினால் சீனா பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்; அதனால், இந்தியா சில பகுதிகளை விட்டுக் கொடுக்க நேரிடும். அதே நேரம், சீனா இந்த பிரச்சனையை ஆரம்பித்தால் இது ஏற்கனவே முடிந்த பிரச்சனை என்று கூறிவிடலாம் என்று எண்ணியதே.

சீனா 1951-இல் திபெத்தில் நுழைந்து அதை ஆக்ரமித்தது. தொடர்ந்து, 1959 ல் லாசா-வில் நுழைந்து தலாய்லாமாவை கைது செய்ய முனைய அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். சீனா திபெத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வரை அது தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. இப்பொழுதும், ஹிமாசலத்தில் தரம்ஷாலா-விற்கு அருகிலுள்ள மெக்னால்ட் கஞ்ச் பகுதியில் தலாய்லாமா தலைமையில் ‘வெளியில் அமைந்த அரசு’(Government in exile) -ஆகச் செயல்பட இந்தியா அனுமதித்துள்ளது. இதுவும் சீனா இந்தியா மீது கோபம் கொள்ள ஒரு காரணம்.

அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்தாலும் நேருவும் சரி, பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனனும் சீனா இந்தியாவைத் தாக்கும் அளவிற்கு வளிமை மிகுந்ததாக நினைக்கவில்லை. காரணம், அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவை ஆதரிக்கும் என்று அவர்கள் எண்ணியதே. இதன், காரணமாக சீனா எல்லையில் படைகளைக் குவித்தபோது இவர்கள் ‘முன்னோக்கிய கொள்கை’ என்று இந்தியப் படைகளை அவற்றுக்கு எதிராகக் குவித்ததே. ஆரம்பத்தில், சீனாவும் தான் குவித்தப் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிப்ரவரி, 1962 இல் கூட இந்தியா சீனத் தாக்குதலை உணரவில்லை. இந்திய உள்துறை அமைச்சராக இருந்த சாஸ்த்ரி, சீனா இந்தியப் பகுதிகளிலிருந்து வெளியேறவில்லை என்றால் கோவாவில் நடந்தது போன்ற ராணுவ நடவடிக்கையை நடத்த வேண்டியிருக்கும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.

1959-60 ஆம் ஆண்டு கிழக்குப்பகுதியின் தளபதியாக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.பி.பி.தோர்ட் சீனா தாக்குதலை உணர்ந்து ஒரு அறிக்கையை அரசிடம் சமர்பித்தார். ஆனால், மேனன் அந்த அறிக்கையை பிரதமரின் அலுவலகத்திற்குத் தகவலாகக் கூட அனுப்பவில்லை. அதற்கு நேர்மாறாக சீனத் தாக்குதலைக் கூறிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மேலும், சீனாவின் பொருளாதார நிலையும் ரஷ்யாவுடன் அதற்கு ஏற்பட்ட பிணக்கும் தைவானின் சீனத் தாக்குதலும், இந்திய அரசை சீனா தன்னைத் தாக்காது என்றே எண்ண வைத்தன. மேலும், இந்தியா பாகிஸ்தான் தாக்குதலைச் சமாளித்தது போல் இதையும் சமாளிக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது.

பொதுவாக, இந்தியத் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுவது சீனா ஏமாற்றியது என்பதே. ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. இந்திய அரசும் நிலைமையைச் சரியாக கணிக்காமல் அலட்சியமாக இருந்தது. ஆனால், சீனா போருக்கு ஆரம்பத்திலேயேத் தயாராக இருந்தது. மலைப்பகுதிகளில் போரிடத் தேவையானப் பொருட்களை அது ஏற்கனவேத் தயாராக வைத்திருந்தது. ஆனால், இந்தியப் படையோ தரைப்பகுதியில் நீண்ட அனுபவம் பெற்றிருந்தாலும் மலைப்பகுதிகளில் போரிடத் தயார் நிலையில் இல்லை. அவர்களுக்குத் தேவையான உடைகளும் தகவல் தோடர்பு சாதனங்களும் கூட கிட்டவில்லை. மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுவது இந்திய விமானப்படை இதில் உபயோகப்படுத்தப்படவில்லை என்பதே. அதற்குக் காரணம், இந்திய உளவுத் துறை இந்தியா விமானப்படையை பிரயோகித்திருந்தால் சீனா இந்திய நகரங்களைத் தாக்கும் என்று கூறியதே.

சீனா போரை ஆரம்பிக்கவும் முடிவுக்குக் கொண்டுவரவும் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டதும் அதன் வெற்றிக்குக் காரணம். அக்டோபர், 1961 இலேயேப் படைகளை எல்லையில் குவித்திருந்தாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் ’க்யூபா ஏவுகணைப் பிரச்சனை’யில் மோதும் நிலைமை வரும் வரைக் காத்திருந்தது. 1962-அக்டோபர் முதல் வாரத்தில் க்யூபா-வில் ரஷ்யாவின் ஏவுகணை இருந்ததாக சிஐஏ குறிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்குள் கொண்டிருந்த பனிப்போர் முற்றி உலகப் போராக வெடிக்குமோ என்று அனைத்து நாடுகளும் பயந்து கொண்டிருந்த நேரத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்தது. இதனால், வேறு எந்த நாடும் இந்தியாவிற்கு உதவ முன்வரவில்லை.       

அதேபோல் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்த நேரமும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. நேரு-வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் நவம்பர் 15 தேதிகளில் இரண்டு கடிதங்கள் கென்னடிக்கு எழுதியதைக் குறிப்பிடுகிறார். [இந்த இரண்டு கடிதங்களும் வகைப்படுத்தப்பட்டவை  (classified) என்பதால் வெளியிடப்படவில்லை]. இதில் நேரு அமெரிக்காவிடமிருந்து 12 சூப்பர் சானிக் சீதோஷண போர் விமானமும், இரண்டு பி-47 குண்டு விமானங்களைக் கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேதியும் வெற்றி பெற்று 200 கி.மீ. இந்தியாவில் நுழைந்த சீனா திடீரென நவம்பர் 20-ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவித்து 21-ஆம்   படைகளை புதிய எல்லையின் 20 கி.மீ. திரும்பப் பெற்றதும் கவனிக்கத் தக்கது.
19.11.1962 அன்று சீனாவின் வசம் இருந்த பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்)

போர் தோல்வியைத் தொடர்ந்து அரசு லெஃப்டினெண்ட் ஜெனரல்  ஹெண்ட்ரஸன் ப்ரூக்ஸ், பிரிகேடியர் பி.பகத் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்து இதன் காரணங்களை அலசியது. ஆனால், அந்த அறிக்கை-யும் வெளியிடப்படவில்லை/வகைபாடற்றதாக மாற்றப்படவில்லை [Not yet declassified]. 2007-08 இல் நாடாளுமன்றத்தில் தேசிய நலன் கருதி இதை வெளியிட எழுப்பப்பட்டக் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மறுத்துள்ளார். சென்ற மாதம் அக்டோபர் 21-ஆம் தேதி பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் மீண்டும் இவ்வறிக்கையை வகைப்பாடற்றதாக மாற்றக் கோரிக்கை விடுத்தார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்றாலும் மக்களுக்கு இந்தத் தோல்விக்கானக் காரணங்கள் இன்னமும் தெரியப்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை.

போரில் தோல்வியடைந்ததும் 1963-ஆம் ஆண்டு மாநிலங்கள் அவையில் உரையாற்றிய நேரு, ‘படைத் தலைவர்கள் தங்கள் தேவைக்காக பல முறை எங்களிடம் வந்ததையும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எழுதியதையும் நினைத்துப் பார்க்கிறேன்… என்ன நடக்கும் என்பதை அறிய முடிந்திருந்தால், நாங்கள் வேறு ஏதாவது செய்திருப்போம்… சீன ஆக்ரமிப்பிலிருந்து இந்தியா கற்றது என்னவெனில் இன்றைய உலகில் பலமில்லா நாடுகளுக்கு இடமில்லை என்பது தான்… நாம் நாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று உணர்ச்சிகரமாக சோகத்துடன் கூறினார்.

தற்போது, நாட்டின் பகுதிகளைப் பிடிப்பதை விட சந்தைகளைக் குறி வைத்துப் பல நாடுகளும் முனைந்துள்ளன. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களும் இப்படித்தான் வந்தனர். நாடும் முறையும் மாறியிருந்தாலும் அவர்களின் நோக்கம் மாறியிருக்குமா என்பதும் அதற்கு முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம்.
                
நேரு கூறியது போல் நாம் இன்னமும் கற்பனை உலகில் தான் இருக்கிறோமா அல்லது யதார்த்தம் புரிந்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி தான்…

10 கருத்துகள்:

  1. விரிவான விளக்கங்களுக்கு... வரலாற்று தகவல்களுக்கு நன்றி...

    tm1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் த.ம.வாக்கிற்கும் நன்றிகள் தனபாலன்.

      நீக்கு
  2. பள்ளியில் பயிலும்போது வரலாற்று பாடங்களை படித்தது அதன்பிறகு உங்கள் பதிவில் படிக்கிறேன். நன்றி....

    பதிலளிநீக்கு
  3. பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன், ஐயா!

    (+2 வுக்கு ஒரு வரலாற்று ஆசிரியர் கிடைத்திருக்க வேண்டியது, தவறி விட்டது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பத்து!

      [பாடமாக இருந்தால் நாங்க சாய்ஸ்-ல் விட்டிருப்போமில்ல)

      நீக்கு
  4. இந்திய சீனப் போர் பற்றி அதிகமாக அறிந்தததில்லை. இந்தியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விரிவாக வரலாற்று நிகழ்வுகளை பதிவாக்கியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனப் போர் தோல்வியில் முடிந்தது என்பதால் அதைப் பற்றி விரிவாக யாரும் சொல்வதில்லை. ஆனால், தோல்விகளிலிருந்து பாடம் கற்க அதை அலச வேண்டியதும் அவசியமாகிறது.

      50-ஆண்டுகள் ஆன பின்பு கூட அரசு அதை அலசும் அறிக்கையை வெளியிடத் தயங்குகிறது. இதில் ராணுவ ரகசியங்கள் இருக்கலாம் என்பதைவிட அரசியல் காரணங்களும் இருக்கக் கூடும் என்று தான் தோன்றுகிறது.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  5. உங்களது அறிவு வியக்க வைக்கிறது சீனி

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீனா இந்தியாவிடம் நயவஞ்சகமாக அபகரித்த இந்திய பகுதிகளை போரில் பல வித முனை தாக்குதல்களை சீனாவுக்கு எதிராக நடத்தி, சீனாவிற்கு சரியான பாடத்தை புகட்டி, அந்த பாடத்தை சீனா ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அளவிற்கு செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு