வெள்ளி, ஜனவரி 25, 2013

குடியரசு தின அணிவகுப்பு


நாளை நம் நாட்டின் 64-ஆவது குடியரசுத் தினம்.

இத்தினத்தில் ஒவ்வொரு வருடமும் தலைநகர் தில்லியின் ராஜப்பாட்டையில் (ராஜ்பாத்) குடியரசுத் தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் அரசுத் துறைகளும் அவர்களின் சிறப்புகளையும் நடத்தும் சமுதாய முன்னேற்றப் பணிகளையும் காட்சிப் படுத்துவதும் நடைபெறும்.

இந்த வருட குடியரசு தின அணிவகுப்பில் 19 நடன வாகனங்களின் அணிவகுப்புகள் நடபெறத் திட்டமிடப் பட்டுள்ளது. இவற்றில் 14 மாநிலங்களைச் சேர்ந்தவை. ஐந்து மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்தவை. இவற்றில் 400-க்கும் அதிகமான கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டு மாநிலங்களிலிருந்து 28-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 14 மட்டுமேத் தேர்வுச் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவற்றில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்...

பிஹார் மாநிலத்தின் ஊர்தியில் சிக்கா புல்லிலிருந்துத் தயாரிக்கப்பட்டக் கைவினைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஊர்தியில் புந்திக் கோட்டையும் அங்குக் கட்டப்பட்டுள்ள பள்ளிகளும் காட்சிப் படுத்தப்பட உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் சிர்பூர் தொழில் நகரத்தை முக்கியமாகக் காட்சிப்படுத்த உள்ளது.

உத்திரப் பிரதேசம் வ்ரிஜ் நகரத்தில் நடக்கும் ஹோலி விழாவை (ராசலீலா) காட்சிப் படுத்த உள்ளது.

மேற்கு வங்கம் விவேகாநந்தரின் நூற்றாண்டை மையமாகக் கொண்டு அவரின் போதனைகளை அடிபடையாகக் கொண்டு அதன் ஊர்தியை வடிவமைத்துள்ளது.

இவற்றைத் தவிர ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், கேரளம், ஹிமாசலம், ஒடிஸா, த்ரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த உள்ளன.

தில்லியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும். காட்சி ஊர்தியின் மையக்கருத்தாக ’தில்லி – தேசத்தின் கலாச்சார மையம்’ என்று வைக்கப் பட்டுள்ளது. இதில் இந்திய நடனம், இசை, நாடகம், நுண்கலைகள் போன்றவைக் காட்சிப் படுத்தப்படும். சாகித்ய கலா பரிஷத் (இலக்கியக் கலைச் சங்கம்) இந்த காட்சி ஊர்தியை வடிவமைத்துள்ளது. இந்த ஊர்தி இரண்டு பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளது. ஒன்றில் தில்லியின் புராணா கிலா என்று அழைக்கப்படும் பழையக் கோட்டையின் வடிவில் மேடை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு கலைஞர்கள் தில்லியின் ’இன்றைய நிலைமை’ என்று நகரத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை வடிவமைப்பதை காட்சிப்படுத்துவதுடன் ‘பானபட்டரின் கதை’ நாடகமாகவும் காட்டப்படும்.  மற்றொன்றில் கதக் நாட்டியமாடும் ஒரு பெண்ணைச் சுற்றி ஒருபக்கத்தில் பல்வேறு இந்திய வாத்தியங்களான சரோத், தபேலா, தம்பூராவும்  ஆகியவையும் மற்றொரு பக்கத்தில் தில்லியின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்ட சிட்டுக்குருவியும் இருப்பது போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் திரையுலகின் நூறாவது வருட நிறைவை ஒட்டி திரைப்படங்களில் வெளிவந்த பிரபல பாத்திரங்களின் உருவங்களைக் கொண்ட ஊர்தியை வடிவமைத்துள்ளது.

ஊர்வலம் ஆரம்பம் ஆகும் முன்னரே விவாதிப்பதற்கும் ’அவல்’ கிடைத்து விட்ட்து. ‘மாற்றுத் திறனாளிகள் விவகாரத் துறை’ (இதன் பெயர் Department of Differently Abled Affairs என்று இல்லாமல் Department of Disability Affairs என்று இருக்கிறது), அதன் காட்சி ஊர்தியின் பெயர் பலகையில் இந்தியில் ‘நிஷக்ததா கார்ய விபாக்’ (பொருள் : சக்தியற்றவர்கள் விவகாரத் துறை) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே காரணம். அணிவகுப்பின் ஒத்திகை நடந்த பொழுது இதை கண்ட ’இயலாமை உரிமைக் குழு’ (Disability Rights Group)  இது மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்றுக் கூறி மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை ஏற்கப்படுவது கடினம் என்றேத் தோன்றுகிறது. நாளை அணிவகுப்பு நடக்கும் பொழுதுதான் நிலைமை தெரியவரும்.

மற்றபடி, ஒத்திகை அணிவகுப்பின் படி நிகழ்ச்சி வண்ணமயமாகவே இருக்கும் என்றுத் தோன்றுகிறது. அனைவரும் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்போம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

4 கருத்துகள்:

  1. கண் கவரும் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் பற்றி முன் கூட்டியே தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கனவே அந்த பெயரை மறைத்து விட்டார்கள் - ஊர்தியில்....

    நல்ல தகவல்கள் - 23 - ஆம் தேதி ஃபுல் ட்ரெஸ் ரிஹர்சல் பார்த்தியா என்ன? நான் அலுவலகத்திற்குச் சென்று விட்டேன்!

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்பாதி மட்டும் பார்த்தேன்!

      வருகைக்கு நன்றிகள் வெங்கட்

      நீக்கு