வெள்ளி, பிப்ரவரி 15, 2013

விண்கல் - (அழையா) விருந்தாளி


இன்று நள்ளிரவு இந்திய நேரம் 12 மணியளவில் பூமிக்கு வெகு அருகில், பூமியிலிருந்து ஏவப்பட்ட துணைக்கோள்கள் இருக்கும் தூரத்திற்கும் குறைவான நெருக்கத்தில், சுமார்  சுமார் 46 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு விண்கல் வந்து செல்ல உள்ளது.

பூமியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்ட (தொலைத் தொடர்பு, வானியல் ஆராய்ச்சி போன்றவற்றிர்கான) செயற்கைக் கோள்கள் சுமார் 32000 கி.மீ.க்கும் அதிகத் தொலைவிலேயே நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றன. நிலவின் தூரமோ சுமார் 4½ லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆனால் இந்த விண்கல்லோ சுமார் 27500 கி.மீ. அருகில் வந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகவே பூமியைத் தாக்கும் சாத்தியக் கூறுள்ள விண்கற்களை விண்ணாய்வாளர்கள் நோக்கி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்ற ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி ஸ்பானிய விண்நோக்கர்களால் இந்தக் கல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டது. அப்போது அது பூமிக்கு அருகில் வந்துச் சுற்றி பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்த்து. இதை நாசா-விற்குத் தெரியப்படுத்த நொடிக்குச் சுமார் 13 கி.மீ வேகத்தில் பூமியை இந்தக் கல் சுற்றுவதைக் கண்டறிந்த அவர்கள், இது பூமியைத் தாக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர்.

இதன் வேகம் மற்றும் பாதை மிகவும் கூர்ந்து கணிக்கப்பட்டு 2013-இல் இது பூமிக்கு மிகவும் அருகில் வருவதும் அதே நேரம் இது பூமியில் மோதும் சாத்தியக் கூறும் இல்லை என்பவை நாசாவால் அறிவிக்கப்பட்டன.

இந்தக் கல்லுக்கு 2014 DA14 என்று பெயரிடப்பட்டது. 46 மீட்டர் சுற்றளவுடன் நொடிக்கு 13 கி.மீ. வேகத்தில் வரும் இக்கல் பூமியில் மோதினால் அதன் விளைவு சுமார் டன் டைனமைட் வெடி குண்டு போடப்பட்ட பாதிப்பைத் தரும்.

தற்போதைய இந்தக் கல் பூமிக்கு அருகில் வரும் பொழுது அது இந்தோனேசியா/சுமத்ரா-வை ஒட்டி இருக்கும். கிழக்கு ஆசியா, ஆஸ்த்ரேலியப் பகுதியில் இருப்பவர்கள் இது வரும் பக்கத்தில் இருந்தாலும் சாதாரணமாக இது கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பூமியை நெருங்கும் சில நொடிகளில் இது ஒரு ஒளிக் கற்றை போல தெரிந்து மறைய வாய்ப்பிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அடுத்து இந்தக் கல் இதுபோல் பூமிக்கு அருகில் வரும் சாத்தியக் கூறு 2046 ஆம் ஆண்டு இருப்பதாகவும் அப்பொழுது சுமார் 1½ லட்சம் கி.மீ அருகில் (தற்போதையதை விட ஐந்து மடங்கு அதிக தூரம்) வரும் சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு இது போல் பல விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்துச் சென்றுள்ளன. சில பூமியில் மோதியும் உள்ளன. ஆனால் ஒரு விண்கல் பூமிக்கு அருகில் வர இருப்பது முன் கூட்டியே உணர்ந்து பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

கடந்த சில ஆண்டுகளாக விண்கற்களின் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும் இதுவரையில் பெரிய கற்கள், குறிப்பாக பூமியை முற்றிலும் அழிக்கும் சாத்தியக் கூறு உள்ள கற்களும் வால் நட்சத்திரங்களும் மட்டுமே பெருமளவு ஆராயப்பட்டு வந்துள்ளன. பூமி மற்றும் மற்ற கோள்கள் உருவாகும் முன்னரே இந்த கற்கள் இருந்ததாகக் கருதப்படும் நிலையில் இந்தக் கற்களின் ஆராய்ச்சி கோள்களின் உருவாக்கம் பற்றியக் குறிப்புகளை உணர்வதில் உதவும் என்பதும் இந்தக் கற்களைப் பற்றிய ஆராய்ச்சியின் நோக்கம். 2007 ஆம் ஆண்டு நாஸா டா(வ்)ன் (Dawn) என்ற விண்கலம் மூலம் வெஸ்டா, செரஸ் ஆகிய விண்கற்களை ஆராய்ந்த்து இதில் வெஸ்டா பாறைப்படிமம் போன்று கடினமாக இருப்பதும் செரஸ் பனிக்கட்டி போல இருப்பதும் கண்டறியப்பட்டன. 10000-க்கும் மேற்பட்ட விண்கற்கள் கண்டறியப்பட்டாலும், DA14 போன்ற சிறுசிறு கற்கள் பெருமளவில் ஆராயப்படாமலேயே உள்ளன.

இந்தச் சிறுகற்களால் பூமிக்கும் முழுவதுமான அழிவு ஏற்படாது என்றாலும் இதன் விளவு ஒரு நகரத்தை அழிக்கும் அளவுக்கு இருக்கும். 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாவில் (துங்குஸ்தா நதிக் காடுகளில்) விண்கல் மோதியது என்றும்  அதன் அளவு இது போன்றே இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்போது அதன் பாதிப்பு சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பைப் பாதித்து அங்குள்ள மரங்களை அழித்ததாக கூறப்படுகிறது.

இக்கல் கடல் பகுதியில் விழுந்தாலும் அதனால் சுனாமி போன்ற பெருஞ்சேதங்கள் நிகழும் சாத்தியக் கூறும் உள்ளது. மேலும் தற்போது இக்கல் பூமியின் செயற்கைக் கோல்கள் நிலை நிறுத்தப்படும் 32000 கி.மீ.க்கும் உட்பகுதியில் வருவதால் (அதிர்ஷட வசமாக எந்தச் செயற்கைக் கோளிலும் இந்தக்கல் இந்த முறை மோதும் சாத்தியம் இல்லை என்று நாசா அறிவித்துள்ள நிலையிலும்) தொலைத் தொடர்பு சாதனங்கள் பாதிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றி எந்த தகவுலும் தரவில்லை.

இன்று இரவுதான் இதனால் ஏற்படும் விளைவுகளை அறிய முடியும். 

ம்ம்ம்...  பார்க்கலாம்!

4 கருத்துகள்:

  1. தகவல்களுக்கு நன்றி. எந்த வித சேதமும் ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கல்லால் எந்த சேதமும் இல்லை.

      ஆனால் ரஷ்யாவிற்கு மேல் வேறொரு விண்துகள் (மெடொயர்) இதை விட மூன்று மடங்கு சிறியது வானிலேயே பூமியை நெருங்குவதற்கு வெடித்துச் சிதறியுள்ளது. அதில் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர்.

      வான்வெளியில் இது போன்று கணிக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன!

      நீக்கு
  2. பூமியை முத்தமிட விருப்பவில்லை போலும்... தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு