வெள்ளி, மார்ச் 29, 2013

புனித வெள்ளி



இன்று புனித வெள்ளி.  பஸ்சல் மாதப் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் (உயிர்த்தெழுந்த ஞாயிறு) தினமாகவும் அதற்கு முந்தைய வெள்ளி புனித வெள்ளியாகவும் கொண்டாடப்படும்.

பொதுவாக, பங்குனி உத்திரத்தை ஒட்டிய பௌர்ணமிதான் யூதர்களின் பஸ்சல் பௌர்ணமி (சில நேரங்களில் அரிதாக சித்திரா பௌர்ணமியை ஒட்டியும் வர வாய்ப்புள்ளது).

இதைப் பற்றி ஏற்கனவே புனித வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிறும் என்ற முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். அப்பதிவில் க்ரிகேரியன் நாட்காட்டியைப் பற்றி எழுதியிருந்தேன்.

க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் ஜீலியன் நாட்காட்டிக்கும் இருந்த முக்கிய வேறுபாடே லீப் நாள் சம்பந்தப்பட்டதே. இதைப்பற்றி புத்தாண்டு அன்று எழுதியிருந்தேன்.

அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்...

ஈக்வினாக்ஸ் என்றால் சூரியன் பூமியின் ஒரு அட்ச ரேகையில் இருந்து மீண்டும் அதே அட்ச ரேகைக்கு வர எடுக்கும் நேரத்தைக் குறிக்கும். உலகின் பருவ மாற்றங்கள் இதைக் கொண்டே தீர்மாணிக்க முடியும்.  நாட்காட்டிகள் குறிக்கப்பட்ட முக்கிய காரணமே பருவ நிலையைக் கணித்து அதை விவசாயத்திற்கு உபயோகித்துக் கொள்ள எண்ணியதே. ஒரு ஈக்வினாக்ஸ் ஆண்டு 365.24237 நாட்களைக் கொண்டது. சராசரியாக, ஒரு ஜூலியன் வருடம் என்பது 365.25 நாட்களைக் கொண்டது. அதே நேரம், ஒரு சராசரி க்ரிகேரியன் ஆண்டு 365.2425 நாட்களைக் கொண்டது. அதாவது, ஜூலியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் 128 ஆண்டுகளில் ஒருநாள் வித்யாசம் உண்டாகும். ஆனால், க்ரிகேரியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் இந்த வித்யாசம் 7700 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஏற்படும்.

400 க்ரிகேரியன் ஆண்டுகளைக் கொண்ட ஒரு சுற்று 146097 நாட்களை / 20871 வாரங்களைக் கொண்டிருக்கும். அதாவது, க்ரிகேரியன் முறையில் 1613 ஆம் ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் நடப்பு 2013 ஆம் ஆண்டின் கிழமைகளும் ஒரே மாதிரி இருக்கும். 2413 ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் இந்த வருடக் கிழமைகள் போலவே இருக்கும்.

1576-ஆம் ஆண்டு ஆலோசியஸ் லிலுஸ் என்பவரின் வழிமுறையை ஆதாரமாகக் கொண்டு கிரிஸ்டோபர் க்லாவியாஸ் என்பவர் பஸ்சல் பௌர்ணமியை குறிக்கும் ஒரு அட்டவணையைத் தாயாரித்தார். க்ரிகேரியன் தன் நாட்காட்டிக்கு இதையே ஆதாரமாகக் காட்டினார். அதனால் தான் ஈஸ்டர் அட்டவணையே க்லாவியஸ் அட்டவணை என்று அழைக்கப்படுகிறது.

க்லாவியஸ் அட்டவணைப்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 18 வரை ’பஸ்சல்’ மாதமாக வரையறுக்கப்பட்டு அதில் வரும் முழுநிலவு நாள் ‘பஸ்சல் பௌர்ணமி’ ஆகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ஈஸ்டர் பண்டிகை மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு இடையில் அமையும்.

யூதர்கள் பயன்படுத்துவது நம் ஆந்திர-கர்நாடக மாநிலங்களைப் போல ஒரு சந்திர-சூர்ய நாட்காட்டி, அதாவது சந்திரனின் சுற்றுகளின் படி மாதங்களும் பின்  சூரியனின் சுற்றோடு வருடங்களைச் சமன்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. அமாவாசைக்கு அடுத்த தினத்தை ஆரம்பமாகக் கொண்டு மாதங்கள் ஆரம்பமாகும்.  பின் 19 வருடச் சுற்றுகளைக் கொண்டு அதில் 3,6,8,11,14,17, 19 ஆகிய வருடங்கள் லீப் வருடங்களாகக் கொண்டு அதில் ஒரு மாதம் அதிகரிக்கப்படும். அதாவது ஒவ்வொரு 19 வருடச் சுற்றிலும் 235 சந்திர மாதங்கள் இருக்கும். ஒரு சாதாரண வருடத்தில் 353-355 நாட்களும் ஒரு லீப் வருடத்தில் 383-385 நாட்களும் இருக்கும்.

யூதர்களின் மாதங்களின் பெயர்கள்…

1.           திஸ்ரி              -        30 நாட்கள்
2.           ஹேஷ்வன்     -        29/30 நாட்கள்
3.           கிஸ்லெவ்       -        29/30 நாட்கள்
4.           தெவெட்                   -        29 நாட்கள்
5.           ஷெவெட்        -        30 நாட்கள்
6.           அதர்                -        29 நாட்கள்
[லீப் வருடங்களில் இது அதர்-1 (30 நாட்கள்), அதர்-2 (29 நாட்கள்) என்று இரண்டு மாதங்களாகக் கணிக்கப்படும்]
7.           நிஸான்           -        30 நாட்கள்
[இந்த மாதப் பௌர்ணமி தான் பஸ்சல் பௌர்ணமி]
8.           இயர்               -        29 நாட்கள்
9.           சிவான்            -        30 நாட்கள்
10.       தும்முஸ்          -        29 நாட்கள்
11.       அவ்                 -        30 நாட்கள்
12.       எலுல்              -        29 நாட்கள்

இந்த  க்ரிகேரியன் நாட்காட்டிச் சீரமைப்பின் 400-ஆவது  ஆண்டு நிறைவையொட்டி 1983-ஆம் ஆண்டு வாட்டிகன் ஒரு மாநாட்டையும் நடத்தியுள்ளது.

அனைத்து கிருத்துவ நண்பர்களுக்கும் புனித வெள்ளி, உயிர்த்தெழுந்த தின நல்வாழ்த்துகள்...

6 கருத்துகள்:

  1. இத்தனை விளக்கம் தெரியாது... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. வழமை போல பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். யூதர்களின் மாதப் பெயர்களை நினைவில் ‌வைத்துக் கொண்டார்கள்? கரடுமுரடான வார்த்தைகளாயில்ல இருக்குது...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”க்ஷ்க்ஷ்க்ஷ் ய்யய்யை லல்லலல்”
      “க்கலல்ல்ல் டலல;அல்க;”

      - அது ஒன்றுமில்லை கணேஷ், யூதர்கள் தங்கள் ஹெப்ருவில் தமிழ் மிகக் கரடுமுரடாக இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள்.

      ’செந்தமிழ் மட்டுமல்ல செந்ஹெப்ரூவும் கூட நாப்பழக்கம் தான்’

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  3. நல்லாத்தான் சொல்கிறீர்கள். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மாதங்களே ததிங்கிணதோம் போடுகிறதே!

    பதிலளிநீக்கு