வெள்ளி, ஜனவரி 11, 2013

கூடாரவல்லி


மார்கழி 27-வது நாள் ’கூடாரவல்லி’ என்று அனைவராலும் சிறப்பித்துக் கொண்டாடப்படும் நாள். மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து ஒவ்வொரு நாளும் ஆண்டாள் எழுதிய ஒவ்வொரு திருப்பாவைப் பாசுரமும் பாடுவது வழக்கம். 27-ஆம் நாளுக்கு உரியது கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!  உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

இந்த 27-ஆம் பாசுரத்திற்கு அப்படி என்னச் சிறப்பு?

அது என்னவென்றால், 26 பாசுரங்களில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களையும் அவற்றின் சிறப்புகளையும் பற்றி பல்வேறு விதங்களில் எடுத்துக் கூறிய ஆண்டாள், இந்த 27-ஆம் பாசுரத்தில் தான்  அவனை முதல் முறையாக கோவிந்தன் என்ற பெயரில் குறிப்பிடுகிறாள். [அடுத்த இரண்டு பாசுரங்களிலும் கூட கோவிந்தா என்ற பெயர் வரும்; அது கோவிந்தன் என்பது தான் முழுமுதல் கடவுளின் பெயர் என்பதால் ஆண்டாள் அவனுடைய அந்தப் பெயரை மும்முறை மொழிந்தாள் என்றுக் கூறுவர்.]

திருப்பாவையின் இரண்டாவது பாட்டில் ’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காளே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குரலை சென்றோதோம்’ என்றுக் கூறினாள். ஆனால், இந்த 27-ஆம் நாள் பாசுரத்தில் ’பல்கணமும் யாமணிவோம் ஆடயுடுப்பொம்’ என்று கூறி அதன் பின்னர் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருப்போம்’ என்றுப் பாடுகிறாள்.

இதுவரை பாவை நோன்பிருந்து 24-ஆம் பாடலில் அவனைத் துதித்துப் பாடி பின் அவனுக்கு வேண்டுதல்கள் கூறி இந்த 27-ஆம் நாள் நிவேதனம் படைக்கிறாள்.

இந்நாளில் இறைவனுக்கு நிவேதனமாக முழுக்க முழுக்க பாலில் அரிசியை வேகவைத்து வெல்லம் கலந்து அதில் அதே அளவு நெய்யைச் சேர்த்து செய்வர். இது (பாயசம் போல்) திரவமாகவும் இல்லாமல் (சர்க்கரைப் பொங்கல் போல்) கெட்டியாகவும் இல்லாமல் இருக்கும். இதனை ‘அக்கார அடிசல்’ என்றுக் கூறுவர்.

8 கருத்துகள்:

  1. நல்ல விளக்கம். இந்நாளின் கூடாரவல்லி பற்றி அறிந்ததற்கு மகிழ்ச்சி.
    பதிவர் ராஜேஸ்வரி அவர்களும் இது தொடர்பாக எழுதி இருக்கிறார்கள்.
    பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அக்கார அடிசல்’ போல் தித்திக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    எமது பதிவை சிறப்பித்த T.N.MURALIDHARAN அவர்களுக்கு இனிய நன்றிகள்..
    http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_11.html
    கூடாரவல்லி வைபவம் ...

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    கூடாரை வெல்லும்சீா் போவிந்தன் பேருரைத்துப்
    பாடிய பாட்டினைப் பாடுகவே! - வாடிய
    நெஞ்சம் நெகிழ்ந்தாடும்! துாய திருவடியில்
    தஞ்சம் அடையும் தலை!

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஸ்ரீனி!

    பதிலளிநீக்கு